Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all 182 articles
Browse latest View live

வெல்லிங்டன் - மதிப்புரை

$
0
0
Sunday, January 11, 2015

வெல்லிங்டன்
ஆசிரியர்: சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 275/-

பதின் பருவம் குழப்பங்கள் நிறைந்த பருவம்.  சிறுவனாய் இருப்பதில் உள்ள சாதகங்களை விட்டு விட விருப்பமில்லா  மனதிற்கும், ‘பெரியவனாவதில் உள்ள கட்டற்ற ஆர்வத்திற்கும் இடையிலான ஊசல் நிறைந்த பருவம்.  சின்ன வயதில் கட்டிலுக்கடியில் பேய் ஒளிந்து கொண்டிருக்கிறதோ”, என்று அஞ்சி நடுங்குபவன், அது தேவையற்ற பயம் என்பதை உணரும் தருணத்தில் இழப்பது பயம் நித்தம் தந்த இம்சையை மட்டுமல்ல, ஒவ்வொரு புதிரான இரவையும் எதிர்கொண்டு மீள்வதில் உள்ள சாகசக் களிப்பையும் தான்.  பெரும்பாலானோருக்கு, ஏதோ ஒன்றை அடையும் வேகத்தில், நாம் எதை இழக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லாமல் வாழ்க்கை ஓடி விடுகிறது.  சுருங்கச் சொன்னால் இந்த நாவலின் கரு வளர்தலின் வலி.

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விட வேண்டும்.  இந்த நாவல் இரண்டு வித்தியாசமான பகுதிகளைக் கொண்டது.  முதல் 75 பக்கங்களில், வெல்லிங்டன் ஊர் உருவான கதையை அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர் சுகுமாரன்.  ஒரு நூற்றைம்பது ஆண்டுகளின் வரலாற்றை (1810 1950கள் வரை), தரவுகளுடன் நுட்பமாகச் சொல்லியிருக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒன்றாக ஆனது, வரி வசூல் முறை, சல்லைவன் என்ற பிரிட்டிஷ் கலெக்டரின் முயற்சியால் நிகழ்ந்த நீலகிரி மலையின் முதல் சர்வே, அந்த மலையில் வாழ்ந்த பூர்வ குடிகளான படகர்களின் வாழ்க்கை, அவர்களது ஐதீகம், வெல்லிங்டன் உருவான வரலாறு என நாவல் இறக்கை கட்டிய குதிரையில் சவாரி செய்வதைப் போல விரைவாகச் செல்கிறது. 
ஜான் சல்லிவன் : ஊட்டியை உருவாக்கியவரின் பார்வையில் நாவலின் முதல் பகுதி எழுதப்பட்டுள்ளது.


வெள்ளையர்களின் வருகையால் பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரியின் பூர்வகுடி மக்கள் (படகர்கள்). ஒரு சிலர், “... அது எப்படிச் சரியாகும். அது நேற்று வரை நாம் புழங்கிய பூமி இல்லையா? அதைக் கொத்திப் பண்படுத்தி நாம் தானே பார்த்துக் கொண்டோம்அந்தக் காடுகளிலெல்லாம் நம் கால்தடங்களின் அடையாளம் இருக்கிறதேஅதையெல்லாம் இல்லையென்று சொல்லி விடுவார்களா?”, என்று புலம்புவதைத் தவிரவேறேந்த எதிர்ப்பையும் வெள்ளையர்களிடம் காட்டுவதில்லை. அவர்கள் இருப்பிடத்திற்கு (ஹட்டிக்கு) தெற்கே பாரக்ஸ் உருவாகிறது. அதைச் சுற்றி உருவாகுவதே வெல்லிங்டன், நகரம். நாவலின் இந்தப் பகுதி முழுவதும்,கலெக்டர் சல்லைவனின் பார்வையில், தரவுகளுடன் சொல்லப்படுகிறது.  பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டு, வெள்ளையர் ஆட்சிகால இந்தியாவைப் பற்றித் தரவுகள் நிறைந்த அண்மைக்கால படைப்புகளான காவல் கோட்டம், வெள்ளை யானை, போன்ற நாவல்களின் வரிசையில் இந்தப் பகுதியை வைக்கலாம்.  இது வரவேற்கத்தக்க முயற்சி.  முதல் பகுதியில் தற்கால ஊட்டி உருவாக்கப்பட்ட வரலாறு அழகாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இந்த நாவலைப் படித்தபின்னர், நீங்கள் ஊட்டியை வேறு கண்களினூடாய் பார்ப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜான் சல்லிவன் கட்டிய கல் பங்களா இன்றும் ஊட்டியில் உள்ளது.  (அது அவருக்கு அளித்த சிரமங்களைப் பற்றி நாவலில் படியுங்கள்).


நாவலின் இரண்டாவது பகுதி, வெல்லிங்டன் மக்களின் வாழ்க்கையை ஒரு சிறுவனின் (பாபு) பார்வையில் விரித்துச் சொல்கிறது. ஏகாம்பரப் பிள்ளைத் தெரு தான் பாபுவின் உலகம்.  அந்தத் தெருவில் ஒரு கோடியில் இருக்கும் சரஸ்வதி டீச்சர் முதல், இன்னொரு கோடியில் இருக்கும் அவில்தார் வீட்டின்  பின்னால் இருக்கும் சக்கு வரை அனைவருக்கும் செல்லப்பிள்ளை பாபு.  ஒரு சிறுவனின் உலகத்தை அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார், சுகுமாரன்.  பாபு பட்டத்துக்கு மாஞ்சா தடவுவது, சூட்சம் வைப்பது, பெட் கட்டி பம்பரத்தை கொந்துவது (கொந்துவதற்கு உதவ ரகசியமாய் சாமியிடம் வேண்டிக் கொள்வது), சிகரெட் பெட்டி அட்டையோடு விளையாடுவது, நண்பர்களுடன் சண்டை போடுவது, என ஒரு சிறுவனின் வாழ்க்கையை நம்பகத் தன்மையோடு நம் கண் முன் நிறுத்துகிறார்.  நீங்கள் அறுபதுகளில் பிறந்து, எழுபதுகளில் வளர்ந்தவராக இருந்தால், இந்தக் கதையின் மூலம் நீங்கள் மீண்டுமொருமுறை உங்கள் சிறு வயது வாழ்க்கையை பாபுவின் மூலம் வாழலாம் என்பதில் சந்தேகமில்லை.  சிறுவர்களின் வாழ்க்கை என்றதும் ஆர். கே. நாராயணின் மால்குடி வாழ்க்கையைப் போன்ற சிக்கலற்ற (அல்லது எளிய சிக்கல்கள் கொண்ட) நடுத்தர மக்களின் வாழ்க்கை என்று நினைத்து விடாதீர்கள்.  பாபுவைச் சுற்றியிருக்கும் உலகம் நிறைய சிக்கல்கள் நிறைந்த உலகம்.
நாவலாசிரியர் சுகுமாரன்


