↧
ஒரு கவிதை
↧
சென்ற காலத்தின் நிலப்படம்
சரணாலயத்துக்கு வரும் பறவை போல, இந்த மலைநகரத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்'என்று ஏக்க உணர்வுடன் எழுதவும் செய்திருக்கிறேன். அதன் பின்னர் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். அந்தப்புதிய சித்திரங்களின் அடுக்கில் வெல்லிங்டன் நிலப்படம் மனதின் அடித்தட்டுக்குச் சென்று விட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு நிகழ்ச்சி, வெல்லிங்டன்இன்னும் எனக்குள் வாழ்கிறது என்ற உண்மையை உணர்த்தியது.
தமிழ் - மலையாளக் கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியொன்றைப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் உதகமண்டலத்திலுள்ள ஸ்ரீநாராயண குரு குலத்தில் 2008மே மாதம் முதல் வாரம் நடத்தினார். அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். முதல் நாள் மாலை, ஊட்டியைச் சுற்றிப் பார்க்க விரும்பிய மலையாளக் கவிஞர்களானகல்பற்றா நாராயணன், பி. ராமன் இருவருக்கும் ஊரைச் சுற்றிக் காட்டும் வேலையை வலிய ஏற்றுக் கொண்டேன். ஊட்டியின் பிரசித்தமான இடங்களை அவர்களுக்குக் காண்பித்துஅவற்றை பற்றிய பின்னணி விவரங்களை உற்சாகமாகத் தெரிவித்தேன். இந்த இடங்கள் இன்னும் என் மனதுக்குள் இருக்கின்றன; இவை தொடர்பாக இத்தனைத் தகவல்கள் எனக்குள் மங்காமல் இருக்கின்றன என்பதை அப்போதுதான் கண்டு பிடித்தேன். உதகமண்டலம் உருவான வரலாற்றையும் அந்த நகரத்தை உருவாக்கிய ஜான் சல்லிவனின்வாழ்க்கை பற்றியும் கவிஞ நண்பர் களிடம் ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு அது எந்த அளவுக்கு சுவாரசியமாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால்நான் உள்ளுக்குள் சிலிர்ப்புடன் சொன்னேன் என்பதும் அதைக் கொண்டாடிக் கொள்ளும் விதமாக உதகை கமர்சியல் சாலையில் இருந்த பழங்காலத் தேநீர் விடுதியான ஈரானீஸ் ரெஸ்டாரெண்டில் ஒரே இருப்பில் மூன்று குவளைத் தேநீரைப் பருகிய உற்சாகக் கொந்தளிப்பும் நினைவிலிருந்து விலகவில்லை. அந்த அற்புதப் பொழுதின் ஏதோ நொடியில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜான் சல்லிவன் எனது நிகழ்காலக் கதாபாத்திரமாக மாறியிருக்க வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரம் திரும்பியதும் நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதினேன். எழுதத் தொடங்கியபோது இருந்த திட்டத்தின்படி ஜான் சல்லிவன் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே வரக் கூடிய பாத்திரம்.ஆனால் எண்ணப் போக்கில் அவர் வளர்ந்து பல அத்தியாயங்களிலும் நடமாகக் கூடும் என்ற யூகம் வலுத்தபோது எழுத்து வேலையைக் கைவிட்டேன். நான் எழுத விரும்புவது சல்லிவனைப் பற்றிய நாவலோ உதகமண்டலத்தைப் பற்றிய ஆவணப்பதிவோ அல்ல. நான் செய்ய விரும்புவது ஒரு பகிர்வை.வெல்லிங்டன் வாழ்க்கை பற்றிய எனது உணர்வுகளை. எனவே நாவல் எழுதும் எண்ணத்தை விட்டேன். நான்கு மாதங்கள் கடந்தன. இந்த நான்கு மாதக் காலமும் நாவலைப்பற்றிய கனவும் வெல்லிங்டன்பற்றிய ஏக்க உணர்வும் என்னைப் பின் தொடர்ந்தன. மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில தீர்மானங்களைச் செய்து கொண்டேன். எந்தத் திட்டமும்இல்லாமல் எழுதிச் செல்வது. நான் கண்டதையும் கேட்டதையும் உணர்ந்தையும் உணராமல் விட்டதையும் இயல்பான போக்கில் பதிவு செய்வது. நானாகக் கதையின் போக்கில் குறுக்கிடுவதில்லை. தானாக உருவாகும் கதையையே முன்வைப்பது. இவை தீர்மானங்கள். இந்தத் தீர்மானங்கள் தந்த சுதந்திரத்தில் எழுத்து தன்னிச்சை யாகவே வளர்ந்தது. சல்லிவனின் கண்டுபிடிப்பும் நீலகிரியில் படகர் குடியேற்றமும் வெல்லிங்டன் உருவான விதமும் பின்புலமாக இயல்பாகவே எழும்பின. குறுக்கீடு கூடாது என்ற சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தபோதும் எழுதத் தூண்டிய உள் நோக்கத்தைத் தவிர்க்கவில்லை. அது, நான் வாழ்ந்த வாழ்க்கையை, நான் கண்ட மனிதர்களை மீட்டெடுப்பது என்பதே.
இந்த ஆயுளில் அடைந்த அனுபவங்களில் மிக அணுக்கமான வாழ்வும் கண்ட மிக மேலான மனிதர்களும் வெல்லிங்டனில் வாய்த்தவையே என்று நம்பினேன். அந்த வாழ்வைமறுபடியும் வாழ்ந்து பார்க்கவும் அந்த மனிதர்களுடன் மீண்டும் உறவு கொள்ளவும் விரும்பினேன். காலம் பின்னகர்த்திய வாழ்வையும் மனிதர்களையும் நடைமுறையில் திரும்பப் பெற இயலாது. ஆனால் எழுத்தின் மூலம் முடியும். அதற்காக எத்தனித்ததன் விளைவே இந்த நாவல். இதை நான் எழுதினேன் என்பது மிகை. என்னால் எழுதப்பட்டது என்பதே பொருத்தமானது.
( சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 2014 ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கும்
என்னுடைய நாவல் ‘வெல்லிங்ட’னுக்கு எழுதிய பின்னுரையின் பகுதி இது. நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடு)
நிழற்படம்: தத்தன் புனலூர்
↧
↧
நாவல் பிறந்த களம்
↧
அழகிய ராகம்... அபஸ்ருதி ராகம்...
''நோயாளிகளின் மரணத்தில் டாக்டர்களான எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனால், இந்த நோயாளி மரணமடைந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட துக்கம் எந்த நோயாளி யின் சாவிலும் ஏற்பட்டதில்லை. அவர் பழகிய விதமும் அவருடைய வசியப் படுத்தும் பேச்சும் ஒவ்வொரு அசைவிலும் அழகு ததும்பும் உடல்மொழியும் பிற மனிதர்களிடம் காட்டிய இரக்கமும் பரிவும் மனிதநேயமும் எங்களை அவருடைய ஆராதகர்களாக்கியிருந்தன. ஆனால் கடவுள் தனது அரண்மனைக்கு இந்த அழகியை வெகு சீக்கிரமே அழைக்கத் தீர்மானித்திருந்தார். புலம்பி என்ன பயன்?''
இப்படிச் சொல்லியிருப்பவர் டாக்டர். எம். கிருஷ்ணன் நாயர். இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த புற்றுநோய்ச் சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர். திருவனந்தபுரத்தில் ஆர்.சி.சி. ( ரீஜனல் கேன்சர் சென்டர்) என்று அழைக்கப்படும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை உருவாக்கியவர். அதன் இயக்குநராக நீண்ட காலம் சேவை செய்தவர்.
ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தான் மேற்கொண்டிருந்த மருத்துவப் பணியில் பெற்ற அனுபவங்களை டாக்டர். கிருஷ்ணன் நாயர் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் பெரும் பங்கு புற்று நோய்ச் சிகிச்சையில் கழித்திருக்கிறார். அதுவும், அவரே கனவு கண்டு, நிஜமாக்கிய ஆர்சிசியிலேயே. கழிந்திருக்கிறது. எனவே,கேன்சர் நோயுடன் கூட நடந்த டாக்டர், தனது அனுபவங்களுக்கு 'நானும் ஆர்சிசியும்' ( வெளியீடு: டிஸி புக்ஸ் கோட்டயம். அக்டோபர் 2013) என்றே தலைப்பிட்டிருக்கிறார். நூற்றெண்பது பக்கங்களுள்ள இந்தப் புத்தகத்தை வாசிக்கக் கொஞ்சம் மனத்திடம் வேண்டியிருந்தது. தன்னைப் பற்றிய தகவல்களை முதன்மைப் படுத்தாமல் புற்று நோயாளி களின் துயரம், சிகிச்சை, மரணம், வேதனை,மருத்துவத்துறை முன்னேற்றங்கள் என்று பிற செய்திக ளையே தனது வாழ்க்கை அனுபவ நூலில் பகிர்ந்து கொள்ளுகிறார். அவை சுவாரசியமளிக்காதவை. ஆனால் உண்மைகள். சோர்வடையச் செய்யும் மருந்து வாசனை கொண்ட உண்மைகள்; மரணத்தின் நிழல் படிந்த உண்மைகள். அதில் மிகவும் கசப்பான உண்மையை வாசித்தபோது மனம் குமுறியது.
வாசகனாகவும் பத்திரிகையாளனாகவும் ரசிகனாகவும் என்னைப் பிடித்து நிறுத்திய பகுதியிலிருந்துதான் கட்டுரைத் தொடக்கத்தில் இடம்பெறும் மேற்கோள். புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலும் தென்படும் காரியார்த்தமான இறுக்கத்துக்கு மாறான நெகிழ்வு இந்தப் பகுதியில்தான் தெரிகிறது. டாக்டர் குறிப்பிடும் நோயாளியும் அப்படியான நெகிழ்வை ஏற்படுத்தக் கூடியவரே. நடிகை ஸ்ரீவித்யா.
புற்றுநோயால் மரணமடைந்தார் ஸ்ரீவித்யா என்பது வெளிப்படையான தகவல். இரண்டு காரணங்களால் அந்த மரணத்தைத் தடுக்கவோ ஒத்தி வைக்கவோ முடிந்திருக்கும் என்றுதனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் டாக்டர் கிருஷ்ணன் நாயர். ஒன்று - புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருந்தால். இரண்டாவது - மேம்பட்ட சிகிச்சைக்கான பண வசதி அவரிடம் இருந்திருந்தால். இந்த இரண்டு காரணங்களையும் பற்றி புத்தகம் விரிவாகவே சொல்லுகிறது. டாக்டர் கிருஷ்ணன் நாயரின் வார்த்தைகளிலேயே அதைப்பார்க்கலாம்.
'' நமது நாட்டில் நோயாளிகள் பெரும்பாலும் சிகிச்சை பயன் தராத கட்டத்தையே எட்டுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் கீழ் மட்டத்திலுள்ள நோயாளிகளின் அறியாமை. இந்த அறியாமை மேல் மட்டத்தில் வசிப்பவர்கள் இடையிலும் நடுத்தர வர்க்கத்தினர் இடையிலும் கூட ஓரளவாவது மாறியிருக்கிறது. ஆனால் வேறு சில காரணங்களால்இந்த விவரம் பரவலாகக் காணப்படுவதில்லை. உதாரணத்துக்குப் பிரபலமான ஒரு நடிகையின் விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். தனக்கு மார்பகப் புற்று நோய் வந்திருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள் ஆகியவை உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்ள அவருக்குத் தடையாக இருந்திருக்கின்றன. கைவசமிருந்த பணம் கூட வேறு சிலரது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற நிலையில் அவர் கைபிசைந்து நின்றார்.
ஸ்ரீவித்யா சிகிச்சைக்கு வரமாலிருந்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. சிகிச்சை மேற்கொண்டால் உடல்குலைந்து போகும் என்ற தவறான எண்ணம் அதில் ஒன்று. இந்தவிவரங்களை அவர் தனது சக பணியாளர் களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் தெரிந்து கொண்டாரே தவிர முறையான மருத்துவ ஆலோசனை பெற முயற்சி செய்யவே இல்லை.
சினிமா - சீரியல் நடிகரான பூஜைப்புரை ராதாகிருஷ்ணனுடன் அவரது மாருதி காரில் என்னிடம் ஆலோசனை பெற ஸ்ரீவித்யா முதன் முதலாக வந்தார். நைட்டி மட்டும் அணிந்தி ருந்தார். மருத்துவ பரிசோதனைக்கு வசதியாக இருக்கும் என்று ஒருவேளை அவர் அந்த உடையிலேயே வந்திருக்கலாம். நான் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக என் வீட்டில் நோயாளிகளைப் பரிசோதிப்பது இல்லை. குறிப்பான காரணங்கள் எதுவுமில்லை. மாலை நேரங்களில் வாசித்துக் கொண்டும் டீவி பார்த்துக் கொண்டும் இருக்கலாமே என்றஎண்ணம். அன்று என் மனைவி வத்சலாவும் உடனிருந்தார். நோய்க்கான காரணங்கள் பற்றி அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் அவர் உள்ளே போனார். நான் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
சின்ன மூச்சுத் திணறலைத் தொடர்ந்து பிரபல கார்டியாலஜிஸ்ட் டைனி நாயரைப் போய்ப் பார்த்திருக்கிறார்.அவர் எடுத்த மார்பு எக்ஸ்ரேயைப் பார்த்த இதய நோய் மருத்துவர்நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர். கேசவன் நாயரைப் போய்ப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். கூடவே மார்பில் முளைத்திருக்கும் கட்டியை முழுமையாகப் பரிசோதனைசெய்வதற்காக என்னைப் பார்க்கவும் சொல்லியிருக்கிறார். டாக்டர். கேசவன் நாயர் செய்த பரிசோதனையில் இரண்டு நுரையீரல்களிலும் கான்சரின் அடையாளங்கள் தென்பட்டிருக்கின்றன. அதையொட்டித்தான் என்னைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார்.
நான் சி.டி. ஸ்கேனைப் பார்த்தேன். உண்மைதான். இரண்டு நுரையீரல் களிலும் புற்றுநோயின் பாதிப்புகள் இருக்கின்றன. படுக்க வைத்துப் பரிசோதிக்க என் அறையில் வசதியில்லை. எனவே எங்கள் படுக்கையறை யிலேயே அவரைப் படுக்கவைத்துச் சோதனை செய்தேன். வலது மார்பகம் கான்சர் முற்றிய நிலையில் கருமையேறிச் சிதைந்திருந்தது.அக்குளில் நாலைந்து நாளங்கள் வீங்கியிருந்தன. மார்பிலிருந்த புற்று நோய் சருமத்திலும் பிற இடங்களிலும் பரவி இருந்தன. எனவே உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யமுடியாது. நோய் இந்த அளவுக்குப் பரவி யிருப்பதால் மார்பகத்தை அறுவை செய்த்து நீக்குவதும் பயன் தராது. பின்னர் நடத்திய ஐசோடோப் ஸ்கேனில் நோய் முதுகுத் தண்டைப் பாதித்திருப்பதாகத் தெரியவந்தது. ஒரு பயாப்ஸி மூலம் ஸ்ரீவித்யா புற்று நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்று உறுதிப்பட்டது''.
பின்னர் நடத்தப்பட்ட சிகிச்சைகள் மூலம் ஸ்ரீவித்யாவின் உடல் நிலை ஓரளவு தேறியது. மூச்சுத் திணறல் குணமானது. மார்புக் கட்டிகள் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கின. வல்து மார்பில் நடத்தப்பட்ட சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்தார் ஸ்ரீ வித்யா. மருத்துவக் கண் காணிப்பிலும் இருந்தார்.பாடகியுமான அவருக்கு இருந்த முக்கியமான ஆசை பாலக்காட்டில் முழு நேர இசைக் கச்சேரி ஒன்றை நடத்துவது என்பது. முதுகுத் தண்டில் வலியுடன் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கச்சேரி நடத்த முடியுமா என்ர டாக்டர்களின் சந்தேகத்தைத் தனது மனவலிமையால் தோற்கடித்தார் அவர். அந்தக் கச்சேரி பெரும் ஹிட். ஆனால் அவருக்குள்பதுங்கியிருந்த நோய் தொடர்ந்து ஹிட்டுகளை அனுமதிக்கவில்லை. வயிற்றில் ஏற்பட்ட வலிக்காக மீண்டும் டாகடரிடம் போனபோதுதான் நோய் ஈரலுக்குக் குடிமாறி இருந்ததுதெரியவந்தது. அபூர்வமாக மது அருந்துவதன் பக்கவிளைவாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில்தான் அது வெளிப் பட்டது. பொதுவாகக் க ¡ன்சருக்குக் கொடுக்கப்படும் எல்லா மருந்துகளும் கல்லீரலைப் பாதிப்பவை. எனவே ஸ்ரீவித்யாவின் வேதனையைப் போக்க என்ன மருந்தைக் கொடுப்பது என்று மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
''அப்போதுதான் காலிக்ஸ் என்ற புதிய மருந்து சந்தைக்கு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டோம். இந்த மருந்தால் கல்லீரலுக்குப் பக்க விளைவுகள இல்லை. எனவே அதை அவருக்குக் கொடுக்க முடிவெடுத்தோம். மிகவும் விலை உயர்ந்த மருந்து. ஒரு டோசுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை ஆகும். ஸ்ரீவித்யாவால் முடியுமா? அப்போதுதான் அவருடைய சொத்துக்கள் முழுவதையும் ஒரு டிரஸ்டுக்குக் கொடுத்து விட்டதாகவும் இனி டிரஸ்ட்தான் அவருடைய சிகிச்சைச் செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தது. டிரஸ்டின் உறுப்பினர்களில் ஒருவரிடம் பேசுமாறு நான் என் சக ஊழியரான டாகடர் சாபுவிடம் சொன்னேன். நான் பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்தேன். டிரஸ்ட் உறுப்பினர் சொன்ன பதில்,அவ்வளவு பெரிய செலவை டிரஸ்ட் தாங்காது. வேறு சாதாரண மருந்து கொடுத்தால் போதும்.''
ஆனால் ஸ்ரீவித்யா போன்ற நடிகைக்கு மருந்தை மாபெரும் தள்ளுபடி விலையில் தரக் கம்பெனி முன்வந்தது. அதற்குள் மரணம் அவரை நெருங்கியிருந்தது.
டாக்டர் கிருஷ்ணன் நாயர் தனது நூலில் புற்று நோய்த் தடுப்பை, குறிப்பாக மார்பகப் புற்று நோய்த் தடுப்பை வலியுறுத்தி எழுதியுள்ள பகுதியில் வரும் முன் காப்பது அவசியம்என்பதைச் சுட்டிக் காட்டவே ஸ்ரீவித்யாவைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த மருத்துவ நோக்கத்தை மீறியும் கேள்விகள் எழுகின்றன. நடிகையின் வாழ்க்கை பற்றி... பிரபலமானவராக இருந்தும் பெண்ணாகப் பட்ட துயரங்கள் பற்றி... நம்பிக்கைத் துரோகங்கள் பற்றி... அவர் நம்பிய கடவுளின் பாரமுகம் பற்றி... அந்தக் கேள்விகள் தொந்தரவு செய்பவை.
@
↧
அப்பாஸ் கியரோஸ்தமியின் கவிதைகள்
1
நான் தனியாக வந்தேன்
தனியாகக் குடித்தேன்
தனியாகச் சிரித்தேன்
தனியாக அழுதேன்
தனியாகவே போய்க்கொண்டிருக்கிறேன்.
2
மிக அதிகம் யோசிக்கையில்
மிகக் குறைவே புரிந்து கொள்கிறேன்
மரணத்தை அவ்வளவு அதிகம் அஞ்சுவதற்கான
காரணத்தை.
3
கர்ப்பிணிப் பெண்
மௌனமாக அழுகிறாள்
உறங்கும் ஆணின் படுக்கையில்.
4
எவ்வளவு கருணை நிரம்பியது
சிறு பறவையின் அநாயாசப் பறத்தலை
அந்த ஆமை பார்க்கவில்லை என்பது.
5
கோடையின் முதல் நாள்
காற்றுடன் சேர்ந்தே வந்தேன் நான்
இலையுதிர் காலக் கடைசி நாளில்
காற்று என்னைச் சுமந்து செல்லும்.
------------------------------------------------------------------------------------------------------------
இரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி கவிஞரும் கூட. திரைப் படங்களில் இடம் பெறுபவையும் தனி வெளியீட்டுக்காக எழுதியவையுமான அவரது கவிதைகள் ‘காற்றுடன் நடத்தல்’ என்ற பெயரில் பெர்ஷிய – ஆங்கில இருமொழிப் பதிப்பாக வெளிவந்துள்ளது. காலச்சுவடு 2014 ஜனவரி இதழில் வெளியான சினிமா சிறப்புப் பகுதியில் சேர்ப்பதற்காகத் தமிழாக்கம் செய்யப் பட்டவை இங்குள்ள கவிதைகள். இதழில் பக்க நெருக்கடியால் சேர்க்க முடியாமற் போனது.
Walking with the Wind (Voices and Visions in Film): English translation by Ahmad Karimi-Hakkak and Michael C. Beard, Harvard Film Archive; Bilingual edition 2002)
↧
↧
உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது...
இணையத் தகவல்கள் இரண்டு இந்தக் குறிப்புகளுக்குத் தூண்டுதல். முதலாவது, சமூக வலைத்தளம் மூலம் வந்த வேண்டுகோள். இரண்டாவது நண்பர் அந்திமழை இளங்கோவன் பகிர்ந்து கொண்ட பதிவு. இரண்டும் நினைவுகளைக் கிளறி விட்டன. ரசித்து மறந்த காலத்தையும் கேட்டு மறந்த பாடல்களையும் திரும்பக் கொண்டு வந்தன.
அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் விடலைகளாகவும் வாலிபர்களாகவும் இருந்த இன்றைய வயோதிக அன்பர்களின் நினைவில் எப்படியும் சில இந்திப் பாடல்கள் இப்போதும் ரீங்காரம் செய்துகொண்டிருக்கும். இசை நாடாக்கள் புழக்கத்துக்கு வந்திராத காலம். திரைப்படத்தின் பாடல்களை கொலம்பியா அல்லது எச் எம்வி ரிக்கார்டுகளில் கேட்டு மகிழுங்கள் என்று திரைப்பட இடைவேளைகள் அறிவித்தபோதும் இசைத் தட்டுகள் கைக்கெட்டாத காலம். வானொலி மட்டுமே இசை விரும்பிகளின் புகலிடமாக இருந்த காலம். சுருக்கமாக இளையராஜாவுக்கு முந்தைய சங்கீதக் கனவுகளின் காலம்.
இந்தக் கால அளவில் அதிகமான நேயர்களைக் கொண்டிருந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். இந்திய வானொலிகள் பெரும்பாலும் அரசின் பரப்புரை ஊடகங்களாகவும் மேட்டுக்குடி ரசனையைப் பேணுவனவாகவும் வெகுஜனப் பங்கேற்புக்கு வாய்ப்பளிக்காதவையாகவும் இருந்தன. அந்தக் குறையை இலங்கை வானொலி தீர்த்து வைத்தது.
வானொலி என்பதே ஆடம்பர சாதனமாகக் கருதப்பட்ட காலத்திலேயே இலங்கை வானொலிக்கு அபாரமாக வளர்ச்சியடைந்திருந்தது இந்த ஒலிபரப்பு. 1950முதல் இரண்டுபதிற்றாண்டுகள் 'கிங் ஆஃப் ஏர் வேய்ஸ்'என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 20கோடி நேயர்கள் இருந்ததாகக் கணக்குகள்தெரிவிக்கின்றன. உள்நாட்டு மொழிகளான தமிழிலும் சிங்களத்திலும் மட்டுமல்லாமல் இந்தியிலும் தென் இந்திய மொழிகள் நான்கிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்நிகழ்ச்சிகளை அளித்தது. அதில் நிறுவனத்துக்குக் கிடைத்த மாபெரும் நேயர் வரவேற்பு தமிழ் மக்களிடமிருந்துதான். இரண்டாவது அதிக பட்ச நேயர் எண்ணிக்கை இந்தி நிகழ்ச்சிகளுக்கு. அதிலும் குறிப்பாக 'பினாகா கீத் மாலா'வுக்கு.
அமீன் சயானி
இலங்கை வானொலி நிலையம் அமைக்கப்பட்டதே சுவாரசியமான கதை. ஒரு தந்திப் பொறியாளரின் அந்தரங்கப் பொழுது போக்கே வெகுஜன ஊடகமாக மாறியது. பிரிட்டிஷ்காலனி நாடுகஈல் ஒன்றாக இருந்த சிலோனின் தலைநகர் கொழும்புவில் அமைந்திருந்த மத்திய தந்தி அலுவலகத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த எட்வர்ட் ஹார்ப்பர்என்ற ஆங்கிலேயருக்கு ஒரு ரேடியோக் கருவி கிடைத்தது. 1923ஆம் ஆண்டு அது. முதல் உலகப் போரில் நேசநாடுகளால் முறியடிக்கப்பட்ட ஜெர்மன் ராணுவத்தின் நீர்மூழ்கிக் கப்பலிலிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கருவி ஹார்ப்பரின் கையில் கிடைத்தது. தனது சக ஊழியர்களுடன் அதைப் பரிசோதனை செய்து பார்த்தார். சோதனை வெற்றி அடைந்தது. தந்தி அலுவலகத்திலிருந்து ஒலித்த இசையைக் கேட்டு மக்களின் காதுகள் சிலிர்த்தன. இலங்கையில் வானொலி நிலையம் உருவானது. 1925டிசம்பர் 16அன்றுதனது பரவலான ஒலிபரப்பைத் தொடங்கியது. விடுதலைக்குப் பிறகு ஆங்கிலேயர்களிடமிருந்து கைமாற்றப்பட்ட வானொலி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கத் தொடங்கியது. 1950 இல்தொடங்கப்பட்ட வர்த்தக ஒலிபரப்பு மாபெரும் வெற்றிகளை ஈட்டியது. இதற்குப் போட்டியாகவே இந்திய வானொலி வர்த்தக ஒலிபரப்பைத் தொடங்கியது. தமிழ் நாட்டு கோபால் பல்பொடிக்கும் சைபால் களிம்பு மருந்துக்கும் இந்திய லக்ஸ் சோப்புக்கும் லிப்டன் தேயிலைக்கும் சந்தையை உருவாக்கியதில் இலங்கை வானொலியின் பங்கு அபாரமானது. தமிழ்ச் சினிமாவை பாடல்கள் மூலமும் ஒலிச் சித்திரங்கள் மூலமும் அது வளர்த்தது. சிலோன் ரேடியோவில் பாட்டுக் கேட்டு ரசிக்காத ஒரு தமிழர் கூட இருக்க முடியாது என்ற நிலையை அடைந்தது.
தினமும் பதினேழு முதல் இருபது மணி நேர ஒலிபரப்பு. கோடிக்கணக்கான நேயர்கள். கோடிக்கணக்கான வருவாய். திரைப்பட நட்சத்திரங்களுக்கு நிகராகப் புகழ் பெற்ற வானொலி அறிவிப்பாளர்கள். இப்படிச் செல்வாக்குடன் இருந்த வானொலி நிலையம் இன்று கிட்டத்தட்ட செயலிழந்த நிலையில் இருக்கிறது. விளம்பர வருவாய் குறைவு. எனவே பேருக்கு மட்டும் நிகழ்ச்சிகள். நட்சத்திர அறிவிப்பாளர்கள் பலர் போர்க் காலங்களில் சிதறிப் போனார்கள். இவ்வளவு இருந்தும் ஆச்சரியமான ஓர் உண்மை நிலைத் திருக்கிறது. பண்பலை ஒலிபரப்புகள், இண்டர்நெட் வானொலி, எல்லாம் வந்த பின்னரும் இலங்கை வானொலின் நேயர் எண்ணிக்கை குறையாம லிருக்கிறது. ஆனால் அந்த நேயர்கள்அதிருப்தியுடன் காத்திருகிறார்கள். ஒலிபரப்பு நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு அமைப்பையே - ரேடியோ சிலோன் நேயர்கள் சங்கம் – உருவாக்கி யிருக்கிறார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோள்தான் வலைத்தளம் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டது.அதுதான் ஞாபகத்தின் கதவுகளை விரியத் திறந்து வைத்தது.
இலங்கை வானொலி மூலம் என் காதுகளுக்குள் குடியேறிய இரண்டு பாடல்களை இன்னும் மறக்க முடியவில்லை. ஒருபோதும் மறக்க முடியாது. முதலாவது, ஒரு இந்திப் பாடல்.குருதத் இயக்கி நடித்த 'காகஸ் கே பூல்'படத்தின் பாடல். தோல்விய்டைந்த சினிமாக் கலைஞனைப் பற்றிய அந்தப் படம் இன்றும் குருதத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது.சினிமாவுக்காக வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட கலைஞனைப் பற்றிய அந்தக் கதைக்கு குருதத்தின் நிஜ வாழ்க்கையுடன் தொடர்பு இருந்தது. 'வக்த் நே கியா, க்யா ஹசீ சிதம்'என்று நாயகி வஹீதா ரஹ்மானுக்காகக் குருதத்தின் மனைவி கீதா தத் பாடிய பாடலுக்கும் நிஜப் பின்னணி இருந்தது. தனது கதாநாயகி வஹீதா ரஹ்மான் மீது கணவர் குருதத்துக்கு ஏற்பட்டிருந்த ஈடுபாட்டில் நொந்து போயிருந்தார் கீதா. 'காலம் நமக்கு என்ன துயரத்தைச் செய்திருக்கிறது? இனி நீ, நீயுமல்ல, நான் நானுமல்ல'என்ற கைபி ஆஸ்மி எழுதிய வரிகள் படத்தின் கதைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரங்களை ஏற்றவர்களின், பாடியவரின் உண்மையான மனப்போக்குக்கும் பொருத்தமாக இருந்தன. இசை - எஸ். டி பர்மன்.
முதன் முதலில் கேட்ட இந்தப் பாடல் இப்போதும் ஞாபகத்தில் ஒலிப்பது போலவே பாட்டைப் பற்றிச் சொன்ன அறிவிப்பாளரின் குரலும் எதிரொலிக்கிறது. 'பினாகா கீத் மாலா'என்ற இந்தி 'நேயர் விருப்பம்'நிகழ்ச்சியில் அந்தப் பாடலை முதலில் கேட்டேன். அடுத்த பாடல் இன்ன படத்தில் இன்னார் இசையமைப்பில் இன்னார் எழுதி இன்னார் பாடியதுஎன்று அறிவிக்கும்போதே அந்தப் பாடலுக்குப் பொருத்தமான தொனியை உருவாக்கிக் கொள்ளும் அறிவிப்பாளர் மீது மதிப்பு ஏற்பட்டது. அவர் பெயர் அமீன் சயானி. பினாகா கீத்மாலா'நிகழ்ச்சியின் நிரந்தர அறிவிப்பாளர். இலங்கையில் அரசியல் கொந்தளிப்பு தொடங்கிய எண்பதுகளிலும் அமீன் சயானி உற்சாகக் குரலில் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார். பின்னர் எப்போதோ காணாமற் போயின அவரும் அவரது நிகழ்ச்சியும். ஆனால் சப்த வசீகரனான அமீன் சயானியை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த ஆசை மனதுக்குள் உருவானபோது அதற்கான எந்தச் சாத்தியமும் இல்லாமலிருந்தது.
பத்திரிகையாளனாகப் பணியாற்றிய காலங்களில் அந்த ஆசை மீண்டும் உயிர் பெற்றது. இன்று உள்ள அளவு தகவல் தொடர்பு வசதிகள் இல்லாமலிருந்த நாட்கள். ஒரு இசை விற்பனை நிலையம் வெளியிட்ட இந்திப் பாடல் தொகுப்பு இசைத் தட்டு/ கேசட்டின் மேலட்டை விவரணையில் ( sleeve notes) அமீன் சயானி என்ற பெயரைப் பார்த்து அந்த நிறுவனத்துக்குக் கடிதம் கூட எழுதினேன். பதிலில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு வந்தது. பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பியவர் அமீன் சயானி. ஆர்வத்துடன் போயிருந்தேன். அந்தச் சந்திப்புக்கு வழக்கமாக வரும் பத்திரிகையாளர்கள் கூட வரவில்லை. ஆக, இரண்டு ஆங்கில நாளிதழ்கள், ஒரு ஆங்கில சினிமா இதழ் ஆகியவற்றின் செய்தியாளர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். தமிழிலிருந்து ஒண்ணே ஒண்ணு என்று நான் மட்டுமே. இத்தனைக்கும் நான் பணியாற்றிய பத்திரிகைஇந்தியையும் இந்திப் பாடல்களையும் எதிர்க்கும் பாசறையின் சரக்கு.
பினாகா கீத் மாலாவின் நாற்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் பாகமாகவே அமீன் சயானி வந்திருந்தார். மீண்டும் அந்த நிகழ்ச்சியை இந்திய வானொலி மூலம் நடந்தவும் முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அது முன் அளவு வெற்றிகரமானதாகவோ வருவாய் ஈட்டக் கூடியதாகவோ அமைய வில்லை. அந்தச் சந்திப்பில் அவரிடம் அதிகம் பேசியது நான் தான். 'வழக்கமா எந்தப் பிரஸ் மீட்லயும் வாயைத் திறக்காம உட்கார்ந்திருப்பீங்க, நீங்களா இன்னிக்கு இவ்வளவு பேசுறீங்க?'என்று ஆங்கில சினிமாஇதழின் செய்தியாளர் ஆச்சரியப்பட்டார். நானா பேசினேன்? கீத் மாலா நேயனல்லவா பேசியது? உரையாடலின் முடிவில் அமீன் சயானியிடம் ஒரு வேண்டுகோளை வைத்தேன்.வானொலியில் அறிவிப்பதுபோல ஒருமுறை என் அபிமானப் பாடலுக்கான முன்னோட்டத்தைச் சொல்லுங்களேன்? அமீன் சயானி சிரித்துக் கொண்டே வேண்டுகோளை நிறைவேற்றினார். அந்த நொடியில் ரேடியோவே இல்லாத அந்த ஓட்டல் அறையில் அலைவரிசைக் கரகரப்புடன் 'வக்த் நே கியா 'என்று கீதா தத்தின் குரல் கசிந்து கேட்டது.
கோழிக்கோடு சிலோன் ரேடியோ நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்காக நிதி திரட்டுகிறார்கள். அதில் எனது சின்ன நன்கொடையும் உண்டு. அது ரேடியோ சிலோனுக்காகவோ அமீன் சயானிக்காகவோ அல்ல; என்னுடைய பதின்பருவக் கனவுக்காக.
ஏறத்தாழ இதே கால அளவில் கேட்டு ரசித்துப் பாடிக் கொண்டு திரிந்த தமிழ்ப்பாடலும் இருக்கிறது. இலங்கை வானொலி தனது ஈழத்துப் பொப் இசைப் பாடல்கள் வரிசையில் ஒலிபரப்பிய பாடல். அது பாப் பாடலல்ல. மெல்லிசைப் பாடல். அதை எழுதியவர் , இசையமைத்தவர், பாடியவர் யாரென்று தெரியாமலேயே பாடிக் கொண்டு திரிந்த நாட்கள் அதிகம். எண்பதுகளில் ஈழப் பிரச்சனை. தீவிரமாக இருந்தபோது அகதிகளாகத் தமிழகத்துக்கு வந்தவர்களில் இலக்கியம் மூலம் அறிமுகமான சில ஈழ நண்பர்களிடம் எரிகிற வீட்டில் இசை ஒரு கேடா என்று தப்பாக நினைத்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடனும் மிகுந்த தயக்கத்துடனும் அந்தப் பாடலைப் பற்றி விசாரித்திருக்கிறேன்
கேட்டதில் பாடகர் பெயர் மட்டும் தெரிய வந்தது. எம்.பி.பரமேஸ். ஈழத்து மெல்லிசை மன்னர் என்று பட்டம் பெற்றவர் என்பதைத் தவிர வேறு விவரங்கள் தெரியவில்லை. அன்றைய போர்ச் சூழலில் அந்தப் பாடகரும் காணாமற் போயிருக்கலாம் என்று ஹம்சத்வனி என்ற தமிழ்ச் செல்வன் சொன்னது நினைவில் இருந்தது.
'உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்குத் தெரியுமா நீ என்னை அழைப்பது என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல் அது. மிக எளிய வரிகள். 'நிலவு தெரியுமா ஓடும் முகில் விலகாமல்'என்ற வரியில் மட்டுமே லேசான கவிதை மின்னும். ஆனாலும் அந்தப் பாடல் மனதுக்குள் வெகு காலம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு படை அணி வகுப்புக்குப் பயன்படுத்துவது போன்ற தாளக் கட்டு, டி.எம். சௌந்தர ராஜனையும் ஏ எம் ராஜாவையும் கலந்தது போன்ற குரல். மிகச் சாதாரணமான மெல்லிசைப் பாடலாக இருக்க வேண்டியதை அதற்குள்ளிருந்த ஏதோ ஓர் உணர்வு மிகவும் ஈர்ப்புள்ள பாடலாக மாற்றி யிருந்தது. அது என்ன என்பது மிக நீண்ட காலம் புதிராகவே இருந்தது.நண்பர் இளங்கோவன் அனுப்பிய மின்அஞ்சல் தகவல் அந்தப் புதிரை விடுவித்தது.
.![]()
.

எம் பி பரமேஸ்
இலங்கையில் இசைக் குழுவி நடத்தி வந்தவர் எம்.பி.பர்மேஸ். சகோதரர் கோணேசுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இலங்கையில் முதலாவது தமிழ்ப் பாடல் இசைத் தட்டை உருவாக்கியவர். அவரே எழுதி இசையமைத்துப் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான ஒன்றுதான் மேலே சொன்ன பாடல். அந்தப் பாடலின் மர்ம வசீகரத்துக்குக் காரணம் அதைத் தனது காதலிக்காக எழுதினார் என்பது. தமிழகத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற சிவமாலினிக்காகஅவர் எழுதிய பாடல்தான் அது என்பது தெரிந்ததும் அந்த ஈர்ப்பின் காரணம் விளங்கியது. இருவரும் 1974ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்தப் பாட்டைக் கேட்டு மாலினி அதைத்தானே முழு மனசுடன் செய்திருக்க முடியும் ? இனக்கலவரத்தின் நாட்களில் புலம் பெயர்ந்த பரமேஸ் இப்போது ஜெர்மனியில் வசிப்பதாக இணையத் தகவல் தெரிவிக்கிறது. அமைதி நிலவிய இடைக் காலத்தில் பரமேஸ் தமிழகத்துக்கும் வந்து பிரபல இசையமைப்பாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
இலங்கையில் இசைக் குழுவி நடத்தி வந்தவர் எம்.பி.பர்மேஸ். சகோதரர் கோணேசுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இலங்கையில் முதலாவது தமிழ்ப் பாடல் இசைத் தட்டை உருவாக்கியவர். அவரே எழுதி இசையமைத்துப் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான ஒன்றுதான் மேலே சொன்ன பாடல். அந்தப் பாடலின் மர்ம வசீகரத்துக்குக் காரணம் அதைத் தனது காதலிக்காக எழுதினார் என்பது. தமிழகத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற சிவமாலினிக்காகஅவர் எழுதிய பாடல்தான் அது என்பது தெரிந்ததும் அந்த ஈர்ப்பின் காரணம் விளங்கியது. இருவரும் 1974ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்தப் பாட்டைக் கேட்டு மாலினி அதைத்தானே முழு மனசுடன் செய்திருக்க முடியும் ? இனக்கலவரத்தின் நாட்களில் புலம் பெயர்ந்த பரமேஸ் இப்போது ஜெர்மனியில் வசிப்பதாக இணையத் தகவல் தெரிவிக்கிறது. அமைதி நிலவிய இடைக் காலத்தில் பரமேஸ் தமிழகத்துக்கும் வந்து பிரபல இசையமைப்பாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
இந்த விவரங்களுடன் இணையத்தில் துப்புத் துலக்கியபோது நண்பர் இளைய அப்துல்லா 'தீபம்'தொலைக்காட்சிக்காக எம்.பி.பரமேசை நேர்காணல் செய்திருந்த ஒளிப்பதிவுகள் பார்க்கக் கிடைத்தன. அவரைத் தொடர்பு கொண்டபோது ''அவர் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார் கதையுங்கோ இது நம்பர்''என்று பதில் அளித்தார் இளைய அப்துல்லா. கதைக்க வேண்டும். பதின் வயதில் என்னை அலைக்கழித்த பாட்டு சிவமாலினியை என்ன செய்தது என்று கேட்க வேண்டும்.
அந்திமழைஜனவரி 2014 இதழில் வெளியானது.
அந்திமழைஜனவரி 2014 இதழில் வெளியானது.
↧
விக்ரமாதித்தியனும் நானும்
இது ஒரு பழைய கட்டுரை. ஏறத்தாழ ஒரு வெள்ளி விழாக்காலத்துக்கு முன்பு எழுதப்பட்டது. கவிதை பற்றி நான் எழுதிய ஆரம்பக் காலக் கட்டுரைகளில் ஒன்று. கவிஞர் விக்ரமாதித்தியனின் மூன்றாவது தொகுதியான 'உள் வாங்கும் உலகம்' வெளியீட்டுக் கூட்டத்தில் பேசுவதற்காக எழுதப் பட்ட கட்டுரை. சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.சிறிய கூட்டம். நண்பர்கள் சி.மோகன், (தமிழினி) வசந்தகுமார் ,பஷீர் தவிர வேறு யார் வந்தார்கள் என்பதோ கூட்டத்தில் வேறு யார் பேசினார்கள் என்பதோ நினைவில்லை. கட்டுரையின் முடிவில் தேதியைக் குறித்து வைத்திருந்தேன் - 1.2.1988. எனவே அந்த நாள் நினைவுக்கு வருகிறது.
ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப் படும் 'சாரல் விருது'இந்த ஆண்டு விக்ரமாதித்தியனுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் பேச ஒப்புக் கொண்ட பின்னர் தற் செயலாக இந்தக் கட்டுரை கைக்குக் கிடைத்தது. நோட்டுப் புத்தகத் தாளில் பென்சிலால் எட்டுப் பக்கங்களுக்கு எழுதிய இந்தக் கட்டுரையின் கருத்துகளில் சிலவற்றுடன் இன்று அதிக உடன்பாடு இல்லை. ஆனால் அடிப்படையான பார்வை அதிகம் மாறிவிடவும் இல்லை.
சாரல் விருது 2014
விக்ரமாதித்யனின் குரல்
எண்பதுகளை ஒட்டி வெளியான கவிதைகளில் ஒரு மாறுதலான அம்சத்தைக் காணலாம். அனுபவங்களை இறுக்கமான மொழியிலும் பின்னலான அமைப்பிலும் வெளிப்படுத்தி வந்த போக்கு, தளர்ந்து கவிதை எளிமையான வெளிப்பாட்டு முறைக்குத் திரும்பியது. இந்த மாறுதல் எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளில் தொடர்ந்தது. அதன் விளைவாக அதுவரை பொருட்படுத்தப்படாமலிருந்த சில கவிக்குரல்கள் நமது கவனத்துக்கு இலக்காயின. அந்தக் குரல்களில் ஒன்று விக்ரமாதித் தியனுடையது. நகலெடுப்புகளின் சந்தடிக்கும் அனுபவசாரமற்ற வார்த்தைப் பந்தயத்துக்கும் நடுவே வாழும் காலத்தின் மீதான சகிப்பின்மையால் எழுந்த வேதனையுடன் இவரது குரல் வெளிப்பட்டது. இந்தக் குரலில் அதிகபட்சமான உண்மையுணர்வு இருந்தது. கவி மனத்தின் ரீங்காரம் இருந்தது. ஒரு தெளிவான குரலாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள இந்த இயல்புகள் தகுதிகளாக அமைந்தன இவருக்கு.
இதுவரை வெளியான மூன்று கவிதைத் தொகுதிகளில் ஒலிக்கும் குரலில் சில பொதுத்தன்மைகள் புலப்படுகின்றன. வெளிப்பாட்டில் நேரடித்தன்மை. எளிமை. அனுபவங்கள் நேர்ந்த அதே தளத்தில் கவிதையாக உருவாக்கப்படுதல் ஆகியவை.
எளிமையை வரித்துக் கொண்ட கவிதைகள் வாசக உணர்வில் வேர் கொள்ள தொனியை இயல்பாகக் கொள்கின்றன. இறுக்கமான கட்டமைப்புக் கொண்ட கவிதைகள் படிமத்தையும் காட்சிப்படுத்தலையும் சார்ந்திருந்தது போல. படிமம் சார்ந்த கவிதைகள் மொழியும் அனுபவமும் இணைந்த தர்க்க இழையிலிருந்து விலகுவதன் மூலம் புரியாமல் போகின்றன. எளிமையான கவிதைகள் படைப்பாளனின் அனுபவத்தை இடம் பெயர்க்கும் தொனியின் தெளிவின்மை மூலம் சாதாரண வாக்கு மூலங்களாகச் சுருங்கி விடுகின்றன. அல்லது அவற்றை ஏதோ மகத்தான ஒன்றை அர்த்தப்படுத்துவது போலத் தொற்றமளிக்கச் செய்கின்றன. இந்த வரிகளில் அனுப்வம் வெற்றாகத் தேங்குகிறது. விக்ரமாதித்யனின் சில வரிக் கவிதைகள் இந்த உணர்வைத் தருகின்றன.