வெல்லிங்டன், மிலிட்டரிக் கார்ர்களுக்காக உருவாக்கப்பட்ட ஊர். பூர்வ குடிப் படகர்களும், எஸ்டேட்டில் வேலை செய்யும் மலையாளிகளும், கர்னாடகத்தின் கௌடர்களும், முசுலீம்களும், வட நாட்டில் இருந்து வந்த ராணுவ ஜவான்களும் சேர்ந்து வசிக்கும் ஊர். பாபுவை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு சிக்கலான கதை இருக்கிறது. பாபுவின் அத்தை அம்மு, மாமா கண்ணன், அம்மாயி தேவகி, தேவகியின் கணவன் நம்பியார், அம்மாயியின் உறவு ஜானு, பாபுவின் டீச்சர் சரஸ்வதி, சித்தா, பாபுவின் பக்கத்து வீட்டுப் பெண் விமலா, சக்கு, என அனைவரின் உறவிலும் ஒரு சிடுக்கு இருக்கிறது.  பாபு, இந்த சிடுக்குகளை வளர வளர புரிந்து கொள்வதன் மூலம், கதை விரிகிறது. வளர்ந்தவர்களின் கதையை, ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லும் போது நேரக்கூடிய நெருடலில்லாமல், சொல்லும் ரசவாதத்தை இந்த நாவலில் நிகழ்த்தியிருக்கிறார் சுகுமாரன்.  கதையில், மலையாளமும், படகர்களின் பாஷையும், தெலுங்கும், தமிழும், ஆங்கிலமும், ஹிந்தியும் வலிந்து வராமல், இயல்பாகப் பேசப்படுவது, வெல்லிங்டனின் பிரத்யேக குணத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.
இந்த நாவலில் உள்ள உறவுகளில், பாபுவுக்கும் கண்ணனுக்குமிடையேயான உறவும், பாபுவுக்கும் சித்தாவுக்குமிடையேயான உறவும், பாபுவுக்கும் கௌரிக்குமிடையே உள்ள உறவும் மனதில் நிற்பவை.  தான் பெற்ற குழந்தையாக இல்லாவிட்டாலும் நல்ல தகப்பனாக நடந்து கொள்ளும் கண்ணனின் இயல்பை, பிரதியன்பை எதிர்பாராதிருப்பதை, தள்ளி நின்று அன்பு செலுத்தும் இயல்பை, ஒரு சில வரிகளிலேயே கதையின் ஓட்டத்திலேயே சொல்லி விடுகிறார். பாபுவுக்கும் சித்தாவுக்கும் இடையே உள்ள உறவை நாவலில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  

பாபுவுக்கும், கௌரிக்குமிடையேயான உறவு பிரத்யேகமானது.  அதைப் பற்றி ஓரிரு வரிகளாவது சொல்ல வேண்டும். நாவலின் ஆரம்பத்தில், “முரளிச் சேட்டன் எழுதுனா ஜி எல்லாம் நேரா இருக்கும்.  நீ எளுதுனாத்தான் அதெல்லாம் அழகா வளஞ்சிருக்கும்.  எங்களுக்கு அதெல்லாம் தெரியும்”, எனப் பாபு கௌரியிடம் ஆற்றாமையுடன் சொல்வதிலிருந்து, எனக்கு ஏன் வாட்சை வலது கையில் கட்டினே என்று கேட்கும் பாபுவிடம், “தெரிஞ்சுதாண்டா கட்டினேன்.  யாராவது ஏன் ரைட் ஹேண்டில கட்டீருக்கேன்னு கேட்டா என்னெ நெனச்சுக்குவேல்ல, அதுக்காகத் தான்”, என்று நாவலின் கடைசியில் கௌரி பாபுவிடம் சொல்வது வரைஅவர்களுக்கிடையேயான அன்பை மயிலிறகுத் தூரிகையில், வானவில்லின் வர்ணத்தைத் தொட்டெடுத்து, மென்பட்டில் வரையும் ஓவியனின் நளினத்தோடு, கவனமாக படைத்துள்ளார் சுகுமாரன்.
இந்த நாவல் முதல் வாசிப்பில், பல சிறு கதைகளின் தொகுப்பு போலப் பட்டது.  இரண்டாம் முறை ஊன்றிப் படித்த போது தான், எவ்வளவு கவனமாக, நாவலின் ஒவ்வொரு சரடையும், சிடுக்கையும் கையாண்டிருக்கிறார் எனப் புலப்பட்டது. (எனக்குப் புலப்படாத ஒன்று, கண்ணன் ஏன் தன் குடும்பத்தை விட்டு வந்தார் என்பது ).  நாவலின் முதல் பகுதியில் சல்லைவனின் பார்வையில் சொல்லப்பட்ட வெல்லிங்டனின் உருவாக்கமும், நாவலின் இரண்டாம் பகுதியில் பாபுவை மையமாகக் கொண்ட வெல்லிங்டன் மக்களின் வாழ்வும், முற்றிலும் வேறுபட்ட தளங்கள்.  இது முதலில் கொஞ்சம் திகைப்பாக இருந்தாலும், ஒரு வாசகனாக எளிதில் கடக்கக்கூடிய இடைவெளி தான். 