விக்ரமாதித்யனின் கவி மனம் எளிமையானது. நிம்மதியையும் எளிய இன்பங்க¨ளையும் விரும்புவது. வாழ்க்கையின் நிகழ்வுகள் இந்த மன இருப்பைக் குலைப்பதால் விளையும் துக்கமே இவற்றின் அடியோட்டாம். உண்மையில் நேரடியாகவும் மறைமுகமாகவும்மனித வாழ்க்கை பெரும் சிக்கல்கள் கொண்டிருக்கிறது.இந்நிலையின் சாயல் மட்டுமே விக்ரமாதித் தியனிடம் வெளிப்படுகிறது.ஏனெனில் அடிப்படையில் இந்த மனம் லௌகீக தளத்தில் வேரூன்றியது. லௌகீக தளத்திலேயே சிக்கல்களை எதிர் கொள்கிறது.முரண்படுகிறது. வாழ்க்கை பல தளங்களில் இயக்கத் தையும் புரிந்து கொள்ளப்படுவதன் தேவையையும் கொண்டிருப்பது
போலவே கவிதையும் கலையும் வெவ்வேறு தளங்களிலான செயல் பாடுகளைக் கோருபவை. விக்ரமாதித்தியன் தனது கவிதையாக்கத்தில் இவற்றைத் தவிர்த்துக் கொள்கிறார். தனது மனதைப் பதிவு செய்தல் என்ற உணர்வுப்பூர்வமான செயலையே கவிதைகளில் நிறைவேற்றுகிறார்.
புற உலகுடனான இவரது உறவு சுமுகமற்றது.புற எதார்த்தங்களீன் தோற்றத்திலும் விகரமாதித்தியனுக்குத் தன் முகமே தென்படுகிறது. புற எதார்த்தத்தை உள் வாங்கித் தனதாக வெளியேற்றுவதன் மூலமாக அமைந்ததல்ல இது; தனது அக உணர்வுகளுக்கு, சிக்கல்களுக்குச் சாட்சியாகவே இவர் புற உலகை அங்கீகரிக்க்கிறார்.விக்ரமாதித்தியனின் கவிப் பிரதேசத்தில் இயங்கும் நபர் அவர் மட்டுமே. வாழ்க்கை இவரை வாழ அனுமதிக்காமலும்ம் துக்கங்களைதத் தந்தும் வதைக்கிற சலிப்பையே இந்தப் பிரதேசத்தில் பார்க்க முடிகிறது; கேட்க முடிகிறது. வாசகனுடனான இவரின் பரிமாற்றக் குரல் ஒன்று இந்தச் சோர்வைச் சொல்லுகிறது அல்லது தன் நிலை பற்றிய பரிதாபத்தைச் சொல்லுகிறது.
தன்னிரக்க உணர்வினால் பீடிக்கப்பட்டது இஇவரது கவிமனம். இந்தச் சுய நிந்தனையும் சுயபரிதாபமும் வாழ்க்கையின் வேறுதிசைகளைக் காணவோ கவிதைப் பொருளின் வேறு வகைகளைத் தேர்ந்து கொள்ளவோ விக்ரமாதித்தியனுக்குத் த்டையாக அமைகின்றன. இது இவருக்கு எதிர்மறையான மகிழ்வைத் தருகிறதோ என்றும் சந்தேகப்படத் தோன்றுகிறது. சமீப காலமாக'என்ற கவிதை இந்தச் சந்தேகத்தை எழுப்புகிறது (பக்: 52). தனது நிலை பற்றி விளக்கும் வரிகளால் முன் நகர்கிறது கவிதை. இந்தத் தன்னிலை விளக்கங்கள்அனைத்தும் உடன்பாட்டு ரீதியில் அடுக்கப்படுகின்றன. ஓர் ஆசுவாசத்தை அனுபவிக்கும் விடுபட்ட தொனி இந்த அடுக்குகளின் ஊடேசெல்கிறது. ஆனால் கடைசி அடுக்கு இவற்றுக்கெல்லாம் எதிர்மறையாகத் திரும்புகிறது. இது வலியப் புகுத்தப்பட்டது. இல்லையெனில் தன் வாழ்க்கை, அமைதியின் கணங்களைக் கொண்டிருக்கும்போதிலும் மனித வாழ்க்கையைப் பற்றிக் கவிமனம் விசாரம் கொண்டு வருத்திக் கொள்வதை சுட்டும் ஏதுக்கள், காரணக்கள் சுட்டப்பட்டிருக்க வேண்டும்.
அனுபவ உலகின் விரிவின்மை காரணமாக விக்ரமாதித்தியனின் பாடு பொருட்கள் வரையறுக்கப்பட்டு விடுகின்றன. ஒரே அனுபவம் வேறுவேறு சொற்களைப் புனைந்து கொண்டு அணிவகுக்கிறது. இவரது கவிதை மனம் மரபின் ஆரோக்கியமான கூறுகளைக் குறித்தஏக்கம் கொண்டவையாகத் தோன்றுகிறது. அனுவங்கள் வறட்சி காணத் தொடங்கும்போது இந்த மரபின் சில அம்சங்களை வரவேற்று உடனிருத்திக் கொள்ள இவரால் முடிகிறது. நவீனத் தமிழ்க் கவிதையில் இது அபூர்வமானது. ஆனால் விக்ரமாதித்தி யனிடம் இந்த மரபுணர்வு அவரது நிகழ்கால ஸ்திதி பற்றிய விசாரமாகவே முடிந்து விடுகிறது. இவரது கவிதைகளைப் பக்தி இலக்கிய உணர்வு நிலையும் கவிதைக் கட்டமைப்பும் பாதித்திருக்கின்றன என்றும் தோன்றுகிறது. ஓர் அனுபவம் அந்த அனுபவத்தைச் சொல்ல எத்தனிக்கும் படிமங்கள், உருவகங்கள், குறியீடுகள் ஆகியவை இழைந்த உணர்வுத் தளங்கள் - இவற்றைப் பக்தி மரபுக் கவிதைகளின் இயல்பாகக் கருதலாம். இவை தன்னியக்கத்துடன், எழுச்சியுடன் நகர்ந்து வெளிப்
படுத்தப்பட வேண்டிய அனுபவ வட்டத்தில் கலக்கின்றன. இந்தக் கட்டமைப்பை விக்ரமாதித்தியனின் பல கவிதைகளில் காணலாம். ( பக்: 36, 40, 41, 49, 53, 54,58 ). ஆனால் இந்த அம்சங்கள் தன்னெழுச்சியுடன் முன்னேறாமல் அனுவம் சார்ந்த வரிகளை ஊன்றி நிறுத்த மட்டுமே இவரிடம் பயன்படுகின்றன என்றும் தோன்றுகிறது. அனுபவமும் அதன் ரீங்காரமும்'மனசுக்குள் கடல்'என்ற தனி வரியில் அடங்கியிருக்க, பிற தட்டையான வரிகள் அதைக் காபந்து செய்து கவிதையாக உயர்த்த வியர்த்தமாகப் பாடுபடுகின்றன.
புற உலக எதார்த்தங்கள் விக்ரமாதித்தியனுக்கு முகம் பார்க்கப் பயன் படுவது போல, மனித உறவுகளும் ஒரே கோணத்திலேயே பார்க்கப் படுகின்றன. உறவின் தள வேறுபாடுகளை இவரது கவிதை மனம் கவனத்தில் கொள்வ தில்லை. ஒரு கலைஞனாகத் தன்னை வரித்துக் கொள்ளும், முன்னிலைப் படுத்திக் கொள்ளும் இவர் இதே முகத்துடன் மட்டுமே அங்கீகரிக்கப்படவும் விரும்புகிறார். இந்த அங்கீகாரம் சிதைக்கப்படும் வேளையில் பீறிடும் ஆங்காரமும் கசப்பும் கவிதையிலும் எதிரொலிக்கின்றன. கலைஞன் என்பதால் கைவிடப் படுவதாகக் குமுறுகிறார். ஆனால் கலைஞன் என்பதால் ஒருவனுக்கு வாழ்க்கை விசேஷச் சலுகைக்களை வழங்குகிறதா என்ன?
இதுவரை வெளிவந்திருக்கும் விக்ரமாதித்தியனின் மூன்று தொகுதி களிலுள்ள கவிதைகளும் அடிப்படையில் ஒரே அனுபவத் தளத்தையும் ஒரே குரலையும் கொண்டவை என்று தோன்றுகிறது. இந்த அனுபவத்தளம் மாற்றமில்லாதது. எனினும் உண்மையானது. இந்தக் குரல் சுருதி பேதம் கூடாதது. எனினும் பாசாங்கற்றது. ஆனால் மகத்தான உண்மைகூட திரும்பத் திரும்பத் திணிக்கப் பட்டால் எதிர்மறை விளைவுகளையே காண நேர்வது காலத்தின் விசித்திர விதி. மந்தர ஸ்தாயியில் மீட்டப்படும் வீணையின் சுருதிக்க்கு மனதைக் கவ்வும் ஈர்ப்பு உண்டுதான். ஆனால் வீணையில் அநேக ஸ்வர ஸ்தானங்களும் காற்றில் ஏராளமான இசையும் இருக்கின்றனவே? விக்ரமாதித்தியனின் ஒர்றைப் பரிமாணமுள்ள குரல் அதன் சாதகமான இயல்புகளைத் தாண்டி ஓர் ஆயாசத்தை வாசக உணர்வில் சரித்து விடுமோ என்ற கேள்வியை அல்லது சந்தேகத்தை 'உள் வாங்கும் உலகம்'எனக்குள் உருவாக்கியிருக்கிறது.
1 பிப்ரவரி 1988.
↧
கடலினும் பெரிது
விரும்பியதை அடைய
ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்
காலடி மணலில் பிசுபிசுத்த
முதல் கடலைத் தாண்டினேன்
பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது
இரண்டாம் கடல்
கணுக்காலைக் கரண்டிய
மூன்றாம் கடலை உதறித் தள்ளியும்
முழங்காலில் மண்டியிட்டது
நான்காம் கடல்
இடுப்பைக் வருடிய ஐந்தாம் கடலைப்
புறக்கணித்து நடந்தேன்
கழுத்தை நெரிக்க அலைந்தது
ஆறாம் கடல்
தலையை ஆழ மூழ்கடித்து
உட்புகுந்து ஆர்ப்பரித்த
ஏழாம் கடலைக்
கொப்பளித்துத் துப்பியதும்
'வெற்றி உனதே, இனி
விரும்பியதை அடையலாம்'என்றார்கள்.
உப்பை ருசித்தபடிக் கேட்டேன்
'ஏழினும் பெரிய கடல் இல்லையா?'
↧
ரிதுபர்ணகோஷ்
ரிதுபர்ண கோஷை முதலில் சந்திததது 2005 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில். அவருடைய அந்தர்மஹால் என்ற படம் அந்த விழாவில் திரையிடப்பட்டது. அதற்காக வந்திருந்தவரிடம் நான் பணியாற்றிய தொலைக் காட்சி சார்பாகச் சந்தித்தேன். தொழில் நிமித்தமான தாக அல்லாமல் அந்தச் சந்திப்பு ஒரு நட்பின் தொடக்கமாக இருந்தது என்பதை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 2010 ஆம் ஆண்டு அதே திரைப்பட விழாவுக்கு அபோமன், நௌகாதோபி ஆகிய புதிய படங்களுடன் வந்திருந்தார். அப்போது நான் தொலைக் காட்சிப் பணியிலிருந்து விலகி விட்டிருந்தேன். அவரைச் சந்தித்த
முன்னாள் சக ஊழியரிடம் என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி விசாரித்திருக்கிறார். அதைத் தெரிந்து கொண்டு அவரை இரண்டாம் முறையாகச் சந்தித்தேன். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் அமர்ந்து பேசினோம். முதல் அறிமுகத்துக்குப் பின்னர் அவருடன் எந்த விதமான தொடர்பும் எனக்கில்லை. இருந்தும் அவர் என்னை நினைவில் வைத்திருந்தது ஆச்சரியத்தை யும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்த உணர்வுகளே அவரது எல்லாப் படங்களையும் பார்க்கும் உந்துதலை ஏற்படுத்தியது. அவரது திரைப் படங்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் முன்னோட்டமாக இந்தக் குறிப்பு. ரிதுபர்ண கோஷின் முதல் ஆண்டு நினைவையொட்டி ஒரு நாளிதழில் வெளியிடும் நோக்கில் எழுதப் பட்டது இந்தக் குறிப்பு. தவிர்க்க முடியாத காரணத்தால் இதழில் வெளிவரவில்லை. அதை இங்கே பதிவேற்றுகிறேன் - நண்பர் ரிதுபர்ணோவுக்கு அஞ்சலியாக.
சென்ற ஆண்டு இதே மே மாதம் 30ஆம் நாள் வங்காளத் திரைப்பட இயக்குநர் ரிதுபர்ண கோஷ் மறைந்தார். இறுதி விடை பெற்றுச் சென்றபோது இந்த உலகுக்கு விட்டுச் சென்றது கலைநயம் மிகுந்த பங்களிப்புகளை. தானே திரைக்கதை எழுதி இயக்கிய 21படங்கள், நடித்த 5படங்கள், திரைக்கதை மட்டும் எழுதிய ஒரு படம் - எனக் குறிப்பிடத் தக்க படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.
வங்காளத் திரையுலகில் சத்யஜித் ராய்க்குப் பின் வந்த கலைச் சினிமாவின்பிரதிநிதிகளில் ரிதுபர்ண கோஷும் ஒருவர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கலைப்பட இயக்குநராகப் பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். எனினும் அதற்குரிய அங்கீகாரம் அவருக்குக் குறைந்த அளவிலேயே அளிக்கப்பட்டது. அதிகம் பேசப்படாத ஆளுமை யாகவே இருந்தார். இந்தியக் கலைச் சினிமா இயக்குநர்கள் பற்றி மிக விரிவான ஆய்வு நூலான 'தி எசென்ஷியல் மிஸ்டரி'யை எழுதிய ஜான் டபிள்யூ ஹூட் அந்த நூலில் சத்யஜித் ராய்க்குப் பின் வந்த இயக்குநர் களைப் பற்றிச் சொல்லும் பகுதியில் கூட ரிதுபர்ண கோஷைக் குறிப்பிடவில்லை. இவ்வளவுக்கும் அந்த நூல் வெளிவந்த தருணத்தில் ரிதுபர்ண கோஷ் தனது முக்கியமான எட்டு படங்களை இயக்கிப் புகழ் பெற்றிருந்தார். அதை விடவும் முக்கியம் சத்யஜித் ராயின் மறைவுக்குப் பின்னரும் மிருணாள் சென்னின் ஓய்வுக்குப் பின்பும் சுணங்கிப் போயிருந்த கலைச் சினிமா வகைக்குத் தனது படங்களால் புத்துயிர் அளித்தவர் அவர்தான். ஆனால் தனது கலைக்கு அங்கீகாரம் பெறுவதை அவ்வளவு முக்கியமானதாக அவர் கருதவில்லை. ''என் வேலை நல்ல படங்களை உருவாக்குவது. அது மட்டுமே என் அக்கறை''என்று குறிப்பிட்டார்.
சத்யஜித் ராயின் படங்களுக்குப் பின்னர் கலைப் பட ரசிகர்களைத் தாண்டி பொது ரசிகர்களிடமும் பெரும் வரவேற்புப் பெற்றவை ரிதுபர்ண கோஷின் படங்களே. அவரது படங்களைச் சத்யஜித் ராயின் அழகியலின் தொடர்ச்சி யாகவே காணலாம். தனது கலை வாழ்க்கையையும் சத்யஜித் ராயின் மானசீக வாரிசாகவே அமைத்துக் கொண்டவர் ரிதுபர்ண கோஷ். ராயைப் போலவே கோஷும் விளம்பர நிறுவனமொன்றில் ஓவியராக வாழ்க்கை யைத் தொடங்கியவர். இருபத்தியோராவது வயதில் தனது முதல் படமான 'ஹிரேர்அங்கதி' ( வைர மோதிரம் 1992 ) யை இயக்கினார். பிரபல வங்காளி எழுத்தாளர் சீர்ஷேந்து முகோபாத்தியாயாவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். குரு சத்யஜித்ராயை மானசீகமாகப் பின் தொடரும் செயலின் முதல் கட்டம் இது. ராயின் முதல் படமான பதேர் பாஞ்சாலியும் நாவலின் திரையாக்கம் தான். இருவரையும் ஒப்பிட்டுப் பேச உதவும் இன்னொரு அம்சம் ரவீந்திர நாத தாகூர் மீது இருவரும் கொண்டிருந்த பற்று. இருவரும் தாகூரின் தலா மூன்று கதைகளுக்குத் திரை வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.இருவரும் தாகூரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். படத்தின் கதை யமைப்பு, பாத்திரச் சித்தரிப்பு, காமிராக் கோணங்கள். இசை ஆகிய அம்சங்களில் ராயின் வலுவான செல்வாக்கை ரிதுபர்ண கோஷ் படங்களில் பார்க்க முடியும். ஒப்பீட்டு நோக்கில் ராய் விட்ட இடத்திலிருந்து கோஷ் தனது கலைப் படமுயற்சிகளைத் தொடர்ந்தார் என்றோ ராயின் மேதைமையை நெருங்க முயன்றார் என்றோ நவீனப் படுத்தினார் என்றோ சொல்லலாம். ஆனால் அதையும் கடந்த தனித்துவம்அவரது படைப்புகளில் நிலவியது.
ரிதுபர்ண கோஷின் முதல் படம் குழந்தைகளுக்கான படமாக எடுக்கப் பட்டது. ''ஆனால் இந்தியக் குழந்தைகளுக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை''என்று அவரே ஒப்புக் கொள்ளவும் செய்தார். ரிதுபர்ண கோஷின் இரண்டாவது படம் 'உனிசே ஏப்ரல் '( ஏப்ரல் 19) . 1994இல் வெளிவந்த இந்தப் படம் அந்த ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த படத்துக்கான தங்கத் தாமரை விருதையும் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றது. கலைப்பட உலகில் ரிதுபர்ண கோஷின் வருகையை உறுதி செய்தது.அன்று முதல் அவரது இறப்புக்குப் பின்னர் சென்ற ஆண்டு வெளியான 'சித்ராங்கதா'வரையிலான படங்கள் அவரது இடத்தை நிர்ணயித்தன.
மனித உறவுச் சிக்கல்களே ரிதுபர்ண கோஷின் படங்களின் ஆதார இழை 'உனிசே ஏப்ரல்' நாட்டியமணியாகப் புகழ் பெற்ற தாய் சரோஜினிக்கும் மகள் அதிதிக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது. தனது கலை ஈடுபாடு காரணமாகத் தாய் தன்னைப் புறக்கணித்ததாக மகள் நினைக்கிறாள். சரோஜினிக்குக் கிடைக்கும் புகழ் கணவன் மனீஷை தொந்தரவுக்குள் ளாக்குகிறது. அதன் காரணமாக நேரும் முரண்பாட்டில் இருவரும் விலகுகிறார்கள். மனீஷ் மகள் அதியைத் தனது பராமரிப்பில் வளர்க்கிறான். அந்த வளர்ப்பு அவளைத் தாயிடம் இருந்து இன்னும் அந்நியமாக்குகிறது. சரோஜினிக்கு நாட்டிய சாதனைக்கான விருது வழங்கப்படுகிறது அந்த நாள் கணவன் மனீஷின் நினைவு நாள். அதைப் பற்றிய ஞாபகமே இல்லாதவள் என்று தாயைக் குற்றம் சாட்டும் மகளுக்கு சரோஜினி தனது துயரங்களைச் சொல்லுகிறாள். தாயும் மகளும் பரஸ்பரம் புரிந்து கொள்ளும் இடத்தில் படம் முடிகிறது. இருவரும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்கிறார்கள். அது பெண்கள் என்பதனாலேயே ஆண்களால் வஞ்சிக்கப் படுகிறோம் என்பது.
உனிசே ஏப்ரல் படத்தில் தொடங்கும் பெண்புலச் சார்புநிலைதான் ரிதுபர்ண கோஷின் படைப்புகளின் மொத்தச் சூழல். அவர் இயக்கிய பெரும்பான்மை யான படங்களும் பெண்ணின் நிலையை மையமாகக் கொண்டவை. பெண்ணின் தரப்பிலிருந்தே அல்லது பெண்ணின் சார்பாகவே வாழ்க்கையின் சிக்கல்களைப் பார்ப்பவை. ஆங்கிலத்தில் அவர் இயக்கிய 'தி லாஸ்ட் லியர் ' ( 2007), கடைசிப் படமான 'சத்யான்வேஷி'இரண்டும் மட்டுமே இந்தச் சார்பிலிருந்து கொஞ்சம் விலகியவை. எனினும் இரண்டிலும் மையப் பிரச்சனை பெண்ணை முன்னிருத்தியது தான். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நிபுணரான ஹரிஷ் மிஸ்ரா தனது கலை வாழ்க்கையின் உச்சநிலையில் ஏன் நடிப்பைத் துறந்தார் என்பதைச் சொல்கிறது லாஸ்ட் லியர். ஒரு மர்மக் கொலையின் பின்னணிகளைத் துப்பறிகிறது சத்யான்வேஷி. இரண்டிலும் மையக் காரணம் பெண்கள்.
நடுத்தர வயதைக் கடந்த மணமாகாத பெண் ஒரு திரைப்பட இயக்குநரால் எவ்வளவு நாசூக்காக ஏமாற்றப் படுகிறாள் என்பதை பர்வாலி ( வீட்டு உரிமையாளி - 1999 ) என்ற படமும் பெரு நகரத்தில் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டப் பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கணவனும் அவன் குடும்பமும் அவளையே அந்த அசம்பாவிதத்துக்குக் காரணமாகக் குற்றம் சாட்டுவதைப் பற்றிய கோபத்தை 'தஹன்'என்ற படமும் திருமண முதல் நாளிலேயே கணவனை இழந்த நுண்ணறிவும் சுதந்திர வேட்கையும் கொண்ட பெண்ணின் நிலையை 'சோக்கர் பாலி' ( கண்ணில் விழுந்த துகள் - 2003 ) என்ற படமும் இணக்கமான குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் தம்பதியரின் வாழ்வில் நிகழும் விபத்து, கணவனின் மறைக்கப்பட்ட காதலை மனைவிக்கு வெளிப்படுவதன் மூலம் ஏற்படும் உறவுச் சிக்கல்களை 'தோஸார் ' ( தோழமை 2006 ) என்ற படமும் சித்தரிக்கின்றன.
இந்திய சினிமாவில் பெண்களைச் சார்ந்து உருவாக்கப்பட்ட படங்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவை ரிதுபர்ணகோஷின் படங்களாக இருக்கலாம். மிகைப்படுத்தலோஉரிமை முழக்கமோ செய்யாமல் பெண்நிலை சார்ந்தே அவை உருவாகியிருக்கின்றன. அவரது மிகச் சிறந்த படங்களில் ஒன்றான 'அபோமன் 'ஓர் உதாரணம். கலைப்பட இயக்குநரான அநிகேதுக்குத் தனது படத்தில் நடிக்க வந்த தன் மகனின் வயதையொத்த பெண்ணிடம் ஏற்படும் ஈர்ப்பையும் அதன் மூலம் மனைவியுடன் நேரும் முரணையும் இந்தப் படம் சொல்லுகிறது. அநிகேத்தின் வாழ்க்கைச் சம்பவங்களாகத் திரையில் காட்டப்படுபவை உண்மையில் சத்யஜித் ராயின் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடக் கூடியவை. சத்யஜித் ராய்க்கும்அவரது 'சாருலதா'படத்தின் நாயகியான மாதவி முகர்ஜிக்கும் இடையிலிருந்த மென் காதலையே ரிதுபர்ண கோஷ் திரைக் கதையில் கையாண்டிருந்தார். இது ராயை அவமதிக்கும் செயல் என்று வங்காளிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. ஆனால் படம் யாரையும் குற்றம் சாட்டாமல் மனித மனத்தின் விசித்திரங்களையும் தடுமாற்றங்களையுமேபேசுகிறது. குறிப்பாக, பெண்களின் சார்பாக.
பெண்ணின் உலகைச் சித்தரித்த பல இயக்குநர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். பெண் இயக்குநர்கள் பலரும் அதை எந்த ஆண் இயக்குநரை விடவும் மிக இயல்பாகவும் உண்மையாகவும் செய்திருக் கிறார்கள். ஆனால் அத்தகைய சித்தரிப்புகாக, உடல்,உயிர் இரண்டையும் அர்ப்பணித்தவர் ரிதுபர்ண கோஷ். இயற்கையாகவே பெண்ணியல்புகள் கொண்டவராகக் கருதப்பட்டவர் அவர். தானே ஒரு பெண்ணாக வாழ்வதில் விருப்பம் கொண்டிருந்தார். 'மனித இனத்தில் உயர்வானது பெண் இனம்தான்'என்று நேர்காணலில் அதைஅழுத்தமாகவும் கூறியிருந்தார். இந்த விருப்ப உணர்வைத் தொடர்ந்து பேணினார். ஒரு கட்டத்தில் பெண்மையின் சாயலில் வெளிப்படவும் செய்தார். பெண்கள் அணிவதுபோன்ற ஆடையில் பொது அரங்குகளில் பங்கேற்றார். நண்பரும் இயக்குநருமான கௌசிக் கங்கூலியின் 'அவுர் ஏக்தி பிரேமேர் கப்போ' ( இன்னொரு காதல் கதை - 2011 ) படத்தில் தன்பால் விழையும் பாத்திரத்தில் – ஹோமோ செக்ஷுவல்- துணிந்து நடித்தார். பண்பாட்டுக் காவலர்களின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தனது விருப்பங்களைத் தோற்றத்திலும் தனதுபடங்களிலும் வெளிப் படுத்தினார். மாற்றுப் பாலினத்தவரின் உலகை அதன் சிக்கல்களுடனும் நுட்பங்களுடனும் கவனித்தார். அதன் உச்ச கட்டம் அவரது கடைசிப் படமான ‘சித்ராங்கதா'. தாகூரின் பிரபலமான நாடகத்தின் திரையாக்கம் இந்தப் படம். அதில் அவர் ஏற்று நடித்தது ஆணுடலில் பெண் உணர்வு கொண்ட ருத்ரா என்ற பாத்திரத்தை.ஒரு திருநங்கையின் உடலியல், பாலியல், உளவியல் சமூகவியல் நெருக்கடிகளை மிக எதார்த்தமாக நடித்துக் கலையாக்கினார். அதற்காக அவர் தனது மொத்த வாழ்க்கையையே பலியிட்டார்.
’சித்ராங்கதா’படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்த போது கடந்த மே 20ஆம் தேதி ரிதுபர்ண கோஷ் காலமானார். திடீர் மாரடைப்பே மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
ரிதுபர்ண கோஷ் பல நோய்களால் தாக்குண்டவராகவே இருந்தார். நீரிழிவு, கணையக் கோளாறு, இதய நோய் எல்லாம் அவரைத் துன்புறுத்தி வந்தன. அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டிருந்தார். கூடவே தன்னைப் பெண்பாலாக மாற்றிக் கொள்வதற்கான ஹார்மோன் சிகிச்சை களுக்கும் உட்பட்டிருந்தார். ஒரு படத்தில் பெண் பாத்திரம் ஏற்பதற்காக மார்பக வளர்ச்சிக்கான அறுவையையும் செய்திருந்தார். ஐம்பதைத் தொடும் வயதில் அவரை மரணம் விரைந்து வந்து தீண்டியதற்கு அந்தச் சிகிச்சையும் ஒரு காரணம்.'எனது கலைக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயார்'என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதை சாகசமாக நிரூபித்தும் காட்டினார்.
↧
↧
எல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள்தான்
புதிய புத்தகம் பேசுது இதழின் ‘ஒரு புத்தகம் - 10 கேள்விகள்’ பகுதிக்காக ’வெல்லிங்டன் ‘ நாவலை முன்வைத்துக் கேட்கப் பட்ட கேள்விகளும் அளித்த பதில்களும் இவை. நன்றி: ’புதிய புத்தகம் பேசுது’ ஜூன் 2014 இதழ், கீரனூர் ஜாகீர்ராஜா.
1. தமிழில் பெரிதும் அறியப்பட்ட கவிஞராகிய நீங்கள் எழுதிய ‘வேழாம்பல் குறிப்புகள்'வாசித்த போது உங்கள் உரைநடையின் செறிவையும் சிறப்பையும் உணர முடிந்தது. இப்போது வெல்லிங்டன் நாவலில் நீலகிரி மலையின் ஒரு காலகட்ட வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள். ஒரு கவிஞராக இந்த உரைநடை அனுபவத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்?
கவிஞனாக அறியப்படவே விரும்பியிருக்கிறேன்; விரும்புகிறேன். கவிதைச் செயல்பாட்டின் விரிவாக்கமாகவே உரைநடையையும் பார்க்கிறேன். எழுத வந்த காலம் முதலே கவிதையையும் உரைநடையையும் இணையாகவே கையாண்டிருக்கிறேன்.
நவீன யுகம், உரைநடையின் யுகம் என்பது என் எண்ணம். புதிய கவிதைகள் உரைநடையில் எழுதப்படுபவைதாம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். உரைநடைக்குப் புறக் கருவிகளும் தெளிவும் துலக்கமும் தேவைப்படுகின்றன. கவிதைக்கு அகத் தகவல்களும் நுட்பமும் பூடமும் அவசியமாக இருக்கின்றன. இந்த இரண்டு இயல்புகள்தாம் அவற்றைப் பிரித்துக் காட்டு கின்றன. உரைநடை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை; கவிதை புறமொன்று வைத்து உள்ளே வேறொன்றைப் பேசுகிறது. ஆனால் சாரத்தில் இரண்டும் மொழியின் இரண்டு சாத்தியங்களைச் சொல்பவை. உரைநடையைக் கொஞ்சம் இறுக்கினால் கவிதையின் சாயலைக் கொண்டுவர முடியும் என்று முயன்றதன் விளைவுதான் 'வேழாம்பல் குறிப்புகள்'உள்ளிட்ட எனது உரைநடை ஆக்கங்கள். அது ஒரு பயிற்சி. பயிற்சி முழுமையாகப் பயன் கண்டது இந்த நாவலில்தான். இதுவரையிலான எனது உரைநடையில் , மனம் விரும்பியதைக் கை செய்து முடித்தது என்று மிகவும் உணர்ந்தது இந்த நாவலின் ஆக்கத்தில்தான். குறுகிய தூர ஓட்ட நிபுணன் நெடுந்தூரப் பந்தயத்திலும் ஓடிய அனுபவம்.
இந்த நாவலில் ஒரு உரைநடையல்ல மூன்று உரைநடைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சல்லிவனின் கதையையும் வெல்லிங்டன் உருவாக்கத்தையும் பற்றிச் சொல்லும் பகுதியில் நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகத் தெரியும் பழைய உரைநடை. கதையின் மையப் பாத்திரமான பாபுவின் நுழைவுக்கு முந்தைய காலகட்டத்தைச் சொல்லும் பகுதியில் ஐம்பது அறுபதுகளின் நடை. பாபுவின் பார்வையில் விரியும் மீதிப் பகுதியில் சமகால நடை. இந்தப் பகுப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல; படைப்பின் போக்கு முன்வைத்த கோரிக்கை அது. அதற்கு உடன்பட்டிருக்கிறேன்.
2. தனது ஆட்சியதிகாரத்தின் கீழிருந்தபோதும் திப்பு சுல்தானால் நீலமலையின் மகிமையை உணர்ந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும்? நீங்கள் நாவலில் குறிப்பிடுவது போல மனிதர்களை வெல்வது சுலபமாகவும் இயற்கையை வெல்வது கடினமாகவும் இருக்குமென திப்பு நினைத்திருக்க கூடுமா?
ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு முன்னரே நீலகிரிப் பகுதி திப்பு சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்றும் மைசூர், கேரளம் வழியாகப் படை நடத்தி சென்றிருக்கிறார் என்றும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. பவானி ஆற்றின் வட கரையில் கட்டப்பட்ட தேவநாய்க்கன் கோட்டை திப்புவின் படைத்தளமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீலமலையை வெல்வது திப்புவின் திட்டங்களில் இருந்ததா இல்லையா என்று வரலாறு திட்டவட்டமாகச் சொல்வதில்லை. இயற்கையை வெல்வது அவர் நோக்கமாக இருந்திருக்குமா என்பதும் சொல்லப்படவில்லை. அதை ஊகிப்பதில் படைப்பாளனாக எனக்கு ஆர்வமுமில்லை. 'மனிதர்களை வெல்வது சுலபமாகவும் இயற்கையை வெல்வது கடினமாகவும் இருக்குமென திப்பு நினைத்திருக்க கூடுமா?'என்ற வாசகம் ஒரு படைப்புக் கற்பனை மட்டுமே.
3. 2008ல் மலையாளக் கவிஞர்களுக்கு ஊர்சுற்றிக் காண்பித்தபோது வெல்லிங்டன் நாவல் கருக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தீர்கள். வாழ்ந்து பழகிய ஊரை எழுத்தில் முன்வைக்கையில் உருவாகும் பதற்றம் கலந்த பரவசத்தை எழுதும் போது அனுபவித்திருப்பீர்கள்.
நாவல் எழுத்தில் ஈடுவேன் என்றெல்லாம் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் என்றாவது அப்படி ஒன்றைச் செய்ய நேர்ந்தால் அதன் களம் வெல்லிங்டனாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயமாக இருந்தது. நண்பர்களை அழைத்துச் சென்றது ஒரு தூண்டுதல் மட்டுமே. நாவலின் பின்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல மனதில் இளம் பருவத்திலேயே பதிந்த நிலப்படம் அந்த ஊரினுடையது. எப்போதும் நினைவிலேயே இருந்த ஊர் அது. மறக்கவியலாதவர்களாக இருந்தவர்களும் அந்த ஊரின் மனிதர்களே. திரும்பத் திரும்ப யோசித்ததும் அந்த இடத்தையும் அங்கே வாழ்ந்த மனிதர்களையும் குறித்த கதைகளையே. மனதுக்குள் சுரந்து ததும்பிக் கொண்டிருந்த அந்த ஞாபக ஊற்று நண்பர்களுக்கு ஊரைச் சுற்றிக் காண்பித்தபோது தன்னிச்சையாகத் திறந்து கொண்டது. அவ்வளவே.
எல்லா எழுத்துகளும் ஏதோ ஒருவகையில் பதற்றத்தையும் பரவசத்தையும் தருகின்றன. சரியாகச் சொன்னால் அந்தப் பதற்றத்தையும் பரவசத்தையும் மீண்டும் மீண்டும் அனுபவிக்கவே ஒரு படைப்பாளி படைப்பாக்கத்தில் ஈடுபடுகிறான். இந்த நாவலில் இந்த இரண்டு உணர்வுகளும் மற்ற தருணங்களை விட அதிகமாக இருந்தன. நாவலின் பரப்பும் விரிவும் வெவ்வேறு பாத்திரங்களின் மனநிலைக்கு ஆட்பட வேண்டியிருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம். நினைவுகளில் மட்டுமே இருக்கும் இடத்தையும் காலத்தையும் மனிதர்களையும் மீண்டும் உயிரும் ஒளியுமாக உருவாக்க முடிந்ததே பேரனுபவம்.
4. ஜான்சலிவன் நாவலிலிருந்து மறைந்ததும் ஒரு வெற்றிடம் உருவானதாக உணர்ந்தேன். இது அந்த கதாபாத்திரம் உருவாக்கிய தாக்கம். மற்ற எல்லா பாத்திரங்களைவிடவும் ஜான் சலிவன் தன் மொத்த ஆகிருதியுடன் வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்.
’வெல்லிங்டன்’நாவலில் கிட்டத்தட்ட நானூறு பாத்திரங்கள் வருவதாக நூலை வெளியிட்டுப் பேசிய நண்பர் பார்த்திபன் கணக்குச் சொல்லியிருந்தார். நான் கணக்கிட்டுப் பார்க்கவில்லை. சிறிதும் பெரிதுமான எந்தப் பாத்திரமும் அதற்குரிய ஆகிருதியுடன் உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது. உண்மையில் இதில் வரும் பாத்திரங்களில் மிகப் பருமனான இரண்டு பாத்திரங்களில் ஒன்று சர்.ஜான் சல்லிவன். ( மற்றது பெயர் குறிப்பிடப்படாமல் இடம் பெறும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் - ஜெகஜீவன்ராம் ). அதனால் மொத்த ஆகிருதியுடன் வெளிப்பட்டிருப்பதாக உங்களுக்குத் தென்பட்டிருக்கலாம்.
உண்மையில் ஜான் சல்லிவனுக்கு நாவலில் அளிக்க விரும்பிய இடம் மிகச் சிறியது. ஒரு பத்தி, ஒரு பக்கம், ஒரு அத்தியாயத்தில் முடிக்கவேண்டும் என்று தீர்மானம். ஆனால் எழுத்தின் போக்கில் அவர் முதன்மையான பாத்திரமாக பேருருவம் கொண்டு விட்டார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டேன். சல்லிவன் இல்லாமல் உதகமண்டலமோ உதகமண்டலம் இல்லாமல் வெல்லிங்டனோ உருவாக வாய்ப்பில்லை. எனவே நீண்ட யோசனைக்குப் பிறகு, அவரது வரலாற்றுப் பங்குக்கு மதிப்பளிப்பதாக இருக்கட்டுமே என்று அந்தப் பகுதிகளை நீக்காமல் விட்டேன். அந்தப் பகுதிகளை நாவலை எழுதத் தொடங்கிய 2008ஆம் ஆண்டு வாக்கிலேயே முடித்திருந்தேன். அவற்றை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது. 2012ஜனவரி 14நாளின் 'தினமணி'தலையங்கம் மறை முகமாக வைத்துக் கொள்ளலாம் என்ற தெளிவான முடிவை எடுக்கச் செய்தது. 'தேசியத் தலைகுனிவு'என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில் 'இன்றைய உதகையை நிர்மாணிக்க, இருநூறு ஆண்டு களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சலைவன் (ஏதோ புலி, சிங்கங் களை வேட்டையாடியதைப்போல) எத்தனை பழங்குடி மக்களைக் கொன்றார் என்ற விவரங்கள் பதிவுகளாக உள்ளன'என்ற வரிகள் இருந்தன.
நாவலை எழுதுவதற்காக நான் நடத்திய ஆய்வில் அப்படியான எந்தப் பதிவையும் பார்க்கவில்லை. மாறாக சல்லிவன் 'உள்ளூர் அடிமைக'ளுக்கு ஆதரவாக இருந்தார் என்றுதான் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தது. தினமணி தலையங்க வாசகங்கள் மேம்போக்கானவை என்று அறிய முடிந்தது.
சல்லிவன் ஆங்கிலேய அரசின் அதிகாரத்தைச் செயல்படுத்த அனுப்பப்பட்டவர்தான். ஆங்கில ஆட்சியின் சுரண்டல்களுக்குத் துணை நின்றவர்தான். ஆனால் அதையும் மீறி ஒரு புரோட்டஸ்டெண்ட் கிறித்துவ எதிர்ப்புணர்வும் தோட்டக் கலையில் ஆர்வமும் கொண்டிருந்தவர். சுதேசிப் பிரஜைகளின் மீது கரிசனம் கொண்டிருந்தவர். அவர்களுக்காகத் தனது வரையறைக்குள் நின்று வாதாடியவர் என்ற தகவல்கள் எல்லாம் இன்றும் வாசிக்கக் கிடைப்பவை. அதை ஆராய்ந்து வாசிக்கும் எவருக்கும் தினமணி தலையங்க வாசகங்கள்அபத்தமாகப்படும். உண்மைக்கு மாறானவை என்று விளங்கும். வெள்ளையர் என்றாலே கொடியவர்கள் என்று கற்பிதம் செய்யும் பாமர தேசபக்தி புலப்படும். எனவே ஜான்சல்லிவனைப் பற்றிய சரியான சித்திரம் என்று ஆய்வுகளின் வலுவில் கண்ட ஒன்றை அந்த விமர்சனத் துக்கு எதிராக முன்னிருத்த ஆசைப்பட்டிருக்கலாம். நாவலாக்கத்தின் போதோ அதற்குப் பிந்தைய தருணங்களிலோ இந்த எண்ணம் உருவாகவில்லை. உங்கள் கேள்வியைத் தொடர்ந்து யோசிக்கும்போது இந்தக் காரணமும் ஆழ்மனதில் இருந்திருக்கலாம் என்று படுகிறது. படைப்பாளனாக எனது சாய்வு ‘அஜண்டா நாட்டுப்பற்றின் மீது அல்ல; உண்மையின் மீது.
5. ஹெத்தே மனையின் பரம்பரைப் பூசாரி மாதேகவுடர் சொல்வதாக விரியும் கதை நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீ ஹெத்தயம்மாள் சரித்திரம் நூலின் தாக்கத்தில் உருவானதா?
ஹெத்தெயம்மன் ஆலயம் - ஜகதளா
முற்றிலும் அந்த நூலின் தாக்கத்தில் உருவானதல்ல. அதையும் சார்ந்து கற்பனை கலந்து உருவாக்கப்பட்டது. சிறு வயதில் படக இனத்தைச் சேர்ந்தவர் சொல்லிக் கேட்ட பல கதைகளில் ஒன்றையே பயன் படுத்தியிருக்கிறேன்.
ஹெத்தே என்ற பெண் தெய்வத்தை மையமாக வைத்து படகர்களுக்கு மத்தியிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் நிலவுகின்றன. படகர்களைப் பற்றி ஆய்வு நடத்திய மானுடவியல் ஆய்வாளர் பால் ஹாக்கிங்க்ஸ், குறைந்த பட்சம் பதினோரு படக கிராமங்களில் ஹெத்தெ வழிபாடு நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதினோரு கிராமங்களிலும் பதினோரு வித்தியாசமான ஹெத்தெ கதைகள் புழக்கத்திலிருந்தன என்றும் பதிவு செய்திருக்கிறார். பதினொன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகள். அவை அனைத்திலும் பொதுவாக உள்ள மையம் ஒரு மானுடப் பெண், கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள் என்பதே. ஒரு கதையில் கணவனின் சாவில் பரிதவித்துப்போன பெண் அவனுடன் உடன் கட்டை ஏறுகிறாள். இன்னொரு கதையில் வய்ல் வெளி தீப்பிடித்து எரியும் போது கணவன் ஒரு செட்டிப் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து மனமுடைந்த பெண் தன்னை தீக்கிரையாக்கிக் கொள்கிறாள். பொருந்தாத் திருமணம் செய்து மகன் கொண்டு வந்த மருமகள் மாமிசம் உண்பவள் என்று தெரியவந்ததும் தாய் ஹெத்தே தற்கொலை செய்து கொள்கிறாள். இன்னொரு கதையில் பருவமடைந்தால் உடலுறவுக்கு வற்புறுத்தப்படுவோம் என்று அஞ்சிய பெண் பூப்பெய்தியதும் உயிரை மாத்துக் கொள்கிறாள். இப்படிப் பல ஹெத்தெ கதைகள் சொல்லப்படுகின்றன. இவை பற்றி மானுடவியல் அடிப்படையிலும் சமூகவியல் அடிப்படையிலும் வழிபாட்டு ரீதியிலும் விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. நாவலாசிரியனாக என் தேர்வு அவை சார்ந்ததல்ல. ஒரு பழங் கதையை நினைவு படுத்துவது மட்டுமே. நான் கேட்டு மனதில் பதிந்திருந்த கதையை என் மொழியில் சொல்லியிருப்பது மட்டுமே.
6. கதை கோயமுத்தூரில் நிகழும்போது அப்போதைய சென்ட்ரல் ஸ்டூடியோ, நடிகர் ராம்சந்தர், நடுவகிட்டுக்கார தட்சிணாமூர்த்தி, ஐயரின் ரப்பர் கம்பெனி, வேலாண்டிபாளையம் எல்லாம் இடம் பெறுகின்றன. பெருமளவு கோவை நகரப் பரிச்சயமும் உள்ள நீங்கள் எதிர்காலத்தில் கோவையைக் களமாகக் கொண்டும் ஒரு நாவல் எழுதுவீர்களா?
அப்படியான திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. வெல்லிங்டன் நாவலில் சித்தரிக்கப்படும் காலத்துக்கு ஏதுவாகவே கோவை நகரத்தின் இடங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அது தேவையானதாகவும் நாவலுக்கு உண்மையின் சாயலைக் கொடுப்பதாகவும் அமைந்தது. கோவை நகரத்துடன் எனக்குப் பரிச்சயம் இருப்பது உண்மை. அந்தப் பரிச்சயத்தைப் பின்புலமாகக் கொள்ளக் கூடிய கதை எதுவும் இப்போது மனதில் இல்லை. உங்கள் கேள்வி அப்படி ஏதாவது கதையை மனதின் களஞ்சியத்திலிருந்து தேடிக் கண்டு பிடிக்க முடியுமா என்ற குறுகுறுப்பைக் கொடுக்கிறது. பார்க்கலாம். இந்தக் குறுகுறுப்பைக் கிளறி விட்டதற்காக நன்றி.
7. பொதுவாக இதுபோன்ற ஊர்வரலாற்றை நாவலாக எழுதுகிறவர்கள் ஊரின் வரைபடத்தையும், ஜான்சலிவன் போன்றோரின் நிழற்படங்களையும் நாவலில் இணைத்திருப்பார்கள். நீங்கள் அந்த சம்பிரதாயத்தை தவிர்த்திருக்கிறீர்கள்.
அதை சம்பிரதாயம் என்று நீங்களே சொல்கிறீர்களே, அதனால்தான் தவிர்த்திருக்கிறேன். எழுத்தில் சம்பிரதாயங்களுக்கு இடமளிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அது தவிர இதுவரலாற்று ஆய்வேடு அல்ல; ஆய்வுத் தகவல்களுக்கு ஆதாரமாக வரைபடத்தையோ உருவப் படத்தையோ கொடுக்க. இது ஒரு புனைவு. உண்மையின் மீது உருவாக்கப்பட்ட புனைவு. இங்கே தகவல்களின் துல்லியத்துக்கு அல்ல; அவை தரக்கூடிய உணர்வு களுக்கே முதன்மை. வெல்லிங்டனின் வரைபடம் என்று நான் கொடுக்கும் வரைபடத்தை மீறியஒன்றையே, சல்லிவனின் புகைப்படம் என்று நான் காட்டும் படத்தை மீறிய ஒன்றையே வாசிப்பு வேளையில் வாசகன் தனது கற்பனையில் உருவாக்கிக் கொள்கிறான். நான் கொடுக்கும் படங்கள் அவனுடைய கற்பனையைக் கலைக்கும் என்று தோன்றியது. அதுமட்டுமல்ல, நான் கொடுக்கும் சித்திரங்களே கூடக் கற்பனையை முழுமையாக்கத்தானே? அதைவிடவும் அவனையே முழுமையாகக் கற்பனை செய்து கொள்ள விடுவதே நல்லது என்று பட்டது.
8. நாவலுக்குள் நீங்கள் பிரவேசிக்கையில் அது தன்வரலாறாக மாறிவிடுகிறது. பிறகு கடைசிவரை சுயசரிதைத் தன்மையுடனேயே நகர்ந்து முடிகிறது. சலிவனை அல்லது படகர் இன மக்களின் தொன்மக் கதைகளை அல்லது இரண்டையுமே ஆங்காங்கே இணைத்திருப்பின் சுயசரிதைத் தன்மை மிகுந்து இழையோடுவதைத் தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது...
உங்களுக்கு என்னைப் பற்றிய ஏதோ தகவல்கள் தெரிந்து இருக்கின்றன என்று ஊகிக்கிறேன். அதனால் பாபுவின் பிரவேசத்தை என்னுடைய நுழைவாகவும் நாவல் தன் வரலாறாகவும் உங்களுக்குத் தோன்றியிருக் கலாம். என்னைப் பற்றிய எந்த விவரமும் தெரியாத ஒரு வாசகனுக்கு இது நாவலாக மட்டுமே தென்படும் என்று நம்புகிறேன். சல்லிவன் பற்றிய வரலாறு அந்த இடத்தின் உருவாக்கத்தையும் படகர் இனத் தொன்மங்கள் அந்த இடத்தில் வாழ்ந்தவர்களின் அல்லது வாழ்பவர்களின் இருப்பைச் சொல்லவுமே எடுத்தாளப் பட்டவை. இது தன் வரலாற்று நாவல் அல்ல என்று அடுத்த கேள்வியில் நீங்களே சான்றளிக்கிறீர்கள்.
இந்த நாவலில் சுய சரிதைத்தன்மை இழையோடக் காரணம் அதன் வடிவம். யாரும் அதிகம் கவனிக்காத ஒரு ஊரைப் பற்றியும் அங்கிருந்த மனிதர் களைப் பற்றியும் சொல்லவே விரும்பினேன். அதைச் சொல்வது ஒரு சிறுவனின் பார்வையில். சிறுவனின் ஆறு முதல் பதினேழு வயது வரையிலான வாழ்க்கையிலிருந்து கதைக்கான சம்பவங்களைத் தொகுத்திருக்கிறேன். சிறுவனின் மனப் பக்குவத்தை மீறிய எதையும் சொல்லி விட முடியாது. அவனுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேச முடியாது. அவனுடைய அறிவை மீறிய வர்ணனைகளையோ சித்திரிப்பு களையோ கையாள முடியாது. எனவேதான் அந்தப் பகுதிகள் நீண்டு தெரிகின்றன. பாபுவின் நுழைவுக்குப் பிறகு கதையை அவனுடைய அனுபவ எல்லைக்கு மீறியதாக எழுத விரும்பவில்லை. ஆசிரியர் கூற்றாகவும் கதையை முன் நடத்திச் செல்ல விரும்பவில்லை. ஒரு ஊர் எவ்வாறு உருவாகிறது என்று சொல்லும் பகுதியிலும் - சல்லிவன் வரலாறு, அந்த ஊருக்கு மனிதர்கள் சென்று சேர்வதைப் பேசும் பகுதியிலும் - வெல்லிங்டனுக்குக் கண்ணன் சென்று குடியேறுவது, ஆசிரியர் கூற்றாகச் சொல்லப்படும் நாவல் பாபுவின் வருகைக்குப் பின்பு அவனுடைய கோணத்தில் மட்டுமே முன் நகர்கிறது. இது இயல்பாக நிகழ்ந்தது. வலிந்து அதை மாற்ற விரும்பவில்லை. அலங்காரமாகச் சொன்னால் எல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள் தானே?
9. 'காலம் பின்நகர்த்திய வாழ்வையும், மனிதர்களையும் நடைமுறையில் திரும்பப் பெறமுடியாது. ஆனால் எழுத்தின் மூலம் முடியும்'என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். 300பக்கங்கள் கொண்ட நாவலை; ஊர்வரலாறு, தன்வரலாறு, ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம் யாவும் பிணைந்த ஒரு பிரதியாக மாற்றியிருக்கிறீர்கள். உங்கள் அளவில் இது திருப்தி அளித்திருக்கிறதா?
இல்லை. நான் எழுத நினைத்த நாவல் இது அல்ல. அந்த வகையில் இந்த நாவல் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் நான் எழுத நினைத்த நாவலின் சகல கூறுகளும் இந்த நாவலில்எழுதப்பட்டு விட்டன . அந்த வகையில் ஓரளவுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறது. நான் திட்டமிட்ட நாவலில் சல்லிவன் வரலாறு வெறும் குறிப்பு - ரெஃப்ரன்ஸ் - மட்டுமே.படகர் தொன்மங்கள் வெறும் கதை மட்டுமே. ஆனால் இப்போதைய நாவலில் இரண்டும் கதையின் உள்ளோட்டங்களாகவே மாறியிருக்கின்றன. பாபுவும் அவன் நண்பர்களும் புழங்கும் உலகத்தை சல்லிவன் உருவாக்கிய ஊரின் உருவாக்கக் கதையுடன் ஒப்பிட்டும் சக்குவின் கதையை ஹெத்தெ கதையின் மறு படைப்பாகவும் பார்க்க முடியுமானால் நாவல் இன்னொரு பரிமாணத்தில் புலப்படலாம். சல்லிவனும் ஒரு புதிய உலகைக் கண்டு பிடிக்கிறார். பாபுவுக்கும் அவன் பார்க்கும் இடங்களிலிருந்து ஒரு புதிய உலகம் எழுகிறது. சக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் மைதானத்து மாரியம்மனுடன் ஒப்பிடப் படுகிறாள். ஒரு வாசகனாக இப்போது வாசிக்கும் போது இந்த இணைப்புகள் தென்படுகின்றன. எழுத்தில் இது தற்செயலாக நிகழ்ந்தது. அதைத்தான் 'இது என்னால் எழுதப்பட்டது என்பது மிகை; என்னால் எழுதப்பட்டது என்பதே சரி'என்று பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு கதை தன்னை எழுதிக் கொள்ள என்னைத் தேர்ந்தெடுத்தது என்பதும் திருப்தி அளிப்பதுதான்.
10. சுற்றுலாத் தலமாக மட்டுமே மாறிவிட்ட இன்றைய நீலகிரியின் வெறுமை சூழ்ந்த நிலையை உங்கள் வார்த்தைகளில் ஒரு குறுங்கவிதையாகச் சொல்லுங்கள்...
என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில் 'உதக மண்டலம்'என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. அந்தக் கவிதையின் விரிவாக்கமே இந்த நாவல் என்றும் சொல்லலாம்.நாவலில் கௌரி என்ற பெயரில் குறிப்பிடப்படும் பாத்திரத்தின் அசல் நபருக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் கவிதையின் இறுதி வரிகள் இவை:
'எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர்போல’.
நாவலை எழுதி முடிக்கும் தறுவாயில் மீண்டும் அந்த இடங்களை நேரில் சென்று பார்த்தேன். பலவும் மாறியிருந்தன. சில மாறாமலே இருந்தன. அந்த மாற்றங்களுக்கும்மாற்றமின்மைகளுக்கும் நடுவில் நான் உணர்ந்தது மேற்சொன்ன வரிகள் மாற வேண்டியவையாக இல்லை என்பதை. ஏனெனில் நீங்கள் சொல்லும் அதிகாரபூர்வமான சுற்றுலாத்தலமல்ல நான் பார்க்கும் நீலகிரி. அது இன்றும் பசுமையானது; இன்றும் இளமையானது; இன்றும் கற்பனையைத் தூண்டுவது.
↧
கண் மறந்த புதையல்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அபிமானத்துக்குரிய எழுத்தாளராக மாறிய எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் எழுதிய எல்லாப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் அவரைப் பற்றி எழுதப் பட்டவற்றையும் அவரது நேர்காணல்கள் இடம் பெற்ற இதழ்களையும் தேடித் தேடிச் சேர்த்து வைத்தேன். புத்தகங்களில் இரவல் போன எதுவும் திரும்பக் கைக்குக் கிடைக்கவில்லை. நேர்காணல்கள் வெளிவந்த இதழ்களும் காணாமற் போயின. காபோ அளித்தவற்றில் குறிப்பாக இரண்டு நேர்காணல் கள் அந்த நாளில் மிகவும் முக்கியமானவையாகத் தோன்றின. இன்றும் தோன்றுகின்றன. சில இதழ்கள் மட்டுமே வந்து நின்று போன 'பாயிண்ட் கவுண்டர் பாயிண்ட்'என்ற இதழில் வெளியானது ஒன்று. 'ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்'காலாண்டு இதழில் வெளிவந்த நேர்காணல் மற்றொன்று. தொண்ணூறுகளில் மார்க்கேஸ் சிறப்பிதழ் வெளியிடுவதில் ஈடுபட்டிருந்த நண்பர் கோணங்கியிடம் நேர்காணல்கள் வெளியான அந்த இதழ்களைக் கொடுத்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இவற்றுக்கு நகல் எடுத்து வைத்துக் கொண்டதாக ஞாபகமில்லை. அப்படியே இருந்தாலும் இடமாற்றங்கள் காரணமாகக் காணாமல் போயிருக்கலாமென்றும் திருவனந்தபுரத்துக்கு இடம்மாறி வந்து பதினான்கு ஆண்டுகளான பின்னும் பிரிக்கப் படாமல் கட்டிக் கிடந்த பெட்டிகளுக்குள்ளே இருக்கலாமென்றும் எண்ணியிருந்தேன்.
ஏதோ புத்தகத்தை எடுப்பதற்காக அண்மையில் அந்தப் பெட்டிகளைப் பிரித்துப் பார்த்தபோது காணாமற் போனவை என்று நம்பியிருந்த பல பொக்கிஷங்கள் மீண்டும் தென்பட்டன. புத்தகங்கள், சிற்றிதழ்கள், பத்திரிகை நறுக்குகள் , அரைகுறையாக விட்ட கவிதை, கட்டுரைப் பிரதிகள், ஒளிநகல்கள் இவற்றுக்கிடையில் 'ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்'இதழ் மார்க்கேஸ் பேட்டியின் நகலும் கிடைத்தது. அந்த இதழின் ஜனவரி - மார்ச் 1983 காலாண்டு எண்ணில் 'எழுத்தாளரின் சமையலறை' (Writer's Kitchen) என்ற
தலைப்பில் அமைந்த நேர்காணல். ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட மொழியாக்கம். மொழிபெயர்ப்பாளர் கல்பனா சாஹ்னி.
டாக்டர் கல்பனா சாஹ்னி
கண் மறந்த புதையல் கைவசமான மகிழ்ச்சியில் கல்பனா சாஹ்னி யார்? இணையம் வாயிலாகத்து துப்புத் துலக்கினேன். அது இன்னுமொரு ஆச்சரியத்தை அளித்தது. கல்பனா சாஹ்னி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாஸ்கோவில் வசித்து ரஷ்ய மொழியைக் கற்றுப் பட்டம் பெற்றவர். ரஷ்ய மொழியிலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவுடனும் நேர்காணல் நடத்தியிருக்கிறார். ரஷ்ய மொழியில் வெளிவந்திருக்கும் பேட்டியை கல்பனா சாஹ்னியே எடுத்திருக்க வேண்டும். இதை விடவும் ஆச்சரியமாகத் தென்பட்டது அவரது பின்னணி. இந்திய சினிமாவின் நடிப்பாளுமைகளில் ஒருவரான பால்ராஜ் சாஹ்னியின் சகோதரரின் மகள். அதாவது நடிகரும் இந்தி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவருமான பீஷம் சாஹ்னியின் மகள். (பீஷம் சாஹ்னியின் நாவல் 'தமஸ்'வெங்கட் சாமிநாதன் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது ).
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் இருபது பக்க நேர்காணல் மிகச் சுவாரசிய மானது. எழுத்தின் அக உலகைப் பகிரங்கப்படுத்துவது. முதல் பதிலிலேயே படிப்பவனை ஈர்த்து விடுகிறார் காபோ.
ஒருமுறை ஜெனீவாவுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பன்னிரண்டு மணி நேரப் பயணம். நண்பர்கள் சிலருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த 'தனிமையின் நூறு ஆண்டுகள்' ( One Hundred Years of Solitude ) நாவலின் பிரதி ஒன்றைத் தவிர வாசிப்பதற்கு என்னிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்னுடைய நாவலையே நான் வாசிக்கத் தொடங்கினேன். என்னால் மூன்று நான்கு அத்தியாயங்களைத் தவிர முழுவதும் படித்து முடிக்க முடியவில்லை.
அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?
வெளிப்படையாகச் சொல்வதானால் இல்லை. அதை எழுதிக் கொண்டிருந்த போது உலகத்திலேயே சிறந்த புத்தகம் என்று நிச்சயம் கொண்டிருந்தேன். ஜெனீவாவுக்குப் போகும் வழியில் படித்ததும் மிகவும் வெட்கமடைந்தேன். அதை ஒழுங்காக எழுத எனக்குப் போதுமான கால அவகாசம் கிடைத்திருக்க வில்லை என்பதை உணர்ந்தேன். அதில் நான் செய்திருப்பது கேட்ட கதை களைத் திரும்பச் சொன்னதுதான்.
இலட்சக் கணக்கான வாசகர்களைப் பித்துப் பிடிக்க வைத்த நாவலைப் பற்றி அதன் ஆசிரியர் இப்படியா சொல்லுவார்? ஆனால் வேறு எப்படி சொல்லுவார், காபோ?
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அபிமானத்துக்குரிய எழுத்தாளராக மாறிய எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் எழுதிய எல்லாப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் அவரைப் பற்றி எழுதப் பட்டவற்றையும் அவரது நேர்காணல்கள் இடம் பெற்ற இதழ்களையும் தேடித் தேடிச் சேர்த்து வைத்தேன். புத்தகங்களில் இரவல் போன எதுவும் திரும்பக் கைக்குக் கிடைக்கவில்லை. நேர்காணல்கள் வெளிவந்த இதழ்களும் காணாமற் போயின. காபோ அளித்தவற்றில் குறிப்பாக இரண்டு நேர்காணல் கள் அந்த நாளில் மிகவும் முக்கியமானவையாகத் தோன்றின. இன்றும் தோன்றுகின்றன. சில இதழ்கள் மட்டுமே வந்து நின்று போன 'பாயிண்ட் கவுண்டர் பாயிண்ட்'என்ற இதழில் வெளியானது ஒன்று. 'ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்'காலாண்டு இதழில் வெளிவந்த நேர்காணல் மற்றொன்று. தொண்ணூறுகளில் மார்க்கேஸ் சிறப்பிதழ் வெளியிடுவதில் ஈடுபட்டிருந்த நண்பர் கோணங்கியிடம் நேர்காணல்கள் வெளியான அந்த இதழ்களைக் கொடுத்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இவற்றுக்கு நகல் எடுத்து வைத்துக் கொண்டதாக ஞாபகமில்லை. அப்படியே இருந்தாலும் இடமாற்றங்கள் காரணமாகக் காணாமல் போயிருக்கலாமென்றும் திருவனந்தபுரத்துக்கு இடம்மாறி வந்து பதினான்கு ஆண்டுகளான பின்னும் பிரிக்கப் படாமல் கட்டிக் கிடந்த பெட்டிகளுக்குள்ளே இருக்கலாமென்றும் எண்ணியிருந்தேன்.
ஏதோ புத்தகத்தை எடுப்பதற்காக அண்மையில் அந்தப் பெட்டிகளைப் பிரித்துப் பார்த்தபோது காணாமற் போனவை என்று நம்பியிருந்த பல பொக்கிஷங்கள் மீண்டும் தென்பட்டன. புத்தகங்கள், சிற்றிதழ்கள், பத்திரிகை நறுக்குகள் , அரைகுறையாக விட்ட கவிதை, கட்டுரைப் பிரதிகள், ஒளிநகல்கள் இவற்றுக்கிடையில் 'ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்'இதழ் மார்க்கேஸ் பேட்டியின் நகலும் கிடைத்தது. அந்த இதழின் ஜனவரி - மார்ச் 1983 காலாண்டு எண்ணில் 'எழுத்தாளரின் சமையலறை' (Writer's Kitchen) என்ற
தலைப்பில் அமைந்த நேர்காணல். ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட மொழியாக்கம். மொழிபெயர்ப்பாளர் கல்பனா சாஹ்னி.
டாக்டர் கல்பனா சாஹ்னி
கண் மறந்த புதையல் கைவசமான மகிழ்ச்சியில் கல்பனா சாஹ்னி யார்? இணையம் வாயிலாகத்து துப்புத் துலக்கினேன். அது இன்னுமொரு ஆச்சரியத்தை அளித்தது. கல்பனா சாஹ்னி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாஸ்கோவில் வசித்து ரஷ்ய மொழியைக் கற்றுப் பட்டம் பெற்றவர். ரஷ்ய மொழியிலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவுடனும் நேர்காணல் நடத்தியிருக்கிறார். ரஷ்ய மொழியில் வெளிவந்திருக்கும் பேட்டியை கல்பனா சாஹ்னியே எடுத்திருக்க வேண்டும். இதை விடவும் ஆச்சரியமாகத் தென்பட்டது அவரது பின்னணி. இந்திய சினிமாவின் நடிப்பாளுமைகளில் ஒருவரான பால்ராஜ் சாஹ்னியின் சகோதரரின் மகள். அதாவது நடிகரும் இந்தி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவருமான பீஷம் சாஹ்னியின் மகள். (பீஷம் சாஹ்னியின் நாவல் 'தமஸ்'வெங்கட் சாமிநாதன் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது ).
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் இருபது பக்க நேர்காணல் மிகச் சுவாரசிய மானது. எழுத்தின் அக உலகைப் பகிரங்கப்படுத்துவது. முதல் பதிலிலேயே படிப்பவனை ஈர்த்து விடுகிறார் காபோ.
ஒருமுறை ஜெனீவாவுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பன்னிரண்டு மணி நேரப் பயணம். நண்பர்கள் சிலருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த 'தனிமையின் நூறு ஆண்டுகள்' ( One Hundred Years of Solitude ) நாவலின் பிரதி ஒன்றைத் தவிர வாசிப்பதற்கு என்னிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்னுடைய நாவலையே நான் வாசிக்கத் தொடங்கினேன். என்னால் மூன்று நான்கு அத்தியாயங்களைத் தவிர முழுவதும் படித்து முடிக்க முடியவில்லை.
அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?
வெளிப்படையாகச் சொல்வதானால் இல்லை. அதை எழுதிக் கொண்டிருந்த போது உலகத்திலேயே சிறந்த புத்தகம் என்று நிச்சயம் கொண்டிருந்தேன். ஜெனீவாவுக்குப் போகும் வழியில் படித்ததும் மிகவும் வெட்கமடைந்தேன். அதை ஒழுங்காக எழுத எனக்குப் போதுமான கால அவகாசம் கிடைத்திருக்க வில்லை என்பதை உணர்ந்தேன். அதில் நான் செய்திருப்பது கேட்ட கதை களைத் திரும்பச் சொன்னதுதான்.
இலட்சக் கணக்கான வாசகர்களைப் பித்துப் பிடிக்க வைத்த நாவலைப் பற்றி அதன் ஆசிரியர் இப்படியா சொல்லுவார்? ஆனால் வேறு எப்படி சொல்லுவார், காபோ?
↧
அய்யாவின் மிதிவண்டி
அ ய் யா வி ன் மி தி வ ண் டி முந்தின நாள் கிருஷ்ணா தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்க்கப் போயிருந்தேன். விளைவு? மறுநாள் காலை சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. வழக்கத்தைவிடப் பதினைந்து நிமிடம் தாமதமாகத் தான் நடவரசு அய்யா வீட்டுக்குப் போய்ச் சேர முடிந்தது. அதற்குள் குட்டைக் கிருட்டிணன் முந்திக்கொண்டிருந்தான். வீட்டு வாசலில் அய்யாவின் சைக்கிளை நிறுத்தித் துடைத்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை படர்ந்தது. முகத்தை இறுக்கிப் ‘போடா குள்ளப் பண்ணி’ என்று அவனுக்குக் கேட்காத குரலில் முணுமுணுத்து உதடுகளைப் பிதுக்கிப் பழிப்புக் காட்டி விட்டுத் திண்ணைமேல் ஏறினேன். குட்டைக் கிருட்டிணன் சைக்கிளின் பெடலை வேகமாகச் சுழற்றித் துடைத்துக்கொண்டிருந்த துணியைச் சுருட்டிப் பின் சக்கரத்தின் ரிம்மில் வைத்து அழுத்திப் பிடித்தான். பெடலை விட்டுவிட்டுப் பல்லைக் கடித்துக்கொண்டு துணியால் ரிம்மை விட்டுவிட்டு அழுத்தினான். சக்கரம் மெதுவாக வேகம் குறைந்து நின்றது. அய்யாவின் சைக்கிளைத் துடைக்கிற எல்லாரும் கடைசியாகச் செய்கிற சடங்கு. சைக்கிளைத் துடைத்து முடித்தாகிவிட்டது என்ற முத்தாய்ப்பு. சைக்கிள் தயாராகிவிட்டது என்று அய்யாவுக்குத் தெரிவிப்பதற்காக ஒரு தடவை மணியையும் அடிப்போம். மணியோசை தேய்வதற்குள் அய்யா புத்தகக் கட்டுடன் வாசல் நிலையில் தோன்றுவார் . . . ‘என்ன தோழர்களே, புறப்படலாமா?’ என்று கேட்பார். நிரந்தரமாக ஜலதோஷம் பிடித்திருப்பது போன்ற அந்தக் குரல் எங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். எல்லாரையும்விட எனக்கு அதன்மேல் அலாதியான மோகம் இருந்தது. அய்யா வகுப்புக்கு வரத் தாமதமாகும் நேரங்களில் - மிக அரிதாகத் தான் அவர் வகுப்புக்கு வரத் தாமதிப்பார் - அவரைப் போலவே அடிக்குரலில் ‘என்ன தோழர்களே, இது வகுப்பா? மாட்டுச் சந்தையா? உங்களால் அமைதியாக இருக்க முடியாதா?’ என்று ஆரம்பித்துக் கோபம் வரும்போது அவர் பயன்படுத்தும் ஒரே வசைச் சொல்லான ‘சாணிப் பயல்களா?’ என்பதையும் சொன்னால் போதும் வகுப்பு தற்காலிகமாக அடங்கும். ‘புறப்படலாம் அய்யா’ என்று கூட்டுக் குரலில் நாங்கள் பதில் சொன்னதும் அய்யா திண்ணையிலிருந்து இறங்குவார். நானோ குட்டைக் கிருட்டிணனோ அவர் கையிலிருக்கும் புத்தகக் கட்டை வாங்கி சைக்கிள் கேரியரில் வைப்போம். எங்கள் புத்தகக் கட்டுகளைக் கேரியருக்கும் சீட்டுக்கும் இடையில் கீழே விழாதபடி திணித்துவைப்போம். சாப்பாட்டுப் பாத்திரம் வைத்த பிளாஸ்டிக் ஒயர் கூடையை வலது ஹாண்டில் பார் வழியாக எடுத்து நடுவில் மாட்டுவோம். புத்தகத்தை வாங்கி வைக்காதவன் ஸ்டாண்டை எடுத்துவிடுவான். அய்யா வேட்டியின் நுனியைப் பிடித்து உயர்த்தியபடி காலை வீசிப் போட்டுச் சீட்டில் உட்கார்ந்து ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்ளுவார். எங்களில் எவனாவது ஒருவன் அய்யா உட்கார்ந்திருக்கும் சீட்டை வலதுகையாலும் ஹாண்டில் பாரை இடது கையாலும் பிடித்துக்கொள்ளுவோம். இன்னொருவன் பின்னாலிருந்து சைக்கிளைத் தள்ளத் தொடங்குவான்.பெரும்பாலும் ஸ்டாண்டை எடுத்துவிடுபவன்தான் சைக்கிளைத் தள்ள வேண்டியிருக்கும். அய்யாவின் ‘மெல்ல மெல்ல’ என்ற அடுக்குத் தொடருடன் எங்களுடைய பயணம் தொடங்கும். இரண்டு கால்களையும் சமமாகப் பெடலில் வைத்துக்கொள்வதைத் தவிர அய்யா வேறு எந்த அசைவையும் காட்டமாட்டார். சைக்கிள் நகர ஆரம்பித்ததும் அய்யா பேச ஆரம்பிப்பார். பேச்சு பெரும்பாலும் பாடப் புத்தகத்திலிருக்கும் செய்யுள் பகுதியைப் பற்றியோ புலவர்களின் சாதுரியத்தைப் பற்றியோதான் இருக்கும். வெகு அபூர்வமாக ரெயின்போ தியேட்டரில் பார்த்த ஆங்கிலப் படங்களின் கதையைச் சொல்லிக்கொண்டு வருவார். வீட்டில் பயணம் தொடங்கியவுடன் ஆரம்பிக்கும் கதை முடிவதற்கு இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். அந்த நாட்களில் சீட்டைப் பிடித்துக்கொண்டு நடப்பது யார் என்று எங்களுக்குள் சண்டை நடக்கும். அதைக் கண்டும் காணாதது போல அய்யா ரசிப்பார். முந்தின வாரம்வரைக்கும் நெட்டைக் கொக்கு டேவிட் இருந்தான். அவனுடன் சண்டை போட எனக்குப் பயமாக இருந்தது. நாங்கள் எட்டாம் வகுப்பில் தேறி ஒன்பதாம் வகுப்புக்கு வந்தபோது டேவிட் மூன்றாம் வருடமாக அதே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அதற்காக ஸ்பெஷல் பீசும் கட்டியிருந்தான். எனக்கிருந்த பூனைமயிர் மீசையுடன் மல்லுக் கட்டுவதுபோல அவனுக்கு அடர்த்தியான செம்பட்டைநிற மீசை இருந்தது. தாடியும் இருந்தது. இரண்டு வருட சீனியாரிட்டி காரணமாக அவனுடன் மோதுவது உடல் நலனுக்கு நல்லதல்ல எனத் தோன்றியது. டேவிட் இருந்தவரை அவன்தான் நடவரசு அய்யாவின் பள்ளிக்கூட விவகாரங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். காலையில் சீக்கிரமாகவே அய்யா வீட்டுக்குப் போய் சைக்கிளைத் துடைத்து வைப்பது, காலை இடைவேளையின்போது காளியப்பன் கடைக்குப் போய் அய்யாவுக்காக எடுத்து வைத்திருக்கும் முரசொலி, தென்னகம், சமநீதி பத்திரிகை களை வாங்கி வருவது, பகல் உணவு இடைவேளையில் அதே காளியப்பன் கடையிலிருந்து வெற்றிலையும் அசோகா பாக்கும் வாங்கிவருவது, கட்டுரை ஏடுகளை ஸ்டாஃப் ரூமிலிருந்து எடுத்துவருவது, திரும்பக்கொண்டு வைப்பது, பள்ளி முடிந்ததும் அய்யாவின் சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து உருட்டிக்கொண்டு வந்து கேட் அருகில் நிறுத்துவது என எல்லா வேலைகளையும் அவன் மட்டுமே செய்தான். அவன் இருந்த வரை அய்யாவின் பயணத்தில் சைக்கிளைப் பின்னாலிருந்து தள்ளுகிற வேலை மட்டுமே எனக்குக் கிடைத்தது. அதை நினைத்துப் பள்ளிக்கூடக் கழிப்பறையில் நின்று பல நாட்கள் அழுதிருக்கிறேன். இத்தனைக்கும் டேவிட்டைவிட நான் சிறந்த மாணாக்கன் என்றும் அவர் சொல்லித் தருவதை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதில் கற்பூரமென்றும் வகுப்பிலிருக்கும் நல்ல பயல்களில் ஒருவன் என்றும் அய்யாவே சொல்லியிருந்தார். அப்படியும் சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு நடக்கிற நல்லூழ் வாய்க்கவே இல்லை. இந்த வருடம் அரை ஆண்டுத் தேர்வு விடு முறைக்குப் பிறகு டேவிட் பள்ளிக் கூடத்துக்கு வராமல் போனான். கடைசியாக அவன் வந்தது வெள்ளிக் கிழமை. இனி வரவேமாட்டான் என்று ஏனோ நினைத்தேன். அவன் வந்துவிடக் கூடாது என்று விரும்பியதனாலேயே அப்படி நினைத்தேன். திங்கட்கிழமை காலை சீக்கிரமாகக் கிளம்பி அய்யா வீட்டுக்குப் போனேன். இனிமேல் சைக்கிளின் பின்சீட்டு என் கைப்பிடியில் இருக்கும் என்று உற்சாகமாகப் போனவன் திண்ணையில் குட்டைக் கிருட்டிணன் இளித்துக்கொண்டே நிற்பதைப் பார்த்ததும் அமுங்கிப் போனேன். அவன் கையில் சைக்கிள் சாவி இருந்ததைப் பார்த்ததும் ஆத்திரமாக வந்தது. துடைத்து முடித்த பின்னர் சைக்கிளை வாசலில் ஸ்டாண்டு போட்டு நிறுத்த வேண்டுமே தவிரப் பூட்டக் கூடாது. அதுதான் வழக்கம். குள்ளப் பன்றி வழக்கத்தை மீறியிருந்தான். போதாததற்கு இளிப்பு வேறு. எரிச்சலுடன் சைக்கிள் டியூப் வளையம் போட்ட புத்தகக் கட்டைத் திண்ணைமேல் வீசினேன். கிருட்டிணனை எட்டிப் பிடித்துச் சாவியிருந்த வலது கையைப் பின்பக்கமாக வளைத்து முறுக்கி அதை விழவைக்கப் பார்த்தேன். சாவி வளையத்தை விரலில் மாட்டிக் கையைச் சுருட்டி வைத்திருந்தான். ஒவ்வொரு விரலாகப் பிரிக்கப் பார்த்தேன். முடியவில்லை. எல்லா விரல்களையும் சேர்த்து அழுத்தினேன். கிருட்டிணன் கத்த ஆரம்பித்தான். ‘அய்யா, இங்க வாங்க இவன் என்னியப் போட்டு நொக்குறான்’ என்று ஒப்பாரிவைக்கத் தொடங்கினான். ‘குள்ளப் பண்ணி சாவியக் குட்றா?’ என்று அவன் கையை நெரித்தேன். ‘போடா, நாயி குடுக்கமாட்டன்’ வலியைப் பொறுத்துக்கொண்டு சொன்னான். ‘இத்தினி நாளு அந்த நெட்டக் கொக்கன் பண்ணாட்டுப் பண்ணுனான். இப்ப நீயாக்கும்? பண்ணி சாவியைக் குட்றா. பள்ளிக்கூடம் தொறந்த மொத நாளுலேர்ந்து அய்யாகூட நாங்க வருவோம். எங்கேருந்தோ பாதில வந்துட்டு நீங்க சைக்கிளைப் புடுங்குவீங்க ளாக்கும்?’ அவனுடைய கையை இன்னும் நெரித்துக்கொண்டே சொன்னேன். வலி பொறுக்க முடியாமல் அவன் விரல்கள் பிரிந்து சாவி கீழே விழுந்தது. அதே நேரத்தில் நடவரசு அய்யா உள்ளேயிருந்து ஓடிவந்து எங்களைப் பிடித்து விலக்கினார். ‘சாணிப் பயல்களா? என்ன செய்கிறீர்கள்? எதற்காக அடித்துக்கொள்ளுகிறீர்கள்?’ என்று இரண்டு கைகளாலும் எங்கள் இரண்டு பேரின் சட்டையையும் உலுக்கினார். தண்ணீர் தெளித்த பூமாலையை உலுக்குவது போன்ற மென்மையான உலுக்கல். இருந்தும் இருவரும் தலை கவிழ்ந்து நின்றோம். அய்யா பெண்டாட்டி கதவுப் பக்கமிருந்து எட்டிப் பார்த்தார். ‘புள்ளைங்களா இதுங்க? தெல்ல வாரிக் கூட்டமா இருக்கு. ரண்டு போடு போடாம நீ வேற கொஞ்சிகிட்டு நிக்கற.’ அய்யா திரும்பி அவரை ஏறிட்டார். ‘பயல்ககிட்ட நாம் பேசிக்கிறேன். நீ உள்ள போறியா?’ என்றார். அய்யா பெண்டாட்டி ‘எல்லா நீ குடுக்கிற எடந்தான். எல்லாம் தலைமேல ஏறிகிட்டு ஆடுது’ என்று முனகிக்கொண்டே உள்ளே மறைந்தார். ‘பயல்களா, இங்கே பாருங்கள். என்ன உங்களுக்குள் சண்டை?’ அய்யா கேட்டும் நாங்கள் பேசாமலிருந்தோம். கிருட்டிணன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அய்யா எங்களிடம் பேசுகிற செந்தமிழையும் மனைவியிடம் பேசுகிற கொச்சை மொழியையும் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மொழி மாறும் அந்த வேகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘என்னடா உங்களுக்குள்?’ மறுபடியும் அய்யா கேட்டார். ‘இவந்தாய்யா சைக்கிள் சாவியப் புடுங்கறதுக்காகச் சண்டைக்கு வந்தான்’ என்றான் குள்ளப் பன்றி. ‘எதற்காகத் திறவுகோலை அவனிடமிருந்து பிடுங்கப் பார்த்தாய்?’ வாயை இறுக்கிக்கொண்டு தலைகுனிந்து நின்றிருந்தேன். இவரிடம் கதை கேட்டுக்கொண்டு நடந்துவர எனக்குப் பிடிக்கும். அதற்காகவே போன வருடத்திலிருந்து காத்துக் கொண்டி ருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாதா? அப்படி நினைத்தபோதே எனக்கு அழுகை வந்தது. உதடுகளைக் கடித்து அடக்கிக்கொண்டேன். சைக்கிளைத் துடைத்து வைப்பதற்காக நேரத்திலேயே வந்ததையும் அதைப் பொறுக்காத நான் அவனை அடித்துச் சாவியைப் பிடுங்கப் பார்த்ததையும் தர மறுத்த அவனைப் பாதியிலே வந்தவன் என்று திட்டியதையும் சிணுங்கிக்கொண்டே சொல்லித் தீர்த்தான் குட்டை. அதைச் சொன்னபோது அவனுடைய உடம்பு ஸ்பிரிங்குபோலத் துள்ளியதாகத் தோன்றியது. அதை நினைத்ததும் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன் ஆனால் என் கண்ணுக்குள் தெரிந்த குறும்புத் துள்ளல் அய்யாவின் பார்வையில் பட்டுவிட்டது. என்னை உற்றுப் பார்த்தார். அவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டது. ‘சாணிப் பயல்களா, இதற்காகவா சண்டை? மாலவா, அவன் பக்கத்தில் நில். அடேய் நற்குமரா நெருங்கி நில்’ என்றார். அவர் சொன்னது எங்களைத்தான். என்னை நற்குமரனாகவும் கிருஷ்ணனை மாலவனாகவும் மாற்றியிருந்தார். அவர் பெயர்கூட அவராகவே மாற்றிவைத்துக்கொண்டது தான். தலைமை ஆசிரியர் அருட் தந்தை யூஜின் லாரன்ஸ் அடிகளார் மட்டுந்தான் அய்யாவை இன்னும் நடராஜன் என்று கூப்பிடுகிறார். கொஞ்சம் கூச்சத்துடன் நானும் அதே அளவு எரிச்சலுடன் குண்டுப் பன்றியும் நெருங்கினோம். இடைவெளி விட்டுத்தான் நின்றோம். ‘சேர்ந்து நில்லுங்களடா’ என்றார் அய்யா. விறைப்புடன் நகர்ந்தபோது இருவரும் இடித்துக்கொண்டோம். நான் பலமாக இடித்திருக்க வேண்டும். ‘உஸ் . . . அய்யா இவன் வேணும்னே இடிக்கிறான்யா’ என்று கத்தினான் கிருட்டிணன். ‘இல்லை அய்யா, தெரியாம இடிச்சுதுங்க’ என்றேன். அய்யா இருவரையும் பொருட்படுத்தவில்லை. இருவரும் அமைதியாகச் சேர்ந்து நின்றோம். கிருட்டிணன் எனக்கு இடது பக்கமாக நின்றிருந்தான். அவன் முகத்துக்குள்ளிருந்து எழுந்த ஏப்பத்தில் புளிச் சோற்றின் வாடை வீசியது. ‘அடே மாலவா, நீ உன்னுடைய வலது கையை நற்குமரனின் தோளில் போடு. நற்குமரா, நீயும் அதுபோல உன்னுடைய இடது கையை மாலவனின் தோள்மீது வை’ என்றார் அய்யா. அவர் சொன்னபடி செய்தோம். அய்யா கொஞ்சம் எட்டி நின்று மனப்பாடப் பகுதிச் செய்யுளைக் கரும் பலகையில் எழுதிப் போட்டு ரசிப்பதுபோல எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘இப்படிப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது, பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல. அதை விடுத்து இரண்டு பயல்களும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்களே? இனி உங்களுக்குள் சண்டை வந்தால் என்னிடம் பேச வேண்டாம் இந்த வீட்டுப் பக்கம் வரவும் வேண்டாம்’ என்று திடமான குரலில் சொன்னார். அய்யா சொன்னால் சொன்னது போலவே செய்வார் என்று எங்களுக்குத் தெரியும். அவ்வளவு உறுதியானவர். இரு நிறக் கரைபோட்ட மேல் துண்டை அணிந்து வரக் கூடாது என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. அய்யா அப்படி வருவது தன்னுடைய உரிமை என்றார். அப்படித்தான் வர முடியும். நிர்வாகத்துக்கு விருப்பமில்லையென்றால் அதை எழுத்துமூலம் தெரிவிக்கலாம். அதுவே முறை. ஆனால் தன்னுடைய விருப்பம்போலத்தான் உடுத்த முடியும் என்று பதில் சொன்னார். எனினும் கீழ்ப்படிதலுள்ள ஊழியனாக மறுநாள் முதல் மேல்துண்டில்லாமல் வருவதாக வாக்களித்தார். எங்கள் எல்லாருக்கும் அய்யா மேலிருந்த மரியாதை ஆட்டங்கண்டது. இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று அங்கலாய்ப்பாக இருந்தது. அடுத்த நாள் புறநானூற்றுப் புத்தகத்திலிருந்து இறங்கி வந்தவர்போல எங்கள் கண்ணுக்குத் தெரிந்தார் அய்யா. ஒன்றரை அங்குல அகலத்துக்கு இரட்டைக்கரை போட்ட புதுவேட்டி கட்டியிருந்தார். அய்யா மிகவும் பிடிவாதமானவர் என்று நாங்கள் தெரிந்துகொண்டது அன்றைக்குத்தான். ‘இனிப் பேசமாட்டேன்’ என்று அவர் சொன்னதும் எனக்கு வயிறு வலித்தது. ஆறுதலுக்காகக் கிருட்டிணன் தோள்மேல் போட்டிருந்த கையை இறுக்கினேன். அவனுக்கும் அப்படியே இருந்திருக்கும்போல. அவன் தோள்மேலிருந்த என் இடது கையைத் தன் இடது கையால் பாசமாக இழுத்துப் பொத்தினாற்போலப் பிடித்துக்கொண்டான். அய்யாவின் முகத்தில் நிறைவான சிரிப்பு புரண்டது. சிரிப்பு மங்கியதும் அய்யாவே ஒரு உடன்படிக்கையைச் சொன்னார். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நானும் செவ்வாய், வியாழன் கிழமைகளில் கிருட்டிணனும் சைக்கிளைத் துடைக்கலாம். சீட்டைப் பிடித்தபடி வரலாம். ஆனால் கிருட்டிணனுக்கு அதில் சம்மதமில்லை. ‘அவனுக்கு மூன்று நாட்கள், எனக்கு மட்டும் இரண்டு நாட்களா?’ என்று சிணுங்கினான். வகுப்புகள் நடைபெறும் எல்லாச் சனிக்கிழமைகளும் அவனுக்கே என்று திருத்தம் சொன்னார். அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அது முகத்தில் தெரிந்தது. நான் பள்ளிக்கூடம் வராத நாட்களும் அவனுக்கே என்றார். குண்டன் மெல்லச் சிரித்தான். ‘நேரமாகிவிட்டது, புறப்படுவோம்’ அய்யா சொன்னதும் நான் சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து விடுவித்தேன். அய்யா காலை வீசி ஏறி உட்கார்ந்தார். நகர ஆரம்பித்தோம். அய்யா வீட்டு மதில் சுவரைத் தாண்டும் முன்பு மனதுக்குள்ளேயே சில தீர்மானங்களை எடுத்துக்கொண்டேன். அதில் ஒன்று இந்த வருடத்தில் மிச்சமிருக்கும் நாட்களில் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கக் கூடாது. கூடவே எங்கள் தெரு சித்தி விநாயகரிடம் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தாமலிருக்கும் நல்ல புத்தியை எங்கள் தலைமை ஆசிரியர் அருட் தந்தை யூஜின் லாரன்ஸ் அடிகளாருக்குக் கொடுத்தால் அருகம்புல் மாலை சார்த்தி நாலணா கோபால் கற்பூரம் ஏற்றிவைப்பதாகவும் வேண்டிக்கொண்டேன். பொங்கல் விடுமுறைக்கு இரண்டு நாட்கள் இருந்தன. புதன்கிழமை போகி தொடங்கி ஐந்து நாட்கள் விடுமுறை என்பதை நினைக்கவே கொண்டாட்டமாக இருந்தது. போகி அன்றைக்குக் காலையில் வெல்லிங்டனுக்குப் பஸ் ஏறினால் பத்தரை பதினோரு மணிக்கு முன்பாக அத்தை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்துக்குப் பிறகு பஸ் பிடித்தால் மாலைக்குள் வீட்டுக்கு வந்துவிடலாம். மனதுக்குள் திட்டம்போட்டு அம்மாவிடம் சொல்லிக் காசையும் வாங்கி வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிச் சட்டை, துணிகளையெல்லாம் எடுத்துவைத்துவிட்டு அய்யாவிடம் சொல்லிக்கொள்ள ஓடினேன். அவர் வெளியே போயிருக்கக் கூடாது என்று மனம் அடித்துக்கொண்டது. பொதுவாக மாலை நேரங்களில் எங்கும் போகமாட்டார். படித்துக்கொண்டிருப்பார் அல்லது எழுதிக்கொண்டிருப்பார். அவர் எழுதும் துணை நூல்களுக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. சில நாட்கள் மைய நூலகத்துக்கோ ரெயின்போ தியேட்டருக்கோ போவார். பேருந்தில்தான் போவார். சைக்கிளை எடுக்கமாட்டார். அய்யாவின் வீட்டை நெருங்கியபோது வீட்டுக்குள்ளிருந்து அய்யா பெண்டாட்டியின் கத்தல் கேட்டது. எட்டு ஊருக்குக் கேட்கிற குரல். கேட்டைத் திறந்து உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசித்தேன். அய்யா பெண்டாட்டியின் கத்தலில் அதுவரைக்கும் கேட்டிராத ரகத்தில் தினுசு தினுசான கெட்ட வார்த்தைகள் இருந்தன. அந்த வார்த்தைகள் உள்ளே போகிற எண்ணத்தை முறியடித்துச் சுவரோடு ஒண்டி நிற்கச் செய்தன. அய்யா வீட்டுக் காம்பவுண்டுச் சுவர் என்னைவிட ஒரு முழம் அதிக உயரம். முன்னங்கால்களில் நின்று எக்கிப் பார்த்தாலோ செங்கல்லையோ கட்டையையோ போட்டு ஏறி நின்று பார்த்தாலோதான் உள்ளே தெரியும். எட்டிப் பார்க்கக்கால் விரல்களை ஊன்றினேன். ‘தாயோளி, பலபட்டற சாதிதான நீ? வாத்தியாருன்னு சொல்லிப் போட்டு வெள்ளையுஞ் சொள்ளையுமா மாட்டிகிட்டுத் திரிஞ்சாலும் புத்தி மாறிப் போகுமாக்கும்?’ என்ற அய்யா பெண்டாட்டியின் வார்த்தைகள் மண்டைமேல் வந்து விழுந்ததில் தடுமாறிச் சுவரை யொட்டி ஒடுங்கினேன். எங்கள் தெருவில் பெண்கள் சண்டைபோடுவதைப் பார்த்திருக்கிறேன். உக்கிரமான சண்டையில்கூட இந்த வார்த்தைகளை அதுவரை கேட்டதில்லை. அதுவும் ஆண் பிள்ளைகள் திட்டுகிற வார்த்தைகளைப் பொம்பிளைகள் சொல்லிக் கேட்டதில்லை. அய்யா பெண்டாட்டியின் வாயிலிருந்து திட்டுகள் மம்மானியமாகக் கொட்டிக் கொண்டிருந்தன. அய்யா உள்ளேதான் இருந்தார். அவரைத்தான் பெண்டாட்டி திட்டிக்கொண்டிருந்தார். புரிந்தது. ஆனால் அய்யா ஏன் மறுபேச்சுப் பேசாமல் சொல்லாமல் இருந்தார் என்றுதான் புரியவில்லை. மறுபடியும் கால்களால் எக்கி மதில் சுவரில் தாடை உராய எட்டிப் பார்த்தேன். திண்ணைச் சன்னலுக்கு மறுபக்கம் வெள்ளைச் சட்டை தெரிந்தது. அய்யாதான். உட்கார்ந்திருந்தார். கண்களை இன்னும் இடுக்கிப் பார்த்தபோது தலை குனிந்திருப்பதுபோலவோ புத்தகம் வாசிப்பதுபோலவோ தெரிந்தது. அய்யா பெண்டாட்டி தென்படவில்லை. ஆனால் அவருடைய ஆங்காரக் கூச்சல் மட்டும் விட்டுவிட்டுக் கேட்டது. சுவரின் சொரசொரப்பில் உராய்ந்து தாவாங்கட்டை எரிந்தது. ‘ஆருடாது, ஒடக்கான் மாரி செவுத்துல தொத்திகிட்டு’ என்ற விரட்டல் முதுகை அறைந்தது. சன்னல் பக்கம் அய்யா தலைநிமிர்ந்ததும் நான் தரையில் விழுந்ததும் ஒரே விநாடியில் நடந்தன. அய்யா பெண்டாட்டியின் அப்பாதான் விரட்டியவர் என்பதை மல்லாந்து கிடந்து பார்த்தேன். ‘இங்கென்றா எட்டிப் பாத்துட்டுடிருக்கே? என்று கேட்டுக்கொண்டே கையை நீட்டினார். அதைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றேன். கறுப்புநிறக் கார் எனக்குக் கொஞ்ச தூரம் தள்ளி நின்றிருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே ‘அய்யாவப் பாக்க வந்தனுங்க’ என்றேன். ‘பாக்க வந்தவன் எட்டிப் பாத்து கிட்டா நிப்ப. உள்ற போக வேண்டியதுதான?’ என்றார். ‘இல்லீங்க, உள்ள என்னமோ சண்டையாட்டம் இருக்குதுங்க. அதான்’ ‘சண்டையா?’ என்று கேட்டவர் என் கையை உதறிவிட்டு வேகமாக உள்ளே போனார். அவருடைய கோபத்தில் இரும்பு கேட் கிறீச் சிட்டுக்கொண்டு சுவரில் மோதிய சத்தம் பெரிதாகக் கேட்டது. நான் காதைப் பொத்திக்கொண்டு நின்றேன். காதுக்குள் இரும்புக் குரல் ‘ஙொய்’ என்று விம்மி அடங்கியது. கதவைத் திறந்து நகரத் தொடங்கியபோது அய்யா பெண்டாட்டியின் அப்பா பெருங்குரலில் கத்தியது சுவருக்கு இந்தப் பக்கமாகக் கேட்டது. மறுநாள் பேருந்தில் ஏறி ஊருக்குப் போய்ச் சேரும்வரை அய்யாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க யோசிக்க ஆத்திரமும் வருத்தமுமாக முட்டிக்கொண்டு வந்தது. அய்யாவுக்கு ஊர் தஞ்சாவூர்ப் பக்கமாம். அப்படியென்றால் சோழநாட்டுக்காரர். இருந்தாலும் அய்யாவைத் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகத்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன். செய்யுள் பாடத்தில் புறநானூற்றுப் பாடலை அய்யா நடத்திய விதம் அப்படிக் கற்பனை செய்யத் தூண்டியிருந்தது. பதினாறு வயசுப் பொடியன் என்று இளக்காரமாக நினைத்துச் சேர, சோழ மன்னர்களும் குறுநில மன்னர்கள் ஐந்து பேரும் கூட்டணி அமைத்துப் பாண்டியன்மீது போர் தொடுக்கத் தயாராகிறார்கள். அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வதாகவும் அப்படி நடவாது போனால் தன்னுடைய குடிமக்கள் தன்னைக் கொடுங்கோலன் என்று பழிக்கட்டும். புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடாமல் போகட்டும் என்று சபதம் செய்கிறான். இந்தப் பாடலை அய்யா நடத்தியபோது வகுப்பே தூசு விழுந்தால் கேட்குமளவு அமைதியாக இருந்தது. அய்யா பதினாறு வயதுப் பாண்டியனாகவே மாறியிருந்தார். முகம் உப்பியிருந்தது. கன்னத்துச் சதை இறுகியிருந்தது. கண்களில் சிவப்பு கலங்கியிருந்தது. வகுப்பிலிருந்த எங்கள் ஐம்பத்தி இரண்டு பேரையும் ‘சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தர்க’ளின் கூட்டணியாக நினைத்துப் பற்களை நறநறத்து அறைகூவல் விடுத்தார். எல்லாருக்குமே பள்ளியில் இருக்கிறோமா தலையானங்கானத்தில் கைகள் நடுங்க வாளையும் வேலையும் பிடித்துக்கொண்டு நிற்கிறோமா என்று சந்தேகமாகவே இருந்தது. அய்யா எவ்வளவு வீரமானவர் என்று மெய்சிலிர்த்தது எனக்கு. மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்த டேவிட்டைச் சாடையால் அழைத்துக் குண்டூசித் தலைகள்போலச் சருமம் பொரிந்திருந்த கைகளையும் சிலுப்பி நின்ற ரோமங்களையும் காட்டினேன். அவன் முகம் சிரித்து விரிந்தது. அவ்வளவு வீரரான அய்யா ஏன் ஒரு பொட்டச்சியின் வார்த்தை களுக்குப் பதில் பேசாமலிருந்தார். இல்லை நான் வந்த பிறகு பேசியிருப்பாரோ என யோசித்துக் குழம்பினேன். அந்த அசதியிலேயே தூங்கியிருந்தேன். ‘வெல்லிங்டன் எறங்குறது இருக்கா?’ என்ற நடத்து நரின் குரல் கேட்டு விழித்துத்தான் பேருந்திலிருந்து இறங்கினேன். தைல வாசனையுடன் முகத்தில் அடித்த காற்றில் அய்யாவை மறந்து போனேன். விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்த நாள் காலையில் வழக்கம் போல அய்யா வீட்டுக்கு ஓடினேன். குட்டைக் கிருட்டிணன் வந்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு தான் ஓடினேன். அய்யா வீட்டு இரும்பு கேட் மூடியிருந்தது. உள்ளே சைக்கிள் அதன் வழக்கமான இடத்தில் இல்லாமல் பெரிய திண்ணையில் சன்னலையொட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அய்யா இன்று விடுப்பு எடுத்திருப்பாரோ? கேட்டைத் திறந்து உள்ளே போனேன். வாசல் சாத்தியிருந்தது. குழப்பத்துடன் திண்ணையேறிக் கதவைத் தட்டினேன். உள்ளேயிருந்து அய்யா பெண்டாட்டியின் குரல் கேட்டது ‘ஆரு?’ ‘அய்யா இல்லீங்களா?’ என்று எச்சிலை விழுங்கிக்கொண்டே கேட்டேன். கதவு திறந்து அய்யா பெண்டாட்டி நிலைப்படியில் வந்து நின்றார். ‘நீயா? அது நேரத்துலயே பள்ளிக்கோடம் போயிருச்சு’ என்றார். நம்பிக்கை வராமல் ‘அய்யாவோட சைக்கிளு இங்க நிக்குதுங்களே? என்றேன். ‘அது அங்கதான நிக்கிது. ஒன்ற தலமேல நிக்கிறமாரிச் சொல்றே? ஏன் ஒங்க அய்யா சைக்கிளு இல்லாமப் பள்ளிக் கோடத்துக்குப் போகாதாக்கும்? இனிமே அது அதோட பேருக்கேத்தமாரிதான்’ என்றார். அவர் சொன்னது முதலில் புரியவில்லை. புரிந்ததும் மனசுக்குள் குமட்டியது. அய்யா இனி நடராஜா சர்வீசில்தான் பள்ளிக்கு வருவாரா? சைக்கிள் கிடையாதா? கதைகள் கிடையாதா? என யோசித்துக்கொண்டிருந்தபோது அய்யா பெண்டாட்டி ‘வந்தது வந்தே இந்த சோத்துப் போசியக் கொண்டுட்டுப் போ’ என்றார். சொல்லிவிட்டு உள்ளே போனார். நான் சைக்கிளைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. அதுமட்டுமல்ல. ஹாரிசாண்டல்பாரைச் சுற்றிச் சங்கிலி போட்டுத் திண்ணைச் சன்னல் கம்பியில் கோர்த்து ஒரு பூட்டு தொங்கியது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர்ப் புரவி சிறைப்படுத்தப்பட்டதுபோலத் தோன்றியது. ஹாண்டில் பாரைத் தொட்டேன். அது என் பக்கமாகத் தலையைத் திருப்பியது. மேற்கொண்டு யோசிப்பதற்குள் ‘இந்தா இதக் கொண்டு போ’ என்று அய்யா பெண்டாட்டி சாப்பாட்டுப் பாத்திரம் வைத்த பிளாஸ்டிக் ஒயர்க் கூடையை நீட்டினார். வாங்கினேன். இறங்கி நடந்தேன். அய்யா உட்கார்ந்திருக்க சைக்கிளைத் தள்ளிக் கொண்டுபோனபோது கொஞ்சமாகத் தெரிந்த தூரம் தனியாக நடந்தபோது மிகத் தொலைவாகப் பட்டது. மணியடித்து வகுப்புகள் தொடங்கிப் பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் பள்ளிக்கூடம் போய்ச் சேர முடிந்தது. அய்யாவின் சாப்பாட்டை ஸ்டாஃப் ரூமில் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வகுப்புக்கு வந்தேன். ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன்சார் ‘பொங்கல் தின்ன மதமதப்பு இன்னும் தீரலையா கவிஞரய்யா? வாங்க வந்து உக்காருங்க’ என்று கேலியாகச் சொல்லி வரவேற்றார். என் இடத்தில் உட்கார்ந்தேன். ஆனால் நான்காவது பீரியட்டுக்கு அய்யா வரும்வரைக்கும் எதிலும் மனம் ஒட்டவில்லை. அய்யாவின் பிரிவேளையில் நடத்தப்பட்ட இலக்கணமும் காதில் ஏறவில்லை. உணவு இடைவேளை மணியடித்தது. அய்யா புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பைவிட்டு வெளியேறத் தொடங்கியபோது பக்கத்தில் போய்ச் சாப்பாடு எடுத்து வந்ததைச் சொன்னேன். ‘வீட்டுக்குப் போயிருந்தாயா?’ என்றார். தலையாட்டினேன். குட்டைக் கிருட்டிணன் எங்கள் அருகில் வந்து நின்று ‘இவன் இன்னிக்கு லேட்டாத்தான் வந்தாங்யா’ என்றான். நான் அவனை முறைத்தேன். அய்யா நடந்தார். கூடவே நாங்களும் நடந்தோம். படியிறங்கி வராந்தாவுக்கு வந்ததும் ‘சரி, போய்ச் சாப்பிடப் பாருங்கள்’ என்று நடந்தார். ஆனால் அவர் ஸ்டாஃப் ரூம் பக்கமாகப் போகாமல் மெயின் கேட்டை நோக்கிப் போனதை இருவரும் கவனித்தோம். ‘அய்யா இனுமே சைக்கிள்ல வர மாட்டாராண்டா. காலேல கூட நடந்துதான் வந்தம்’ என்றான் கிருட்டிணன். இந்தக் குள்ளப் பன்றி எனக்கு முன்பே அய்யா வீட்டுக்குப் போயிருந்தான் என்பது எரிச்சலைக் கொடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல் ‘ஏண்டா, சைக்கிள் நல்லாத்தான இருக்கு. நாம் பாத்தனே, பஞ்ச ரொண்ணுமில்லியே?’ என்றேன். ‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. என்னமோ அய்யாதான் இனுமே சைக்கிள எடுக்க வேண்டா முன்னாரு’ என்றான். அந்த நாளுக்குப் பிறகு அய்யாவுடனான எங்கள் உறவு பள்ளி வளாகத்துக்குள் மட்டுமாகச் சுருங்கிப்போனது. அய்யா நடந்தே வந்தார். நடந்தே போனார். சைக்கிள் காலத்தில் பள்ளி ஆரம்பிக்கப் பத்து மணித் துளிகளுக்கு முன்பாக வருவது, பள்ளி முடிந்து பதினைந்து மணித்துளிகளுக்குப் பின் புறப்படுவது என்றிருந்த அய்யாவின் நிகழ்ச்சி நிரல் சட்டென்று மாறியது. எல்லாருக்கும் முன்னால் வந்து எல்லாரும் போன பின்னும் இருந்தார். நூலகத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்துவிட்டுப் பொழுது இருட்டத் தொடங்கியதும் புறப்பட்டுப் போனார். அந்த ஆண்டு முழுத் தேர்வுக்கு முன்பு அய்யா விடுப்பில் போனார். நாங்கள் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சிபெற்ற பிறகு அவரை ஒரே ஒரு நாள்தான் பள்ளியில் பார்த்தேன். வராந்தாவில் ஆசையுடன் ஓடிப் போய் அவர் பக்கத்தில் நின்றேன். அவரும் இதமாகத் தோளில் கைவத்து ‘எப்படி இருக்கிறாய்? நன்றாகப் படி’ என்றார். அதைச் சொன்னபோது அவர் விரல்கள் தோளில் வலுவாக அழுந்தின. அந்த அழுத்தம் எதையோ சொல்வதுபோல இருந்தது. அது என்னவென்று யோசிப்பதற்குள் மணி ஒலித்து வகுப்புக்கு விரட்டியது. அய்யா முதுகில் தட்டி அனுப்பி விட்டுத் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தார். அன்றுதான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன். கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளி எங்களுடையது. அதே நிர்வாகத்தின் கீழ்அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடவரசு அய்யா இடமாறுதல் வாங்கிப் போனார் என்று சொன்னார்கள். அது சரிதானா என்று தெரிந்துகொள்வதற்காகக் குட்டைக் கிருட்டிணனும் நானும் அய்யா வீட்டைத் தேடிப் போனோம். மூடிய இரும்பு கேட்டில் ‘விடு வாடகைகு விட படும்’ என்று மேலே தமிழிலும் கீழே ‘TO LET’ என்று ஆங்கிலத்திலும் எழுதிய அட்டை தொங்கியதைப் பார்த்தோம். ‘அய்யா இருந்தா வருத்தப்படுவாருடா’ என்றேன். ‘எதுக்குடா?’ என்றான் கிருட்டிணன். ‘தமிழ இப்டித் தப்பா எழுதியிருக்காங்களே, அதப் பாத்து.’ இரண்டு பேரும் வேறுசந்தர்ப்பமாக இருந்திருந்தால் சிரித்திருப்போம். ஆனால் அப்போது சிரிக்கவில்லை. கிருட்டிணன் கேட் அருகில் போய் நின்று பேனாவை எடுத்து ‘ஓ’ வுக்கும் ‘எல்’லுக்கும் நடுவில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு வந்தான். படித்தேன். அப்போதும் சிரிப்பு வரவில்லை. கல்லூரி விடுமுறை நாளில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கிருஷ்ணா திரையங்கில் மாலைக் காட்சிப் படம் பார்க்கப் போயிருந்தேன். கடைசி இருக்கைக்கு முந்தின வரிசையில் உட்கார்ந்திருந்தேன். ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சொத்தையான படம் என்று புரிந்தது. இருப்பு கொள்ளாமல் சுற்றிலும் பார்த்தேன். சேர் போட்டிருந்த அந்த முதல் வகுப்பில் என்னைச் சேர்த்துப் பத்துப்பேர்கூட இல்லை. அரை மணிநேரத்துக்குப் பின்பு வெளியே போய்விடத் தீர்மானித்து எழுந்தேன். இருட்டில் தடுமாறி வெளியில் வந்து நின்றதும் முதுகில் ஒரு கை பதிந்தது. திரும்பிப் பார்த்தேன். டேவிட். நெட்டைக் கொக்கு டேவிட். ‘நீ வந்து ஒக்காந்ததுமே பாத்தேண்டா. ஒனக்குப் பின்னாடி சீட்டுலதான் ஒக்காந்திருந்தேன். செரி இண்டர்வெல்லுல பேசிக்கலாம்னு இருந்தேன். ஏன் எந்திரிச்சு வந்திட்ட, படம் புடிக்கலியா?’ என்றான். புன்னகையுடன் ஒத்துக்கொண்டேன். நீ நல்லாருக்கியா நான் நல்லாருக்கேன் என்ற விசாரிப்புகளுக்கு அப்புறம் பேச எதுவுமில்லாதது போலப் பட்டது.கொஞ்ச நேரம் பேசாமலேயே இருந்தோம். இரண்டு பேரும் ஒரே ஞாபகத்தின் இரு கரைகளில் நின்றிருந்தது போலத் தோன்றியது. இருவருக்கும் இடையில் நேற்றைய நதி ஓடியது. அதில் பழைய காட்சிகள் மினுங்கி நகர்ந்தன. பள்ளிக்கூடம். வழிகள். நடவரசு அய்யா. அவர் சொன்ன கதைகளின் காட்சிகள். அவருடையராலே சைக்கிள். எல்லாம் மினுங்கின. நான் கரைந்துபோய்க் கடைசியாக அய்யாவைப் பார்த்த நாளின் சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். டேவிட் ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தான். அந்தச் சண்டைக்கு அப்புறம் அய்யா நடந்தே வந்து போனதைச் சொன்னேன். ‘நடக்காம என்ன பண்ணுவாரு, அந்த ராங்கிக்காரி சொன்னதக் கேட்டா சூடு சொரண இருக்குறவங்க அதத்தான் பண்ணுவாங்க. “இது எங்க அப்பாரு வாங்கிக் குடுத்த வண்டி. அதயேன் தொடறே? சின்ன சாதிப் பொச்சுக்கு சைக்கிளு கேக்குதாமில்ல சைக்கிளு”ன்னு அதப் பூட்டி வெச்சிட்டா. அதான் நடந்தாரு’ என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அய்யா ஏன் அப்படி இருந்தார்? அந்தப் பெண் பிள்ளையை ரெண்டு சாத்துச் சாத்தவில்லை? அய்யா வீரமானவரா? அப்பிராணியா? அவ்வளவு சம்பளம் வாங்கியவர், வசதி இல்லாத பையன்களுக்குக் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தவர். அவரால் புதிதாக ஒரு சைக்கிளை வாங்கியிருக்க முடியாதா? ‘செரிதான். நீ சொல்றாப்புல புது சைக்கிளு வாங்கறதொண்ணும் அவருக்குக் கஷ்டமில்ல. வாங்கி என்ன பண்றது? ஓட்டத் தெரியோணுமே?’ என்றான் டேவிட். காலச்சுவடு மார்ச் 2013 |
↧
இரண்டு கட்டுரைகள் - பழைய கோப்பிலிருந்து
பழைய கோப்புகளில் மறைந்திருந்த சில சரக்குகள் அண்மையில் கைகளில் சிக்கின. அவற்றில் இரண்டு கட்டுரைகள் இவை. பஷீர் பற்றிய கட்டுரை அவரது மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு. துணையாசிரியராகக் குங்குமம் வார இதழிலும் ஒரு அஞ்சலிக் குறிப்பை எழுதியிருந்தேன். இந்த இரண்டாவது அஞ்சலி மு.அப்பண்ணசாமி ஆசிரியராக இருந்த இணைய இதழான ‘ஆறாம் திணை’க்காக எழுதியது என்று ஞாபகம்.
திரைப்பட நூற்றாண்டை முன்னிருத்தி எழுதப்பட்டது ‘எலிப்பத்தாயம்’ சினிமாவைப் பற்றிய கட்டுரை.
இரண்டு கட்டுரைகளும் 1994 ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை. இருபது ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது வாசிக்கும்போது ‘மோசமில்லை’ என்று நம்பத் தோன்றுகிறது.
*
தன்னை எழுதிய பஷீர்
அந்த முஸ்லிம் இளைஞருக்கு பூமி முழுவதும் அலைந்து திரியும் வரம் வாய்த்திருந்தது.
சுதந்திரப் பேராட்டம் கனன்று எரிந்து கொண்டிருந்த காலம். முஸ்லிம் இளைஞரும் ஆவேசத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். வெறும் அமைதிப் போராட்டம் மூலம் சுதந்திரம் வராது என்று நம்பினார். தீவிரவாத அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். தீவிரவாதியான பகத்சிங்கைப் போல மீசை வைத்துக் கொண்டார். அமைப்புக்காக ‘உஜ்ஜீவனம்’ என்ற அனல் பறக்கும் பத்திரிகையையும் நடத்தினார். அதில் எழுதிய கட்டுரைகளுக்காக அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைத் தேடியது. அவரது நிழலை உளவாளிகள் பின்பற்றினார்கள். அமைப்பின் மற்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம் இளைஞர் மட்டும் தப்பினார்.
ஒரு நள்ளிரவு. போலீஸ்காரர்களின் கண்களை ஏமாற்றிவிட்டு முஸ்லிம் இளைஞர் மறைந்தார்.ஏழு வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றியலைந்தார். அந்த அலைச்சலில் வாழ்க்கைப் புத்தகத்தின் பல பக்கங்களைக் கற்றுக் கொண்டார் பலவித வேலைகளைச் செய்தார். பல இடங்களில் திரிந்தார். பல மொழிகளைக் கேட்டார்.
“தேவாலயங்கள், சிதிலமான நகரங்கள், மலைச் சிகரங்கள், குகைகள், நதிகள் என்று நினைவுகள் போகின்றன. பார்ப்பது, கேட்பது, சிந்திப்பது, புரிந்து கொள்வது. அநேக மனிதர்களைத் தெரிந்து கொண்டேன்” என்று அவர் பிற்காலத்தில் குறிப்பிட்டார்.
அந்த அனுபவங்கள்தான் முஸ்லிம் இளைஞரை எழுத்தாளராக்கின. அந்த இளைஞர்தாம் தனது எண்பத்தி ஆறாம் வயதில் அண்மையில் காலமான மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்.
“நான் எழுத்தாளன் ஆனதற்குக் காரணம் என்னைப் போன்ற சோம்பேறிக்குப் பொருத்தமான தொழில் அதுவே என்பதால்தான்” என்று பஷீர் குறிப்பிட்டிருந்தார்.
தாமதமாக எழுதத் தொடங்கிய சோம்பேறி பஷீர் ‘காதல் கடிதம்’ (பிரேமலேகனம்) நாவல் மூலம் மலையாள வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டாவது நாவலான ‘இளம் பருவத்துத் தோழி’ (பால்யகால சகி) அவரை மலையாள இலக்கியத்தில் முத்திரைப் பெயராக மாற்றியது.
‘பால்யகால சகி’ அளவில் சிறிய நாவல். எண்பது பக்கம் கொண்ட இந்த நாவலின் புதுமையும், ஜீவனும் இன்னும் குறைந்து விடவில்லை என்பது காலத்தின் மகத்தான சலுகை.
மஜீத், சுஹ்ரா என்ற இரு சிறுவர்கள் நேசிக்கிறார்கள். வயது வளர நேசமும் வளர்கிறது. காதலாகிறது. ஆனால் சூழ்நிலையின் தந்திரம் அந்தக் காதலைத் தீய்த்து விடுகிறது.
“பால்யகால சகி” வாழ்க்கையிலிருந்து கிழித்தெடுத்த ஒரு பக்கம். அதன் விளிம்புகளில் இன்னும் இரத்தம் கசிகிறது’’ என்று மலையாள விமர்சகர் எம்.பி.பால் இந்த நாவலுக்கு முன்னுரை எழுதினார்.
காதல் துயரைப் பற்றிச் சொல்லும் இந்த நாவல் பஷீரின் சொந்த அனுபவம் என்றே சொல்லலாம். “அதன் கடைசிக் கட்டம் மட்டுமே கற்பனை. அந்தக் காதலன் இப்போதும் இருக்கிறான். என்ன தலையில் வழுக்கை விழுந்து விட்டது” என்று நகைச்சுவையாகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பஷீர்.
1944 இல் தொடங்கிய பஷீரின் எழுத்து வாழ்க்கை ஏறத்தாழ எண்பதுகள் வரை நீடித்தது. சிறுகதை, நாவல்கள், அனுபவக் குறிப்புகள் என்று முப்பத்தி இரண்டு புத்தகங்கள் நவீன மலையாள இலக்கியத்துக்கு அவரது பங்கேற்பு.
மலையாள உரைநடை இலக்கியத்தில் வைக்கம் முகம்மது பஷீரை முக்கியமானவராகக் குறிப்பிட இரண்டு காரணங்கள்.
முதற்காரணம், அவர் தீட்டிய வித்தியாசமான பின்னணி.கேரள மக்கள் தொகையின் கணிசமான பகுதி முஸ்லிம் மக்களைக் கொண்டது. அந்த மக்களின் வாழ்க்கையை உலகுக்குக் காட்டிய முதல் இலக்கியச் சாளரத்தைத் திறந்து வைத்தவர் பஷீர்தான்.
இதே காரணத்துக்காகப் பிற்காலத்தில் பஷீர் ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் விமர்சனம் செய்யப்பட்டார். ஆனால் பஷீரின் இலக்கியக் கண்ணோட்டம் மதச்சார்பற்றது. உண்மையில் அவரது பார்வை ஒரு ரிஷியின் பரிவும் கருணையும் நிரம்பியது. இரண்டாவது காரணம் அவரது சித்தரிப்புத்திறன். வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற அடித்தட்டு மக்கள்தாம் பஷீரின் படைப்புலகப் பிரஜைகள். அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அப்படியே உயிரும் உணர்வுமாக இலக்கியத்தில் குடியமர்த்தியவர் அவர். அவரது நடை சாதாரணத்திலிருந்து உருவாக்கப்பட்ட அசாதாரணம். கொச்சையான பேச்சு வழக்கை அவர் இலக்கிய மொழியாக மாற்றினார்.
எந்த எழுத்திலும் அதை எழுதிய எழுத்தாளனின் அனுபவச் சாயல் இருக்கும். ஆனால் தன்னையே கதா பாத்திரமாகவும் தனது சொந்த வாழ்க்கையையே கதைக்களமாகவும் வைத்து பஷீர் உருவாக்கிய படைப்புகள் மலையாள இலக்கியத்துக்குப் புதுமை சேர்த்தவை.
‘பாத்தும்மாவின் ஆடு’ என்ற நாவல் பஷீரின் சொந்த அனுபவம் என்றால் ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ என்ற நாவல் அவரது சமுதாய அனுபவம். முதல் நாவலில் அன்பின் பெயரால் நடைபெறும் சுரண்டலையும், இரண்டாவது நாவலில் நிகழ்காலத்தை மறந்த சமுதாய அறியாமையையும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் இரண்டு நாவல்களும் நகைச்சுவை இழையில் பின்னப்பட்டவை.
பஷீரின் சிறுகதைகள் நுட்பமானவை. ‘பூவன் பழம்’ என்ற அவரது கதை மலையாளச் சிறுகதையின் இனிமைக்கும் மெருகுக்கும் காட்சியாக நிற்கிறது.
கர்ப்பிணியான ஜமீலாவுக்கு பூவன் வாழைப்பழத்தின் மீது ஆசை. கணவன் அப்துல் காதரிடம் கேட்கிறாள். அது பூவன் பழம் கிடைக்கும் பருவமல்ல. இருந்தாலும் அப்துல் காதர் பழத்துக்காக அலைந்தான். கடைசியில் சலித்துப் போய் ஆரஞ்சுப் பழம் ஒன்றுடன் திரும்பி வருகிறான். மனைவியும் ஏற்றுக்கொள்கிறாள். அவளுக்கும் அது பூவன் பழமல்ல என்று தெரியும். ஆனால் கணவனின் அன்பு புளிப்பான ஆரஞ்சைப் பூவன் பழம் என்று நம்பச் செய்கிறது.
மெல்லிய இழையில் மின்னும் பனித்துளி போல அமைந்த நுட்பமான கதை.
தமிழ்ச் சிறுகதையின் சாதனையாளரான புதுமைப் பித்தன் குறிப்பிட்டார். ‘எனது உலகத்தில் கல்லும் பேசும். மூட்டைப் பூச்சியும் கதை சொல்லும்.’
இந்த மேற்கோளை பஷீரின் கதைகளுக்கு இலக்கணமாகப் பொருத்தலாம். சிறு புழு முதல் யானைவரை சகல மிருகங்களும் அவர் கதையில் முக்கியக் கதாபாத்திரங்களாக இடம் பெற்றன. அவற்றை பஷீர் ஒரு குழந்தையின் வியப்புப் பதிந்த கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்தினார்.
அனுபவம் சார்ந்த ஒரு உலகம் பஷீரின் படைப்புலகம். அந்த உலகை விருப்பு வெறுப்பில்லாமல் அன்பின் கலவையால் உருவாக்கினார். எளிமையான வேலைப்பாடுகளையே செய்தார். மிகமிக எளிமையான கலைதான் மிகப் மிகப் புதுமையானது என்று தனது எழுத்துக்கள் மூலம் நிரூபித்தார்.
அவரைச் சந்தித்த போது கேட்டேன்’’ உங்கள் படைப்புகளின் செய்தி என்ன?’’
“நன்மைதான் என் எழுத்துக்களின் செய்தி. மனிதனுக்கு எழுத்தின் மூலம் ஏதாவது உபகாரம் ஏற்படவேண்டும் என்று எனக்கு நிர்பந்தம் உண்டு. அது நிறைவேறியிருக்கிறதா என்று வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.”
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பஷீர் மறைந்தார். அன்று மலையாள வாசகர்கள் ஒவ்வொருவரும் தமக்கு மிக நெருங்கிய உறவினரை இழந்தது போல வருந்தினர். அதற்குக் காரணம் பஷீரின் எழுத்து உபகாரம்தான்.
*
நூறில் ஒன்று
உலக சினிமாவுக்கு இது நூற்றாண்டு.
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தபோது சினிமா வெறும் அறிவியல் சாதனை. லூமியர் சகோதரர்கள் கையில் அது பொழுதுபோக்காக மாறியது. காலப்போக்கில் பிற கலைகளை உள் வாங்கிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மகத்தான கலையாக உருமாறியது.
திரைபடத்தின் வரலாற்றையும் சாதனைகளையும் கொண்டாடுவதற்காக அமெரிக்காவிலுள்ள அட்லாண்டா நகரில் செப்டம்பரில் உலகப்படவிழா நடைபெறுகிறது. சினிமா வரலாற்றில் சாதனையாகக் கருதப்படும் நூறு படங்கள் விழாவில் திரையிடப்படும்.இந்த நூறு படங்களில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் ‘எலிப்பத்தாயம்’. இயக்கியவர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
1981இல் வெளியான ‘எலிப்பத்தாயம்’ அடூரின் மூன்றாவது படம். அவரது முதல் வண்ணப்படம். வெளிவந்த ஆண்டின் சிறந்த படம். சிறந்த இயக்குநர் என்று தேசிய விருதுகளையும், கான், சிகாகோ, இலண்டன், சாந்த் திரைப்பட விழாக்களில் சர்வதேச விருதுகளையும் பெற்றுத் தந்த படம். சத்யஜித் ராய்க்குப் பிறகு இலண்டன் பிலிம் இன்ஸ்டிடியூட் அவார்டு வழங்கப்பெற்ற இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன். அதுவும் ‘எலிப்பத்தாயத்’துக்காக.
“எலிப்பத்தாயம் மாற்றத்தைப் பற்றிய படம். மாற்றம் என்பது வேதனை தருவது; ஆனால் தவிர்க்க இயலாதது என்பதைச் சுட்டிக்காட்டுகிற படம்” என்கிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்.உண்மையில் ‘எலிப்பத்தாயம்’ (எலிப்பொறி) மாற்றத்தின் வேகத்தில் தடுமாறிய ஒரு மனிதனின் கதை.
உண்ணியின் குடும்பம் அவனையும் மூன்று சகோதரிகளையும் கொண்டது. மூத்த சகோதரி திருமணம் முடிந்து கணவனுடன் வசிக்கிறாள். இரண்டு தங்கைகளில் மூத்தவளான ராஜம்மா (சாரதா)வும் இளையவளான ஸ்ரீதேவி (ஜலஜா)வும் அவனது கண்காணிப்பில் மூச்சுத் திணறுகிறார்கள். உண்ணி சுய முயற்சி இல்லாதவன். பழைய பெருமைகளைச் சீராட்டிக் கொண்டிருப்பதிலேயே அவனது நாட்கள் கழிகின்றன.
அண்ணனுக்குச் சேவை செய்தே ராஜம்மாவின் உடல் குலைகிறது. நோய்வாய்ப்பட்ட அவளுக்கு எந்த ஆதரவும் இல்லை. டுடோரியல் காலேஜில் படிக்கும் ஸ்ரீதேவிக்கு எலிப் பொறிக்குள் வாழ விருப்பமில்லை. வெளியே உலகம் பரந்து கிடக்கிறது. உண்ணிக்கு அந்த நாலு கட்டு வீடே உலகம்.
ஒரே காட்சியில் உண்ணியின் குணச்சித்திரத்தை முழுமையாகத் தீட்டுகிறார் அடூர்.
மழை பெய்து நீர் தேங்கிக்கிடக்கிறது. துவைத்து உடுத்திய உடைகளுடன் உண்ணி ஒரு கல்யாணத்துக்குப் போக வருகிறான். வழியில் மழைக் குட்டை தடுக்கிறது. அதைக் கடப்பது எப்படி? என்று தயங்கி நின்கிறான். செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு ஒரு அடி வைக்கிறான். கால் நனைந்து, வேட்டி சேறாகிவிடும் என்று வந்த வழியே திரும்புகிறான். அவனுக்கு எதிர்த்திசையிலிருந்து வரும் சிறுவன் மழை நீரில் கால்களை வீசி நடக்கிறான்.
உண்ணியின் தலைமுறை முடிவெடுக்கத் தயங்குகிறது. சிறுவனின் தலைமுறையோ வேகமாகப் பிரச்சினையை எதிர்கொள்கிறது.இந்த ஒரு காட்சியிலேயே படத்தின் சாராம்சத்தைத் தேக்கிவிடுகிறார் இயக்குநர்.
உண்ணியின் நிழலிலிருந்து ராஜம்மாவை மரணம் பிரிக்கிறது. அதற்கு முன்பே ஸ்ரீதேவி எலிப்பொறியிலிருந்து தப்பி தனது வாழ்க்கையைத் தேடிப்போகிறாள், காதலனுடன். உண்ணி அந்த பழையகால வீட்டின் இருளில் தடுமாறுகிறான். பயமும் பதற்றமும் அவன் மீது கவிகின்றன. பொறியில் அகப்பட்ட எலிபோல பூட்டிய வீட்டுக்குள் நடுங்குகிறான். அண்டையில் வசிப்பவர்கள் கதவை உடைத்து உண்ணியை நெருங்குகிறார்கள். பயத்தில் விறைத்த எலிபோலக் கிடப்பவனை வாரி எடுத்து ஊர்வலமாகப் போகிறார்கள். குளத்தை நெருங்கிப் படியிறங்கி அவனைத் தண்ணீரில் வீசி எறிகிறார்கள். கலைகிறார்கள்.
குளத்திலிருந்து நடுங்கிக்கொண்டே எழுகிறான் உண்ணி. கைகளும் கால்களும் உதறிக்கொள்ள படியில் ஏறி நிற்கிறான். இப்போது அவன் முகம் கருணைக்காக ஏங்கும் எலிபோல இருக்கிறது. பொறியில் அகப்பட்ட எலி.
அறிமுகக் காட்சியில் பொறியில் சிக்கிய எலியை நீரில் முக்கிக் கொல்வதற் காக எடுத்து செல்கிறாள் ஸ்ரீதேவி. பின்னணியில் தம்பூராவின் முரட்டு சுருதி. ஒவ்வொரு முறை பொறியில் எலி அகப்படும்போதும் ஒலிக்கும் அதே இசை, கடைசியில் உண்ணி குளக்கரையில் நிற்கும் காட்சியிலும் ஒலிக்கிறது.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்களில் சிறந்த படம் ‘எலிப்பத்தாயம்!’ தன்னைச் சுற்றியுள்ள சூழலில் நடக்கும் மாற்றங்களைக் காண மறுத்த ஒரு மத்திய வயதுக்காரனின் கதை என்று மேலோட்டமாகச் சொன்னாலும் ‘எலிப்பத்தாயம்’ வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்ட திரைப்படம்.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் ‘எலிப்பத்தாயத்’துக்கு முன்னுதாரணமோ, தொடர்ச்சியோ இல்லை என்பது உண்மை. இந்த உண்மைதான் அதை நூறில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.
↧
↧
ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ்
1986அல்லது 87ஆம் ஆண்டில் ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ் என்ற இயக்குநரின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சென்னை மாக்ஸ்முல்லர் பவன் அரங்கில் அவரது படங்கள் திரையிடப்பட்டன. மாக்ஸ்முல்லர் பவன் அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் - இன்றைய எக்ஸ்பிரஸ் அவென்யூ - இருந்தது. இயக்குநர் படங்களின் மீள் பார்வை ( Director's Retrospective ) என்ற முறையில் ஹெல்மாவின் நான்கோ ஐந்தோ படங்கள் திரையிடப்பட்டன. ஒரு படம் மட்டும் மயிலாப்பூர் ஆலிவர் சாலையிலிருக்கும் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் திரையிடப் பட்டது. அன்று படம் பார்க்க வந்திருந்தவர்களில் கோமல் சுவாமிநாதனும் அனந்துவும் இருந்தார்கள் என்பது இப்போதும் நினைவிலிருக்கிறது. கோமலுக்கு அடுத்த இருக்கையில் , அனந்துவுக்கு நேர் பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்தேன்.
எண்பதுகளில் உலக சினிமாவின் மையமாக இருந்தது ஜெர்மனிதான். கூடவே ஹங்கேரியப் படங்களும் கவனத்தை ஈர்த்தன. மாக்ஸ் முல்லர் பவனிலும் திரைப்படச் சங்கங்களிலும் பார்த்த ஜெர்மன் இயக்குநர்களான பாஸ் பைண்டர், விம் வென்டர்ஸ், பஸோலினி ஆகியோரின் படங்கள் மூச்சுத் திணறும் ஆச்சரியத்தைத் தந்தன. எட்கர் ரெய்ட்ஸின் 'ஹெய்மத்'படம் பார்ப்பதற்காக மட்டுமே கோவையிலிருந்து நண்பர் விஸ்வநாதனுடன் சென்னைக்கு வந்தது மறக்க விரும்பாத அனுபவம். மார்க்கரெட் வான் டிரவோட்டாவின் படங்கள் ஒரு பெண்ணால் இப்படிச் சினிமா எடுக்க முடியுமா? என்று முட்டாள்தனமாக வாயைப் பிளக்க வைத்தன. தனிப்பட்ட முறையில் இன்னும் அகலமாக வாயைப் பிளக்க வைத்தவை ஹெல்மாவின் படங்கள். தில்லி, பம்பாய், பெங்களூர் என்று தனது படங்களின் திரையிடலில் பங்கேற்று சென்னை வந்து சேர்ந்திருந்தார் ஹெல்மா. படங்களின் திரையிடலுடன் அவரது நேர்காணல்களும் நடைபெற்றன.
அன்று பார்த்த ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸின் நான்கு படங்களில் என்னை உலுக்கிய காட்சிகள் இப்போதும் கண்ணை மூடினால் நினைவில் ஓடத் தொடங்கும். ஜெர்மனி - மை பேல் மதர் ,( Germany My Pale Mother )நோ மெர்சி நோ ஃப்யூச்சர், ( No Mercy No Future ), தி ஃப்யூச்சர் ஆஃப் எமிலி, ( The future of Emily ) ஹென்றிச் ( Henrich )ஆகிய படங்கள் என்னைக் கவர்ந்தன. அந்தத் திரையிடலின் போது வழங்கப்பட்ட சிறு பிரசுரம் இன்னும் கைவசமிருக்கிறது. நான் கேட்டதற்கு இணங்கி அதில் ஹெல்மா கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். ஒரு சினிமாக் கலைஞரிடம் நான் வாங்கிய முதல் கையெழுத்து அது.
ஹெல்மாவின் படங்களில் என்னை மிகவும் பாதித்த படங்கள் நோ மெர்சி நோ ஃப்யூச்சரும் ஹென்றிச்சும். பூர்ஷுவாப் பெற்றோர்களால் அசிரத்தையாக வளர்க்கப்பட்ட வெரோனிகா மனச்ச் இதைவுக்கு ஆளாகிறாள். மனநல விடுதியில் சேர்க்கப்படுகிறாள். விடுதியிலிருந்து திரும்பி வந்த பின்னர் அவள் யாருக்கும் வேண்டாதவளாக வெளியேற்றப் படுகிறாள். நாடு கடத்தப் பட்டவர்களின் கூட்டத்தில் போய்ச் சேர்கிறாள். இதுதான் கதையின் ஒற்றை வரி என்பது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதில் வரும் ஒரு காட்சியின் கொடூரம் இன்னும் சிவப்பாக நினைவில் இருக்கிறது.
நோ மெர்சி நோ ஃப்யூச்சர் - போஸ்டர்
மாத விலக்கான வெரோனிகாவை முகம் தெரியாத ஒருவன் வன்மையாகப் புணரும் காட்சியில் எனது தொடைகள் நடுங்கியதும் வாய் உலர்ந்து நாக்கு ஒட்டிக் கொண்ட்தும் நினைவிருக்கிறது. நேர் காணலுக்குப் பிறகு ஹெல்மாவிடம் தயக்கமான ஆங்கிலத்தில் 'இவ்வளவு வன்முறை ஏன்?'என்று கேட்டது நினைவிருக்கிறது. 'இதை விடவும் குரூரமான வன்முறைகள் வாழ்க்கையில் இல்லையா?'என்று அவர் பதில் கேள்வி கேட்டார். அந்தப் படத்தில் நடித்த பெண்ணுக்கும் அந்தக் காட்சி காரணமாக மனப் பிறற்வு ஏற்பட்டதைச் சொன்னபோது அவர் முகம் இறுகி இருந்ததும் நினைவிருக்கிறது.
'ஹென்ரிச்'என்ற படமும் மனச் சிதைவுக்கு ஆளான கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டதுதான். வேதனைகளுடனும் வலிகளுடனும் அமைதியற்று வாழ்ந்த ஜெர்மானியக் கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றிச் வான் க்ளீஸ்ட்டின் வாழ்க்கை அந்தப் படம். வேதனைகளால் துரத்தப்பட்ட ஹென்றிச்சின் தற்கொலையிலிருந்துதான் படம் தொடங்குகிறது என்று ஞாபகம்.
ஹென்ரிச்
இரண்டாம் உலகப் போரின் தீவினைகளும் நாஜி வதை முகாமின் கொடுமைகளும் எல்லா ஜெர்மானிய இயக்குநர்களையும் போல ஹெல்மாவுக்கும் கதைப் பொருளாக இருந்தன. அதை அவர் பெண்ணின் பார்வையில் சித்தரித்தார். அதிலிருந்த திரையை மீறிய உண்மை உணர்வு வெகு காலம் மனதுக்குள் அலைமோதிக் கொண்டிருந்தது. பின்னர் அவரது படங்களைப் பார்க்க வாய்க்கவில்லை. அவரைப் பற்றி அறியவும் முடிய வில்லை. ஆனால் அவரது படங்களைப் பற்றிய ஞாபகங்களும் அவரது முகமும் ஒருபோதும் மறக்கவில்லை. அவரது படங்களைப் பற்றி எப்போதாவது எழுதி விட வேண்டும் என்று மனதுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் திட்டமும் மறக்கவில்லை.
சென்ற மாதம் தமிழகத்துக்கு வந்திருந்த நண்பர் பிரசாந்தி சேகரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸைப் பற்றி விசாரித்தேன். அவருக்கும் அது கேள்விப் பட்ட பெயராக இருந்ததே தவிர வேறு தகவல்களைச் சொல்ல முடியவில்லை. ஹெல்மாவின் படங்களின் டிவிடியையோ அவரைப் பற்றிய தகவல் அடங்கிய புத்தகங்களையோ எனக்காகத் தேடும்படிக் கேட்டுக் கொண்டேன். செய்வதாக ஒப்புக் கொண்டார். இன்று ஃபேஸ்புக்கின் சாட்டில் பிரசாந்தி போட்டிருந்த தகவலைப் பார்த்ததும் சற்று நேரம் அதிர்ச்சி கலையாமல் உட்கார்ந்திருந்தேன். அவ்வப்போது இணையத்தில் உலாவியும் இந்தத் தகவலை எப்படித் தவற விட்டேன் என்று நொந்து கொண்டேன்.
ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ் , இந்த மே மாதம்தான் காலமாகி யிருக்கிறார். 'துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களுக்கு முன்புதான் அவர் மறைந்திருக்கிறார்'என்று போட்டிருக்கிறார் பிரசாந்தி. என்னுடைய துரதிர்ஷ்டம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
↧
ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி...