சுகுமாரனின் எழுத்து ஆர்ப்பாட்டமில்லாத ஆழமான எழுத்து.  சின்னச் சின்னத் தகவல்கள் மூலம், நாவலின் (மிகச் சின்ன) பாத்திரங்களுக்குக் கூட வலு சேர்க்கிறார். யோவ், பிழைப்புக்கு வந்தவனிடம் பிடுங்கித் தின்னால் நமக்குத் தானய்யா பேதி போகும்”, என்று சொல்லும் இன்ஸ்பெக்டரையும், ராமு தாத்தா செத்தவுடன் ஊளையிடும் ஜவான் நாயையும், கூட மையப் பாத்திரங்கலுக்குரித்தான கவனத்தோடு சித்தரித்திருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும் அந்த காலகட்டத்தின் தன்மையை/மாற்றத்தை இயல்பாக சுட்டிக் காட்டுபவையாக அமைவது சிறப்பு.    நாவலை ஊன்றிப் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல விருந்து நிச்சயம்.  

நாவலைப் படித்து முடித்தவுடன் மனம் கனத்தது. எதையோ இழந்து விட்டோம் என்று தெரிந்தாலும், எதை இழந்தோம், என்ற கேள்விக்கு விடை சொல்லத் தெரியாமலேயே பலருக்கு வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது. பதின்பருவ வாசலில் நிற்கும் பாபுவுக்குத் தான் எதை இழந்து விட்டோம்  என்று நன்றாகவே தெரிகிறது நண்பர்கள் ராஜூவையும், நஜீரையும், ராதாவையும், மம்மதுவையும், சரஸ்வதி டீச்சரையும், விமலாக்காவையும், தேவகி அம்மாயியையும், வசந்தாவையும், பம்பரக் காலத்தையும், பட்டக் காலத்தையும், மாரியம்மன் கோயில் முத்துப் பல்லக்கையும், சகாயமாதா தேரையும், ஹெத்தயம்மாவின் பண்டிகையையும்.  “இதையெல்லாம் இழந்து எதை அடையப் போகிறேன்”, என்று தெரியாமல் திகைத்து நிற்கும் பாபுவைப் பார்த்து நம்மால் ஒரு புன்னகை புரிய முடிகிறது.  

நன்றி ; வாசகர் அனுபவம்  Tamil Book reivews    http://baski-reviews.blogspot.in/2015/01/blog-post.html




கமலின் மலையாளப் படங்கள்

$
0
0
திரு. யுவ கிருஷ்ணா, தனது ஃபேஸ்புக் நிலைத்தகவலில் கமல்ஹாசன் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கமல் ஹாசனின் 60ஆம் பிறந்த நாளையொட்டி குமுதம் வெளியிட்ட மலருக்காக நண்பர் மணா கேட்டுக் கொண்டதால் எழுதிய கட்டுரை இது. கட்டுரை கமல்ஹாசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் நண்பர் மணாவிடம்  'இனிமே உங்க சங்காத்தமே வேணாம்'என்று காய்விட்டு விட்டதாக மணா தெரிவித்தார்.

யுவ கிருஷ்ணாவின் தகவலைப் பார்த்து விட்டு அது என்ன கட்டுரை என்று விசாரித்த சில நண்பர்களுக்காக இந்தப் பதிவேற்றம்.





மிழ்ச் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்கள் பலரின் படங்களும் தமிழகத்தில் வெளியாகும் அதே நாளில் கேரளத்திலும் வெளியாகிறது. இதனால் மலையாளப் படங்களுக்குக் கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைப்பதில்லை என்று மாலிவுட் பிரமுகர்கள் புகைந்ததும் உண்டு. மலையாள நட்சத்திரங்களுக்கு இணையாகத் தமிழ் நடிகர்களும்  போற்றப்படுகிறார்கள். கேரளத்தில் ஜவுளிக்கடை திறப்புக்கும் கேரள வியாபார நிறுவனங்களுக்கும் தமிழ் நடிகர்கள் விளம்பரப் புரட்சி செய்கிறார்கள்.ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்குமே கேரளத்தில் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. தங்கள் ரசிகர்கள் பாண்டிக்காரர்களின் அனுதாபிகளாவதைப் பார்த்து மலையாள நாயகர்கள் கைகளைப் பிசைந்து கொள்வதும் வாடிக்கை.

எல்லாமிருந்தாலும் சகல மலையாள ரசிகர்களும் ஒரு தமிழ் நடிகர் மலையாளப் படத்தில் நடிப்பதைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். அந்த நடிகர் - கமல்ஹாசன்.

ஊடக நேர்காணல்களில் ''நீங்கள் மறுபடியும் எப்போது மலையாளப் படத்தில் நடிப்பீர்கள் ?''என்ற கேள்வி கமல்ஹாசனிடம் கேட்கப்படுவது வாடிக்கை. அவருக்குப் பின்னால் சிவாஜி, பிரபு,  பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பசுபதி,தலைவாசல் விஜய், சரத்குமார் போன்ற பல தமிழ்த் திரைமுகங்கள் மலையாள சினிமாக்களில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்  யாரிடமும் இந்தக் கேள்வி கேட்கப் பட்டதில்லை; படுவதில்லை. இந்தக் கேள்விக்கு ஒரே நாயகன் கமல்ஹாசன் மட்டுமே. அவர் நம்முடெ ஸ்வந்தம் ஆளாணுஎன்ற உரிமைபாராட்டுதலே காரணம். அவரும்''நான் இங்கே இருந்து போனவன். அதானால் நிச்சயம் வருவேன்''என்று பதில் சொல்லி ஆசை காட்டிக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் தன்னையறியாமல் மலையாளத் திரையுலகத்துக்குச் செய்த முதன்மையான பங்களிப்பு ஒன்று இருக்கிறது.கேரளத்தின் முந்தைய தலைமுறை நடிகர்களான சத்யனுக்கும் பிரேம் நசீருக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் பெரிதாக ரசிகர் மன்றங்கள் இருந்ததில்லை. புதிய தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின்புதான் ரசிகர் மன்றங்கள் முளைத்தன. ஆரம்பத்தில் மோதிக் கொண்டிருந்த மம்மூக்கா ரசிகர்களும் லாலேட்டன் ரசிகர்களும் கமல்ஹாசன் ரசிகர்களைப் பார்த்துத்தான் மனந்திருந்தினார்கள் என்று சொல்லலாம். வெறும் ரசிகர் மன்றங்களாக இருந்தவை இன்று நற்பணி மன்றங்களாக உருமாறியிருக்கின்றன.