நண்பர் நெய்தல் கிருஷ்ணன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டாரில் நடை பெற்ற நாராயண குருவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் உரையாற்றச் செய்தார். இலக்கியம் தவிர பிற மேடைகளில் அரிதாகவே பங்கேற்றிருந்த எனக்கு அது புதிய அனுபவமாகவே இருந்தது. ஓரளவுக்கு நல்ல உரையை அன்று நிகழ்த்தியதாகவே தோன்றியது. அது நல்ல உரைதான் என்று விழா அமைப்பாளர்களும் நினைத்திருக்க வேண்டும். இந்த ஆண்டும் அழைப்பு வந்தது. அழைக்கச் செய்தவர் பேரா. அ.கா. பெருமாள். அழைத்தவர் பேரா. சரவணை.
கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற நாராயண குருவின் 160 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசக் கிடைத்தது பெருமைக்குரிய வாய்ப்பு. விழாவை ஒட்டி நடந்த போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்தது இனிய அனுபவம். இந்தப் பெருமைக்கும் இனிமைக்கும் இடையில் ஒவ்வாத ஒரு அனுபவமும் இருந்தது. நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்தில் வைத்திருந்த ஆளுயர அளவுள்ள நாராயண குருவின் உருவப்படத்துக்கு பிராமணப் புரோகிதர்கள் நடத்திய சடங்கு. எதற்கு எதிராகக் குருதேவர் குரல் எழுப்பினாரோ, எந்த மனப் பான்மைக்கு எதிராகப் போராடினாரோ அந்த வைதீக மரபுக்குள் அவரைத் தள்ளி விட்டிருந்ததைப் பார்க்க மனம் நொந்தது.
மகான்களின் வழியை அடைப்பதற்கு உத்தமமான உபாயம் அவர்களைப் பீடத்திலேற்றி வைத்து வழிபடுவதுதான்போல.
![]()
கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற நாராயண குருவின் 160 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசக் கிடைத்தது பெருமைக்குரிய வாய்ப்பு. விழாவை ஒட்டி நடந்த போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்தது இனிய அனுபவம். இந்தப் பெருமைக்கும் இனிமைக்கும் இடையில் ஒவ்வாத ஒரு அனுபவமும் இருந்தது. நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்தில் வைத்திருந்த ஆளுயர அளவுள்ள நாராயண குருவின் உருவப்படத்துக்கு பிராமணப் புரோகிதர்கள் நடத்திய சடங்கு. எதற்கு எதிராகக் குருதேவர் குரல் எழுப்பினாரோ, எந்த மனப் பான்மைக்கு எதிராகப் போராடினாரோ அந்த வைதீக மரபுக்குள் அவரைத் தள்ளி விட்டிருந்ததைப் பார்க்க மனம் நொந்தது.
மகான்களின் வழியை அடைப்பதற்கு உத்தமமான உபாயம் அவர்களைப் பீடத்திலேற்றி வைத்து வழிபடுவதுதான்போல.

எல்லாருக்கும் வணக்கம். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாராயண குருவின் பிறந்த தினத்தன்று இதே மேடையில் பேசி இருக்கிறேன். இன்று அதே நாளில் அதே மேடையில் அதே குருவைப் பற்றி மறுபடியும் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இதற்காக விழாக் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
இன்று நாம் குருவின் 160வது பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக் கிறோம். இதே செப்டம்பர் மாதத்தில்தான் அவரது சமாதி தினமும் வருகிறது. அவர் நம்மிடையே வாழ்ந்தது எழுபத்தி இரண்டு ஆண்டுகள். இந்த எழுபத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் அவர் செய்த காரியங்கள் இன்றும் நினைக்கப் படுகின்றன. அவர் சொன்ன கருத்துகள் இன்றும் தேவையாக இருக்கின்றன. அவரது செயல்களும் கருத்துகளும் இன்றும் பேசப்படுகின்றன; நடைமுறைப் படுத்தப் படுகின்றன. நாராயண குருவுக்கு முன்னாலும் பின்னாலும் பல மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். மனித வாழ்க்கைபற்றிக் கவலைப்பட்டிருக்கிறார்கள். உபதேசங்கள் கொடுத்திருக் கிறார்கள். சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார்கள். அவை எல்லாம் ஒரு காலத்தில் முக்கியமானவையாக இருந்து பின்பு மறக்கப்பட்டு விட்டன. அன்று பெரும் செல்வாக்குச் செலுத்திய பல மகான்கள் பின்னர் மறக்கப் பட்டு விட்டார்கள்.
ஆனால் எந்தக் காலத்துக்கும் பொருத்தமானவராகவும் எந்தக் காலத்திலும் மறக்கப்படக் கூடாதவர்களாகவும் இருக்கும் பெருமக்களில் ஒருவராக இருந்து வருபவர் நாராயண குரு.
அவர் ஒரு துறவி. ஆனால் துறவறத்தை எல்லாருக்கும் கட்டாயமான தாகச் சொன்னதில்லை. அவருடைய அணுக்கத் தொண்டரும் சின்ன சாமி என்று அழைக்கப்பட்டவருமான மகா கவி குமாரன் ஆசான் குடும்பஸ்தர். அவர் ஆன்மீகவாதி. ஆனால் எஸ் என் டி பி.யின் செயல் திட்டங்களை உருவாக்கிய டாக்டர். பல்பு அறிவியல் பார்வையை முன்னிருத்தியவர்.அவர் தெய்வ ஆராதனையை ஏற்றுக் கொண்டவர். ஆனால் அவரது சீடர்களில் ஒருவராக இருந்த சகோதரன் அய்யப்பன் நாத்திகர். இப்படிப் பல சிந்தனைகளுடைய ஆட்களைத் தனது கருத்துக்களாலும் செயல் பாடுகளாலும் ஈர்த்தவர் நாராயண குரு. அப்படி ஈர்க்கக் காரணம் நாராயண குரு நடைமுறை சார்ந்த வாழ்க்கையிலேயே மனிதர்கள் மேம்பட முடியும் என்று காட்டியதுதான்.அவருடைய கருத்துகளோ போதனைகளோ நாளைய வாழ்க்கையைப் பற்றியதல்ல; செத்த பிறகு கிடைக்கக் கூடிய சொர்க்கம் பற்றியதோ அல்ல. இன்றைய வாழ்க்கையை பற்றியது. இந்த உலகத்தில் வாழ்வதைப் பற்றியது. இன்றைக்கு மனிதன் வாழ்வதைப் பற்றிய கவலையிலிருந்து பிறந்த கருத்துகள் அவை. இந்த வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்ற அக்கறையிலிருந்து பிறந்த செயல்கள் அவருடையவை. அதனாலேயே அவை இன்றும் தேவை யானவையாக இருக்கின்றன.
நாராயண குருவுக்குச் சமமாகப் பேசப்பட்ட பல மகத்தான மனிதர்களும் அவருக்கு முன்னும் பின்னும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் காலப் போக்கில்விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நாராயண குரு பிறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர் சுவாமி விவேகானந்தர். குருவுக்கு பதின்மூன்று ஆண்டுகள் இளையவர் மகாத்மாகாந்தி. காந்திக்கும் பின்னால் பிறந்த பெரியார் ஈ வே ரா, நாராயண குருவை விட சுமார் இருபது ஆண்டுகள் இளையவர். இங்கே குறிப்பிட்ட இந்தப் பெரு மக்கள்தாம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்திய வாழ்க்கையில் சீர்திருத்தங்களைச் செய்தவர்கள். இவர்கள் எல்லாரும் பிற்காலத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள். விவேகானந்தர் வெறும் இந்து மதவாதியாகச் சொல்லப் பட்டார். காந்தி தலித்துகளுக்கு எதிரானவர் என்று டாக்டர் அம்பேத்கரால் அவர் காலத்திலேயே விமர்சிக்கப்பட்டார். பெரியார், பிராமணர் அல்லாத சாதி இந்துகளுக்கு ஆதரவானவர் என்று குறை சொல்லப்பட்டார். இன்றுவரை விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவராகவே இருந்திருக்கிறார் நாராயண குரு. அவரது காலத்தில் அவருக்கு எதிராகச் சின்ன முணுமுணுப்புகள்தாம் எழுந்திருக் கின்றன, என்பதைத் தவிர அவர் மீதான பெரிய விமர்சனங்கள் சொல்லப்
பட்டதில்லை. அதற்குக் காரணம்அவரது வாழ்க்கை. தான் சொன்னதற்கும் செய்ததற்கும் இடைவெளி இல்லாத வாழ்க்கை அவருடையது.
அவர் ஒரு ஆன்மீகவாதி. அத்வைத தத்துவத்தைக் கடைப் பிடித்தவர். பலப்பலவாகத் தெரியும் எல்லாம் ஒன்றே என்பதுதான் அத்வைதத்தின் அடிப்படை. எல்லா உயிர்களும் ஒன்று. நம்முடைய மாயையால்தான் அவை வெவ்வேறாகத் தெரிகின்றன. இந்த மாயை கலைந்து விட்டால் வேற்றுமைகள் இல்லாமல் போய்விடும் என்பது அத்வைதத்தின்விளக்கம். இதை உபதேசமாகச் சொன்னவர்களே அதிகம். ஆதி சங்கரர் முதல் இன்றைய கார்ப்பொரேட் சாமியார்கள் வரை. ஆனால் இதை நடை முறையில் செய்து காட்டியவர் என்ற பெருமை நாராயண குருவுக்கு உரியது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் அதைச் செயலிலும் காட்டியவர். மனிதர்கள் எல்லாரிடமும் மனம் திறந்து பேசியவராக இருந்தார் நாராயண குரு. எல்லா வகையான மனிதர்களிடமும் பேசியவர். மகாத்மா காந்தி, ரவீந்திர நாத்தாகூர் போன்ற பெரும் மனிதர்களிடம் மட்டுமல்ல. கடைநிலையில் இருந்தவர் களிடமும் பேசியவர். கொஞ்சம் அதிகப்படியாகச் சொன்னால் குட்டிச் சாத்தானிடம் கூடப் பேசியவர்.
நாராயண குருவின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு நகைச்சுவையுணர்வு உள்ள குரு, ஏன் அவர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் கூடச் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கவில்லை என்று ஆச்சரியமாக இருக்கும்.
சிவகிரி ஆசிரமத்தில் நாராயண குரு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெகு தொலைவிலிருந்து இரண்டு பேர் அவரைப் பார்க்க வருகிறார்கள். இரண்டு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குருவிடம் சீடர்கள் தெரிவிக்கிறார்கள். ''அவர்களை ஏன் காக்க வைக்க வேண்டும்? அழைத்துக் கொண்டு வரலாமே''என்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு போகிறார்கள். ''நம்மைப் பார்க்க வந்தீர்களாக இருக்கும். நல்லது''என்கிறார் குரு. ''பார்க்க மட்டுமில்லை. உங்களிடம் ஒரு சங்கடத்தைச் சொல்ல வந்தே ¡ம்''என்கிறார்கள் வந்தவர்கள். ''நம்மிடமா, என்ன சங்கடம் சொல்லுங்கள்''இது குரு. ''ரொம்ப நாட்களாக வீட்டில் குட்டிச் சாத்தானின் தொல்லை தாங்க முடியவில்லை. என்னென்னவோ கர்மங்களெல்லாம் செய்து பார்த்து விட்டோம்.ஒரு பலனுமில்லை. சுவாமிகள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்''என்கிறார்கள். ''தொல்லை தருவது யார் என்று சொன்னீர்கள். குட்டிச்சாத்தானா? பரவாயில்லையே. சரி, நீங்கள் அதைப் பார்த்தீர்களா?''பார்த்தோம் சுவாமி. வீட்டு வளவில் கறுப்பாகக் கரி மூட்டைபோல நிற்பதைஅடியவர்கள் பார்த்தோம். எப்போஒதும் தொந்தரவுதான். விடாமல் கல்லை எறிந்து கொண்டிருக்கிறது''''அது சரி அந்தக் குட்டிச் சாத்தான் நாம் சொன்னால் கேட்குமா?''ஆமாம் சாமி. சாமி சொன்னால் கேட்கும். ''ஆனால் அந்தக் குட்டிச் சாத்தானுக்கும் நமக்கும் பழக்கமில்லையே ''இதைக் கேட்டு வந்தவர்கள் முகம் வாடி நிற்கிறார்கள்.''ஆகட்டும் குட்டிச் சாத்தானுக்கு நாம் ஒரு கடிதம் எழுதினால் போதுமா?''என்று கேட்டு விட்டு ஒரு பக்தனிடம் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் சொல்வதை எழுதிக் கொள்ளும்படிச் சொல்கிறார். அந்தக் கடிதம் இப்படி.
’’திரு குட்டிச்சாத்தான் அறிந்து கொள்வதற்காக, இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் பெரேராவின் வீட்டில் இனிமெல் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது. இப்படிக்கு நாராயண குரு.''
இந்தச் சம்பவத்தை வெவ்வேறு வகையில் வியாக்கியானம் செய்யலாம். தன்னைத் தேடி வந்தவர்கர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகக் குரு செய்த உபாயம் என்று சொல்லலாம்.அவர் நடத்திய சித்து விளையாட்டு என்று சொல்லலாம். அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவின் முக்கியத் துவத்தை எடுத்துச் சொன்னதாகப் பார்க்கலாம். எல்லாரும் ஒன்று என்று நம்பும் ஒரு அத்வைதி சாத்தானையும் கடவுளின் தோற்றம் என்று சொல்லாமல் சொன்னதாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட மாபெரும் கருணை நிரம்பிய ஞானி சக மனிதர்கள் மீது காட்டிய கரிசனம் என்பதுதான் பொருத்தம். அப்படிப் பார்க்கவே நான் விரும்புகிறேன். குருவே அப்படித்தான் எண்ணியிருக்கிறார் என்று அவரது வார் த்தைகளை வைத்தே சொல்ல முடியும். ''அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம்''என்றுசொல்லியிருக்கிறார். ’எனக்கு நன்மை ஏற்படுவதற்காகக் கடைப் பிடிக்கும் ஒன்று அடுத்தவனுக்கும் நன்மையளிப்பதாக வர வேண்டும்’.
இந்த வாசகத்தை நாராயண குரு தனது வாழ்க்கை மூலம் நிரூபித்தார். அவர் செயல் பட்டது தான் பிறந்து வளர்ந்த சமூகத்தின் இடையில். அன்றைக்கு மிகத் தாழ்ந்த நிலையில்இருந்த அந்தச் சமூகத்தை முன்னிருத்தியே அவர் பேசினார். செயல்பட்டார். ஆனால் அவரது பெரிய சிந்தனை, பெருந் தன்மையான செயல்கள் சொந்தச் சமுதாயத்தை முன்னேற்ற மட்டுமல்ல; பிற சமுதாயங்கள் மேம்படவும் உதவின. அந்த வகையில் ஒரே சமயம் அவர் தத்துவஞானியாகவும் சீர்திருத்தக் காரராகவும் விளங்கினார். அவருக்கு முன்பும் அவரது காலத்திலும் தத்துவவாதிகளும் சீர்திருத்தக் காரர்களும் இருந்தார்கள். ஆனால் தத்துவக்காரர்கள் அநேகமாக சாதாரண வாழ்க்கைக் காரியங்களில் கவனம் செலுத்தாத உபதேசிகளாக இருந்தார்கள். சீர்திருத்தக் காரர்கள் வாழ்க்கைக் காரியங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தார்களே தவிர, மனிதனின் ஆன்மீகத் தேவைகளைப் புறக்கணித்தார்கள். இந்த இரண்டையும் சரி சமமாகப் பார்த்தவர்; செயல்பட்டவர் என்பதே நாராயண குருவின் பெருமை.
''அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம்''என்று சொன்னதை அவர் எப்படிச் செயலில் காட்டினார் என்பதைச் சரியாக எடுத்துச் சொன்னவர்கம்யூனிஸ்டான இ.எம்.எஸ்.
அவர் சொல்கிறார். ''சுவாமிகள் கோவில்களுக்கும் மடங்களுக்குமான அஸ்திவாரங்களைத்தான் உருவாக்கினார். ஆனால் அவற்றின் மேலே சமுதாய நல்லிணக்கம் என்ற கட்டடம் கட்டப்பட்டது. அவர் விதைத்தது ஆன்மீக சிந்தனையின் விதைகளை. ஆனால் அவற்றிலிருந்தே சமூக, அரசியல் உரிமைகள் முளைத்தன. வேத கால இந்தியாவின் கருத்துக் களைத்தான் குரு பிரச்சாரம் செய்தார். ஆனால் அது கேட்பவர்களின் காதுகளில் சுதந்திரம் சமத்துவம் ககோதரத்துவம் என்ற மேற்கத்திய சிந்தனைகளாகவே பதிந்தது.''என்கிறார் இ எம் எஸ்.
நாராயண குருவின் முக்கியத்துவத்தையும் வரலாற்றில் அவருக்குள்ள பாத்திரத்தையும் இதைக் காட்டிலும் துல்லியமாக வேறு யாராலும் மதிப்பிட்டு விட முடியும் என்று தோன்றவில்லை.
தனது சமூகத்துக்காக குரு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மொத்தக் கேரள சமூகத்தையும் பாதித்தது. ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது. சரியாகச் சொன்னால் நாராயண குருவே. இன்றைய கேரளத்தின் மறு மலர்ச்சியின் நாயகன் . வேறு எந்த அத்வைதிக்கும் ஞானிக்கும் இந்தப் பாத்திரம் வாய்க்கவில்லை. தனது சமூகத்தை நோக்கி அவர் பேசியவைஎல்லாச் சமூகங்களையும் மாற்றியது. அந்த வகையில் பெரும் பொது நன்மையின் மையமாகவே அவரைச் சொல்ல வேண்டும். ஒரு அத்வைதி என்ற நிலையில் அவர் யாரிடமும் பேதம் காட்டியதில்லை. அதனாலேயே அவர் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவராக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டார். ஈழவர்களை மட்டுமல்ல; இன்று தலித்துகள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் குரு தனது கருணையால் அரவணைத்துக் கொண்டார். திருவனந்தபுரம் நகரத்தின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என். குஞ்ஞிராமன் என்ற தலித் சமூகத்தவர். 1960ஆம் ஆண்டு வாக்கில் குஞ்ஞிராமன் காலமானதாகச் சொல்லப்படுகிறது. அவரை மேயர் பதவிக்கு தகுதியானவராக ஆக்கியவர் நாராயண குரு. இதை குஞ்ஞிராமனே தனது பதவியேற்பின் போது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இன்று பெரியாரை தலித்துகளுக்கு ஆதரவானவர் அல்ல என்று விமர்சிப்பதைபோல நாராயண குருவை விமர்சிக்க முடியாமற் போனதன் காரணம் இதுதான்.
நாராயண குரு பின் பற்றிய அத்வைதம் இந்து மதத்தில் அடங்கியது என்று சொல்லப் படுகிறது. அதை குருவும் மறுத்ததில்லை. அவர் பிரதிஷ்டை செய்ததெல்லாம் இந்துக் கடவுள்கள் என்பதிலிருந்தே இது புரியும். ஆனால் உண்மையில் குரு வெறும் இந்து மத சாமியாராக இருக்கவில்லை. இதை எடுத்துச் சொன்னவர் மகா கவி பாரதி. தனது கட்டுரைகளில்இதைச் சொல்கிறார். சரியாகச் சொன்னால் கேரளம் மட்டுமே அறிந்திருந்த ஸ்ரீ நாராயண குருவை பாரதியே தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கேரளத்தைப் பற்றி பாரதிஆறு கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அதில் ஒன்றில்தான் குருவை ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்று குறிப்பிடுகிறார். அதில் ஒரு கட்டுரையில் அவர் தெரிவிக்கும் விவரம் நாராயண குரு இந்து மதத்தைக் கடந்து சென்றிருப்பதைச் சொல்கிறது. ஆலுவா கல்லூரியில் முஸ்லிம் மாணவன் ஒருவன் சமஸ்கிருதம் கற்பதைப் பற்றி எழுதுகிறார் பாரதி. அதற்குக் காரண கர்த்தா ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்றும் பாராட்டுகிறார்.
ஒரு ஆன்மீகவாதி. சீர்திருத்தக் காரர். கவிஞர். என்றெல்லாம் நாராயண குருவைச் சிறபிக்கலாம். அவை எல்லாவர்ரையும் விட அவர் பெற்றிருந்த இடம் விசாலமானது.நடைமுறையும் தத்துவமும் ஒன்றிணைந்த சங்கமம் அவர். பழைய சடங்குகளிலிருந்து சமுதாயத்தை மீட்டவர். புதிய கருத்து களைச் சொல்லி வேற்றுமைகளை இல்லாமலாக்கியவர். கல்வியை யையும் அதன் மூலம் பெறும் அறிவையும் முதன்மைப் படுத்தியவர். தொழில் செய்து முன்னேறத் தூண்டியவர். மதத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். அந்தப் பார்வையில்தான் ’மதம் எதுவானாலும் மனிதன் நன்மை அடைந்தால் போதும்’என்றார். சாதிகளுக்கு அப்பாற்பட்ட மனித நன்மையை வலியுறுத்தியவர். அதனால்தான் அவரால்‘சாதியைக் கேட்காதே; சாதியை சொல்லாதே'என்று அறிவிக்க முடிந்தது. வெவ்வேறாக இருக்கும் மனிதர்களை ஏற்றுக் கொண்ட நடைமுறைவாதி. அதே சமயம் அவர்கள் எல்லாரும் ஒன்று என்று திடமாகச் சொன்ன ஆன்மீகவாதி.
குரு எழுதிய பல நூல்களில் ஒன்று தெய்வதசகம். இந்த நூலை அவர் 1814ஆம் ஆண்டு எழுதினார் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் இது நாராயண குருவின் தெய்வ தசகத்தின் நூற்றாண்டு. பத்துக் கண்ணிகள் உள்ள இந்தச் சிறு நூலை குருவின் தத்துவ அறிக்கை என்று சொல்லலாம். மிக எளிய பிரார்த்தனை வரிகளுடன் தொடங்குகிறது இந்தத் தசகம். ’தெய்வமே, காத்து கொள்க அங்கு/ கைவிடாதிங்ஙு ஞங்ஙளே'என்ற முதல் வரியிலேயே கடவுளுடன் நேரடியான உரையாடல் தொடங்கி விடுகிறது. இது ஒரு வழக்கமான பக்திப் பிரார்த்தனை அல்ல என்று இப்போது வாசிக்கும்போது தோன்றியது. தெய்வம் தன்னைத்தான் காத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதாகவும் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுவதாகவும் புதிய அர்த்தங்களைச் சொல்லத் தோன்றுகிறது.
ஏனெனில் அப்படிப்பட்ட காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதர்கள் சாதி அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையிலும் பார்க்கப் படுகிறார்கள். மனிதர்கள் வெவ்வேறான நம்பிக்கைகளும் குணங்களும் கொண்டவர்கள் என்பதை மறுத்து எல்லாருக்கும் ஒரே அடையாளம் போடுகிற முயற்சிகள் நடக்கின்றன. வெவ்வேறு கடவுள்களை மீண்டும் பெரிது படுத்தும் காரியங்கள் நடக்கின்றன. இவை நாராயண குரு போன்ற மாமனிதர்கள் நமக்குக் கற்பித்த மேலான நம்பிக்கைகளுக்கு எதிரானவை.
நாராயண குரு முன்வைத்த கடவுள் அறியப்பட முடியாத ஒன்று. அதை அறிவதே வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் என்பது அவரது நம்பிக்கை. தெய்வ தசகத்தின் இரண்டாவது செய்யுள் அதைத்தான் சொல்கிறது. 'ஒன்னொன்னாய் எண்ணித் தொட்டு/ எண்ணும் பொருள் ஒடுங்ங்கியால் நின்னிடும் த்ருக்கு போலுள்ள நின்னில் ஆ ஸ்பந்தமாகணம்'.
'ஒவ்வொன்றாய் எண்ணித் எண்ணித் தொட்டு
எண்ணிய பொருள் முடிந்ததும்
மிஞ்சும் ஒளியாய் நிற்கும்
உனக்குள்ளே அந்தத் துடிப்பாக வேண்டும் '
நாராயண குருவின் கடவுள் பற்றிய சிந்தனை வெளிப்படுவது இதில்தான். நமக்குத் தெரிந்த பொருட்களை தொட்டு எண்ணிப் பார்க்கிறோம். எண்ணி எண்ணி அவை எல்லாம் தீர்ந்ததும் ஒரு பார்வை, ஒரு எண்ணம், ஒரு வெளிச்சம் மிஞ்சும். அதை நம்மால் விளக்க முடியாது. ஆனால் உணர முடியும். அந்த நிலைதான் கடவுள் என்கிறார் குரு. இதைவேறு விஷயங்களுக்கும் பொருத்தலாம். சாதியைப் பேசுகிறோம் பேசிக் கொண்டே போனால் சாதியே இல்லாத ஒரு புள்ளிக்குப் போய்ச் சேர்வோம். மதத்தைப் பர்றிப் பேசிகிறோம். ஆராயந்து ஆராயந்து மதமே இல்லாத ஒரு இடத்துக்கு வந்து சேருவோம். கடவுளைப் பற்றிப் பேசிப் பேசி கடவுள் என்ற ஒன்று விளங்காத முனையை அடைவோம். இந்தப் புள்ளியை, இந்த இட்த்தை, இந்த முனையைக் கண்டவர் நாராயண குரு. அதுவே அவரது மகத்துவம். அதுதான் இந்த நாளிலும் அவரைப் பொருத்தமுடையவராக ஆக்குகிறது. கடவுள் எவ்வளவு உயர்ந்தவர் என்பதையல்ல; மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதையே நாராயண குரு அழுத்தமாகச் சொன்னார் என்று அவரது கருத்துகளிலிருந்து செயல்களிலிருந்து நாம் கண்டு அடையமுடியும்.இன்று அப்படிக் கண்டு அடைவது மிகவும் தேவை.
இந்தக் கருத்துகளை குருதேவரின் பிறந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த விழாக் குழுவினருக்கு வந்தனம். உங்கள் அனைவருக்கும் நன்றி.
↧
இருப்பும் இன்மையும்
சர்வோத்தமன் சடகோபனை நேரில் சந்தித்ததாக நினைவில்லை. மின் அஞ்சல் தொடர்பு மூலம் அறிமுகமானவர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக அவ்வப்போது மின் அஞ்சல் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். ஒரு குறும்படமும் எடுத்திருக்கிறார். கவிதைகள் பற்றி சில மொழிபெயர்ப்புகள் பற்றி மின் அஞ்சலில் எழுதியிருக்கிறார்.அவை எல்லாம் மகிழ்ச்சி அளித்தன. நேற்றைய மின் அஞ்சலில் அவர் எழுதியிருந்தது இது.
‘
Hi Mr.Sukumaran,
I read the book The strange case of billy biswas. I remember you mentioning about this book in uyirmmai some years back.i think you also added that you tried to meet him Delhi once but was not able to meet.I remembered the Growing stone short story of Albert Camus when I read this novel.When I started reading I thought may be this book is just a romantic view of tribal life.But it was not so.Arun joshi is too honest.The tone of the book also was similar to Camus tone.I liked the book very much.More than Biswas it was the helpless tone of Romi which parallels with the tone of the engineer in Growing stone that makes this novel an important one.Had you not mentioned about this book may be I would have never read this.
Thanks
Sarwothaman.
அவருடைய கடிதம் தந்த உற்சாகம் அருண்ஜோஷி பற்றிய இந்தக் கட்டுரையைப் பதிவேற்றத் தூண்டியது. உயிர்மையில் வெளிவந்த இந்தக் கட்டுரை, பின்னர் ’வெளிச்சம் தனிமையானது’ என்ற கட்டுரைத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டது. அதிகம் யாரும் கவனிக்காத எழுத்தாளரான அருண்ஜோஷியைப் பற்றிய கட்டுரையையும் யாரும் அதிகம் கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்து வந்தது. அதைப் பொய்யாக்கி இருக்கிறார் நண்பர் சர்வோத்தமன். அதை விட முக்கியம் ஜோஷியின் நூலைத் தேடிப் படித்திருக்கிறார். எந்த வகையில் சர்வோத்தமனுக்கு நன்றி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அருண்ஜோஷி
'உன் இயல்பே உன்னுடைய விதி'('Your character is your fate') - என்ற ஒற்றை வாக்கியத்தின் மூலம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய விருப்பத்துக்குரிய எழுத்தாளரானவர் அருண்ஜோஷி.'பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கு'என்ற ஜோஷியின் நாவலில் வரும் இந்த வாசகம் இன்றும் பொருள் பொதிந்ததாகவே தொடர்கிறது.
இலக்கிய வேட்கை தீவிரமாக இருந்த பருவத்தில் வாசித்துத் தள்ளியஏராளமான புத்தகங்களில் ஆங்கிலத்தில் எழுதும் இந்தியஎழுத்தாளர்களின் ஆக்கங்களும் இருந்தன. காகித அட்டைப் பதிப்புகளாக இந்தியப் பதிப்பகங்கள் வெளியிட்ட புனைகதைகளின் மீது உடனடி விருப்பம் விழுந்தது.ராஜாராவ், முல்க்ராஜ் ஆனந்த்,ஆர்.கே.நாராயண்,நயனதாரா சகால், கமலாமார்க்கண்டேயா, அனிதா தேசாய்.ஆர்.பி.ஜப்வாலா,குஷ்வந்த் சிங் என்று பிரபலமாக இருந்த எல்லா எழுத்தாளர்களின் ஒவ்வொரு புத்தகத்தையாவது வாசித்துப் பார்த்திருப்பேன்.இந்த வாசிப்பு பெரும்பாலும் மனச்சோர்வையே தந்தது.இந்தியத் துரைமார் களை விட,தமிழ் போன்றதேசிய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் ஆழமான படைப்பு களைத் தந்திருக்கிறார்கள் என்ற உண்மை பிடிபட்டபோது இந்தநூல்களிடமிருந்து விலகினேன்.இந்திய வாழ்க்கையை ஆங்கில வாசகனின் ருசிக்கேற்பப் பரிமாறுவதுதான் இந்தவகை எழுத்தின் நோக்கமென்று கருதினேன்.அந்த கருத்துக்கு மாறாகவும் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையை இரண்டு எழுத்தாளர்கள் கொடுத்தார்கள்.சஷ்தி பிரதாவும் அருண்ஜோஷியும்.இருவரும் சமகாலத்தினர்.சம வயதினர்.
சஷ்தி பிரதாவின் கதை கவிதைகளை விட அவரது சுய சரிதையான'என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்' (My God died young)என்ற நூல் என்னை வெகுவாகக் கவர்ந்தது.கல்கத்தாவில் பிறந்தவர்.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைதேடிப் போய் கழிப்பறைத்துப்புரவாளர், சமையலறை பணியாளர், மது விடுதியில் ஊழியர்,தபால்காரர் என்று பல்வேறு வேலைகளைச் செய்து கடைசியில் பத்திரிகையாள ரானவர். இருபத்தியெட்டாம் வயதில் தன்னுடைய சரிதையை புத்தகமாக எழுதினார். தன்னுடைய அவமானங்கள், வலிகள்,காதல்,காமம் எல்லாவற்றையும் அப்பட்டமாக எழுதினார்.அதுவரை இந்தோ ஆங்கில ஆக்கங்களில் காணமுடியாமலிருந்த வெளிப்படையான எழுத்துமுறை. அதை மேலும் ருசிகரமானதாக்குவதற்காக சஷ்தி பிரதா பயன்படுத்தியிருந்த பாலியல் சித்தரிப்புகள் - இவை வாசகனை ஈர்த்தன; அதிர்ச்சி
யளிக்கவும் செய்தன.இவ்விரு அம்சங்கள்தாம் சஷ்தி பிரதாவை பிரபலமாக்கியவை.ஒரு வாசகனாகஅந்தப் புத்தகத்தை நெருங்க என்னைத் தூண்டியவையும் இதே அம்சங்களே.
யளிக்கவும் செய்தன.இவ்விரு அம்சங்கள்தாம் சஷ்தி பிரதாவை பிரபலமாக்கியவை.ஒரு வாசகனாகஅந்தப் புத்தகத்தை நெருங்க என்னைத் தூண்டியவையும் இதே அம்சங்களே.
அருண்ஜோஷியின் படைப்புகளுடன் நேர்ந்த அறிமுகம் சஷ்தி பிரதாவின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது.வாழ்க்கை பற்றி இந்த இரு எழுத்தாளர்களும் கொண்டிருந்த பார்வைகள்அதற்குக் காரணம் என்று இப்போது வகைப்படுத்த முடிகிறது.பிரதாவின்பார்வை மரபுநெறிகளை மீறுவதாக இருந்தது.அவரது பிற கதைமாந்தர்கள்கூட அவருடைய பொஹீமியன் அணுகுமுறையின் சாயல்களையே கொண்டிருந்தார்கள்.வாழ்வின் கேள்விகளைப் புறக்கணித்து நகர்பவர்களாக இருந்தார்கள்.
அருண்ஜோஷியின் பின்னணி பாதுகாப்பானது.இந்தியாவிலும்அமெரிக்காவிலுமாக கல்வி பெற்றார்.ஒரு தொழிலதிபராக வாழ்ந்தார். எனவேமரபெதிர்ப்பான ஒரு வாழ்க்கைமுறை இயல்பாகவே அவருடைய தேர்வாக இருக்கவில்லை.மாறாக பொருளியல் வாழ்வின் வெற்றிகள் மனிதர்களை வெறுமையாக்குவதைப் பற்றிய சிந்தனைகளைத் தேர்ந்து கொண்டார்.இந்த உலகில் மனித இருப்பின் அர்த்தம் என்ன என்ற கேள்வியால் தடுமாறும் கதை மாந்தர்கள் அவருடையவர்கள். பெரும்பாலும் அவர்கள்அந்நியமானவர்கள். மானுடச் சூழலின் அபத்தம் அவருடைய படைப்புகளின் அடியோட்டம்.'மனிதமனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்'என்று தனது இலக்கிய நோக்கம் பற்றி அருண்ஜோஷி குறிப்பிட்டார்.
எழுத்தின் இந்த இயல்பு சார்ந்து அருண்ஜோஷியை எக்சிஸ்டென்ஷியலிசஎழுத்தாளர் என்று இனங்கண்டு கொள்வது எனக்கு உவப்பாக இருந்தது.இருத்தலியல் கோட்பாட்டின் ஆகச் சிறந்த இந்திய உதாரணம் அருண்ஜோஷி என்று இப்போதும் எண்ணுகிறேன். இந்த எண்ணம்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றபோது அருண்ஜோஷியைச் சந்திக்கும் ஆர்வத்தைக் கிளறி விட்டது.
அது ஒரு டிசம்பர் மாதம்.சாகித்திய அக்காதெமியும் இந்திய கவிதை அமைப்பும் (Poetry Society of India) இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவிதை மொழிபெயர்ப்புப் பட்டறையின் உறுப்பினனாக தொடர்ந்து நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.தமிழில்நான் எழுதியுள்ள கவிதைகளிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை ஹிந்தியில் மொழிபெயர்ப்பது பட்டறையின் பணி.ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு கவிஞர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுக் கலந்து கொண்டிருந்தார்கள்.என்னுடைய தமிழ்க் கவிதையை தமிழும் ஹிந்தியும் தெரிந்த பாலசுப்ரமணியம் தோராயமான ஹிந்தி வடிவத்துக்கு மொழிபெயர்ப்பார்.ஹிந்திக் கவிஞரான விமல்குமார் திருத்தமான ஹிந்தி வடிவத்துக்கு அதைமாற்றுவார்.பட்டறையின் மொழிபெயர்ப்பு முறையில் கவிஞனாக என்னுடையபங்கு மொழிபெயர்ப்பில் கவிதை பொருள் மாறாமலும் தொனி பிசகாமலும் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று மேற் பார்வை செய்வது மட்டுமே.எனவே நிறைய நேரம் மிச்சமிருந்தது.விமல்குமார் பத்திரிகையாளராகவும் இருந்தார். மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இடையிடையே அலுலகத்தை எட்டிப்பார்க்க ஓடுபவராக இருந்தார்.ஆக, வேறு ஏதாவது செய்ய நேரமிருந்தது. அந்த நான்கைந்து நாட்களும் அருண்ஜோஷியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.சாகித்திய அக்காதெமியில் பணியாற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்தேன்உற்சாகம் தரக்கூடியஎந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இத்தனைக்கும் அருண்ஜோஷி சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர்.அவருடைய 'லாஸ்ட் லேபிரிந்த்' (The Last labyrinth -கடைசி சுழல்வழி) நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டசிறந்த படைப்புக்கான 1982ஆம் ஆண்டின் விருதைப் பெற்றிருந்தது.இந்த விவரம் தவிர அக்காதெமி நண்பர்கள் மூலம் அறிய முடிந்த தகவல்கள் எதுவுமில்லை.
அருண்ஜோஷியின் வீட்டு முகவரியோ அலுவலக முகவரியோ தொலைபேசிஎண்ணோ எதுவும் கிடைக்கவில்லை.தில்லி இலக்கிய வட்டத்திலும் அவர்அபூர்வமாகவே காணப்பட்டிருக்கிறார்.அந்த நான்கைந்து நாட்களில் தில்லியில் அறிமுகமான எழுத்தாளர்களில் ஒருவரும் ஆங்கிலப் பேராசிரியரும் கவிஞருமான மகரந்த் பராஞ்பே மட்டுமேஅருண்ஜோஷியைச் சந்தித்திருப்பதாகச் சொன்னார். அவருக்கும் ஜோஷியின் தற்போதைய முகவரிதெரியவில்லை.தில்லியிலிருந்து நொய்டா தொழிற்சாலை வளாகத்துக்குச் செல்லும் வழியில் ஜோஷியின் தொழிற்சாலை இருப்பதாகத் தெரிவித்தார்.மறுநாள் மாலை தில்லிக் குளிரைப் பொருட்படுத்தாமல் அருண்ஜோஷியைத்தேடிக் கிளம்பினேன்.அரைகுறையான ஹிந்தி மொழியறிவும் வழிகள் பற்றிய குழப்பமும் தேடலை விரயமாக்கின.
சாகித்திய அக்காதெமி விருது பெற்ற ஓர் எழுத்தாளர்,அதுவும் உயர்தட்டுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தில் எழுதியவர் ஒருபோதும் புகழின்வெளிச்சத்தில் வந்து நின்றதில்லை என்பது வியப்பளித்தது.புதிராகவும் இருந்தது.அவருடைய நாவல் பாத்திரங்கள்போலவே அவரும் அந்நியமானவராகவே இருந்திருக்கிறார்.'அருண்ஜோஷியின் விநோத வழக்கு' - The Strange case of Arun Joshi - என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
தில்லியிலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பின்னர் மகரந்த் பராஞ்பேயோ சாகித்திய அக்காதெமி வெளியீடான 'இந்தியன் லிட்டரேச்சர்'இதழின் துணையாசிரியரான(இன்று அதன் ஆசிரியர்) தாமசோ,யாரென்று இப்போது நினைவில்லை, தகவல் தெரிவித்தார்கள்.நான்
அருண்ஜோஷியைத் தேடிப்போன நாட்களுக்கு வெகு முன்பே அவர் காலமாகி இருந்திருக்கிறார்.
அருண்ஜோஷியைத் தேடிப்போன நாட்களுக்கு வெகு முன்பே அவர் காலமாகி இருந்திருக்கிறார்.
புகழ்பெற்ற தாவரவியலாளரும் கல்வியாளருமான தந்தைக்கு 1939இல்வாரணாசியில் பிறந்தார். அருண்ஜோஷி.ஏழு வயதுவரை காசி வாழ்க்கை.அதன் பின்னர் லாகூரில் இளமைப் பருவத்தைக் கழித்தார்.தேசப்பிரிவினையைத் தொடர்ந்து பஞ்சாபுக்குத் திரும்பினார்.படிப்பில்முன்னணியில் இருந்தவர்.அந்த அடிப்படையில் அமெரிக்காவிலுள்ளகான்சாஸ் பல்கலைக் கழகத்தில் முழுமையான உதவித்தொகை பெற்றுபொறியியலிலும் தொழிற்சாலை மேலாண்மையிலும் பட்டப் படிப்பை முடித்தார்.பின்னர் எம்.ஐ.டி.யில் முதுகலைப் பட்டம் பெற்றார்.பல்கலைக்கல்வியின்போது அவருக்குக் கிடைத்த அனுபவம் தான் எழுத்தில் ஈடுபாடுகொள்ளச் செய்தது.அருண்ஜோஷியின் உறவினர் ஒருவர் மனநலமருத்துவராக இருந்தார்.தன்னுடைய கைச் செலவுகளுக்காக அவருடையமருத்துவ விடுதியில் பகுதி நேரப்பணியாளராக இருந்தார் அருண்ஜோஷி.மனச் சிதைவுக்கு ஆளான மனிதர்கள் இடையே பணியாற்றிய அந்தஅனுபவம் அவருக்குள் ஆழமாகப் பதிந்தது.அந்தப் பதிவுதான் அவரைஇலக்கியத்துறைக்குள் நுழையச் செய்தது.
கல்விப் பருவம் முடிந்து இந்தியா திரும்பிய அருண்ஜோஷி முதலில்ஒரு கம்பெனியில் மேலாண்மைப் பிரிவில் பணியாற்றினார்.சிறிதுகாலத்துக்குப் பிறகு சொந்தமாகத் தொழிற்சாலை தொடங்கி டீசல்எஞ்சின்கள்,வார்ப்பக உதிரிப் பாகங்கள் போன்ற இரும்பு வாடைஉற்பத்திகளைத் தயாரித்தார்.வெற்றிகரமான தொழிலதிபராக ஆதாயம்ஈட்டினார். இதற்கிடையில் மனசின் அழைப்புக்குச் செவி சாய்த்து எழுதஆரம்பித்தார்.1968முதல் இருபத்தைந்து ஆண்டுக் காலம் அவருடையபடைப்பாக்கப் பருவம்.1968இல் வெளிவந்த அருண்ஜோஷியின் முதல்படைப்பான 'அந்நியன்' (The Foreiginer) நாவலை வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் குஷ்வந்த் சிங்.
முதல் நாவல் பெற்ற வாசக,விமர்சக வரவேற்பு அருண்ஜோஷியைத்தொடர்ந்து எழுதச் செய்தது.எனினும் அந்த எழுத்து வாசக ருசிக்கானதீனியாக அல்ல; ஓர் எழுத்தாளன் அனுபவிக்கும் ஆன்மீகப் பதற்றத்தின்அடையாளங்களாக இருந்தது.தொழிற்சாலை அதிபராக,செல்வந்தராக இருந்தும் தனி மனிதனாக இருப்பின் அர்த்தம் பற்றிய கேள்வி களால்வதைபடுபவராக இருந்தார் அருண்ஜோஷி என்பதை அவருடையஎல்லா நாவல்களும் பகிரங்கப்படுத்துகின்றன.அவர் நிர்வகித்து வந்தஅறக்கட்டளையின் முதன்மையான நோக்கம் தொழிற்கூடங்களில்மனித அம்சத்தை மேம்படுத்துவதாக இருந்தது. ஒரே சமயத்தில் எதிரெதிரான இரண்டு உலகங்களில் அவர் உழன்றது முரண்போலவும்தோன்றுகிறது.
இருபத்தைந்து ஆண்டுகள் எழுத்து வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும்அருண்ஜோஷி எழுதியவை ஐந்து நாவல்களும்.ஒரு சிறுகதைத் தொகுதியும்மட்டுமே.அபூர்வமான ஒன்றோ இரண்டோ நேர்காணல்களைத் தவிரஎல்லாக் காலத்திலும் ஊடகங்களிருந்து விலகியே நின்றிருந்திருக்கிறார்.தன்னுடைய படைப்புகளை முன்வைத்துப் பிரசித்தி தேடிக்கொள்ளவோஅல்லது தன்னுடைய பொருளாதார வெற்றிகளைக் காட்டி இலக்கியவிளம்பரத்தை உருவாக்கிக் கொள்ளவோ அவர் முனைந்ததில்லை.புத்தககங்களின் பின் அட்டையில் கூட அவருடைய புகைப்படம்அச்சானதில்லை.அது அவருடைய இயல்பாக இருந்திருக்கிறது.அந்தஇயல்புதான் அவரை இலக்கிய உலகின் மறதிக்குள் வெகு எளிதாகதள்ளிவிட்டிருக்கிறது.அல்லது புதியது மட்டுமே மகத்தானது என்றுஇலக்கிய உலகம் பின் பற்றும் மாயை காரணமாக இருக்கலாம்.
1993இல் பருவ மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பான வறண்ட நாட்கள். வாழ்நாள் முழுவதும் உடனிருந்து கொன்றுகொண்டிருந்த ஆஸ்துமா திடீரென்று முற்றி அருண் ஜோஷியை முழுமையாகக் கொன்று தீர்த்தது.
@
அருண்ஜோஷியின் நாவல்களில் நான் முதலில் வாசித்தது அவரது இரண்டாவது நாவலான 'பில்லி பிஸ்வாசின் விநோத வழக்'கை.அவரது நாவல்களில் மிகச் சுவாரசிய மானதும் பிரபலமானதும் அதுதான்.அவருடைய நாயகர்களில் கலகக்காரனும் பில்லி பிஸ்வாஸ்தான்.சிரத்தையாக வாசித்த எல்லா நாவல்களிலும் வரும் நாயகர்களைப்போல ஆக ஆசைப்பட்ட இருபதின் பருவத்தில் சற்றுக் கூடுதலாகவே என்னைக் கவர்ந்தான் பில்லி. தவிர இருத்தலியல் சிந்தனை மனதைக் கவ்விப் பிடித்திருந்த காலம் அது.
ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆங்கிலம்வழி வாசிக்கக் கிடைத்த நாவல்கள் கலாச்சார இடைவெளி காரணமாக மெல்லிய விலகலை தோற்றுவித்திருந்தன.அந்த இடைவெளியை இந்திய அனுபவங்களால் நிரப்பியவராக அருண்ஜோஷி தெரிந்தார்.
உலகப்போர்களும் தொழில்மயமாக்கமும் ஐரோப்பிய கலாச்சாரத்தில் அந்நியமாதலையும் மனித இருப்பைப் பற்றிய கேள்விகளையும் ஏற்படுத்தின.சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சமூகக் கோளாறுகளும் பொருளாதார வெற்றிகளுக்காக இந்தியர்கள்ஆன்மாவைத் தொலைக்கும் சூழலும் இருப்பைப் பற்றிய சிந்தனைகளை எழுப்பின.அதைப் படைப்பாக் கங்களில் தேர்ச்சியுடன் விவாதித்தவர் அருண்ஜோஷி. இந்த வகைப்பாட்டை பின்வரும் உருவகமாக மனதில் பதிந்து வைத்திருந்தேன். மேற்கத்திய
எக்சிஸ்டென்ஷியலிசம் கண்ணாடிக் குப்பிக்குள் இருப்பது.இந்திய எக்சிஸ்டென்ஷியலிசம்
எக்சிஸ்டென்ஷியலிசம் கண்ணாடிக் குப்பிக்குள் இருப்பது.இந்திய எக்சிஸ்டென்ஷியலிசம்
மண்கலத்தில் வைக்கப்பட்டிருப்பது.அதன் சாரம் மண்கலத்தின் நுண்துளைகள் வழியாகக் கசிந்து கொண்டிருக்கும். அருண்ஜோஷியின் மண்கலம் பொருத்தமாகக் கசிவதை
அவருடைய படைப்புகளிலிருந்து ஊகித்தேன்.
பிமல் பிஸ்வாஸ் என்கிற பில்லி பிஸ்வாஸ் இருத்தலியல் கேள்விகளால்
தன்னுடைய வாழ்க்கையை ஆராய முயல்கிறான்.அது அவனை சமூகத்தின் பொது மரபுக்கு அந்நியனாக்குகிறது.பில்லி நியூயார்க் பல்கலைக் கழகத்தில் மானுடவியல்துறை மாணவன். அதே பல்கலைக் கழகத்தில் படிக்கவரும் ரோமியைத் தன்னுடன் தங்க அனுமதிக்கிறான். ரோமியின் கூற்றாகத்தான் நாவல் நிகழ்கிறது.சொந்த மண்ணைப் பிரிந்த புகலிடவாசியாக ஏக்கத்துடன் தன்னை உணரும் ரோமிக்கு பில்லி ஓர் ஆச்சரியமாகவே தென்படுகிறான்.
பில்லிக்கு யாதும் ஊரே.யாவரும் கேளிர்.அவன் வசிக்கத் தேர்ந்தெடுத்த இடம் கூட அமெரிக்காவின் இருட்பகுதி என்று சொல்லப்படும் ஹார்லெம் சேரிப்புறம்.அவனுடைய தோழமை சேரிவாசிகளான முன்னாள் குற்றவாளிகளுடன் என்பதெல்லாம் ரோமியை தர்மசங்கடப்படுத்துக்குள்ளாக்குகின்றன.சேரிவாசிகளுடன் பில்லிக்கு இருந்த அதே தோழமை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான துல்லாவுடனும்
இருக்கிறது. ரோமியை விட பில்லியை சரியாகக் கணிப்பவள் துல்லாதான். "பில்லி தனக்குள்ளே எதையோ உணர்கிறான்.அவனுக்கே அது நிச்சயமில்லை. ஒரு பூர்வகுடி மனோபாவம் அவனிடமிருக்கிறது.அதை அடக்கிவைக்கப் பார்க்கிறான்.ஆனால் அது அவனை மீறி ஒரு நாள் வெடிக்கும்.எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்"என்று அவள் சொல்லும் வாசகங்கள்தாம் நாவலின் போக்கைத் தீர்மானிக்கின்றன.
இந்தியாவுக்குத் திரும்பும் பில்லி தில்லிப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறான்.சராசரி நடுத்தர வர்க்கத்தின் அட்டவணை வாழ்க்கை அவனை சலிப்படையச் செய்கிறது.மனைவி மீனாவுடன் அன்றாடம் நடக்கும் சச்சரவுகள் எல்லா உறவுகளையும் வெறுக்கச் செய்கின்றன.அதில் ரோமியின் நட்பும் அடங்கும்.இந்த வாழ்க்கை ,இந்த உறவுகள் இவற்றுகெல்லாம் என்ன அர்த்தம் என்று குமைகிறான் பில்லி
பிஸ்வாஸ்.மனக் கொந்தளிப்பு உச்சமான ஒரு கட்டத்தில் காணாமற் போகிறான். அவனைத் தேட முயற்சிகள் செய்யப்படுகின்றன.பயனில்லை. காவல்துறை பில்லி பிஸ்வாஸ் வழக்கின் கோப்பை மூடிவிடுகிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு.ரோமி மாவட்ட ஆட்சியராகிருக்கிறான்.மத்திய இந்தியாவில் நிலவும் வறட்சியைப் பார்வையிடுவதற்காக ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்கிறான்.வழியில் பழங்குடியினரின் கூட்டம் ஒன்று அவனுடைய ஜீப்பை மறிக்கிறது.அரை நிர்வாணமான ஒருவன் ஜீப்பை மறித்து "பையா, உன்னால் என்னை அடையாளம் காண முடியாது. முடிகிறதா? "என்கிறான். ரோமி ஆச்சரியத்துடன் தெரிந்துகொள்ளுகிறான்."பில்லி".
கல்லூரிப் பணிக்காலத்தில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிலாசியாவின் ஆதிக் காமம் பில்லியை ஈர்த்தது.அவளுடைய உறவுதான் சாலமரக் காடுகள் அடர்ந்த மைக்காலாக் குன்றுகளில் வாழும் பழங்குடிகளிடையே அவனைக் கொண்டுவந்து சேர்த்தது.அந்த வாழ்க்கைதான் அவனுடைய கேள்விகளுக்குப் பதிலாக அமைந்தது. அங்கே இருந்தது பில்லியின் விடுதலை.
ரோமி - பில்லி ரகசிய சந்திப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பில்லியின் தந்தை மகனை மீண்டும் தேடுகிறார்.மூர்க்கமான அந்த வேட்டையில் ஒரு போலீஸ்காரனால் சுடப் படுகிறான் பில்லி பிஸ்வாஸ்.ரோமியின் கையில் கிடந்து உயிர் விடும் முன்பு "வேசி மகன்களே"என்ற கத்துகிறான்.அது தனக்கான வசை மட்டுமல்ல என்று புரிகிறது ரோமிக்கு.
பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கில் அருண்ஜோஷியின் வாழ்க்கைச்
சம்பவங்களும் விரவிக் கிடக்கின்றன.அவருடைய அமெரிக்கக் கல்விப்புல நினைவுகள், மனநல விடுதி அனுபவங்கள் நாவலைக் கட்டமைக்கின்றன.
சுய சரிதைத்தன்மையுள்ளகுறிப்புகள் இடம்பெறும் எழுத்துமுறை அருண்ஜோஷியின் எல்லா நாவல்களிலும் காணப்படுகிறது.அவருடைய முதல் நாவலான 'அந்நியனி'ல் வரும் முதன்மைப் பாத்திரம் சிந்தி ஓபராயும் பில்லியைப் போலவே ஆஸ்துமா நோயாளி. அமெரிக்கக் கல்வி பெற்றவன். இவர்கள் மட்டுமல்லாமல் அவரது மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸி'ல் வரும் ரத்தனும் ஆஸ்துமா நோயாளி.அருண்ஜோஷி தன்னுடைய
சுய சரிதைத்தன்மையுள்ளகுறிப்புகள் இடம்பெறும் எழுத்துமுறை அருண்ஜோஷியின் எல்லா நாவல்களிலும் காணப்படுகிறது.அவருடைய முதல் நாவலான 'அந்நியனி'ல் வரும் முதன்மைப் பாத்திரம் சிந்தி ஓபராயும் பில்லியைப் போலவே ஆஸ்துமா நோயாளி. அமெரிக்கக் கல்வி பெற்றவன். இவர்கள் மட்டுமல்லாமல் அவரது மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸி'ல் வரும் ரத்தனும் ஆஸ்துமா நோயாளி.அருண்ஜோஷி தன்னுடைய
சுயத்தை நோய் உட்பட, தனக்கிருக்கும் எல்லா குணங்களையும் கதை மாந்தர்களுக்கு வழங்கியிருக்கிறார்.
அருண்ஜோஷியின் முதல் நாவல் 'அந்நியன்'சிக்கலான பின்னல்களையும் அநேக பாத்திரங்களையும் கொண்டது.சிந்தி ஓபராயின் கதையை சராசரியான முக்கோணக் காதல் கதையாக இறங்கி விடாமல் செய்வது ஆசிரியர் மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றிய விசாரணை.
கென்ய- இந்தியத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்த சிந்தி ஓபராய் நான்கு வயதில் ஒரு விமான விபத்தில் பெற்றோர்களை இழந்து கென்யத் தெருக்களில் அநாதையாக விடப்படுகிறான்.உறவினர் ஒருவர் ஆதரவில் வளர்கிறான்.பிள்ளைப் பருவத்தின் அநாதைத்தனம் அவனுடைய குணத்தில் இயல்பாகவே ஓர் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.உறவுகளுடனோ இடங்களுடனோ அவனுக்கு எந்தவிதமான உணர்வு நெருக்கமும் இல்லை. எந்த பந்தத்திலும் சிக்கிக் கொள்ளாத முகமூடியாகவும் விலகலாகவும் இந்த குணத்தைப் பராமரிக்கிறான் சிந்தி.கல்லூரியில் அவனைக் கவர்கிற ஜூன் பிளைட் என்ற பெண்ணுடனான நெருக்கத்திலிருந்து முதலில் விலகவே
விரும்புகிறான்.சிந்தியின் ஆஸ்துமாத் திணறலைப் பார்த்துப் பரிதாபப்படும் ஜூன் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.எல்லாம் சுபமாக முன்னேறும் தருணம்.தில்லியிலிருந்து படிப்பதற்காக அமெரிக்கா வரும் பாபு கெம்கா என்ற பணக்கார வீட்டுப் பையன் அறிமுகமாகிறான்.பாபுவுக்கு அந்தச் சூழல் அந்நியமானது.நிலைகொள்ளாமல் தடுமாறுகிறான்.அவனுக்கு உதவும் சிந்தி ஓபராய் ஜூனுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான்.அறிமுகம் பின்னர் காதலாக மலர்கிறது.திருமணமும் நிச்சயயிக்கப் படுகிறது.ஆனால் குழப்பங்களால் ஆட்டுவிக்கப் படும் பாபு தனக்குப் பொருத்தமானவனல்ல
என்று உணர்ந்து மறுபடியும் சிந்தியிடம் நெருக்கமாகிறாள்.பாபு ஓடும் காரின் முன் விழுந்து தற்கொலைசெய்துகொள்கிறான்.நொறுங்கிப் போகிறாள் ஜீன். ஓபராயின் இறுக்க முகமூடி தளர்கிற முதல் கட்டம்.ஜூனை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறான் ஓபராய். தீர்மானம் செயலாவதற்குள் பாபு மூலம் தரித்த கருவைச் சிதைக்க முயற்சிக்கும் ஜூன் இறந்துவிடுகிறாள். 'வேதனைகளுக்கு முடிவே கிடையாது.நன்மைக்கும் தீமைக்குமான
போராட்டத்துக்கு முடிவே கிடையாது'என்று யோசிக்கிறான்.சிந்தி ஓபராய்
வாழ்க்கைச் சூழலுடன் மிக அந்நியமானவனாக உணர்கிற இந்தத் தருணங்களுடன் நாவலின் முதல் பகுதி நிறைவடைகிறது.தன்னை ஒரு வெளியாளாக அல்லது அநந்நியனாகவே கருதும் ஓபராய் வேர்களைத் தேடி இந்தியாவுக்கு வருவது இரண்டாம் பகுதி.இங்கும் அவன் ஓர் அந்நியன். 'என்னுடைய அந்நியத்தன்மை என்னுடனேயே தொடர்ந்து வருகிறது.நான் எங்கே போனாலும் அதைக் களைய முடிவதில்லை'என்பதுதான் அவனுடைய ஆளுமைச் சிக்கல். இந்த அந்நியத்தன்மையிலிருந்து அவன் விடுபடும் மையத்தை நோக்கி நகர்கிறது நாவல்.பாபுவின் தகப்பனாரான கெம்காவின் தொழில் சாம்ராஜ்ஜியம் வருமான வரிச் சிக்கல் காரணமாகத் தள்ளாடுகிறது.கெம்கா பொருளாதார முறைகேடுகளுக்காகச் சிறையிலடைக்கப் படுகிறார்.வீழ்ச்சியடைந்த அந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை இரண்டு நோக்கங்களுக்காக காப்பாற்றி நிமிர்ந்துகிறான் ஓபராய்.ஒன்று:
தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது.இரண்டு:பாபுவின் சகோதரி ஷீலாவின் அன்புக்கு இணங்குவது.இவற்றின் மூலம் தன்னுடைய அந்நியத்துவத்திலிருந்து மீள முயற்சிக்கிறான்.நாவல் முடிந்த பின்னும் தொடர்வது அதன் கதையல்ல;புகலிட வாழ்க்கையின் அந்நியத்தன்மை.அது தரும் கலாச்சார அதிர்ச்சிகள்.சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய வாழ்வின் இந்த அம்சங்களை முதலில் படைப்புக்குப் மையமாக அருண்ஜோஷி யோசித்திருந்தார் என்பதுதான் வாசகனைக் கவர்கிறது.
ஜோஷியின் மூன்றாவது நாவல் அப்ரெண்டிஸ் அவரது முதலிரண்டு நாவல்களின் தொடர்ச்சியும் விலகலும் கூட.முந்தைய இரு நாவல்களில் முதன்மைப் பாத்திரங்கள் தங்கள் இருப்பை பாவ மன்றாட்டுத் தொனியில் (Confession)அணுகியவர்கள்.அப்ரெண்டிசின் மையப்பாத்திரமான ரத்தன் ரதோட் பாவப் பரிகாரத்தில் ஈடுபட்டு இருப்புக்கு நியாயம் தேடுகிறான்.
வேலை தேடி தில்லிக்கு வருகிறான் ரத்தன்.அலைகிறான்.ஒன்றும் கிடைப்பதில்லை.தீவிர அலைச்சலுக்குப் பிறகு ராணுவத் துறையின் பிரிவில் தற்காலிகக் குமாஸ்தா வேலை கிடைக்கிறது.அதை நிரந்தரப்படுத்திக் கொள்வதற்காக மேலதிகாரியின் மகளைத் திருமணம் செய்துகொள்ளுகிறான். உத்தியோகத்தில் உயர்வதற்காக எந்த சமரசத்துக்கும் அவன் தயார்.நிழல் உலக வியாபாரியான ஹிம்மத் சிங்கிடமிருந்து கையூட்டி வாங்கிக் கொண்டு
தரம் குறைந்த ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் அனுமதிக்கிறான். (போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் புதியதல்ல;பழைய மரபின் தொடர்ச்சிதான் போலிருக்கிறது). இந்திய சீனப் போரில் அந்தத் தளவாடங்கள் பயன்படுத்தப் பட்டு ஏராளமான இந்தியச் சிப்பாய்கள் இறக்கிறார்கள்.பொது மக்கள் விசாரணை கோருகின்றனர்.அரசியல் கட்சிகள் ரத்தனைக் கைகழுவி விடுகின்றன.அவன் பலியாடாகிறான்.விசாரனையில் முறைகேட்டை ருசுப் படுத்தும் ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுதலை அடைகிறான். போர் முனையிலிருந்து திரும்பும் ரத்தனின் பால்ய நண்பரான பிரிகேடியர் இந்த முறைகேட்டினால் ராணுவத்திலிருந்து நீக்கப்படுகிறார்.அவர்தான் அந்தத் தளவாடங்களைப் பயன்படுத்தியவர். அவருக்கு அவை காயலான்கடைச் சரக்கு என்று புரியாமல்போனதுதான் குற்றம். தவறை ஒப்புக்கொள்ள ரத்தன் முன்வந்தால் பிரிகேடியர் காப்பாற்றப்படலாம்.அப்படிச் செய்வது தன்னுடைய அந்தஸ்தைக் கவிழ்த்து விடுமென்று தயங்குகிறான் ரத்தன்.அதற்குள் பிரிகேடியர் தற்கொலை செய்துகொள்கிறார்.பாவச் சுமை தாளாமல் குமையும் ரத்தன் கோவில் வாசலில் பக்தர்களின் காலணிகளைத் துடைக்க அமர்கிறான்.கர்மவினை
தீர்க்க கடவுளின் பயிற்சிப் பணியாளன்- அப்ரெண்டிஸ்- ஆகிறான்.
அருண்ஜோஷியின் நாவல்களில் இந்தியமனம் அதன் கலாச்சார அடையாளங்களுடன் வெளிப்படும் நாவல் அப்ரெண்டிஸ்.பகவத் கீதையின் உபதேசங்கள் தீவிரமாகவும் நையாண்டியாகவும் அலசப்படுகின்றன.ஆசிரியர் கீதையைப் போற்றுகிறாரா விமர்சிக்கிறாரா என்று கண்டுபிடிப்பது சுவாரசியமான ஆட்டம்.
'கடைசிச் சுழல்வழி'நாவலில் அருண்ஜோஷி கூடுதலான இந்தியக் குறிப்பீடுகளுக்கு இடமளிக்கிறார்.கதாநாயகன் சோம் பாஸ்கர்.சூரியனும் சந்திரனும் இணைந்த பெயர்.நாயகி அனுராதா.இந்திய மரபுப்படி ஒரு நட்சத்திரம்.கதைப்படி ஒரு சினிமா நட்சத்திரம்.
தந்தையை இழந்த சோமுக்கு அவரது சொத்துக்கள் கிடைக்கின்றன. அவனுக்கு மனைவியும் இருக்கிறாள்.கீதா.(பகவத் கீதை?).முன்னால் சினிமா நட்சத்திரமான அனுராதா அவனைக் கவர்கிறாள்.'அவள் ஒரு சமுத்திரம் போல.அவளுடைய ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது'என்கிறான்.அந்த ஆழத்தைக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறான்.
அவளும் கணவன் அஃப்தாபும் வசிக்கும் சுழல்வழிகளுள்ள வீடு இருப்பின் பொறியாகவே சோமுக்குப் படுகிறது.அனுராதாவின் வசீகரமும் ஈர்ப்பும் சோமைப் பித்துக்கொள்ளச் செய்கின்றன.பித்து முற்றி மாரடைப்பில் விழுகிறான் சோம்.அவ்வளவுதான் கதை தீர்ந்தது என்று குடும்ப டாக்டர்.கே. கைவிரித்த பிறகும் ஆச்சரியகரமாக மீள்கிறான் சோம். அனுராதா எந்த தடயமும் இல்லாமல் காணாமற் போகிறாள்.அவளைத் தேடுவதற்காக
சோம் கொடுக்கும் விலை முட்டாள்தனமாக அதிகம்.அஃப்தாபின் நொடித்துப் போன வியாபாரப் பங்குகளை வாங்குகிறான்.கடைசியில் ஒரு மலைக் கோவிலில் அவளைப் பார்க்கிறான்.'நீ உயிருடன் இருக்கவேண்டும் என்பதற்காக உன் காதலைத் துறந்துவிட்டேன்'என்று அனுராதா சொல்லுவதை எரிச்சலுடன் பெருமிதத்துடனும் ஏற்றுக்கொள்கிறான்.
மீண்டும் அவள் காணாமற் போகிறாள்.அவளைத் தேடி சுழல்வழிகளுள்ள அவள் வீட்டை அடைகிறான்.அந்த புதிர் வழியின் மையத்தில் அனுராதாவின் சடலம் கிடக்கிறது. தற்கொலையா?கொலையா? தன்னுடைய கேள்விகளையும் அவளைப் பற்றிய நினைவு களையும் ஒரு பிரார்த்தனைபோல சொல்லிக் கொண்டு நிற்கிறான் சோம் பாஸ்கர்.
அருண்ஜோஷியின் நாவல்களில் சிக்கலான வடிவமுடைய நாவல் இது. காமம், வேட்கை,மனமுறிவு,வன்மம் என்று உணர்வின் முடிவற்ற சுழல்வழிகளில்
மனிதர்கள் உழல்வதனால் இந்த வடிவமும் இருளும் வாய்த்திருக்கலாம்.ஒரு வகையில் உருவகத்தன்மை கொண்ட படைப்பு கூட.ஜோஷியின் அடுத்த நாவலான 'நகரமும் நதியும்'வாசிக்க நேர்ந்தபோது 'கடைசி சுழல்வழி'யில் அதன் வடிவ ஒத்திகை தென்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டஅருண்ஜோஷியின் நாவல் 'நகரமும் நதியும்'.சல்மான் ரஷ்திக்கு முற்பட்டகாலப்பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்களில் இந்த நாவலுக்கு பரீட்சார்த்தமான இடமுண்டு.சரியான பொருளில் புதிய புனைவெழுத்தின் சாயல்கள் அருண்ஜோஷி விட்ட இடத்திலிருந்து ஆரம்பமாயின என்பது பொருந்தும்.
நகரமும் நதியும் நாவலில் இடம் பெறுவது நமக்குத் தெரிந்த எல்லா நகரங்களுந்தான். நதியும் நாமறிந்த நதிகள்தாம்.நகரத்தின் அதிபதியான மகா அதிகாரி (Great Master) வம்சாவழியாக நகரத்தை ஆட்சி செய்யும் உரிமை பெற்றவர்.ஒரு நாள் அதிகாலை கெட்ட கனவு கண்டு எழுகிறார். ஆஸ்தான ஜோதிடர்கள்,முகஸ்துதி பாடும் அமைச்சர்கள் எல்லாரையும் வரவழைத்து ஆலோசனை நடத்துகிறார்.அவருடைய ஆட்சியை பலப்படுத்த
ஒரே வழி நகரத்தின் இன்னொரு துருவமான ஏழைப் படகோட்டிகளின் அனுதாபத்தைப் பெறுவது. அவர்களை குஷிப்படுத்தப் பார்க்கிறார் மகா அதிகாரி. படகோடிகள் அவருடைய பசப்பலுக்கு மயங்க மறுக்கிறார்கள்.அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் தண்டனைகள் விதிக்கப் படுகின்றன.படகோட்டிகள் கூட்டம் கூட்டமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.வன்முறைக் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.மொத்தமும் நாசமாகின்றன.கொந்தளித்து எழும் நதியும் ஒரு வார காலம் ஓயாது பெய்யும் மழையும் நகரத்தை மூழ்கடிக்கின்றன. அந்தப் புராதன நகரத்தில் இனி எதுவும் மிச்சமில்லை.அந்தச் சிதிலங்களின் மீது புதிய நகரம் நிர்மாணிக்கப்படும்.அதுவும் பழையதுபோலவே புதிய பெயர்கொண்ட புதிய மகா அதிகாரிகளுக்கு ஆட்சிப் பொருளாகலாம் என்ற அங்கதத்துடன் நாவல் நிறைவு பெறுகிறது.அழிந்து போன நகரத்தில் உயிரோடு எஞ்சிய அநாமதேயன் மட்டும் புதிய தொடக்கத்தின் பிரதிநிதியாக நதியில் மிதந்துவரும் தெப்பத்தில் ஏறுகிறான். மனித இனத்தின் பயணம் தொடர்கிறது.
நவீன யுகத்தின் நையாண்டி;அரசியல் மோகத்தின் உருவகம்; வரலாற்றின் மீதான ஓர் எழுத்தாளனின் பதிவு என்று பல முகங்களை இந்த நாவலில் காணலாம்.மகா அதிகாரி என்ற பாத்திரம் அதிகாரத்தை நிலை நிறுத்த விரும்பும் ஏகாதிபத்தியமோ, நாஜிசமோ, எதுவாகவும் இருக்கலாம். ஸ்டாலினோ, ஹிட்லரோ, இந்திரா காந்தியோ எவராகவும் இருக்கலாம்.
அருண்ஜோஷியின் பிற நாவல்களிருந்து கதை மையத்தில் வேறுபட்ட நாவல் 'நகரமும் நதியும்' .மற்ற நாவல்கள் தனி மனித இருப்பைப் பற்றிய விசாரணையாக அமைந்தவை. இந்த நாவல் ஒரு குடியுரிமைச் சமூகத்தின் இருப்பைப் பற்றியது.அதற்கு நேரும் அபாயங்கள் பற்றியது.சல்மான் ரஷ்திக்கு 'மிட் நைட் சில்ட்ரன்'நாவல் மூலம் கிடைத்த பிரபலம் அருண்ஜோஷியின் இந்த நாவலுக்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனத்தை
பறித்தது என்றும் கருதப்படுகிறது. தன்னுடைய எழுத்துக்களையோ எழுத்தாளன் என்ற தகுதியில் தன்னையோ முன்னிருத்திக்கொள்ள விரும்பாத அருண்ஜோஷியின் சுபாவம் காரணமாக இருக்கலாம்.
@
இலக்கிய வாசிப்பு தீவிரமாகத் தொடங்கிய கால அளவில் அறிமுகமான அருண் ஜோஷியின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். அநேகமாக அவருடைய எல்லா நாவல்களையும் பத்து கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பையும்.கால் நூற்றாண்டுகளுக்கு முந்தைய அந்த வாசிப்பில் ஓர் இனம் புரியாத ஈர்ப்பை மட்டுமே பெற்றிருந்திருக்கிறேன். வாசிப்பின் வழிகள் வேறு திசைகளுக்குத் திரும்பியபோது அந்த ஈர்ப்பு மறைந்து போனது.அருண்ஜோஷி என்ற எழுத்தாளரை நானும் மறந்தேன்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்கள் சிலவற்றை வாசிக்க விரும்பினேன். சில நாவல்கள் நான் இதுவரை கொண்டிருக்கும் கருத்தை மெய்ப்பித்தன.ஆங்கிலத்தை விடவும் தரமும் ஆழமுமான படைப்புகள் மாநில மொழிகளில்தான் உருவாகின்றன என்ற பாரபட்சமான
அபிப்பிராயம் மேலும் வலுவானது.அப்படி வாசிக்கத் திரட்டிய நாவல்களில் அருண் ஜோஷியின் நாவல்களும் இருந்தன.மறு வாசிப்பில் அவை புதிய பொருள்கொண்டு துலங்கியது ஓர் இலக்கிய அனுபவம்.ஒவ்வொரு நாவலும் ஒன்றுக்கொன்று வேறு பட்டதாகத் தெரிந்ததும் அதன் இன்னொரு அம்சம்.
அருண்ஜோஷியின் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு கூறல்முறையில் அமைந்தவை. முதல் நாவலான 'அந்நியன்'மையப்பாத்திரமான சிந்தி ஓபராயின் தன்மைக்கூற்றாக எழுதப்பட்டது.பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கு நாவல் பில்லியின் நண்பன் ரோமியின் விவரிப்பாக அமைகிறது.மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸ்'ஒரு தனி மொழியின்
வடிவம் கொண்டது.முதன்மைப் பாத்திரமான ரத்தன் ராதோர் யாரென்று வெளிப்படுத்தப் படாத ஒருவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மொழியில் தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறான்.கடைசி சுழல்வழி மையப்பாத்திரத்தின் கூற்றாக இருந்தாலும் ஓர் உருவகத்தன்மையின் புதிர் மொழியில் சொல்லப்படுகிறது.'நகரமும் நதியும்'நாவலின் கதையாடல் அநாமதேயன் என்ற பாத்திரத்துக்கு அவனுடைய குரு மகா யோகேஸ்வரர்
சொல்லுவதான வடிவம் கொண்டது.இவை எழுதப்பட்ட காலப் பகுதியை யோசிக்கும் போது ஓர் எழுத்தாளர் இத்தனை வகைகளைக் கையாண்டிருப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது.
கதைச் சட்டகத்தில் பொருத்திஅருண்ஜோஷியின் நாவல்களை இங்கே முன் வைத்திருப்பது அநீதி என்று புரிகிறது.ஏனெனில் நாவல் கதையல்லவே.அருண்ஜோஷியின் நாவல்களில் கதையம்சம் ஒரு தோராய வடிவம் மட்டுமே. மனித இருப்பின் கேள்விகளை விசாரிப்பதுதான் அவற்றின் நோக்கம். மேற்கத்திய எக்சிஸ்டென்ஷியலிச எழுத்தாளர்கள் எழுப்பிய கேள்விகளை அருண்ஜோஷி இந்தியப் பின்னணியில் எழுப்பியிருக்கிறார். மனிதனின் இருப்புக்கு என்ன பொருள்?உறவுகளின் அர்த்தம் என்ன?பொருட்களின்
பின்னால் மனிதன் நடத்தும் வேட்டையின் விளைவு என்ன?அதிகாரம்மனிதனை என்னவாக மாற்றுகிறது? - காலங்காலமாக நிமிரும் இந்த அடிப்படையான கேள்விகள்தாம் அவருடைய அக்கறைகள்.மனிதனின் விதி பற்றிய அவருடைய விசாரங்கள்தாம் படைப்புகளின் மையம்.இவற்றுக்கு ஓர் இந்திய மனம் கண்டடைகிற பதில்களை அருண்ஜோஷியிடம்
பார்க்க முடிகிறது.அந்த பதில்கள் மேற்கத்திய எக்சிஸ்டென்ஷியலிசஎழுத்தாளர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகின்றன.அவர்களைப் பொருத்தவரை மனித இருப்பு ஓர் அபத்தம். அர்த்தமில்லாதது.ஜோஷிக்கோ அது ஓர் தேடல்.தன்னை அறிந்து கொள்ள மனிதன் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணம்.இந்தக் கருத்தாக்கங்களின் அடிப்படையில் அருண்ஜோஷி இந்து தத்துவங்களை வலியுறுத்தியவராகக் கருதப்படுகிறார்.ஓரளவுக்கு அது உண்மையாகவும் இருக்கலாம்.ஆனால் அவருடைய முதன்மையான பிரச்சனை மனிதனின் இருப்பையும் இருப்பின் அறத்தையும் சார்ந்தது.''மனிதனின் செயல் அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்,எனவே ஒருவர் பொறுப்பற்ற இருப்பைத் தொடரமுடியாது.ஏதாவது ஒரு புள்ளியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது''என்பது அவருடைய பார்வை.
பதிற்றாண்டுகளின் இடைவெளிக்குப் பின்பு அருண்ஜோஷியின் நாவல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியபோது அவை வாசிப்புக்கு உகந்தவையாகவே இருந்தன.அவர் மையப்ப டுத்தி யிருந்த சில கேள்விகள் இன்றும் பொருந்தக் கூடியவை.உலகமயமாக்கலின் விளைவாக நாம் இழந்துகொண்டிருக்கும் மானுட குணங்களைப் பற்றிய விவாதங்களின் சாயலை, பாலியல் உறவுகளின் சிக்கல்களை, சுற்றுச் சூழல் நசிவை,ஆன்மீக வறுமையை,
அரசியல் பகடையாட்டங்களை இன்றைய அர்த்தத்தில் இந்தப் படைப்புகளில் காண முடிகிறது.கேள்விகள் நிரந்தரமானவை.பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. கேள்விகளின் நிரந்தத்தன்மைதான் காலம் கழிந்தும் அருண்ஜோஷியை நிகழ்காலத் தேவையுள்ளவராக எனக்குத் தோன்றச்
செய்திருக்கிறது.
@
↧
மொழிபெயர்ப்பு: சாதனைகளும் சவால்களும்
அனைவருக்கும் வணக்கம்.
மொழிபெயர்ப்பு தொடர்பான இந்தக் கருத்தங்கில் தலைமையுரை நிகழ்த்தத் தகுதியானவன்தானா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இலக்கிய ரீதியிலான அறிமுகப்படுத்துதல்களில் எனக்கு மிகுந்த சங்கோஜத்தை ஏற்படுத்துவது மொழிபெயர்ப்பாளர் என்று சொல்லப்படுவதுதான். அந்தத் தொழிற்பெயர் கொண்டிருக்கும் அர்த்தத்தில் நான் மொழிபெயர்ப்பாளனே அல்ல; தொழில்முறைறாக மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவனும் அல்ல.
இருந்தும் கணிசமான பக்கங்கள் மொழி பெயர்த்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் சொந்தப் படைப்பைவிட நான்கு மடங்கு அதிகப் பக்கங்கள். மலையாளத்திலிருந்தும் ஆங்கிலம் வழியாகவும். இந்த அளவு என்னையே மலைக்க வைக்கிறது. இவை எல்லாமும் வாசகன் என்ற நிலையில் மேற்கொணடவை. நான் விரும்பும் படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்த உபாயம் இவை. ஒரு படைப்பை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உசிதமான வழி அதை மொழிபெயர்ப்பதுதான் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையை ஒரு அந்தரங்க மகிழ்ச்சியாகவே வைத்திருந்தேன். மகாஸ்வேதா தேவியின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த காயத்ரி ஸ்வோபிக் தனது கட்டுரை ஒன்றில் இதே வாசகத்தைச் சொல்லியிருந்தார். அது அந்தரங்க மகிழ்ச்சியைப் பொது ஆனந்தமாக உணர வைத்தது.
மொழிபெயர்ப்பைப் பற்றிச் சொல்லப்பட்டவற்றில் என்னை மிக அதிகமாகக் கவர்ந்த வாசகம் ஒன்று இருக்கிறது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் மொழிபெயர்ப்பாளரான கிரகோரி ராபஸா சொன்னார். ‘மனிதன் ஒரு மொழியைப் பேசவும் புரிந்துகொள்ளவும் ஆரம்பிக்கும் போதே மொழி பெயர்க்கவும் ஆரம்பிக்கிறான்’. இந்த அவதானிப்பில் மொழிபெயர்ப்பின் அடிப்படையே இருப்பதாகச் சொல்லலாம். நாம் ஒன்றை முதலில் உணர்வது ஒரு கருத்தாக - concept - ஆகவே அதைப் புரிந்து கொள்ளும்போதே அது மொழியாகச் சிந்தனையில் சேமிக்கப்பட்டு விடுகிறது. ஆக, நாம் மொழி என்று சொல்வது கருத்தும் மொழியும் இணைந்த ஒன்றையே. நவீன மொழிபெயர்ப்புக் கொள்கை சொல்வது- மொழிபெயர்ப்பின் போது இடம்பெயர்வது வார்த்தைகள் சார்ந்த மொழி மட்டுமல்ல; அந்த வார்த்தைகளின் கருத்தும்தான். ஒரு மொழியிலிருந்து ஒரு படைப்பை இன்னொரு மொழிக்குப் பெயர்க்கும்போது நிகழ்வது மொழி மாற்றம் மட்டுமல்ல; கருத்து மாற்றமும்கூட. உதாரணமாக, மலையாளத்திலிருந்து ஒரு படைப்பைத் தமிழுக்குக் கொண்டு வரும்போது நான் கொண்டு வருவது அந்த மொழியை மட்டுமல்ல; அந்த மலையாளத் தன்மையையும் சேர்த்துத்தான்.
அதனாலேயே எந்த மொழிபெயர்ப்பும் அது வந்து சேர்ந்த மொழியின் படைப்பாக ஆவதில்லை. ஆகவும் முடியாது என்று தோன்றுகிறது. அதனாலேயே ஒரு மொழிபெயர்ப்பு தமிழிலேயே எழுதப்பட்டதுபோல இருக்கிறது என்ற பாராட்டு வாசகத்தின் மீது நம்பிக்கை வைக்க முடிவதில்லை. இந்த அம்சம் பற்றி நண்பர்கள் பேசுவார்கள் எனறு நம்புகிறேன்.
தமிழிலக்கிய வரலாற்றில் மொழிபெயர்ப்புக்கு நீண்ட அத்தியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் சில நூற்றாண்டுகள் இருக்கலாம். குறிப்பாக, ஆங்கிலக் கல்வி பரவலான பிறகே மொழி பெயர்ப்பு கவனத்துக்குரிய துறையாக உருப்பெற்றிருக்கிறது. ஆனால் மொழிகளுக்கு இடையிலான கொள்வினை- கொடுப்பினைகள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. பக்தி இலக்கியத்தில் பரவலாக அந்தச் சான்றுகளைப் பார்க்க முடியும். பக்தி இலக்கியம் உருவாக்கிய தன்னுணர்ச்சிப் பாடல்கள் - இந்திய மொழிகள் அனைத்திலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அடிப்படை கொண்டவை. பக்தி இயக்கத்தின் ஆதார சுருதி ஒன்றுதான் என்பதால் அந்தப் பொதுமை உருவாகி இருக்கலாம். ஆனால் கவிதைப் பொருளிலும், கூறுமுறையிலும் தென்படும் கூறுகள் மொழிபெயர்ப்பின் சாத்தியங்களை எடுத்துக் காட்டுகின்றன.
நவீன காலகட்டம்தான் தமிழில் மொழிபெயர்ப்பை வளப்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்னும் மொழிபெயர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை இன்று நாம் கருதும் அர்த்தத்திலான மொழிபெயர்ப்புகள் அல்ல; தழுவல்கள்.
தமிழில் நவீனமான எல்லா முயற்சிகளும் பாரதியிடமிருந்தே தொடங்கு கின்றன என்ற பக்திபூர்வமான எண்ணம் எனக்கு இருக்கிறது. மொழி பெயர்ப்பைப் பொறுத்தும் அந்த எண்ணமே இருக்கிறது. ரவீந்திரநாத் தாகூரின் பஞ்ச வியாசங்களுக்கும் ரவீந்திரர் கதைகளுக்கும் பாரதி செய்த மொழி பெயர்ப்புகள்தான் நவீனத் தமிழில் முன்னோடி முயற்சிகள் என்று பார்க்க விரும்புகிறேன். மொழிபெயர்ப்பாளனின் சிக்கலை முதன்முதலில் முன் வைத்தும் பாரதிதான் என்றும் தோன்றுகிறது. சரியான மொழி பெயர்ப்புக்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகவே பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘வந்தே மாதர’ கீதத்துக்கு பாரதி கொடுத்த இரண்டு தமிழாக்கங்களைப் பார்க்கலாம்.
நவீனத் தமிழின் முதன்மையான எல்லாப் படைப்பாளிகளும் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டவர்கள்தான். புதுமைப்பித்தன் முதல் அநேகமாக எல்லா எழுத்தாளர்களும் குறைந்தபட்சம் ஒரு மொழிபெயர்ப்பையாவது செய்திருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கக்கூடிய சொற்ப வருவாய்க்கா கவும் தங்களைக் கவர்ந்த படைப்புத் தமிழ்வாசகனுடன் பகிர்ந்து கொள்ளவும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். புதுமைப்பித்தன் தமது சொந்தப் படைப்புகளின் மொத்தப் பக்கங்களுக்கு ஈடாகவோ, கூடவோ மொழிபெயர்ப்புப் பக்கங்களைக் கொடுத்திக்கிறார். அவருக்கு இணையாக மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியவர் க.நா.சு. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்தவை பெரும்பாலும் சிறுகதைகள் என்பதால் அதன் பாதிப்பைத் துலக்கமாகச் சொல்ல முடிவதில்லை. ஆனால் க.நாசு.வின் பங்களிப்பு நாவல் மொழிபெயர்ப்புகள். அதன் வீச்சை நம்மால் இனம்காண முடிகிறது. ‘அன்புவழி’ போன்ற நாவலின் பாதிப்பு இல்லை என்றால் வண்ணநிலவனின் நுண்உணர்வு வேறாக இருந்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
புதுமைப்பித்தன், க.நா.சு, வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி போன்ற எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியதன் காரணமாக எனக்குத் தோன்றுவது- தங்கள் உலகையும் வாசகனின் உலகையும் விரிவுபடுத்தத்தான்.
இதே காலகட்டத்தில் மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே இப்போது நாம் அறிந்திருக்கும் எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். சரத்சந்திரரை அறிமுகப்படுத்திய அ.கி. ஜயராமன், தாகூரை முன்வைத்த த.நா. குமார சாமி, த.நா. சேனாபதி, விபூதிபூஷன் வந்தோபாத்தியாயாவைக் கொண்டு வந்த ஆர். ஷண்முகசுந்தரம், காண்டேகரைத் தமிழ் இலட்சியவாத எழுத்தின் முன்னோடியாக முன்வைத்த கா.ஸ்ரீ.ஸ்ரீ இப்படி இன்னும் பலரைக் குறிப்பிடலாம். இதில் தம்மளவில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களாக அறிப்பட்டவர்கள்கூட மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே பின்னர் பேசப்பட்டார்கள் என்பது சுவாரசியமான முரண். ‘கன்யாகுமரி’ என்ற நேர்த்தியான கதைத் தொகுப்பின் ஆசிரியரான த.நா. குமாரசாமி இன்று கவனம் பெற்றிருப்பது மொழிபெயர்ப்பாளராக மட்டுமே. அவர் மொழி பெயர்த்த ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளுக்காகவே - 2தொகுதிகள் - நினைவு கொள்ளப்படுகிறார்.
நமக்குக் கிடைத்த மொழிபெயர்ப்புகள் நவீன இலக்கியத்தைக் கணிசமாகப் பாதிக்கவும் செய்திருக்கின்றன. புதுமைப்பித்தனின் கதைகளில் காணப் படும் மாப்பஸானியக் கூறுகள், அழகிரிசாமியின் கதைகளில் தெரியும் அந்தோன் செக்காவ் பாணியிலான அமைதி- இவற்றை அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
50-60கால கட்டங்களில் மிக அதிகமான மொழியக்கங்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் தனிப்பட்ட ஆர்வத்தககு அப்பால் நிறுவனங்களின் ஆதரவில் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. இடதுசாரி நூல்களுக்காக அல்லது கம்யூனிசப் பரப்புரைக்காக மாஸ்கோ அயல் மொழிப் பதிப்பகம் வெளியிட்ட மொழியெபர்ப்புகள் எந்த அளவுக்கும் கம்யூனிசத்தைப் பரப்பின என்பது ஆராய்ச்சிக்கு உரியது. ஆனால் தாஸ்தாயேவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் ஆன்டன் செக்காவும் தமிழ் வாசகர்களிடையே பரவலாக அறிமுகமானார்கள் என்பது நிச்சயம்.
ரஷ்யர்கள் பொது உடைமைப் பரப்புரைக்காகச் செய்த அதே காரியத்தை அமெரிக்க நிறுவனமான பேர்ள் பப்ளிகேஷன் முதலாளித்துவத்தைப் பரப்புவதற்காகச் செய்தது. அமெரிக்க எழுத்தாளர்களான ஹெமிங்வேயும், காதரீன் ஆன் போர்ட்டரும் தமிழாக்கம் பெற்றார்கள். பேர்ள் பப்ளிகேஷன் வெளியீடாக வந்த மொழியாக்கங்களில் க.நா.சுப்ரமணியம் செய்த ‘குருதிப் பூக்கள்’ என்ற காத்தரீன் ஆன் போர்ட்டரின் தொகுப்பு இன்று வாசிக்கும் போதும் நேர்த்தியானது என்றே தோன்றுகிறது.
க.நா.சு. மொழிபெயர்ப்புகளைப் பற்றிச் சில சுவாரசியமான அவதானிப்பு களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மொழிபெயர்ப்புக்காக அவர் தேர்ந்தெடுத்த நூல்களின் வரிசை வியப்பளிப்பது. ஆங்கிலக் கல்வி மூலம் பரவலாகத் தெரியவந்த பிரபல எழுத்தாளர்களை அவர் எடுத்துக் கொள்ள வில்லை. மாறாக அவர் தேர்ந்தெடுத்து ஸெல்மா லாகர்லாஃப், நட் ஹாம்சன் போன்ற அன்று அறியப்படாத எழுத்தாளர்களையே அவர் எடுத்துக் கொண்டார். இந்தத் தேர்வு ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு முக்கியமானது. ஜார்ஜ் ஆர்வெல்லின் விலக்குப் பண்ணை, 1984ஆகிய நாவல்களையும் அவர் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு மொழி பெயர்ப்பாளன் சறுக்கும் இடங்கள் அவற்றில் உள்ளன. 1984நாவல் அடக்குமுறையைப் பற்றியது. சாதாரண மக்கள்கூட அதிகாரத்தின் இடைவிடாத கண்காணிப்பில் இருப்பதைப் பற்றியது. அந்த மொழி பெயர்ப்பில் அடிக்கடி இடம்பெறும் வாசகம். “Big brother is watching’ என்பது. இதை க.நா.சு. மொழிபெயர்த்திருந்தது. ‘முத்தண்ணா பார்த்துக்கெண்டு இருக்கிறார்’ எனறு.முகமற்ற அதிகாரத்தின் அடையாளம் ஆன “Big brother தமிழில் ‘முத்தண்ணா’வாக வரும்போது ஒரு மேட்டுக்குடி- உயர்சாதி வழக்காக மாறிவிடுகிறது.