கமல்ஹாசனை 'சொந்த ஆளா'க மலையாளிகள் நினைக்கிறார்கள். வேறு எந்தப் பிற மொழி நடிகரும் அவர் அளவுக்கு மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. கிட்டத்தட்டநாற்பது படங்கள். குழந்தை நட்சத்திரமாகக் 'களத்தூர் கண்ணம்மா'வில் அறிமுகமானது 1959இல். அடுத்த மூன்று வருடங்களுக்குள் 'கண்ணும் கரளும்'மலையாளப் படத்தில் அறிமுகமானார். இது வெறும் அறிமுகமாக இருக்கவில்லை. மலையாள சினிமாவின் மகா நடிகர் என்று இன்றும் பாராட்டப்படும் சத்யன் கதாநாயகனாக நடித்த படம். அன்றையமறுமலர்ச்சி நாடக ஆசிரியரான கே.டி.முகம்மதின் திரைக்கதை வசனம். எம்.பி.சீனிவாசனின் இசை. வயலார் ராமவர்மாவின் பாட்டுகள். எல்லாவற்றுக்கும் மேலாக மலையாளிகளின் சினிமா ரசனையைப் பேணிய கே.எஸ். சேதுமாதவனின் இயக்கம். இந்த வலுவான பின்னணியை அன்றைய ஒன்பது வயதுச் சிறுவன் கமல்ஹாசன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது சினிமா வாழ்க்கையை அது மறைமுகமாகப் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கமல்ஹாசன் முதலில் கதாநாயகன் ஆனதும் மலையாளத் திரையில்தான். 1975இல் வெளிவந்த 'கன்யாகுமாரி'படத்தில். அதற்கு முன்பும் அதற்குப் பின்பு 'பட்டாம் பூச்சி'வரையிலான தமிழ்ப் படங்களில் அவர் சிறு வேடங்களில்தான் நடித்திருக்கிறார். கதாநாயகனின் நண்பனாக. துணைக் கதாநாயகனாக. அல்லது தனி நடிப்புக்கு எந்த முக்கியத்துவும் இல்லாத பாத்திரங்களில்தான் அவர் தோன்றியிருக்கிறார். அவரைக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய அதே சேதுமாதவனே அவரைக் கதாநாயகன் ஆக்கினார்.

மலையாளத்தின் பெரும் எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயரின் திரைக் கதை. புனே பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் நடிப்புப் பயின்ற ரீடா பாதுரி நாயகி. எம்.பி. சீனிவாசன் இசை. மறுபடியும் ஒரு லெஜன்டரியான கூட்டணியின் பின்புலத்தில் அரங்கேறினார். இந்த வாய்ப்பு அவருக்கு சினிமாவின் துடிப்பைக் கற்றுக் கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.அதற்கான வயதும் இளமை வேட்கையும் அவரிடம் இருந்தன.

ஒருவிதத்தில் கமல்ஹாசனை மலையாளப் படங்கள் வரவேற்றதும் அந்த இளமைக்காகத்தான். அவர் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த அந்தக் கட்டத்தில் அவர் அளவுக்குஇளமையான மலையாள நடிகர்கள் இருக்கவில்லை. மலையாளத்தின் முன்னணி நாயகர்களான சத்யன், பிரேம் நசீர், மது எல்லாரும் நடுத்தர வயதை எட்டியிருந்தார்கள். மேக் அப் கலைஞரின்  உபயத்தில் இளைஞர்களாகத் துள்ளிக் கொண்டிருந்தார்கள். இளம் நாயகர் களாக அறிமுகமான எம்.ஜி.சோமன். சுகுமாரன் ( பிருத்விராஜின் அப்பா ), ஜெயன் ஆகியவர்கள் அறிமுகமானபோதே முதிர் இளைஞர்கள்.  மம்மூட்டியும் மோகன்லாலும் வரும்வரை மாலிவுட்டில்  நிலவிய இளமைப் பஞ்சத்தைப் போக்கியவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த இரண்டாவது மலையாளப் படம் விஷ்ணு விஜயம். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த படத்தின் நாயகி ஷீலா. கமலை விடப் பதினோரு வயது மூத்தவர். படத்தின் கதையும் ஒரு பெண் தன்னை விட வயது குறைந்த இளைஞனைக் காதலிப்பது பற்றியதுதான் என்பதால் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருந்தது. கிட்டத்தட்ட முப்பது வயதை எட்டியிருந்த ஷீலா மிக இளமையாகத் தென்பட உதவியது கமல்ஹாசன் என்பது வேடிக்கை; ஆனால் உண்மை.

பொதுவாக முன்னணிக் கதாநாயகர்கள் திரையில் தங்களை வாலிபர்களாகக் காட்டிக் கொள்ள இளம் நடிகைகளையே தேர்ந்தெடுப்பது இந்திய சினிமாவில் வழக்கம். அதை மாற்றிய பெருமை நம்மவருக்கு உண்டு. ஜெயசுதாவும் ஸ்ரீதேவியும் வரும் வரை  கதாநாயகிச்  சேச்சிகளை யௌவனமானவர் களாகத் தோன்றச் செய்தவர் கமல்ஹாசன். அவருடன் நடித்த நாயகிகளின் வரிசையைப் பார்த்தால் இது விளங்கும். விஷ்ணு விஜயத்தில் ஷீலா, அப்பூப்பன்படத்தில் ஜெயபாரதி, பொன்னியில் லட்சுமி. மலையாளத்தில் அவருடைய இளமைக்கு ஈடு கொடுத்த படம் என். சங்கரன் நாயர் இயக்கிய 'மதனோத்ஸவம்'.எரிச் சீகாலின் 'லவ் ஸ்டோரி'என்ற பிரபலமான கதை கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் நகலெடுக்கப்பட்டது. அதன் மலையாள வடிவமான மதனோத்ஸவத்தை வெற்றி பெறச் செய்தது கமல் - ஜரினா ஜோடியின் இளமை.

கிட்டத்தட்ட இந்தக் காலக் கட்டத்தில் மலையாள சினிமா மாற ஆரம்பித்திருந்தது. கதாநாயக பிம்பமும் மாறத் தொடங்கியது. 1971இல் சத்யன் நடித்த அனுபவங்கள் பாளிச்சகள்என்ற படத்தில் தலைகாட்டிய மம்மூட்டி ( அந்தப் படத்தில் அவருக்கு டைட்டில் கிரெடிட் இல்லை)  1979இல் வெளியான 'தேவலோகம்'படத்தின் மூலம் கவனத்துகுரிய நடிகரானார். இந்த அறிமுகங்களில்  ஒரு சுவாரசியம் இருக்கிறது. கமல்ஹாசனை அறிமுகப்படுத்திய சேதுமாதவன் தான் மம்மூட்டியை அரங்கேற்றுகிறார். கமல்ஹாசனுக்கு நாயக அந்தஸ்தைக் கொடுத்த திரைக்கதையை எழுதிய எம்.டி.வாசுதேவன் நாயர்தான் மம்மூட்டிக்கும் திரைக்கதை எழுதி இயக்குகிறார். 78இல் அறிமுகமானாலும் 80இல் வெளிவந்த 'மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்'மூலம் வில்லனாகக் கவனம் பெற்ற மோகன்லால் விரைவில் மலையாள இளமையின் அடையாளாமாக மாறினார். இந்த இரு சுதேச இளைஞர்களின் வருகைவிருந்தாளி கமலின் இளமைக்கு முடிவு கட்டியது. அதற்குள் கமல்ஹாசன் தமிழ்த் திரையின் முக்கிய ஆளுமையாக மாறிவிட்டிருந்தார்.

1980 - 90வரை கமல்ஹாசன் நடித்த மலையாளப் படங்களின் எண்ணிக்கை 6. இவற்றில் 1989இல் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'சாணக்கியன்' படம் மட்டுமேஅவரை மலையாள ரசிகர்களின் நினைவில் நிறுத்துகிறது. மற்ற ஐந்து படங்களும் ரசிகர்களின் மொழியில் 'பொட்டப் படங்கள்'தான். மம்மூட்டியும் மோகன்லாலும் உருவாக்கிய புதிய சினிமாப் பார்வைக் கலாச்சாரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு அவ்வளவு முக்கியத்துவமில்லாமல் போனது. அதற்கு மாறிய சூழல் ஒரு காரணம். கமல்ஹாசனும் ஒரு காரணம்.சேதுமாதவன், எம்.டி. வாசுதேவன் நாயர், ஐ.வி சசி போன்றவர்களின் படங்களில் நடிக்க முடிந்த கமலுக்கு அன்றைய சீரிய இயக்குநர்களான பரதன், பி. பத்மராஜன், கே.ஜி.ஜார்ஜ் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கமலின் நடிப்பில் ஆரம்பத்தில் இருந்த கலைத்தன்மையுள்ள இன்னொசென்ஸ் பின்னர் காணாமற்  போனது ஒரு காரணம்.  அவர் ஏற்கும் எல்லா வேடங்களிலும் கதாபாத்திரத்தின் மன நிலையை முந்திக் கொண்டு 'கமல்ஹாசன் இந்தப் பாத்திரத்தைச் செய்கிறார்'என்ற துருத்தல் வெளிப்பட்டு விடுவது இன்னொரு காரணம். அதை விட அவர் இதற்குள் துருவ நட்சத்திரமாக எட்டாத் தொலைவுக்குச் சென்றிருந்தார். அவரை வைத்துப் படமெடுப்பது கச்சிதமான பட்ஜெட்டில் சினிமா தயாரிக்கும் மலையாளிகளால் முடியாத காரியம்.

மலையாள சினிமா ஒரு மாற்றத்துக்கு உள்ளான  கால கட்டத்தில் அதில் நடித்தவர் கமல்ஹாசன். கேளிக்கைப் படங்களிலும் பாராட்டத் தகுந்த கலை அம்சங்கள் இருந்த படங்கள் உருவான காலம். கன்யாகுமாரியில் கேளிக்கை நடிப்புக்கும் கலைத்தன்மைக்கும் இடமிருந்தது. ஐ.வி சசி இயக்கிய 'ஈட்டா'படத்திலும் அந்தத் தன்மை இருந்தது. கமல்ஹாசன் முதன் முதலில் மேக் அப் சோதனை செய்து பார்த்த படம் ஏ.வின்சென்ட் இயக்கிய 'வயநாடன் தம்பான்'. நூறு வயதுக் கிழவனின் ஒப்பனையில் கமல் நடித்திருந்தார். அந்தப் படமும் கேளிக்கை நடிப்பின் சாதகங்களைக் கொண்டிருந்தது. அவரது நாயக நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'சாணக்கியன்'கமலின் கேளிக்கை நடிப்பின் உச்சம். கலைத்தன்மையுள்ள படங்களில் காட்டும் நடிப்புக்கும் வெறும் பொழுது போக்குப் படங்களின் நடிப்புக்கும் இருக்கும் வித்தியாசத்தை மலையாளத் திரையுலகுக்கு மறைமுகமாகக் கற்பித்தவர்கமல்ஹாசன். மலையாளிகள் ஒப்புக் கொண்டாலும் மறுத்தாலும் இது நிஜம். சத்யனும் பிரேம் நசீரும் மதுவும் எம்.ஜி.சோமனும் எந்தப் படத்தில் நடித்தாலும் அவர்களது  நடிப்புக்குத் தனித்தன்மை இருப்பதில்லை. கேளிக்கைப் பட நடிப்பும் சீரியஸ் பட நடிப்பும் அதிகம் வித்தியாசமில்லாமலிருந்தன. மலையாளத்தின் எவர் கிரீன் ஹீரோவான பிரேம் நசீரின் நடிப்பு பொழுது போக்குப் படமான 'சி.ஐ.சி நசீரிலும் சீரியஸ் படமான 'இருட்டின்டெ ஆத்மா'விலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். முன்னத்தில் கொஞ்சம் ஓவர். பின்னதில் அடக்கிய வாசிப்பு. இந்த இருவகை நடிப்புக்கும் வேறுபாடு இருப்பதைக் கோடிட்டுக் காட்டியவர் கமல்ஹாசன். இதைத் தெரிந்தோ தெரியாமலோ இன்றைய மலையாளநடிகர்கள் பின்பற்றுகிறார்கள். மம்மூட்டி , மோகன்லால் முதல் பிருத்விராஜ், ஃபஹத் பாசில், துல்கர் சல்மான் வரையான மலையாள நடிகர்கள்.