மொழிபெயர்ப்பின் நுட்பம் படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவதல்ல; ஒரு பண்பாட்டுக் கூறையும் பெயர்ப்பது என்ற பாடத்தை இது உணர்த்துகிறது.
தேசிய அமைப்புகளான சாகித்ய அக்காதெமி, நேஷனல் புக் டிரஸ்ட் வாயிலாகப் பல இந்திய எழுத்தாளர்கள் தமிழுக்கு அறிமுகமானார்கள். குர் அதுல் அன் ஐதர், அதீன் பந்தோபாத்யாயா, பைரப்பா, வைக்கம் முகம்மது பஷீர் என்று பல பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த எழுத்துக்கள் எந்த அளவுக்கு நமது இலக்கியப் பார்வையையும் செயல் பாட்டையும் பாதித்திருக்கின்றன என்பதை இன்னொரு தலைப்பாக எடுத்துப் பேச வேண்டியிருக்கும். கொஞ்சம் தீவிர வாசிப்புடைய எந்த வாசகனும் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலைப் பற்றிச் சொல்லாமல் இருந்ததில்லை.
80-90களிலும் கணிசமான மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. இடதுசாரி இயக்கங்களின் தேவையை ஒட்டி மிக அதிகமான மொழி பெயர்ப்புகள் வந்த காலம் இது. அதே சமயம் புதிய த்துவக் கருத்துகளின் பின்புலம் சார்த படைப்புகளும் வெளிவ்நதன. குறிப்பாகச் சொல்ல வேண்டிய நூல். வெ. ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் - பிரெஞ்சிலிருந்து நேரடியான மொழிபெயர்ப்பில் - வந்த ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன்’ நாவல். அது செலுத்திய பாதிப்பு வலுவானது. தமிழில் மகத்தான நாவல்களில் ஒன்றான ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ மிகக் குறைந்த அளவிலாவது அந்நியனின் பாதிப்புக் கொண்டதுதான். அதே ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் வந்த ழாக் ப்ரெவரின் ‘சொற்கள்’ என்ற கவிதை நூல் மிக அழுத்தமான செல்வாக்கை ஏற்படுத்தியது. சங்கரராம சுப்ரமணியன், மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இந்தப் பாதிப்பை உணர்ந்து விட முடியும்.
90களிலும் கணிசமான மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. ஆனால் அந்தக் காலப்பகுதி படைப்புகளை விடக் கோட்பாடுகள் முதன்மை பெற்றிருந்த காலம். படைப்புகளை முன்னிறுத்திப் பேசுவதைவிடப் பெயர்களை உதிர்ப்பதில் சந்தோஷப்பட்ட காலம். பெரும்பாலான படைப்புகள் மொழி பெயர்ப்பாளன் தனது சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவும், உலக அளவில் பிரபலமான பெயர்களை எடுத்துப் போட்டுத் தோளை உணர்த்திக் கொள்ளவுமே மொழிபெயர்க்கப்பட்டன. காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் பெயர் ஒரு உதாரணம். வாசகனுக்கு மிகவும் இணக்கமான கதை சொல்லியான மார்க்கேஸ் மிகவும் மிரட்சியளிக்கக் கூடியவராகத் தமிழில் அவதாரம் எடுத்தார். இந்த மிரட்டல் மொழிபெயர்ப்புக்கான வாகர்களை இல்லாமல் ஆக்கின என்றே தோன்றுகிறது.
தகவல் தொடர்பில் ஏற்ற மாற்றங்கள், புதிய வாசகர்களின் வருகை, இவை போன்ற காரணங்கள் 2000க்குப் பின் மொழிபெயர்ப்பின் தேவையையும், சாத்தியங்களையும் விரிவாக்கியிருக்கின்றன. மொழிபெயர்ப்புகளின் பொற்காலம் என்று சொல்லப்பட்ட50-60களில் வெளிவந்ததைவிடப் பல மடங்குப் படைப்புகள் இந்த 14ஆண்டுகளில் வெளிவந்திருக்கின்றன என்று எண்ணுகிறேன். உலக அளவில் பேசப்பட்ட முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் இன்று மொழிபெயர்க்கப்படுகின்றன. விரைவாகவும் தமிழாக்கம் பெறுகின்றன. 1946இல் பிரெஞ்சில் வெளிவந்த காம்யூவின் ‘அந்நியன்’ 1981இல் அதாவது 35வருடங்களுக்குப் பின்பே தமிழில் வெளிவந்தது. ஆனால் 2006ஆண்டு நோபெல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் புத்தகம் 2010இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிறது.
இலக்கியம் சார்ந்தவன் என்று என்னைக் கருதிக் கொள்வதால் இலக்கிய மொழிபெயர்ப்புகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். பிற அறிவுத் துறைகளிலும் வணிகத் துறைகளிலும் மொழிபெயர்ப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அண்மைக் காலங்களில் கல்லூரியில் மொழிப் பாடங்களைக் கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை முன்பைவிட உயர்ந்திருக்கிறது என்பதை வைத்து இப்படிச் சொல்லப்படுகிறது.
இந்தப் பின்னணியில் மொழிபெயர்ப்புப் பற்றிய சில கருத்துகளைச் சொல்லலாம் என்று படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் மொழிபெயர்ப்பு ஏன் அவசியம்? இன்று உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. தனித்தனியானதாக இருக்கும்போதே ஒன்றுக் கொன்று இணைந்திருக்கிறது. அதே சயமம், நாடுகளும் மக்கள் திரள்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டும் நிற்கின்றன. மொழிபெயர்ப்பின் சாத்தியம் அவர்களை நெருக்கமாக்கலாம். நமக்குத் தெரியாத மொழியில் நாம் பார்க்க முடியாத இடங்களில் நாம் பழகியிராத பண்பாட்டில் நம்மை வைத்துப் பார்க்க மொழிபெயர்ப்பு உதவும்.
நமது வாழ்க்கையையே இன்னொரு கோணத்தில் பார்க்க உதவும். கடைசிப் பட்சமாக வாழ்க்கை என்பது என்ன? மனிதர்களைப் புரிந்து கொள்கிற, மனிதர் களுடன் உறவை மேம்படுத்திக் கொள்கிற ஒன்றுதானே. அதற்கான கருவியாக மொழிபெயர்ப்புகள் இருக்க முடியும்.
மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வாசகம். ’ஒரு மொழிப்பில் எது நழுவிப் போகிறதோ அதுதான் அசலான படைப்பு’ என்பது. திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்வி – ‘மொழிபெயர்ப்பாளன் யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும்?’
ஒரு மொழிபெயர்ப்பில் நாம் பார்ப்பது மூலத்தின் அச்சு அசல் பிரதி அல்ல. அப்படி ஒன்று சாத்தியமே அல்ல. ஒரு மலையாள நாவலை மலையாளமாகவே நில்லைநிறுத்த முடியும் என்றால் தமிழில் அதற்கு எதற்கு மொழிபெயர்ப்பு? ஆக, மொழிபெயர்ப்பு மூலமல்ல; அசல் அல்ல. மூலத்தைச் சார்ந்த இன்னொரு பிரதி மட்டுமே. தனது கவிதைகளை ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த அலெஸ்டர் ரெய்டிடம் பாப்லோ நெரூதா சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது. “எனது கவிதைகளை நீங்கள் உங்கள் மொழிக்கு மாற்ற வேண்டாம். அவற்றை உங்கள் மொழியில் மேம்படுத்துங்கள்.” மொழிபெயர்ப்பின் அடிப்படையான நோக்கமாக இதைக் கருதுகிறேன்.
மொழிபெயர்ப்பாளன் மூன்று நிலைகளுக்கு உண்மையாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான்.
1. மூல மொழிக்கு.
2. மூல ஆசிரியன் ஆளுமைக்கு.
3. மொழிபெயர்க்கப்படும் மொழியின் வாசகனுக்கு.
இந்த மூன்று நிலைகளும் மொழிபெயர்க்கப்படும் பிரதியை, படைப்பைப் பொருத்தே மாறுகின்றன.
1. சங்க இலக்கியப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளனின் விசுவாசம் அந்த மூலமொழிக்கு உரியது. ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்பை உதாரணமாகச் சொல்லலாம்.
2. வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகளை மொழிபெயர்க்கும்போது அவருடைய ஆளுமைக்கும் உண்மையாக இருக்க நேர்கிறது.
3. . ஆங்கிலம் வழியாக வந்த பிறமொழிப்படைப்புகளின் மொழியாக்கம் பெறும் மொழி – target language - வாசகனிடம் உண்மையாக இருக்கக் கோருகிறது.
எந்த மொழியெபர்ப்பும் இறுதியானதல்ல; முழுமையானதல்ல. ஒவ்வொரு மொழியிலும் சமகாலத்தை ஒட்டிப் புதிய மொழிபெயர்ப்புகள் தேவைப் படுகின்றன. 56களில் தமிழாக்கம் செய்யப்பட்ட தாகூரின் படைப்புகள் இன்றைய மொழியின் முன்னால் சோபை இழந்து போகின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் ஒரே நூலுக்குப் புதிய மொழிபெயர்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
தாஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமாசாவ் சகோதரர்க’ளுக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. கான்ஸ்டன் கார்னெட்டின் பிரசித்தமான மொழிபெயர்ப்பு போதாமைகள் நிறைந்த்து என்று கருதப்பட்டபோது டேவிட் மக்டஃப், டேவிட் மகார்ஷெக் ஆகியவர்களின் மொழிபெயர்ப்புகள் வந்தன. இந்த மொழிபெயர்ப்புகள் புழக்கத்திலிருக்கும்போதே இவை அவ்வளவு நவீனமான மொழியாக்கங்கள் அல்ல என்ற அபிப்பிராயம் சொல்லப்பட்டது. ரிச்சார்ட் பெவீர், லாரிஸ்கா வோலோ கோன்ஸ்கி இருவரும் மேற்கொண்ட புதிய மொழிபெயர்ப்பு வெளியானது. டால்ஸ்டாயின் அன்னாகரீனினாவும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. கான்ஸ்டன் கார்னெட்டின் மொழி பெயர்ப்பு அமெரிக்க வாசகர்களுக்கு உவப்பானதாக இல்லை என்று பேசப்பட்ட்து. ஜோயல் கார்மைக்கேல் அமெரிக்க ரசனைக்குத் தோதான மொழிபெயர்ப்பைச் செய்தார்.சற்று முன்பு குறிப்பிட்ட ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ நாவலுக்கும் ஆங்கிலத்தில் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. 1946 இல் வெளிவந்த ஸ்டூவர்ட் கில்பெர்ட்டின் மொழி பெயர்ப்பும் 1982 இல் வெளிவந்த ஜோசப் லாரெடோவின் மொழிபெயர்ப்பும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - 2012 இல் - இத்தாலிய எழுத்தாளர் அலெசாண்ட்ரோ பாரிக்கோவின் நாவல் ஒன்றை மொழிபெயர்த்தேன். ‘பட்டு’ என்ற நாவலை. இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1997 ஆம் ஆண்டு வெளியானது. கியூதோ வால்டுமானின் மொழியாக்கம் அது. வால்டுமான் இத்தாலி மொழியிலிருந்து முக்கியமான பல படைப்புகளை ஆங்கிலமாக்கம் செய்திருப்பவர். ஆனால் பட்டு நாவலுக்கு அவர் செய்த மொழியாக்கம் சிலாக்கியமானதல்ல என்று ஆசிரியர் கருத்துச் சொன்னதால் அதே ஆண்டு இன்னொரு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. ஆன் கோல்ட்ஸ்டெய்ன் செய்த இரண்டாவது மொழிபெயர்ப்புதான் திரைப் படத்துக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மொழி பெயர்ப்புகளின் தேவை காலத்துக்கு ஏற்ப மாறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டவே இவற்றையெல்லாம் குறிப்பிட்டேன்.
தமிழில் அப்படியான பார்வை இதுவரை இல்லை. அண்மைக்காலத்தில் ஓரிரு படைப்புகளுக்குப் புதிய மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. 1960களில் ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த ‘கிழவனும் கடலும்‘ நாவலுக்கு 2000ஆரம்பத்தில் எம்.எஸ். புதிய மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்தார். இரண்டையும் ஒப்பிட்டு வாசித்தபோது நமது மொழியின் நவீனத்துவம் புலப்பட்டது. இது ஒரு முக்கியமான அம்சம்.சமீபத்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமஸாவ் சகோதரர்கள்’ இரண்டு தமிழாக்கங் களைப் பெற்றிருக்கிறது. ஆங்கிலம் வழியாக வந்த பிரதியை ஒட்டிய புவியரசுவின் மொழிபெயர்ப்பு ஒன்று. ரஷ்ய மூல மொழியிலிருந்து அரும்பு சுப்ரமணியன் செய்திருக்கும் தமிழாக்கம் மற்றது. இரண்டையும் வாசித்துப் பார்ப்பது தாஸ்தயேவ்ஸ்கியை நெருங்கும் வழியின் நீளத்தைக் குறைக்கும் என்று தோன்றுகிறது. இதில் இன்னொரு அம்சமும் தெளிவாகிறது. படைப்புதான் முழுமையானது; முற்றானது. மொழிபெயர்ப்பு தொடர்ச்சியான மாறற்றங்களைக் கோருவது என்ற உண்மை.
மொழிபெயர்ப்புப் பணியின் சோகம்- அது ஒரு நன்றியில்லாப் பணி என்பது தான். மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்தால் எல்லாப் பெருமைகளும் மூல ஆசிரியனுக்கு கோளாறான மொழியாக்கம் என்றால் எல்லா அவமதிப்புகளும் மொழிபெயர்ப்பாளனுக்கு இந்த அபாய விளையாட்டில் மொழிபெயர்ப்பாளன் மிக எச்சரிக்கை கொண்டவனாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு மூலப் பிரதி ‘பொய்யாக’ - இந்த வார்த்தை விளதிமிர் நபக்கோவுடையது’ (கான்ஸ்டன் கார்னெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் false translation என்கிறார்- இருந்தால் பழி மொ. பெயர்ப்பாளனுக்கு புறக்கணிப்பு மூல- ஆசிரியனுக்கு.
மொழிபெயர்ப்பாளன் யார் என்ற கேள்விக்கு வெவ்வேறான பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு படைப்பின் பங்குதாரர் சக படைப்பாளி, மொழிகளின் இடைத்தரகன் என்று எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளரும் பதிப்பாளருமான மினி கிருஷ்ணன் சமீபத்தில் இந்தக் கேள்வியை எழுப்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மார்க்கேஸின் படைப்பு சிலாகிக்கப்படும்போது மொழிபெயர்ப்பாளரான எடித் கிராஸ்மன் மறக்கப் பட்டுவிடுகிறார். ஆனால் கிராஸ்மன் இல்லாமல் மார்க்கேஸ் இல்லை. அப்படியானால் மொழிபெயர்ப்பாளன் யார்? இரட்டையர் ஆடும் டென்னிஸ் பந்தயத்தில் ஒரு இரட்டையர் அணி வெற்றி பெறுகிறது. அந்த வெற்றி யாருக்கும் சொந்தமானது? இரண்டு பேருக்கும்தான். அதைப் போலத்தான் ஒரு மொழிபெயர்ப்பு இரண்டு பேரின் படைப்பாற்றலின் பகிர்வு. இருவரின் வெற்றி. ஒருவரின் வெற்றி வெளிப் படையாகத் தெரிகிறது. இன்னொருவரின் வெற்றி அந்தப் படைப்பின் வாயிலாகவே புரிந்து கொள்ளப் படுகிறது.
மொழிபெயர்ப்பு குறித்த அரங்கை இந்தக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த இலக்கியச் சுற்றம் நண்பர்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றி.
(காலச்சுவடு பதிப்பகமும் ஈரோடு இலக்கியச் சுற்றம் அமைப்பும் இணைந்து ஈரோட்டில் 2014 செப்டம்பர் 13 அன்று நடத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் கருத்தரங்கில் ஆற்றிய உரை)
↧
↧
அசோகமித்திரன் காலச்சுவடு ஜெயமோகன் அப்புறம் நானும்
நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட,
பற்றி எரிவது மேல்-
ஒரு கணம் எனினும்.
காலச்சுவடு செப்டம்பர் 2014இதழில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியானது. நேர்காணலில் அசோகமித்திரன் குறிப்பிட்டதாக இடம்பெற்ற சில தகவல்கள் பிழையானவை என்று சுட்டிக் காட்டி க்ரியா ராமகிருஷ்ணன், கவிதா பதிப்பக உரிமையாளர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் மறுப்புக் கடிதங்கள் எழுதி இருந்தனர்.அவை அக்டோபர் இதழில் வெளியிடப் பட்டன. அசோகமித்திரனும் சில தகவல்களுக்கு மறுப்புத் தெரிவித்து எழுதியிருந்தார். அந்தக் கடிதமும் அக்டோபர் இதழிலேயே வெளியானது.
ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல் எழுத்துப் பிரதியாக மாறிய நிலையிலும் வடிவமைப்பின் போதும் ஏற்பட்ட மாற்றங்களில் சில பிழைகள் நேர்ந்தன. அசோகமித்திரனின் 'மானசரோவர்'நாவல் சாவி வார இதழில் தொடராக வெளிவந்தபோது அசோகமித்திரன் எழுதிய கைப் பிரதியை இதழ் அலுவலகத்துக்குக் கொண்டு சேர்த்த அதன் துணை ஆசிரியர் ரவி பிரகாஷின் பெயர் ரவிபிரசாத் என்று அச்சேறியிருந்தது. ’ஜே.ஜே: சில குறிப்புகள்’நாவலைக் குறிப்பிடும் இடத்தில் 'கோட்டாறில் யுத்தம் நடந்ததா'என்று நாவலில் வரும் கேள்வி 'குளச்சலில் யுத்தம்'என்று பிழையாக வந்திருக்கிறது.
இவையெல்லாம் தவிர்த்திருக்கக் கூடிய பிழைகள். எனினும் ஒரு இதழ் உருவாக்கத்தில் தவிர்க்க முடியாமல் ஊடுருவி விடும் பிழைகளும் கூட. பிழைகள் ஏற்படுவதும் அவை சுட்டிக் காட்டப்படும்போது திருத்தங்கள் அச்சியற்றப்படுவதும் இதழியலில் பொதுவான நடைமுறை. அந்த அடிப்படையிலேயே அடுத்த இதழில் மேற்சொன்ன கடிதங்கள்வெளியிடப் பட்டன. தவிர்க்க இயலாமல் நேர்ந்த இந்தப் பிழைகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக, நேர்காணலை மேற்கொண்டவன் என்ற நிலையில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
அசோகமித்திரன் நேர்காணல் தொடர்பாக எழுத்தாளர் திரு.ஜெயமோகன் தனது இணையtத்தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார். 'அசோகமித்திரனை அவமதித்தல்'என்றதலைப்பில் அக்டோபர் 13 ,2014அன்று பதிவேற்றப்பட்டிருக்கும் குறிப்பில் தன்னுடைய அபார ஞான தரிசனத் தாலும் தன்னிகரற்ற அற நோக்காலும் கண்டடைந்த ஊகங்களையும்கற்பனைகளையும் பொய்களையும் அவிழ்த்து விட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பலராலும் எதிர்வினைகள் நடத்தப்பட்டன. அழுக்காறும் அவதூறுகளும் தன்னைத் தூக்கிக் காட்டிக்கொள்ளும் விளம்பரக் குயுக்திகளும் நிரம்பிய அந்தக் குறிப்பு, பதில் சொல்லத் தேவைப்படும் அருகதை எதுவும் இல்லாதது. அதில் எனக்கு ’கஞ்சிக் கூலி’என்று அவர் அளித்திருக்கும் 'கௌரவம்' அவருடைய தரத்தையே காட்டுகிறது. புளுகுகளுக்கும் கற்பனையான பழியுரைகளுக்கும் பதில் சொல்வது வெட்டி வேலை என்பதே எனது நிலைப்பாடு. இது குறித்து மௌனமாக இருக்கவே விரும்பினேன். அதையே கடைப்பிடிக்கவும் செய்தேன்.
ஆனால், இந்த நிலைப்பாடு சரியல்ல என்பதையும்எனது உதாசீன மௌனம் ஜெயமோகன் செய்யும் பொய்ப் பிரச்சாரத்தை அனுமதிப்பதாக மாறுகிறது என்பதையும் உணர நேர்ந்தது. ஃபேஸ்புக்கில் இடப்பட்ட நிலைத்தகவல்கள் சிலவும் அதை உறுதிப்படுத்தின. அதை விடவும், தெரிந்த நண்பர்களும் தெரியாத வாசகர்களும் எனக்கு என்னவோ அசம்பாவிதம் நேரிட்டு விட்டதுபோலத் தொலைபேசியில் விசாரிக்கத் தொடங்கியது அமைதியைக் குலைத்தது. 'அசம்பாவிதம் நடந்தது இங்கே இல்லை. நாகர்கோவில் பார்வதி புரத்தில் போய் விசாரியுங்கள்'என்று சொல்லிப் பார்த்தேன். அப்படியும் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
அண்மையில் எங்கள் ஊரான கோவைக்குச் சென்றிருந்தபோதுசந்திக்க நேர்ந்த பழைய நண்பர்களும் மூக்கைச் சிந்திக் கொண்டு இதையே விசாரித்தார்கள். நெடுநாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்களுக்கும் உரையாடலுக்குரிய விஷயம் இதுவாகவே இருப்பது அதிர்ச்சியளித்தது. 'பொய்மை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்' ஆகி விடக் கூடாது என்பதனாலேயே பதில் சொல்லமுற்பட்டிருக்கிறேன். ஜெய மோகனின் ’லட்சோபலட்சம்’வாசகர்களிடமும் அசோகமித்திரனின் ஆயிரக்கணக்கான வாசகர்களிடமும் எனக்கிருக்கும் நூற்றுச் சொச்சம் வாசகர்களிடமுமே இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
எழுதத் தொடங்கி இன்றுவரை சர்ச்சைகளிலோ விவாதங்களிலோ ஈடுபட்டதில்லை. பொது வெளியில் நடைபெறும் இலக்கிய விவாதங்கள், தங்கள் தரப்பே சரியானது என்று நிறுவஇரு தரப்பினரும் முயற்சி செய்யும் மல்யுத்தப் போட்டிகளாகவே எனக்குத் தோன்றியிருக்கின்றன. அதனால் இலக்கிய ஞானம் விகசிப்பதில்லை என்பது அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று. மாறாக, ஒத்த அலைவரிசையுடைய நண்பர்களின் உடன்பாடும் எதிர்மறையுமான கருத்துக்கள், வாதங்கள் சிந்தனையை விரிவடையச் செய்வதையும் நடைமுறையில் உணர்ந்து பயன் பெற்றிருக்கிறேன். ஃபேஸ்புக்கிலோ இணைய தளங்களிலோ நடக்கும் சச்சரவுகளிலும் எனக்கு விருப்பமில்லை. அக்கறையுமில்லை.
அசோகமித்திரன் நேர்காணலை முன்வைத்து ஜெயமோகன் எழுப்பியிருப்பது விவாதமல்ல; அவதூறு. வீண்பழி சுமத்தும் கபடம். சொந்தக் கட் - அவுட்டைச் சதா சுமந்து திரியும் ஒருவரின் புலம்பல். யாரையோ கேவலப்படுத்த யாரையோ பிணையாக்கும் கோழைத்தனமான ஒப்பாரி. இது நியாயமான எந்த எதிர்வினைக்கும் லாயக்கில்லாதது.
ஆனால் இந்தக் குறிப்புக்குக் கொடுக்கபட்டிருக்கும் தலைப்புத்தான் எரிச்சலடையச் செய்கிறது. பெரும் ஆளுமையான அசோகமித்திரனைக் கேடயமாக நிறுத்தி ஜெயமோகன் செய்து கொள்ளும் தற்புகழ்ச்சியும் தருக்கும்தான் ஆத்திரமளிக்கின்றன. வழக்கமான பொறுப்பற்ற வாசகங்களில் - sweeping statements – பலரையும் மலினப்படுத்தும் இந்த ஆபாசம் அருவருப்படைய வைக்கிறது. போகிற போக்கில் தர்ம அடி கொடுத்து விட்டு, பரபரப்பை உண்டாக்கி எட்டி நின்று இளிக்கும் இந்தத் தந்திரம் குமட்டுகிறது.
நேர்காணல் வெளியான காலச்சுவடு இதழுக்குத் தன்னுடைய மறுப்பை ஜெயமோகன் தெரிவித்து எழுதியிருந்தால் அவரது 'அறச் சீற்றத்தை'நான் புரிந்துகொள்ள முடிந்திருக்கும். பொறுப்பாசிரியர் என்ற நிலையில் அதை வெளியிடவும் செய்திருப்பேன். அந்தச் சுதந்திரம் காலச்சுவடில் எனக்கு இருக்கிறது. முன் குறிப்பிட்ட கடிதங்கள் வெளியிடப்பட்டதே அதற்குச் சான்று. அவர் தனது குறிப்பைப் பொதுவெளியான இணையத்தில்தான் வெளியிட்டிருக்கிறார். எனவே அதற்கான எதிர்வினையையும் அதே ஊடகத்தில் ஆற்றுவதே சரி என்பது என் எண்ணம்.
ஜெயமோகனுக்கு எங்கிருந்து அறக் கோபம் வந்தது? ஏன் வந்தது? அசோகமித்திரனுக்காகவா? இல்லை என்பதை அவருடைய செயலே காட்டுகிறது. 'அவரை திட்டமிட்டு அவமதித்துவிட்டது காலச்சுவடு என்பதே உண்மை'என்று முழங்கும் ஜெயமோகன் அந்த உண்மைக்கு ஆதாரமாக எதைக் காட்டுகிறார்? மாறாகத் தன்னை அவ மதிக்கவும் தன்னுடைய 'புகழை'மறைக்கவும் செய்யப்பட்ட 'சதிகளை'த்தானே முன்வைக்கிறார். அவருடைய நோக்கம் அசோகமித்திரன் சார்பாகப் பேசுவதல்ல; அவரைச் சாக்கிட்டுத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வதுதான். குறிப்பின் முதல் வாசகமே அதைத்தானே சொல்கிறது.
'அசோகமித்திரனின் காலச்சுவடு பேட்டி பற்றி பலர் என்னிடம் சொன்னார்கள். அதில் அவர் வெண்முரசுவை ‘கிழித்துவிட்டார்'என ஃபேஸ்புக்கில் பலர் மகிழ்ந்தார்கள் என்றார்கள். அவர் தமிழில் என்னை புகழ்ந்ததுபோல எவரையும் புகழ்ந்ததில்லை. ஆகவே ஒரு படைப்பை முற்றிலும் நிராகரித்தாலும் அதுவும் நியாயமே. ஆனால் அதில் அவர் தன் மனைவிக்கு அது புரியவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்.'
ஆக, தார்மீகக் கொப்பளிப்புக்குக் காரணம் இதுவரை தன்னைப் புகழ்ந்தவர் தனது படைப்பைக் கிழித்து விட்டதாக மண்டபத்தில் ஏதோ அநாமதேயம் சொன்னதைக் கேட்டதுதான்.இதே ரீதியில்தான் அறப்பெருக்கு அணை யுடைத்துப் பாய்கிறது.
அவர்களுக்கு அசோகமித்திரன் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பேட்டி எடுப்பது காலச்சுவடின் வம்பு அரசியலை அதன்வழியாக நிலைநாட்டுவதற்காக மட்டுமே.வெண்முரசு வெளிவரத் தொடங்கியதுமே நான் எதிர்பார்த்ததுதான், அது ஓர் இலக்கியமே அல்ல என்று பல்வேறு தொண்டைகளைக் கொண்டு சொல்ல வைப்பார்கள்.நம்மூரில் தொண்டையைக் கொடுக்கவும்பலர் தயாராகத்தான் இருப்பார்கள்.
ஜெயமோகன் சேம் சைடிலேயே கோல்போட்டுக் கொள்ளும் இந்த வாசகங்களில்தான் எத்தனை அறப் பீச்சல்? இவர் எதிர்பார்த்திருந்தாராம். ’காலச்சுவடுதனது வம்பு அரசியலை நிலைநாட்டிக் கொள்வதற்காக,அது ஓர் இலக்கியமே இல்லை என்று சொல்ல’வைக்கும் எந்தத் தொண்டை யையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். எனவே, அவரே கள்ளத் தொண்டையில் பிலாக்கணம் வைக்கத் தொடங்கி விட்டார். அதற்கு இந்த நேர்காணல் ஒரு சாக்கு. அதுதானே பகல் வெளிச்சம் போலத் தெரியும் உண்மை? அசோகமித்திரன் பொருட்டல்லாமல் போவது யாருக்கு என்பதை இதுவே சொல்லவில்லையா?
இவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. மிகத் தெளிவான சான்றை சாட்சாத் ஜெயமோகனே எடுத்துக் கொடுக்கிறார். அக்டோபர் இதழில் வெளிவந்த அசோகமித்திரனின் விளக்கக் கடிதத்தில் அவர் குறிப்பிட்ட வாசகங்களைத் தனக்குச் சாதகமாக முன்வைக்கிறார். அசோகமித்திரன் குறிப்பிட்டிருப்பது இவ்வாறு.
‘நான் முதலில் இருந்தே பதில்கள், கேள்விகள் எழுத்து மூலம் இருக்க வேண்டும் என்றேன். அது நடக்கவில்லை. ஒலிப்பதிவு இயந்திரங்கள் பேச்சை மலினப் படுத்தும். அதுபோலவே புகைப்படங்களும். இலக்கியப் பேட்டி எழுத்து பற்றித்தான் இருக்க வேண்டும். என்வரை சொல்புதிது, சுபமங்களா பேட்டிகள் எடுத்துக் காட்டாக இருந்தன.’’ (காலச்சுவடு இதழ் 179 அக்டோபர் 2014 பக்கம் 8).
ஜெயமோகன் அதைப் பற்றித் தனது தளத்தில் குறிப்பிடுவது இது.
அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள்வரை அவரை எடுத்த மிகச் சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பி யிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதி வடிவை எனக்கு அனுப்பி நான் அதைச் செப்பனிடமும் செய்தேன். இன்னொரு பேட்டி சொல்புதிதுக்காக. நானே எடுத்தது.
அசோகமித்திரன் தனது கடிதத்தில் எங்கே சிறந்த பேட்டி என்று
குறிப்பிடுகிறார்? இது என்ன தற்புகழ்ச்சி? ஜெயமோகன் எடுத்தால் எல்லாம் சிறப்பாச்சே! கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப்
பாட்டாச்சே! அந்த அளவுச் சிறப்போடு பேட்டி எடுக்க இலக்கிய உலகில்
இன்னொருvவர் இருக்க முடியுமா என்ன?
இந்த இரண்டு பேட்டிகளும் தான் எடுத்தவை என்ற ஜெயமோகனின் பீற்றலை ’’ஒரு பேட்டிதான் நீங்கள் எடுத்தது, சொல்புதிதுக்காக. இன்னொருபேட்டி சுபமங்களா வுக்காக நான் எடுத்தது’என்று உரிமைவாதத்துடன் வந்தார் ஞாநி. அமரர் கோமல் சுவாமிநாதன் மறுக்க வரமாட்டார் என்ற துணிச்சலில் சொல்லப்பட்ட தனது பொய் அம்பலப்பட்ட போதும் முதலில் பேட்டிக்கு வினாக்களைத் தயாரித்து அனுப்பியதாகச் சொன்னார். அது பொய் என்று ஞாநி மறுத்ததும் இல்லை அதைச் செப்பனிட்டதாகக் கரணமடித்தார். ஜெயமோகன் சொன்னது பொய் என்பதை நிறுவும் வரை ஞாநியும் சளைக்காமல் நின்றார். அதை ஏற்பதைத் தவிர வழியில்லை என்றதும் ’களவு முதல் என் கையில்தான் இருக்கிறது; ஆனால் நான் கள்ளனில்லை’என்று சொல்லும் பெருமித ஒப்புதலை சிலாகிக்காமல் இருப்பது எப்படி? ( பார்க்க: அசோக மித்திரன் பேட்டி – ஒரு விளக்கம் 13 அக்டோபர் 2014 http://www.jeyamohan.in/?p=63674 )
இதே அபாண்டத்தைத்தான் தனது குறிப்பின் முடிவில் ‘கஞ்சிக் கூலி’ என்று எனக்கு அளித்த அடைமொழியைத் திரும்பிப் பெறுவதிலும் காட்டியிருக்கிறார். முதல் பதிவேற்றத்தின் போது இடம் பெற்ற அந்த வாசகம் பின்னர் நீக்கப்பட்டிருக்கிறது. நான் கஞ்சிக் கூலி என்று ஜெயமோகன் நம்புவது உண்மையானால் அதை அப்படியே அல்லவா விட்டிருக்க வேண்டும்? பொது வெளியில் ஒருவனை வசைபாடுவது, அது வசை என்று சுட்டிக் காட்டப்பட்டதும் வாலை இடுக்கிக் கொண்டு ஒதுங்குவது. இது என்ன நேர்மை? ஒற்றை வாசகத்தைப் பொறுப்பில்லாமல் உதிர்ப்பதன் மூலம் இதுவரை ஆளுமைகள் பலரையும் அவமதித்த நபரா அசோகமித்திரனை அவமதித்ததாக வெகுண்டு எழுவது? இந்த நடிப்பையா இலக்கிய அக்கறை என்று கொள்வது?
எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவரை நேர்ப்பேச்சில் பேட்டி கண்டு அவர் சொன்னதையும், சொன்னதாக இவர்கள் புரிந்துகொண்டதையும், இவர்கள் அவரிடம் சொல்லவைத்ததையும் சேர்த்து பேட்டி எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.
இது காலச்சுவடு நேர்காணலுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது. ஒருவேளை ஜெயமோகன் மேற்கொள்ளும் நேர்காணல்களில் பின்பற்றும் அணுகுமுறையாக இருக்கலாம். காலச்சுவடு நேர்காணல் நடத்தப்பட்ட பின்னணியையும் அதன் முறையியலையும் கொஞ்சம் பொறுத்து விரிவாகவே சொல்கிறேன். அது என் கடமையும் விவகாரத்தை விளக்கத் தேவையானதும் கூட.
இந்த நேர்காணல் தொடர்பாக முக்கியமான கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். அசோகமித்திரன் சொல்லாத ஒரு வார்த்தையும் இந்த நேர்காணலில் இடம் பெற வில்லை. அவரே சொன்ன பிறகு எதையெல்லாம் பிரசுரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினாரோ அதில் ஒரு காற்புள்ளியைக் கூடப் பிரசுரிக்கவில்லை. பேச்சு வழக்கில் இருந்த உரையாடலை பொது வழக்குக்கு மாற்றியது மட்டுமே இதில் செய்யப்பட்ட மாற்றம். நேர்காணல் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் சொல்ல விடுபட்ட்து என்று அசோகமித்திரனே எழுதியனுப்பிய கேள்வியும் பதிலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது தனித்துத் தெரியாமல் இருப்பதே நேர்காணலின் நம்பகத்தன்மைக்கு அத்தாட்சி.
ஜெயமோகனே விபரீதமான தலைப்பை தனது குறிப்புக்கு வைத்ததன் மூலம் அவமதிப்புச் செய்திருப்பவர். ஓர் எழுத்தாளரை அவமதிக்க ஒரு பத்திரிகை சிறப்புப் பகுதியா வெளியிடும்? அவரிடமிருந்து கதை வாங்கி வெளியிடும்? அவரைப் பற்றி எழுதப்பட்டதும் கேட்டு எழுதுவிக்கப் பட்டதுமான கட்டுரைகளை வெளியிடும்? இரண்டு இலக்கியக் கிறுக்குகள் சில நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து அவரைப் பேட்டி காணும்? பேஸ்புக்கிலோ இணைய தளத்திலோ கற்பனையும் பொய்யும் அபாண்டமுமாக ஒரு பதிவு போட்டால் போதாதா, ஜெயமோகன் தொடர்ந்து செய்து வருவதுபோல? யார் யாரை அவமதித்திருக்கிறார்கள் என்று இதைப் படிக்கும் வாசகர்கள் முடிவு செய்யட்டும்.
இந்த நேர்காணல் ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்றது. அது முழுவதுமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதன் பதிவுகள் கைவசமே இருக்கின்றன. ஜெயமோகன் இளித்துக் காட்டும் கோரைப் பல் இளிப்பை மறுக்கும் ஆதாரமாகக் கையாளலாம். ஆனால் அதை ஒருபோதும் செய்யப் போவதில்லை. அதுதான் அசோகமித்திரனை அவமதிக்கும் செயலாகும். அதை நான் செய்யத் தயாரில்லை.இந்த எதிர்வினையில் தவிர்க்க வியலாமல் அசோகமித்திரன் பெயரைக் குறிப்பிட நேர்வது துரதிர்ஷ்டவசமானது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக நான் தொடர்ந்து வாசிக்கும் முன்னோடி எழுத்தாளரும் தனது படைப்புகளின் வாயிலாக மானுட நன்மையின் சிறு அளவையாவது எனக்குப் புகட்டியவருமாக நான் மதிக்கும் அசோகமித்திரனை ஏதேனும் விதத்தில் வருத்தப்படுத்தி யிருந்தால் இந்தப் பொது வெளியில் மன்னிப்புக் கோருகிறேன்.
அசோகமித்திரனுடன் . நாள் 22 4 2011
என் இலக்கிய உலக நுழைவுக் கட்டங்களில் நான் ஆவேசமாக வாசித்த எழுத்தாளில் அசோகமித்திரனும் ஒருவர். மிக விரைவில் அபிமானத்துக்கு உரியவராக மாறினார். எங்களூர் கோவையில் மார்க்சிய அறிஞர் ஞானி ஓவ்வொரு ஆண்டும் மே மாத வாக்கில் முக்கியமான சமகால எழுத்தாளர் ஒருவரை அழைத்துக் கூட்டம் நடத்துவார். 1976 இல் சுந்தர ராமசாமி. 77 இல் அசோகமித்திரன்.
பத்தொன்பது வயதுப் பையனான நான் முதன்முதலில் வாசிப்பைக் கடந்து கட்டுரை எழுதியது அசோகமித்திரனைப் பற்றித்தான். அவருக்காக நடத்தப் பட்ட சிறப்புக் கூட்ட்த்தில் வாசிப்பதற்காக அதுவரை வெளிவந்திருந்த அவரது மூன்று நாவல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் ஊன்றிப் படித்து நான் எழுதிய கட்டுரையே எனது முதல் இலக்கியக் கட்டுரை. அதற்குக் கிடைத்த முதல் பாராட்டும் அசோகமித்திரன் வாயால்தான். உபரியாக்க் கிடைத்த ஷொட்டு - கட்டுரைப் பிரதியைப் பார்வையிட்டு அவர் சொன்ன வாசகம். ‘’உங்க கையெழுத்து அழகா இருக்கு’. நோட்டுப் புத்தகத் தாளில் முப்பது பக்கங்கள் வரும் அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி ’18 ஆவது அட்சக்கோடு’ பற்றியது. ஞானி நட்த்திய ‘பரிமாணம்; இதழின் முதல் இதழில் அதைப் பார்க்கலாம்.அதன் பின்னர் சென்னை வாழ்க்கையில் அவரைப் பலமுறை கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். நண்பர் மாமல்லனுடன் ஊர் சுற்றித் திரிந்து விட்டு சும்மா அசோகமித்திரனை அவர் வீட்டில் போய்ப் பார்த்த நாட்கள் அநேகம். பின்னர் குங்குமம் வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு தீபாவளி இணைப்பிதழில் வெளியிட அசோகமித்திரனிடம் கட்டுரை கேட்டேன். தலைப்பு நான் சொன்னது. ‘எழுத்தாளருக்குப் பிடித்த ஐந்து படங்கள்’. தலைப்புக்கு உதவியவர் அன்று என் சக ஊழியராக இருந்த எஸ்.ராம கிருஷ்ணன். கட்டுரையை வாங்கி வந்தவரும் அவரே. (பார்க்க: அசோக மித்திரன் கட்டுரைகள் – 2. கிழக்குப் பதிப்பகம் பக்: 859 ) அதற்கு முன்பே அசோகமித்திரனுடன் ஏற்பட்டிருந்த மானசீக நெருக்கமே அவரைக் கட்டுரை எழுதச் செய்யலாம் என்று தூண்டியது. மலையாளக் கவிஞரும் நண்பருமான பாலசந்திரன் சுள்ளிக்காடின் முயற்சியில் கேரள மாநிலம் ஆலுவாயில் நடந்த ‘மானசோத்ஸவம்’ இலக்கியச் சந்திப்பில் அசோக மித்திரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அன்று அவர் பேசியவை இன்றும் நினைவில் இருப்பவை. குறிப்பாக ஹெமிங்வேயையும் நார்மன் மெய்லரையும் பற்றிய அகப் பார்வை மிளிரும் பேச்சு. 1999 இல் நண்பரும் வங்காளக் கவிஞருமான அஞ்சென் சென் கேட்டுக் கொண்ட்தற்கிணங்க சென்னையில் வங்கக் கவிஞர் ஜீபனானந்த தாஸ் நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்து வந்து பேசவைத்தேன். நானும் கட்டுரை வாசித்தேன். அதில் சாகித்திய அக்காதெமி வெளியீடான ‘ஜீபனான்ந்த தாஸ் வாழ்க்கை வரலாறு தமிழாக்கத்தைப் பற்றிச் சொன்னதை – நவீன கவிதையின் முன்னோடியான ஜீபனானந்தா க. த. திருநாவுக்கரசின் மொழியாக்கத்தில் புராதனக் கவிஞராகத் தென்படுகிறார் – என்று நான் சொன்னதைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். ’’ திருநாவுக்கரசு அவர் துறையில பெரிய ஸ்காலர். நீங்க இப்படிக் கடுமையாச் சொல்லியிருக்க வேண்டாம்’’. அது ஒரு பாடத்தின் பயிற்சியாக மனதில் பதிந்தது. என்றென்றும் பின்பற்ற வேண்டிய அறிவுரையாகவே அதைக் கருதினேன். அசோகமித்திரனை அபிமானம் குன்றாமல் பார்த்த, சந்தித்த இன்னும் பல நாட்கள் நினைவில் மங்காமல் இருக்கின்றன. இந்த ஞாபகப் பசுமைதான் அவருடன் விரிவான நேர்காணலை மேற்கொள்ள ஆதாரமான பின்புலம்.
நானாவது அசோகமித்திரனின் எளிய வாசகன். உடன் நேர்கண்ட நண்பர் தேவிபாரதி தீவிர அசோகமித்திரன் வாசகர். அசோகமித்திரன் தொலை பேசியில் பேசுகிறார் என்றால் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை விட்டு எழுந்து நின்று பதில் சொல்லும் அதிதீவிர வாசகர்.
அசோகமித்திரனின் ‘1945இல் இப்படியெல்லாம் இருந்தது’சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு மேடையில் அவர் பரவசத்துடனும் நெகிழ்ச்சி யுடனும் தழுதழுத்ததை இப்போதும் மறப்பதற்கில்லை. அசோகமித்திரனின் நூலை வெளியிடும் வாய்ப்பை தேவிபாரதிக்கு வழங்கியதே அசோக மித்திரன் தான். அதே மேடையில் வெளியிடப்பட்ட தேவிபாரதியின் ’நிழலின் தனிமை’நாவலை வெளியிடக் கேட்டுக் கொள்ளப்பட்டவர் அசோகமித்திரன். ‘’ இந்த நாவலில் சமர்ப்பணம் எனக்கு என்று போட்டிருப்பதால் நானே வெளியிடுவது பொருத்தம் இல்லை. வேறு யாராவது வெளியிடட்டும். ஆனால் ஒன்று செய்யுங்கள். என்னுடைய புத்தகத்தை நீங்கள் வெளியிட்டு விடுங்கள்’’ என்று சொன்னவர் அசோக மித்திரன். ‘’உங்கள் புத்தகத்தை வெளியிடத் தகுந்த ஆள்தானா நான்?’’ என்ற தேவிபாரதியின் கேள்விக்கு ‘’ அதெல்லாம் தகுதியான ஆள்தான்’’ என்பது அவரது பதில். இலக்கியச் செயல்பாட்டில் எல்லாரும் சமம் என்று அவர் கருதுகிறார் என்பதைச் சுட்டிக் காட்டியதாகவே பட்டது. தேவிபாரதி பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் அசோகமித்திரனும் நானும் மட்டுமே அமர்ந்திருந்தோம். இடையில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டு அதைக் கொண்டு வந்து கொடுத்த கண்ணனிடம் அசோகமித்திரன் ரகசியமாகச் சொன்னார். ‘’தேவிபாரதி புத்தகத்தைப் பற்றிப் பேசாமல் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். என் கதைகள் பிடிக்கவில்லை போலிருக்கிறது.’’ இந்த அப்பழுக்கற்ற அசோகமித்திரப் பகடிக்கு கண்ணன் சிரிப்பை எட்டக் கூடிய புன்னகை செய்தார். நான் சிரிப்பை அடக்க வாயைப் பொத்திக் கொண்டேன். நிகழ்ச்சி முடிந்த பின்னர் தேவி பாரதியிடம் இதைச் சொன்னபோதுஅவர் அடைந்த ஆனந்தத்தை எப்போதாவது அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டால் கூட அடைய மாட்டார் என்று தோன்றியது. அந்தச் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையும் இன்னொரு கதையும் காலச்சுவடில் அவர் பொறுப்பாசிரியராக இருந்தபோது வெளியாயின என்பதே தேவிபாரதியின் ஆனந்தத்துக்குக் காரணம். நேர்காணலில் அவரைpப் பங்கேற்கச் செய்யக் காரணமும் இந்த அபிமானமே.