தான் கற்றுக் கொடுத்த பாடத்தை வாத்தியாரே மறந்ததுபோல இந்த வகைப்பாட்டை மறந்திருப்பவர் கமல்ஹாசன். கேளிக்கைப் படங்களில் கதாநாயகன் முக்கியம். அவனுடைய இமேஜ் முக்கியம். அதை வைத்தே படம் உருவாக்கப்படுகிறது. மாற்றுப் படங்களில் பாத்திரமே பிரதானம். அங்கே நடிகனின் பிம்பத்துக்கு எந்தத் தேவையுமில்லை. ஆனால் கமல்ஹாசன் ஏற்கும்  வேடங்களில் அந்தப் பாத்திர தர்மத்தை மீறிக் கமலும் எட்டிப் பார்க்கிறார். சமீபத்திய உதாரணம் 'உன்னைப் போல் ஒருவன்'. பெயர் சொல்லப் படாத சாதாரண மனிதன் பாத்திரம் கமலஹாசனுக்கு. ஆனால் திரையில் நாம் பார்ப்பது சகலகலா வல்லவரான கமலஹாசனை. அந்த சாதாரணனை மீறித் தெரியும் உலக நாயகன் பிம்பத்தை. அப்படியல்லாத ஒரு பாத்திரத்தைச் செய்ய முடியும்போது கமல்ஹாசனை மறுபடியும் மலையாளத் திரையில் பார்க்க முடியும். அதற்கான வாய்ப்ப்பு அவர் காலடியில் இருக்கிறதுஇப்போது. த்ருஷ்யம்படத்தின் தமிழ் ரீமேக். மலையாளப் படத்தில் ஒரு ப்ரேமில் கூட மோகன்லாலைப் பார்க்க முடிவதில்லை. நாம் பார்த்தது நாலாம்  கிளாஸ்காரன், கேபிள் டிவி ஆப்பரேட்டர் ஜோர்ஜ் குட்டியைத்தான். 'பாபநாசம்'படத்தில் நாம் பார்க்கப் போவது யாரை? கமல்ஹாசனின் சுயம்புலிங்கத்தையா? சுயம்புலிங்கத்தின் கமல்ஹாசனையா?
 இந்தக் கேள்விக்குக் கிடைக்கப் போகும் பதில்தான் கமல்ஹாசன் மலையாள சினிமாவிலிருந்து பெற்றது என்ன, அதற்குக் கொடுத்தது என்ன என்பதைத் தெளிவுபடுத்தும்.
@
நன்றி: குமுதம் - கமல் 60 சிறப்பு மலர் 2014.








ச ர் ப் ப ம்

$
0
0
            ச ர் ப் ப ம் 



துலாவர்ஷ மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்த நாட்களில் தாமதமாக  வெயில் படர ஆரம்பித்த  ஒரு வெள்ளிக் கிழமை நண்பகல் வேளையில், அது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள்  ஊர்ந்து நுழைந்தது. ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியின் பின் புற வழியாக நுழைந்ததால் அதை யாரும் கவனிக்கவில்லை.


புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி இருப்பது புதுக்காடு மார்க்கெட் சந்திப்புக்குப் பக்கத்தில். பழைய ஒரு நாலுகெட்டு வீடு. வீட்டுக்குமுன்னாலும் பின்னாலும் சௌகரியமான திறந்தவெளி. வீட்டைச் சுற்றியுள்ள மதில் அங்கங்கே இடிந்து குட்டிச் சுவராக மிஞ்சியிருந்தது. முன் வாசல் பழுது பார்த்து முடித்து பட்டுவாடா செய்யக் காத்திருக்கும் வாகனங்களுக்காக. பின் வாசல் புதிதாக சிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வண்டிகளுக்காக. இரண்டு இடங்களிலும் வண்டிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக நீல நிற டார்பாலின் பந்தல் இழுத்துக் கட்டியிருந்தது.பின்வாசல் படியருகில்தான் பையன்கள் வாகனங் களிலிருந்து கழற்றி எடுத்த துருவும் கசடும் ஏறிய திருகாணிகளையும்  மரைகளையும் மோட்டார் சைக்கிள் செயின்களையும் பேரிங்குகளையும் மண்ணெண்ணெய் ஊற்றிய இரும்புச் சட்டியில் ஊற வைப்பார்கள். படியில் உட்கார்ந்து அவற்றைச் சுத்தம் செய்வார்கள். படிக்குப் பக்கத்திலேயே சட்டியை வைத்திருப்பார்கள். மழைபெய்கிறபோது கூரை ஓட்டிலிருந்து சொட்டிச் சொட்டி சட்டியில் நீர் நிரம்பும். அதன் மேற் பரப்பில் வானவில் நிறத்தில் ஒரு படலம் மிதக்கும். ஆட்டோ மொபைல் ஆஸ்பத்திரியை காலையில் வழக்கமாகத் திறக்கும்  போக்கு என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படும் வினுவுக்கு  மழை இரவுக்கு அடுத்த நாள் அந்த எண்ணெய்ச் சரிகையை  ரசித்துப் பார்ப்பதுதான் முதல் வேலை. சிறு காற்று வீசியதும் சரிகை பளபளப்புடன் நலுங்கும்.சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குள் முதலாளியின் குரல் கேட்பதும் அவசரமாக சட்டியை எடுத்து தண்ணீரைக் கொட்டுவதும் வழக்கமாக நடக்கும். மண்ணில் விழுந்த சரிகை கசங்கி உருக்குலைந்து அழிவதைப் பார்க்கும் போதெல்லாம் போக்குக்கு ஏனென்று தெரியாத சங்கடம் வரும்.   

வெள்ளிக் கிழமை மத்தியான்னம் அது ஊர்ந்து  மண்ணெண்ணெய்ச் சட்டியைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளே நுழைந்தது. ஊரும்போது அதன் சரீரம் உரசி சரியாக வைக்கப்படாத சட்டி கொஞ்சம் அலுங்கியது. நீர்மேல் மிதந்திருந்த வானவில் படலம் நொறுங்குவதற்குள் அதன் சரீரம் சட்டிப் பிரதேசத்தைக் கடந்திருந்தது. 'நல்ல காலம். அதுமட்டும் நொறுங்கி யிருந்தால் நான் அனுமதியில்லாமல் உள்ளே பிரவேசித்ததை யாராவாது கண்டு பிடித்திருப்பார்கள்'என்று டம்பமாக நினைத்துக் கொண்டது அது. அப்படி யோசித்தததற்கும் காரணம்  ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே 'அந்நியர்க்குப் பிரவேசனமில்ல'என்ற மலையாள அறிவிப்பு தொங்க விடப்பட்டிருந்தது. ஆனால்,மழை ஊறிய மண்ணில் ஊர்ந்து வந்ததால் பின் வாசல் நிலைப்படியையொட்டிய கருப்பு கிரானைட் தரையில் கொஞ்ச நேரத்துக்கு தனது நெளிவின் ஈரம் பதிந்திருந்தது அந்த அசடுக்கு ஞாபகமில்லா மலிருந்தது. உண்மையில் அது அதிருஷ்ட ஜென்மம்தான். அன்று காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்ததால் உச்சி வேளைக்குப் பிறகுதான் போக்கு வேலைக்கு வந்தான். அவன் வருவதற்குள் வெயில் ஏறி விட்டதில் நீர்ச் சுவடு மறைந்து விட்டிருந்தது. அவன் மட்டும் அது நுழைவதற்கு முன்பே வந்திருந்தால் அத்துமீறலைக் கண்டு பிடித்திருக்கக்கூடும். ஏனெனில் போக்கு எப்போதும் நிலத்தைப் பார்த்தே நடப்பவன்.

இந்த ஊடுருவல் நடைபெறும்போது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி உரிமையாளன் ஜேக்கப் சக்கரியா என்ற கரியாச்சன் உள்ளேதான் இருந்தான். மழை சற்றே விட்டிருந்த  வியாழக் கிழமை முற்பகலில் ஜோலி தீர்த்து வெள்ளிக் கிழமை  டெலிவரி கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டருக்கு ஸ்பார்க் பிளக் வாங்குவதற்காக தகரப் பறம்பு மார்க்கெட்டுக்குப் போயிருந்தான். வாடிக்கையாகப் போகும் எல்லாக் கடைகளிலும் விசாரித்தும் சாதனம் கிடைக்கவில்லை. 'எந்தரு கரியாச்சா, மார்த்தாண்ட வர்ம மகாராஜா காலத்தெ வண்டிக்கு இப்ப  ஸ்பேர் கிட்டானா?'என்ற கேலி வார்த்தைகள் மட்டும் கிடைத்தன.அதற்கிடையில் ஓய்ந்திருந்த மழை உஷாராகப் பொழிய ஆரம்பித்தது. இந்த மழையில் பஸ்ஸுக்குக் காத்திருந்து புதுக்காடு போய்ச் சேர்ந்தாற்போலத்தான் என்று அலுத்துக் கொண்டான். அலுப்பு வாயைக் கசப்பாக்கியது. கசப்பைத் துப்பும்போது 'தள்ளே, நசிச்ச  மழ'என்று சபித்தான். ஒரு வீச்சுக்குப் பிறகு மழை பொடித் தூறலாக விழத் தொடங்கியது. நின்றிருந்த கடையை விட்டு இறங்கி சாலையில் கால் வைத்ததும் 'சபிக்கவா செய்கிறாய் புல்லே'என்ற ஆக்ரோஷத்துடன் மழையின் சாட்டை கரியாச்சனின் முகத்தில் அடித்தது. 'எந்தொரு நசிச்ச திவசம்?'என்று காலத்திடம் புகார் சொல்லிக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தான்.  பதினொரு மணி இருபது நிமிடம். தன்னை சபித்தவனுக்கு அந்தச் சாட்டையடியே போதுமான தண்டனை என்று தீர்மானம் செய்தது போல மழை சுத்தமாக நின்றிருந்தது. பழவங்காடி வழியாக நடந்து கிழக்கே கோட்டை வெளி வாசல்  தட்டுக் கடையில் கட்டன் குடித்தான். மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தான்.  இருபத்தியேழு. நேராக அட்டக்குளங்கரை ஸ்ரீபாலா தியேட்டருக்குள் நுழைந்தான். டிக்கெட் எடுத்த பிறகு வெளியே வந்து சுவரொட்டியைப் பார்த்தான். 'கின்னாரத் தும்பிகள்'போஸ்டரில் ஒரு பையன்மேல் உடம்பைக் கிடத்தியிருந்த ஷகீலா கரியாச்சனைப் பார்த்துக் கண்களால் சிரித்தாள். 'ஒந்நு வேகம் வா, கரியாச்சா'என்றாள். 'தன்னே'என்று சொல்லும்போது தன்னையறியாமலே வேகமாக நடப்பதை  உணர்ந்தான்.

படம் ஓடிக் கொண்டிருந்தது. இருட்டில் துளாவி சீட்டில் உட்கார்ந்தபோது உடம்பில் அலாதியான வெதுவெதுப்புத் தோன்றியது. தணுப்பிலிருந்து உஷ்ணத்துக்குள் வந்ததாக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே கரியாச்சனின் கண்கள் மூடிக் கொண்டன. காதருகில் விரகம் தகிக்கும் குரலைக் கேட்டதும் விழிப்புத் தட்டியது. சிவப்பு ரவிக்கையும் நீல லுங்கியும் உடுத்து கட்டிலில் படுத்திருக்கும்  ஷகீலா வெள்ளை பனியனும் சாய வேட்டியும் அணிந்து தரையில் பாய்விரித்துப் படுத்துக் கிடக்கும் சஞ்சுவின்மேல் தாபத்துடன் புரண்டு கொண்டிருக்கிறாள். 'சேச்சி, தப்பாக்கும்' என்கிறான் சஞ்சு. 'ஆமா ,தப்புதான்,எடா மோனே, தப்பு செய்யாத்தவர் ஆராடா?'என்று ஷகீலா கரியாச்சனிடம் சொன்னாள். ஷகீலா சஞ்சுவிடம் செய்யும் அதே தப்பைத்தான் தன்னிடம்  பக்கத்து வீட்டு தீனாம்மச் சேச்சி செய்கிறாள் என்பது நினைவுக்கு வந்ததும் கரியாச்சனின் முதுகெலும்பு விறைத்தது.ஷகீலா சொல்வதுபோல தீனாம்மச் சேச்சி சொல்லியிருந்தால் அவள் தன்மீது கவிழ்கிற வேளைகளில் இன்னும் ஆசுவாசமாக இருக்கும். ஷகீலா அந்த வார்த்தைகளைச் சொல்லுகிறபோது சஞ்சுவின் கண்களும் தன்னைப் போலவே மூடியிருப்பதைக் கவனித்தான்.வாஸ்தவத்தில் சஞ்சு கண்களை மூடிக் கொண்டிருக்கிறானா என்று  தெரிந்து கொள்ள  மேட்னிக் காட்சி யையும் ஷகீலா 'மோனே, தெற்று செய்யாத்தவர் ஆராடா?'  என்று கேள்வியாக இல்லாமல் சம்மதம்போலக் கொஞ்சுவதைக் கேட்க ஈவினிங் ஷோவையும் பார்த்தான்.