இவ்வளவு விரிவாக இவற்றைக் குறிப்பிடுவதன் நோக்கம் எங்கள் தகுதிகளை உயர்த்திக் காட்டுவதல்ல; நாங்களும் ஆகிருதிகளாக்கும் என்று தமுக்கு கொட்டி முழக்குவதல்ல. இலக்கியத் தளத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் அல்லது சக எழுத்தாளனுக்கும் இடையில் உருவாகும் மானசீக உறவை விளக்குவதுதான். பொதுவாக இலக்கியப் பரிமாற்றம், குறிப்பாக அசோகமித்திரனுடனான எங்கள் அணுகுமுறை என்ன என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான்.
இந்த நேர்காணலுக்கான முதல் யோசனை தேவிபாரதியுடையதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலச்சுவடு – பொறுப்பாசிரியராக அவர் இருந்த போதே முளைவிட்ட யோசனை. யோசனை தெரிவிக்கப்பட்டதும் அதை விரைவில் முடிக்குமாறு உந்திக் கொண்டிருந்தார் கண்ணன். வெவ்வேறு காரணங்களால் அதைச் செயல்படுத்துவது தாமதமாகிக் கொண்டேயிருந்தது. ’உதவாது இனி ஒரு தாமதம்’ என்று அதற்கு வேகத்தைக் கூட்டியது பெருந்தேவியும் நண்பர்களும் ஒருங்கிணைந்து சென்னையில் கடந்த ஜூன் மாதம் நடத்திய ’அசோகமித்திரனை வாசித்தல்’ நிகழ்ச்சி.
நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட கட்டுரைகளை வாசித்தபோது அசோகமித்திரனுடன் நேர் காணல் நடத்தும் எண்ணம் வலுப்பட்டது. தேவிபாரதியிடமும் இதைப் பற்றித் தெரிவித்தேன். இருவரும் அசோகமித்திரன் படைப்புகளை மறுவாசிப்பும் புது வாசிப்பும் செய்தோம். அதன் அடிப்படையில் நேர்காணலுக்கான கேள்விகளை உருவாக்கினேன். நேர்காணலில் கேட்பதற்காக ஐம்பது வினாக்கள்வரை தயார் செய்திருந்தேன். அதிலிருந்து முப்பது கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மின் அஞ்சலில் அந்தக் கோப்பைப் பெற்ற தேவிபாரதி கேள்விகளைப் பார்வையிட்டுச் சிலவற்றை நீக்கினார்; அவர் கேட்க உத்தேசித்திருந்த கேள்விகளைச் சேர்ந்தார்.
அந்தக் கோப்பு எனக்கு அனுப்பப்பட்டது. இருவருமாக தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடி இருபத்தைந்து கேள்விகள் இறுதி செய்யப்பட்டன. கால அளவைக் கருத்தில் கொண்டே எண்ணிக்கையை நிர்ணயம் செய்தோம். பேட்டியளிப்பவரின் வயதையும் உடல்நிலையையும் கவனத்தில் கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவரைப் பேசவைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் செய்யப்பட்ட நிர்ணயம் இது. அவரே மேற்கொண்டு பேச விரும்பினால் இன்னொரு அமர்வாக அதைச் செய்யலாம் என்றும் முடிவெடுத்தோம். காலச்சுவடு செப்டம்பர் 2014 இதழை ‘அசோகமித்திரன் சிறப்புப் பகுதியுடன்’ உருவாக்குவது என்று தீர்மானித்தேன். ஆசிரியர் கண்ணனிடமும் தெரிவித்து சம்மதம் பெற்றேன். கேள்விகளை அவர் பார்வையிட்டது அப்போது மட்டுமே. ‘அசோகமித்திரனை வாசித்தல் கருத்தரங்க்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் இரண்டைத் – பெருமாள் முருகன், பெருந்தேவி எழுதியவை- தேர்வுசெய்தேன். புதிய கட்டுரைகள் சிலவற்றையும் சேர்க்க விரும்பினேன். அதற்காக, அசோகமித்திரனின் நண்பரும் நெடுநாள் வாசகருமான லண்டன்வாழ் எழுத்தாளர் சச்சிதானந்தன் சுகிர்தராஜா, அசோகமித்திரனை நெருங்கி அறிந்த விமலாதித்த மாமல்லன். ‘தண்ணீர்’ நாவலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்த பி.கே.ஸ்ரீநிவாசன் ஆகியவர்களைத் தொடர்பு கொண்டேன். இது ஒருபுறம் இருக்கும் நிலையில் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு அசோகமித்திரனின் இசைவைப் பெற்றோம். அவருடைய புதிய கதை ஒன்று இடம் பெற வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்திருந்தேன். அவர் அனுப்பிய பதில் பின்வருமாறு:
அன்புள்ள சுகுமாரனுக்கு,
சிறுகதை கிடைத்து விடும். நேர்காணல் அவசியமா? அவசியம் என்று தோன்றினால் கேள்விகளை எழுதி அனுப்பினால் நான் பதில்களை அனுப்பி விருகிறேன். தாங்கள் வந்துதான் தீரவேண்டும் என்றால் ஆகஸ்ட் 9 அல்லது 10 சரியாக இருக்கும். ஆனால் தவிர்க்கப் பாருங்கள்.
அன்புடன்
அசோகமித்திரன்
மதிப்புக்குரிய படைப்பாளியுடன் உரையாடும் வாய்ப்பைத் தவிர்க்கவிரும்பவில்லை. (இதைக் காலச்சுவடு நேர்காணலின் முன்னுரையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறேன்). எனவே என்னை விடவும் அசோகமித்திரனுக்கு நெருக்கமானவரான தேவிபாரதியைத் தொடர்பு கொண்டு பேசினேன்.அவர் பேசி அசோகமித்திரனின் சம்மதத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்தே நேர்காணல் நடத்தப்பட்டது.
இந்த நேர்காணல் தொடர்பாக வெளிப்படையான ஒரே ஒரு நோக்கம்தான் எங்களுக்கிருந்தது. அவரது வாசகர்களாகவே அவரை மேலும் நெருக்கமாக அறிந்து கொள்ளுதல். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் செயல் பட்டு வருபவர் அவர். அவரது படைப்புகள் சில ஆயிரம் பக்கங்களாக வாசகர் முன்னால் விரியத் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் வாசகனுக்கு அவை பற்றித் தன்னுடையதான அபிப்பிராயங்களுக்கு வந்து சேரும் உரிமை இருக்கிறது. அதைப் போலவே அந்தப் படைப்புகளுக்குப் பின்னிருக்கும் அனுபவத் தூண்டுதல்களை அறிந்து கொள்ள விரும்பும் உரிமையும் இருக்கிறது. அதை வெளிக் கொணர்வதுதான் இந்த நேர்காணலின் நோக்கம் என்று வரையறுத்துக் கொண்டோம். அதைச் சார்ந்தே வினாக்களும் அமைந்தன. எழுத்தை வாழ்க்கையும் வாழ்க்கையை எழுத்தும் எந்தவகையில் பாதிக்கின்றன என்று அறியும் ஆர்வத்தைத்தான் அந்தக் கேள்விகளில் பார்க்க முடியும். அதைப் பொருட்படுத்திச் சொன்னதைத் தான் அந்த பதில்களில் பார்க்க முடியும்.அந்தக் கேள்விகளும் பதில்களும் வெளிப்படையானவை.
ஜெயமோகனின் வக்கிர தரிசனம்தான் அதற்கு இல்லாத உள் நோக்கங்களைக் கற்பிக்கின்றன. பாஷ்யங்கள் உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பேட்டி அளித்தவரின் முதுமை அவருக்கோ எங்களுக்கோ பொருட்படுத்தப்படக் கூடியதாக இருக்கவேயில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேர உரையாடலில் அவர் பேச்சில் வெளிப்படுத்திய இளமை ததும்பிய உற்சாகம் வியப்பையே அளித்தது. இந்த வியப்பையும் நேர்காணலின் முன்னுரைக் குறிப்பில் சொல்லி இருக்கிறேன்.
சு.வெங்கடேசனையும் ஜோ டி குரூசையும் மேற்கோள் காட்டிப் பேசும் ஒருவரை, அர்விந்த அடிகாவின் நாவலை எடுத்துப் பேசும் ஒருவரை, இலக்கியபூர்வமான நித்திய இளைஞராகவே பார்த்தோம். அவரது முதுமையைத் தன்னுடைய விதண்டா வாதத்துக்குப் பக்கபலமாகக் காட்டுபவர் செய்வதல்லவா அவமதிப்பு? இந்த உண்மை விளம்பலுக்குச் சாட்சியாக மௌனியையும் நகுலனையும் பற்றி இழுத்து வந்து அம்பலப் படுத்தியதல்லவா அவமதிப்பு? தேசிய அளவிலும் தமிழ் அறிவுலக வரம்பிலும் சாதனையாளர்கள் என்றும் பங்களிப்பாளர்கள் என்றும் கருதப்பட்ட பல ஆளுமைகளை விஷமத்தனமான அபிப்பிராயங்களைச் சொல்லி அவமதித்த, அவமதித்துக் கொண்டிருக்கிற மகானுபாவர் யார் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றில்லையா?
ஜெயமோகனின் குறிப்பிலேயே அதை மீண்டும் பார்க்கலாம். டி. ஐ. அரவிந்தன், தேவிபாரதி எல்லாரும் வம்பர்கள். அவதூறு செய்பவர்கள். இவர்கள் எல்லாம் பூர்வாசிரமத்தில் சாதுவான பிள்ளைப் பூச்சிகளாகத்தான் இருந்தார்கள். எப்போது காலச்சுவடில் சேர்ந்தார்களோ அதற்கு அடுத்த நொடியிலிருந்து நச்சுப் பாம்புகளாகி விட்டார்கள். எல்லாம் இந்த அவதார புருஷனின் அருள் நோக்கிலிருந்து நீங்கியதால் வந்த கோளாறு. அப்படித்தானா? இந்தியா டுடே ஊழியராக இருந்து ஜெயமோகனின் எழுத்துகளை வெளியிட்டபோது டி. ஐ. அரவிந்தன் பணியாளர். அவரே காலச்சுவடு பொறுப்பாசிரியராக ஆனதும் ’’’ ஆசாமி ஆகிவிட்டார்’. சாமரம் வீசுபவராகி விட்டார். ஜெயமோகனிடம் வைக்கம் முகம்மது பஷீர் சிறப்புப் பகுதிக்காகக் கட்டுரை கேட்டு வாங்கி வெளியிட்ட தேவிபாரதி வம்பராகிவிட்டார். இந்தப் பிழைப்புவாதிகளின் பட்டியலில் சேர்ந்து நானும் ’சமகால இலக்கியத்தில் பெரும் வீழ்ச்சியை அடைந்து விட்டேன். எத்தனை பரிதாபம்? அதை விடப் பரிதாபமாக எனக்குப் படுவது ‘என் மானுட வீழ்ச்சியில் ஜெயமோகனுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலி’’‘. இந்தப் போலி அனுதாபமே என்னை அவமானப்படுத்துகிறது. ஜெயமோகன் என்ற சக எழுத்தாளர் மீது நான் இதுவரை கொண்டிருந்த குறைந்த பட்ச மரியாதையைப் பற்றி சுய அவமதிப்பை ஏற்படுத்துகிறது. கன்னக்கோல் திருடனின் சன்மார்க்க உபதேசம்போல அருவெறுப்பைத் தருகிறது.
ஜெயமோகனால் காலச்சுவடை அண்டிப் பிழைப்பவர்களாகப் பட்டியலிடப்படும் நான் உட்பட மூன்று பேரும் இந்த ‘ஆசாமி’ ‘ புறங்கையால் ஒதுக்கிவிடக் கூடியவர்களா? அரவிந்தன் கால் நூற்றாண்டுக் காலமாகவும் தேவிபாரதியும் நானும் கிட்டத்தட்ட நான்கு பதிற்றாண்டுக் காலமாகவும் நவீன இலக்கியச் சூழலில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். சிறிதோ பெரிதோ எங்களால் ஆன பங்களிப்பின் பேரில் அடையாளம் காணப்பட்டவர்கள்தான். சுய சிந்தனையையும் சொந்தக் கருத்து களையும் முன்வைத்துத்தான் இன்று எங்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்பும் இடத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த இடம் எங்களுக்கு இருக்கிறது என்பதானாலேயே காலச்சுவடு எங்களை மதிக்கிறது. எங்களது பங்களிப்பை ஏற்கிறது. எங்களுக்கான சுதந்திரத்தை அளிக்கிறது. எங்களது வாசிப்பையும் நுண்ணுணர்வையும் இலக்கியத்தின் மீதான மரியாதையையும் எங்கள் எழுத்துக்களில் பார்க்க முடியும். அவை வாசகர்களின் ஊனக் கண்ணுக்குப் புலானகின்றன. ஜெயமோகனின் ஞானக் கண்ணுக்குப் புலனாகவில்லை என்பது எங்கள் குறையல்ல. ஆனால் புரையேறிய தனது கண்களில் தெரியும் குருட்டுப் பிம்பங்களை வைத்து முடிவு கட்டுவது அவருடைய அறப் பார்வை என்றால் என்ன செய்ய, ’ ‘ஐயோ பாவம்’’ ‘ , என்று இரக்கப்படுவதைத் தவிர.
இது எங்கள் சார்பில் பேசப்பட்டதென்றாலும் பொதுவானது. நவீன தமிழ் இலக்கியச் சூழல் ஜெயமோகனை மட்டுமே முன்னிருத்தியதல்லை. பொருட்படுத்தத் தகுதியான ஒற்றைப் படைப்பை எழுதிய ஆள் முதல் டன் கணக்கில் எழுதிக் குவித்தவர்கள்வரை சகலரின் பங்களிப்பும் சேர்ந்ததுதான். அவை நிலைபெறுவதும் பெறாமல்போவதும் காலத்தின் போக்காலும் வாசக ஏற்பாலும் தீர்மானிக்கப்படும். அதற்கான உரிமையை யாரும் ஜெயமோகனுக்குக் குத்தகைக்கு விடவில்லை. அவராகவே எடுத்துக் கொள்வதையும் அனுமதிப்பதற்கில்லை. அரவிந்தன் கதை எழுதினால் அது இலக்கிய உபாதை. தேவிபாரதி கதை எழுதினால் தெய்வீக இலக்கியம் என்ற நக்கல். இது விமர்சனமா என்ன? காழ்ப்பல்லாமல் இதை என்னவென்று சொல்வது? இவர் சமைப்பது மட்டுமே இலக்கியம் என்று நிர்ப்பந்திக்கும் திமிரும் ஆணவமும் எங்கிருந்து வருகிறது? இவருடைய கருத்துகள் தவிர, பிறர் கருத்துகளையும் பங்களிப்புகளையும் இகழும் அகந்தையை எப்படி அனுமதிப்பது?
என்னுடைய முன்னாள் பெருமை பற்றியும் இந்நாள் சிறுமை பற்றியும் ஜெயமோகன் வைக்கும் புலம்பல் செவி கைப்பதாக இருக்கிறது. காலச்சுவடுடன் எனக்குள்ள தொடர்பு சுந்தர ராமசாமி தொடங்கிய முதல் இதழிலிருந்தே ஆரம்பமாகிறது. ஜெயமோகனின் நோய்நாடிக் குறிப்பின்படி – டயாக்னோசிஸ் நோட் – என்னுடைய வீழ்ச்சி அன்றே ஆரம்பமாகி இருக்க வேண்டாமா? இருபத்தைந்து வருடமாகவா வெளியே தெரியாமல் இருந்தது? குறைந்த பட்சம் இவருடைய ‘வெள்ளை யானை’’நாவலைப் பற்றி ராஜ் கவுதமன் எழுதிய மதிப்புரையை நான் பொறுப்பேற்ற பின்னர் காலச்சுவடில் வெளியிட்டபோதாவது தெரிந்திருக்க வேண்டாமா? அந்தச் சமயத்திலும் கண்ணன் அதன் சர்வாதிகாரியாகவும் காலச்சுவடு வம்பு வரலாற்றைக் கொண்டதாகவும் தானே இருந்தது? ஏன் அப்போது பொங்கவில்லை?
அது எப்படி? அக்குளில் எதையோ இடுக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அடுத்தவன் மேல் கல் எறிய முடியுமா? அவரைப் பற்றிய சிலாகிப்பாக இதழில் வந்தால் காலச்சுவடு புனித கிரந்தம். ஒற்றை வரி எதிராக வந்தால் காலச்சுவடு சதிகார ஏடு. காலச்சுவடு நேர்காணலில் இந்த நவீன வியாச மகரிஷியின் மகா பாரதத்தைப் பற்றி இரண்டு இடங்களில் அபிப்பிராயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லை என்றால் ஜெயமோகன் இந்த நேர்காணல் தொடர்பாக எதையும் சொல்லியிருக்க மாட்டார். இதை யூகிக்க வேறு எங்கும் போகவேண்டாம். ஜெயமோகன்.இன் பார்த்தால் போதாதா?
காலச்சுவடில் பணியாற்றுவது எனக்கு நேர்ந்திருக்கும் வீழ்ச்சி என்று வருந்துகிறார் ஜெயமோகன். என்ன கரிசனம். ஆனால், இதைக் கௌரவம் என்றே நான் நம்புகிறேன். விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் உண்மை இருக்கிறது. காலச்சுவடு இன்று தமிழில் பரவலாக அறியப்பட்ட பண்பாட்டுத் தளம். தவிர்க்கமுடியாத செயல்பாடு. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெளியிலிருந்தும் சமீபத்திய ஐந்து ஆண்டுகளாகவும் நான் அவதானிக்கும் விஷயம் ஒன்று இருக்கிறது. காலச்சுவடுடன் தொடர்பு வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் விரும்பாத எழுத்தாளர் அரிது. காலச்சுவடு இதழில் படைப்பு வெளியாக வேண்டும் என்று முண்டியடிப்பவர்களையும் காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக நூல் வெளியாக வேண்டும் என்று நச்சரிப்பவர்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இது காலச்சுவடுக்கு மட்டுமே பிரத்தியேகமானதாக நான் பார்க்கவில்லை. ஒரு சூழலின் தேவையாகவே பார்க்கிறேன்.
காலங்காலமாக இதுபோன்ற பண்பாட்டுத் தளங்கள் உருவாகியிருக் கின்றன. சிற்றிதழ்களாகவும் சீரிய பதிப்பகங்களாகவும் அவை இருந்திருக் கின்றன. இவையே சூழலில் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அந்த மாற்றங்கள் எவரோ ஒருவரிடம் மையம் கொண்டு நடைமுறை ஆகின்றன. சி.சு.செல்லப்பா முதல் க்ரியா ராமகிருஷ்ணன், அன்னம் மீரா என்று வளர்ந்த ஒன்றுதான் இன்று காலச்சுவடாகவும் கண்ணனாகவும் வந்து நிற்கிறது. கண்ணனின் சாமார்த்தியம் சூழலை உருவாக்கவில்லை. சூழல்தான் சாமர்த்தியசாலியான கண்ணனைக் கண்டடைந்திருக்கிறது. இது நாளை மாறலாம். இதே அர்ப்பணிப்புடன், உழைப்புடன், புதிய நோக்குடன், ஒருங்கிணைப்புத் திறனுடன் வரும் ஒருவர் கையில் சேரலாம். ஏனெனில் கலாச்சாரத்தைப் பேணிக் காசு பார்ப்பதை விடவும் சீட்டித் துணி கிழித்துச் செல்வந்தனாகும் வாய்ப்பு கண்ணன் முன் இப்போதும் திறந்தே இருக்கிறது என்று நம்புகிறேன். நாற்பது ஆண்டுகளாக சீரிய இலக்கிய
உலகில் உழல்பவன் என்ற முறையில் இந்த இடம் சரியானது என்றே நம்புகிறேன். என்னுடைய கருத்தையும் பார்வையும் திறனையும் மதித்துக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு வீழ்ச்சி என்றால் கோளாறு என்னிடமில்லை. அதற்காகப் பெறும் கௌரவமான ஊதியம் ‘கஞ்சிக் கூலி’ என்றால் கேவலம் எனக்கில்லை. ஜெயமோகனே இதைச் சொல்லக் கூசவேண்டும். ஏனெனில் நான் ஜெயமோகனின் சன்னிதானத்தில் உண்டைக் கட்டிக்கு யாசித்து நிற்கும் சிஷ்யப் பண்டாரமல்ல.
மற்ற எழுத்தாளர்களை சிறுமைசெய்து சுந்தர ராமசாமியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கமுடியாதென்பதையும் புரிந்துகொள்ளுங்கள். சுரா அவரது கருத்துக்களுக்காக, நூல்களுக்காக வாழட்டும். அவரது எழுத்துக்களுடன் சம்பந்தமேயற்ற உங்கள் சில்லறை வம்புகளால் அவர் வாழமுடியாது
ஜெயமோகனின் குறிப்பில் மிகக் கேவலமான பகுதியும் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் பகுதியும் இதுதான். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதியும் பேசியும் கலந்துரையாடியும் செயல்பட்ட சுந்தர ராமசாமியின் ஆளுமையும் அவருக்கான வாசக ஏற்பளிப்பும் ஜெயமோகன் நப்பாசைப்படுவது போன்ற கையறு நிலையிலா இருக்கிறது? பிற எழுத்தாளர்களைச் சிறுமைப்படுத்தினால் மட்டுமே நிற்கக் கூடிய தள்ளாட்டத்துடனா இருக்கிறது?.தன் காலத்தில் தனது எழுத்துக்களில் அவர் பரிந்துரைத்ததும் பொருட்படுத்திப் பேசியதும் மதிப்புரைத்ததும் ஊக்குவித்ததும் எத்தனை எழுத்தாளர்களை என்று அவருடைய கட்டுரைத் தொகுதியைப் பார்க்கும் வாசகனால் மிக எளிதில் புரிந்து கொள்ளமுடியும். சரியாகச் சொன்னால் சுந்தர ராமசாமியின் பிம்பத்தை ஊதிப் பெருக்குபவர் ஜெயமோகன் தான். காலச்சுவடு அதன் நிறுவனரைப் பற்றிப் பேசுவதைவிட அதிகம் பேசுபவர் ஜெயமோகன்தான்.அவரது இணையத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் எத்தனை கட்டுரைகளில் சுந்தர ராமசாமி இருக்கிறார் என்று பாருங்கள். அவரை மேற்கோள் காட்டியே எத்தனை கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். கையறு நிலையில் இருப்பது யார் என்பது தெளிவாகும். சுந்தர ராமசாமியின் பேருருவைக் கண்டு ஜெயமோகன் குறுகி நிற்பது புலப்படும்.
ஒரு பேச்சுக்காக ஜெயமோகன் சொல்வதை வைத்துப் பார்த்தால் அறுபது ஆண்டுக் காலமாக எழுதித் தனக்கான வாசகர் வளத்தைப் பெருக்கி வைத்திருக்கும் அசோகமித்திரனின் ஆளுமை அப்படிச் சிறுமைப் படுத்தி விடக் கூடியதா? அப்படிச் சொல்வது, சொல்வதென்ன, நினைப்பதே கூட அவரை அவமதிக்கும். இந்த அவமதிப்பைச் செய்வது யார்? அப்படித் திட்டமிட்டெல்லாம் எந்த எழுத்தாளரையும் மகத்துவப்படுத்தி விட முடியாது என்பதுதான் இலக்கிய உலகின் மாற்ற முடியாத விதி. சுந்தர ராமசாமியைப் பெரிதாகக் காட்டுவதன் மூலம் அசோகமித்திரனைச் சின்னதாக்கி விடுகிறார்கள் என்பது ஜெயமோகனின் நுண்ணுணர்வு இன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம். இரண்டு எழுத்தாளுமைகளும் ஒன்றல்ல; ஒன்றுக்கு ஒன்று சளைத்ததுமல்ல. இந்த எளிய உண்மை கொட்டன் சுக்காதித் தைலம் முதல் வியாச பகவானுக்கு ஏற்படும் பேன்கடிவரை பேசும் ஆன்மீகப் பேராசானுக்கு, இலக்கிய மகா குருவுக்கு எப்படிப் புரியாமல் போனது?
காலச்சுவடு பதிப்பகத்தின் நூற்பட்டியலில் அதிகம் விற்பனையாகும் நூல்களின் ஆசிரியர்கள் சிலரில் அசோகமித்திரனும் ஒருவர். அவரது ஏழு புத்தகங்கள் காலச் சுவடு வாயிலாக வெளியாகியிருக்கின்றன. இவற்றில் இந்த ஆண்டு வெளியான மூன்று புத்தகங்கள் தவிர பிற நூல்கள் குறைந்த பட்சம் இரண்டு பதிப்புகளும் அதிக பட்சம் ஆறு பதிப்புகளும் வந்திருக்கின்றன. அதன் பொருள் காலச்சுவடு பதிப்பகத்துக்கு வருவாய் ஈட்டித் தருபவர்களில் அவரும் ஒருவர்.
‘சர்வாதிகாரி’’யான கண்ணன் தனக்கு வரவுவரும் வாசலைத் தானே சாத்திக்கொள்ளும் காரியத்தைச் செய்வாரா? என்னையும் தேவிபாரதி யையும் ஏவிவிட்டு அசோகமித்திரனை அவமதிக்கும் சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற கைங்கரியத்தைச் செய்வாரா? மேற்சொன்னவற்றில் நான்கு புத்தகங்களின் நூலாக்கத்தில் என் பங்கு சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கிறது.அவற்றுக்குக் குறிப்புகள் எழுதியதும் சிலவற்றுக்கு முன்னுரை எழுதுவித்ததும் அவமதித்தலின் பாகம்தானா?
‘சர்வாதிகாரி’’யான கண்ணன் தனக்கு வரவுவரும் வாசலைத் தானே சாத்திக்கொள்ளும் காரியத்தைச் செய்வாரா? என்னையும் தேவிபாரதி யையும் ஏவிவிட்டு அசோகமித்திரனை அவமதிக்கும் சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற கைங்கரியத்தைச் செய்வாரா? மேற்சொன்னவற்றில் நான்கு புத்தகங்களின் நூலாக்கத்தில் என் பங்கு சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கிறது.அவற்றுக்குக் குறிப்புகள் எழுதியதும் சிலவற்றுக்கு முன்னுரை எழுதுவித்ததும் அவமதித்தலின் பாகம்தானா?
ஜெயமோகனின் தளத்தில் குறிப்பு வந்த நாள்முதல் இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினார்கள். சிலர் கூடவே கூடாது என்று அறிவுறுத் தினார்கள். இலக்கியச் செயல்பாட்டில் நான் ஆதாரமாகப் பின்பற்றும் நம்பிக்கைகளுக்கும் என் சுபாவத்துக்கும் ஏற்ப மௌனமாக இதைக் கடந்து செல்லவே விரும்பினேன்.
என்னதான் கனவானாகவே இருக்க முயன்றாலும் இந்தப் பொய்யின் விஷமுள் எனக்குள் வேதனையைத் தந்து கொண்டே இருந்தது. ஈடு பாட்டுடன் என் வேலைகளைச் செய்வதைத் தடை செய்து கொண்டே இருந்தது. பேசாமல் இருந்து விடுவது இந்த அத்துமீறலை அனுமதிப்பது ஆகும் என்றும் அவசியமற்ற பழியைச் சுமப்பது ஆகும் என்ற உறுத்தல் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. ஒரு தரப்பை வைத்துப் பேசவே இந்த மௌனம் வழிகோலும் என்று எச்சரிக்கை உணர்த்தியது. என் தரப்பை விரிவாக வைப்பதே இதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஒரே வழி என்பதனாலேயே பேச விரும்பாப் பொருளைப் பற்றிப் பேச முற்பட்டேன். இப்படிப் பேச நேர்ந்ததைப் பற்றி வெட்டவெளியில் ஆடை களையப்பட்ட அவமானம் தோன்றுகிறது. மலக் கிடங்கில் கால்வைத்தது போன்ற அருவருப்பும் அசூசையும் இருக்கின்றன.
உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதும் கற்பனையான குற்றச் சாட்டுகளைச் சுமத்துவதும் ஜெயமோகனின் வாடிக்கை. சமீபத்திய இலக்கு நானும் அதற்கு முகாந்திரம் காலச்சுவடு நேர்காணலும். “பிறரை நிந்திக்கிறேன்; அதனால் இருக்கிறேன்’’ என்பது அவரது இருப்பு நியாயமாக இருக்குமோ என்னவோ? இலக்கிய, பண்பாட்டுத் துறைகளில் சாதனையாளர்கள் என்றும் பங்களிப்பாளர்கள் என்றும் கருதப்படும் பலரை மேம்போக்கான குற்றச்சாட்டுகள் மூலம், அவதூறுகள் மூலம் இழிவுபடுத்தி வந்திருக்கிறார் என்பது யாரும் அறியாததல்ல. அந்த ஆளுமைகள் அவதூறு செய்யப்படும் போது மௌனமாக இருந்தது பற்றியும் எனக்கு அதே அனுபவம் நேரிட்டதும் வருந்துவது பற்றியும் பொறுக்க முடியாத குற்ற உணர்வு என்னை கடந்த சில நாட்களாகவே உறுத்திக் கொண்டிருந்தது. இந்த உறுத்தலிலிருந்து விடுபட எண்ணியதும் எதிர்வினைக்கு இன்னொரு காரணம். கமலாதாஸ், அருந்ததி ராய், ஞாநி, மனுஷ்யபுத்திரன்,விடியல் சிவா,எஸ்.வி.ராஜதுரை ஆகியவர்களை இந்தப் பேராசான் அவமதித்த விதம் யாருக்கும் தெரியாததல்ல.
அந்தத் தருணங்களில் அதை மறுத்துச் சொல்லத் தோன்றியும் அப்படிச் சொன்னால் மட்டும் அடங்கி விடுகிற நபரல்ல ஜெயமோகன் என்று தெரிந்ததனாலும் மௌனமாக இருந்திருக்கிறேன். அந்தக் கோழைத்தன மான உணர்வு இப்போது வெட்கத்தை அளிக்கிறது. அதை மீறவும்தான் இந்த எதிர்வினை.
ஜெயமோகனின் இத்தகைய கைங்கரியங்களைப் பற்றி அவருக்கு அணுக்கமானவர்களே மறைமுகமாகக் குறை சொல்லியிருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால் நட்புக்குக் குந்தகம் ஏற்பட்டு விடுமென்ற பெருந்தன்மையாலோ, சொன்னால் மட்டும் திருந்தவா போகிறார் என்ற அலுப்பாலோ, இதைச் சொன்னால் தமக்குக் கிடைக்கக் கூடிய நல் வாய்ப்புகள் நழுவி விடுமென்ற அச்சத்தினாலோ புறமுதுகுப் பேச்சுகளுடன் ஒதுங்கியிருக்கிறார்கள். நான் தொடர்ந்து வாசிக்கும் சம கால எழுத்தாளர் களில் ஒருவர் என்ற வாசக மரியாதையைத் தவிர ஜெயமோகனுடன் எந்த ஒட்டுறவும் எனக்கு இல்லை. அதனால் எந்த இழப்பும் இல்லை.
ஆனால் இந்த எதிர்வினையை முன்வைக்கும்போது வேறொரு இழப்பைக் குறித்த அச்சம் எனக்கு இருக்கிறது. ஏறத்தாழ 40 ஆண்டுகளாக இலக்கியச் சூழலில் செயல்பட்டு வருகிறேன். அதன் விளைவாக கண்ணியமான ஓர் உயர்நிலை – stature –அமைந்திருப்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இதுவரை எனது எழுத்துக்கள் மூலமாக அல்லாமல் வேறு எந்த உபாயத்தின் மூலமாகவும் என்னை முன்னிருத்தியது இல்லை. என் இயல்புக்கும் இதுவரை பின்பற்றி வந்த உறுதிப் பாட்டுக்கும் மாறாகவே இந்த எதிர்வினையில் ஈடுபட நேர்ந்திருக்கிறது. அது அந்த ஸ்டேச்சரைப் பாழடித்து விடக் கூடாது என்ற பெரும் பயம் எனக்கு இருக்கிறது.
காலச்சுவடு நேர்காணல் மகத்தானது என்றோ ஆகச் சிறந்தது என்றோ எனக்கு அபிப்பிராயமில்லை. நேர்காணப்படும் ஆளுமை வெளிப்படாத எந்த நேர்காணலும் பயனற்றது என்ற அழுத்தமான உணர்வு எனக்கு இருக்கிறது. எடுத்து எழுதியதில் ஏற்பட்ட சேதாரங்களைக் கணக்கில் கொண்டாலும் கூட இந்த நேர்காணல் சரியான பதிவு என்றே நம்புகிறேன். நேர்காணப் பட்டவரின் ஆளுமையைக் காட்டக் கூடியதே என்று நம்புகிறேன்.
காலச்சுவடின் பொறுப்பாசிரியராக நான் வெளிக்கொண்டு வந்த - 2013 ஜுலை முதல் 2014 நவம்பர்பர் வரையிலான - 17 இதழ்களில் மிக அதிக வாசகர் கடிதங்களைப் பெற்றது 2014 செப்டம்பர் இதழ்தான். அதற்குக் காரணம் அசோகமித்திரனின் நேர்காணலே. இலக்கிய நண்பர்களின் சந்திப்புகளிலும் உரையாடல் களிலும் பேசப் பட்டது. சமூகத் தளங்களிலும் இணைய வெளியிலும் அதிகம் பகிர்ந்து கொள்ளப் பட்டது. அசோகமித்திரனை வாசிப்பதற்குத் துணையாகவும், சிலரிடம் தொடக்கமாகவும் அமைந்தது. இதற்காகவே செயல்பட்டோம்; அதில் ஓரளவாவது வெற்றியடைந்திருக்கிறோம். இந்த முதன்மையான நோக்கத்தைத் தவிர நேர்காணலை ஒட்டிச் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளும் கற்பிக்கப்படும் உள் நோக்கங்களும் சந்தர்ப்பவாதமானவை. தந்திரமும் கபடமுமானவை. அவை கிஞ்சிற்றும் பொருட்படுத்தப்பட வேண்டியவை அல்ல.
இந்த விவகாரத்தில் என்னுடைய ஒரே எதிர்வினை இந்தப் பதிவு. இதுவே முதலாவதும் இறுதியானதும். பொய்க்கால் குதிரைகளுக்குக் கொள்ளும் தண்ணீரும் வைப்பது என் வேலை அல்ல.
↧
ஒரு கவிதையின் இரு நிறங்கள்
சீனக் கவிஞர் து மு ( Du Mu - 803 - 852 ) ஒரு கவிதையின் இரண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள். முதலாவது பொழிபெயர்ப்பு டேவிட் யங்கும் ஜியான் ஐ லின்னும் இணைந்து செய்தது. இரண்டாவது பைன்னருடையது.
பிரிவு
அளவற்ற அன்பு எப்படியோ
அன்பின்மையாக மாறிவிடுகிறது.
இந்தப் பிரியாவிடைக் குப்பியைக் கடந்து
ஒரு சிநேகப் புன்னகையைக்கூட
நம்மால் சிந்த முடிவதில்லை.
இந்த மெழுகுவத்தியால் மட்டுமே
ஏதோ உணர்ச்சிகளை
வெளிப்படுத்த முடியும்போல.
இரவு முழுவதும்
சின்னதாக மெழுகுக் கண்ணீரை
வடித்துக் கொண்டிருக்கிறது.
* * *
ஆழ்ந்த அன்பு எவ்வாறு ஆழ்ந்த அன்பாகத் தோன்றும்?
வழியனுப்பு விருந்துகளில் அது எவ்வாறு புன்னகைக்க முடியும்?
நமது சோகத்தை இந்த மெழுகுவத்தியால்கூட உணரமுடிகிறது
நம்மைப்போலவே இரவு முழுவதும் அழுகிறது.
↧
தி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு – எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்
கவிதை தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இடையறாது பங்களித்து கொண்டு வருபவர், தற்போது காலச்சுவட்டு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வரும் கவிஞர். சுகுமாரனின் தொகுப்பில் ‘தி.ஜானகிராமனின் சிறுகதைகள்’ இவ்வருட புத்தக கண்காட்சிக்கு, காலச்சுவட்டின் புதிய வெளியீடாக வருகிறது. கவிதை மொழியில் அவர் மேற்கொண்ட, பாசாங்கில்லாத, வடிவமைப்பு முயற்சிகள், சொற்தேர்வுகள் மற்றும் அதன் உள்ளடக்கம் பல இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. வைக்கம் பஷீர், பால் ஸக்கரியா போன்றோரின் படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்தவர். பதாகை சிற்றிதழுக்காக அவருடனான மின் அஞ்சல் உரையாடல்.
பதாகை – இந்தத் தொகுப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட உங்கள் அனுபவங்கள் பற்றிச் சொல்லமுடியுமா? காலவரிசையில் நோக்கும்போது தி.ஜா-வின் ஆரம்பகால படைப்புகளுக்கும் இறுதிகால படைப்புகளுக்கும் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா? ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்பில் ஊறியிருக்கும் மைய அக்கறை என்று எதைச் சொல்வீர்கள்?
சுகுமாரன் – இலக்கிய வாசகர்கள் எல்லாரிடமும் தங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். என்னிடமும் இருக்கிறது. அந்தப் பட்டியலின் முதல் சில பெயர்களில் ஒன்று தி. ஜானகிராமனுடையது. எனக்குப் பிடித்திருக்கிறது என்று நான் சொல்வது ரசனை அடிப்படையில் மட்டுமல்ல; அந்த எழுத்தாளர்கள் தமது படைப்பு மூலம் கற்பித்த விஷயங்களையும் சார்ந்துதான். பெண்கள் மீதான மரியாதையைப் பேணக் கற்றுக் கொடுத்ததில் தி. ஜாவின் படைப்புகளுக்கும் பங்கு உண்டு. கணிசமான பங்கு. அதற்கான கைம்மாறாகவே இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டேன். அவருடைய படைப்புகள் மீது எனக்கிருக்கும் மதிப்பைக் காட்டவே இதைச் செய்திருப்பதாக நம்புகிறேன். தொகுப்புப் பணியில் எனக்குக் கிடைத்த முதலாவதும் முதன்மையானதுமான அனுபவம் இதுதான்.
இந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறைகள் உள்ளன. ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக் கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது கதைகள். அவை காலத்தின் போக்குக்கு ஏற்ப மாற்றம் அடையவில்லை கால, இட மாறுதல்கள் உள்ளடக்கத்தில் நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும் அவரது கதைக் கலையின் செவ்வியல் நிலைக்கு வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. மொழிவழக்கில் மட்டுமே மெல்லிய மாறுதல்கள் தெரிகின்றன. எனவே, காலவரிசைப்படி கதைகளைத் தொகுப்பதைவிடவும் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் இருப்பதுபோலவே வரிசைப்படுத்துவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன்.
தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வு நிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது. மனிதர்கள் இந்த உணர்வுகளைக் கொண்டவர்களாகவே இருக்க முடியாமற் போவது அவர்களது சூழ்நிலையின் காரணமாகவே என்று அழுத்தமாகச் சொல்கிறார். அந்தச் சிக்கலையே அவர் பேசுபொருளாகக் கருதுகிறார். மானுடத் தத்தளிப்பின் பருவ மாற்றங்கள்தாம் அவரது படைப்புகளின் மையம்.
பதாகை – இந்தக் கதைகள் வேறு வேறு பதிப்பங்கள் மூலம் பல பதிப்புக்களில் வந்திருக்கும். அப்போது பாட பேதங்கள் நேர்ந்திருக்கலாம், அல்லது முந்தைய பதிப்புக்களில் இருந்திருக்கக்கூடிய பிழைகள் களையப்பட்டிருக்கலாம். சில பதிப்புக்கள் இப்போது புழக்கத்திலேயே இல்லாமல் இருக்கலாம், காலச்சுவடில்கூட சில தி.ஜா சிறுகதை தொகுப்புகளின் முதல் பதிப்பு வாசகரிடம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு கதையின் செம்பதிப்பு இதுதான் என்று முடிவுசெய்யும்போது சந்தித்த சவால்கள் ஏதேனும் உண்டா, இதுதான் சரியான பதிப்பு என்று இறுதி முடிவு எப்படி எடுக்கப்படுகிறது? (கு.ப.ரா சிறுகதைகளை பதிப்பிக்கும்போது ‘அதப்பாதாளம்’ என்ற வார்த்தை தன்னை எப்படி அலைகழித்தது என்று பெருமாள் முருகன் கூறுகிறார், அப்படி ஏதேனும் நீங்களும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததா?)
சுகுமாரன் - தி. ஜானகிராமன் கதைகள் வெவ்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வந்திருக்கின்றன. அவை இப்போதும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றில் பாட வேறுபாடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. பெரும்பாலான தொகுப்புகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தவை. அவரது மறைவுக்குப் பிறகு ‘எருமைப் பொங்கல்‘ என்ற ஒரே ஒரு தொகுப்பு வெளிவந்தது. அதுவும் ‘அடி ‘என்ற பெயரில் குறுநாவலும் சிறுகதைகளும் சேர்ந்த தொகுப்பாக முதலில் வெளியிடப்பட்டு, பிறகு சிறு கதைகள் மட்டும் கொண்ட ‘எருமைப் பொங்கல்‘ என்ற தனித்தொகுப்பாக வெளியானது.
அவர் வாழ்ந்த காலத்திலேயே பெரும்பான்மைத் தொகுப்புகளும் வெளிவந்தன என்பதை வைத்து அவற்றின் கதைத் தேர்வும் வரிசை அமைப்பும் அவரே தீர்மானித்தது என்ற முடிவுக்கு வந்தேன். அவரை அறிந்த இலக்கியவாதிகள் அதை உறுதிப்படுத்தவும் செய்திருந்தார்கள். தி. ஜானகிராமனின் நண்பர்களும் சக எழுத்தாளர்களுமாக இருந்த கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர்களுடனான உரையாடலில் கிடைத்த தகவல் இந்தத் தீர்மானத்தை எட்ட உதவியது. ‘ ஜானகிராமன் ஒரே இருப்பில் எழுதி முடிப்பார். கதையின் பூரண வடிவம் அவர் மனதுக்குள்ளே இருக்கும். அதைப் பார்த்துக் காகிதத்தில் காப்பி பண்ணுவதுபோல எழுதி முடித்து விடுவார். அப்படியே பத்திரிகைகளுக்கு அனுப்பியும் விடுவார். புத்தகமாக வரும்போதும் பெரிதாக ஒன்றும் மாற்றமிருக்காது’ என்ற தகவல் நினைவுக்கு வந்து உதவியது.
இருந்தாலும் என் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, முதல் பதிப்பை ஆதாரமாகக் கொள்வது என்று முடிவு செய்தேன். அதையொட்டியே காலச் சுவடிலும் ஃபேஸ்புக்கிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கிடைத்த முதல் பதிப்புகள் என் தீர்மானத்துக்கு எதிராக இருக்கவில்லை என்பது பெரும் ஆறுதலைக் கொடுத்தது. சில கதைகளை அவை வெளிவந்த இதழ்களை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தேன். பத்தி பிரிப்பு, அச்சுப் பிழை தவிர வேறு மாற்றங்கள் அநேகமாக இல்லை. கதைகளில் நீக்கல்களோ சேர்க்கையோ இல்லை. விதி விலக்காக ஒரு கதையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ‘தேனீ‘ இதழில் வெளிவந்த ‘ரத்தப் பூ‘ என்ற கதை ‘சிவப்பு ரிக்ஷா‘ தொகுப்பில் சேர்க்கப்பட்டபோது ‘சண்பகப்பூ‘ என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
தி.ஜானகிராமன் மறைந்து ஒரு நூற்றாண்டொன்றும் ஆகிவிடவில்லை. 33 வருடங்கள் என்பது வரலாற்றில் நெடுங்காலமும் அல்ல. ஆனால் இந்தக் காலப் பகுதியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரின் படைப்புகளைத் தொகுப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரும்பாடு பட்டே முதல் பதிப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. வெளியான இதழ்கள் கிடைத்தற்கரியனவாக இருந்தன. இவைதாம் சிரமம் தருவதாக இருந்தன. அதைக் கணிசமான அளவுக்குக் குறைத்துக் கொள்ளப் பலரும் உதவியிருக்கிறார்கள். பல நூலகங்கள் துணை செய்தன.
இந்தக் கேள்வியின் ஒரு பகுதிக்குத் தன்னிலை விளக்கமாகச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். ‘தி.ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பை‘ செம்பதிப்பு என்று குறிப்பிட எனக்குத் தயக்கம் இருக்கிறது. இது முழுமையை நோக்கிய முதல் முயற்சி மட்டுமே. இதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கின்றன. அதைச் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் பணி எனக்குக் கொடுத்திருக்கிறது. நான் ஆய்வாளன் அல்லன். ஆய்வுக்கான முறையான கருவிகள் என்னிடம் இல்லை. ஆய்வுக்கான ‘கல்விப்புலப் பொறுமை’யும் – அகடெமிக் பேஷன்ஸ் – சுத்தமாக எனக்கில்லை. பகுத்து ஆராயும் நுண்மாண் நுழைபுலமும் கிடையாது. இந்தத் தொகுப்பில் என் கருவிகள் எனது வாசிப்பும் ரசனையும் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளும் மட்டுமே. அதனாலேயே இந்தப் பதிப்பை நான் ‘ஆர்வப் பதிப்பு’ என்றே குறிப்பிடுகிறேன். இந்தப் பதிப்பை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் படுத்துவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்புப் பணி அளித்திருக்கிறது.
↧