படம் முடிந்து திரையரங்க வளாகத்திலேயே  படம் பார்க்க நிற்பதா இல்லை திரும்பிப் போவதா என்ற தீவிரமான சிந்தனையில் சட்டைப் பைக்குளிருந்த கைப்பேசியை ஆன் செய்து  ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி எண்ணில் அழைத்தான் கரியாச்சன். தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக இருப்பதால் சிறிது நேரத்துக்குப் பிறகு தொடர்பு கொள்ளவும் என்ற பெண்குரல் தீனாம்மாச் சேச்சியுடைய குரல்போலவும் ஷகீலாவின் குரல் போலவும் இருப்பதாகக் அவனுக்குத் தோன்றியது. அதே சமயத்தில் தான் இவ்வளவுநேரம் கைப்பேசியை அணைத்து வைத்திருந்ததும் ஞாபகம் வந்தது.'ஈ ஷகீலடெ மாயம்'என்று செல்லமாக வைதுகொண்டிருந்த போது கைப்பேசி 'தாமசமெந்தே வருவான் ப்ராணசகி என் டெ முன்னில்'என்று பாடி அழைத்தது.பொத்தானை அமுக்கிக் காதருகில் கருவியைக் கொண்டு போனான். போக்குதான் கூப்பிட்டான்.

'அண்ணனெ எத்தன நேரமா க் கூப்புடறேன். எங்கெ நிக்கறீங்க? அந்த  லாம்ப்ரெட்டா ஓணரு வந்து கலிப்பாக்கிட்டு போனாரு அண்ணன் இப்ப வரத்தில்லே?''என்று கேட்டான்.

கரியாச்சன் அவனை அடங்கியிருக்கச் சொல்லிவிட்டு கைப் பேசியை சட்டைப்பைக்குள் போட்டான். திரையரங்க வாசலைத் தாண்டும்போது'கரியாச்சன் போவாணோ?'என்று தீனாம்மச் சேச்சியின் குரலில் போஸ்டரிலிருந்து ஷகீலா கேட்டாள். அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே 'போகாமல் முடியுமா?'என்று கிழக்கேகோட்டை பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.

பத்து மணிக்கு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியை அடைந்தபோது பூட்டியிருந்தது. போக்கு உத்தரவாதித்துவமுள்ள வேலைக்காரன். கரியாச்சன் வெளியே போகும் நாட்களில் செய்வதுபோல வாசல் கதவைப் பூட்டி சாவியை முன் அறை சன்னல் திட்டில் வைத்து கதவை ஒருக் களித்துச் சாத்தியிருந்தான். சாவியை எடுத்துத் திறந்து உள்ளே நுழைந்த போது அம்மச்சியின் புன்னகை மாதிரியான குண்டு பல்பின் வெளிச்சமும் அப்பச்சனின் வசவுபோன்ற இரும்பு வாசனையும் அவனைத் தயங்கச் செய்தன. 'தே, மனுஷ்யா, நீங்க பையன ஒண்ணும் சொல்லாதீங்க'என்று வெளிச்சம் வாசனையை வேண்டிக் கொண்டது. வாசனை காட்டமாக எதையோ சொல்ல வருவதற்குள்  மழைக் காற்று வாசலைத் தாண்டி வந்தது. இரும்பு வாசனை மட்டுப்பட்டது. குட்டையான டினோசார்களின் எலும்புக் கூடுகள்போல நிறுத்தி வைத்திருந்த புல்லட்டுக்கும் யமாஹாவுக்கும் இடையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான் கரியாச்சன். ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்த களைப்பில் கண்கள் திரையிறங்கின.

சற்றுத் தள்ளி எண்ணெய்க் குளியல் முடித்துச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் செயின்களுக்கிடையிலிருந்து அது தலையை ஒரு நொடி தூக்கிப் பார்த்து'என்டெ பகவதி காத்து'என்று பெருமூச்சு விட்டது.

'எடா கொச்சனே, ஒரு பொன்னு மோனும் இந்த  தாக்ஷாயணி கையிலேருந்து தப்பிச்சதில்லஎன்ற சம்பாஷணம் சஞ்சுவிடம் ஷகீலா சொன்னதா இல்லை தீனாம்மச் சேச்சி தன்னிடம் சொன்னதா என்ற குழப்ப யோசனையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது 'என்டம்மோ 'என்ற அலறல் கேட்டது. தன் மேலிருந்து யாரை உதறித் தள்ளினோம்,தாக்ஷாயணி பாத்திரமான ஷகீலாவையா இல்லை தீனாம்மச் சேச்சியையா  என்ற சந்தேகத்துடன் கரியாச்சன் கண்களைத் திறந்ததும் மத்தியான வெயில் இமைகளுக்குள் இருட்டை நிறைத்தது. தள்ளாட்டத் துடன் நின்று லுங்கியைச் சரி செய்யக் கைகளை நீட்டியதில் குட்டை டினோசர்கள் இரண்டும் உலோகக் கூச்சலுடன் சரிந்தன. அந்தச் சந்தடியில் செயின்களுக் கிடையில் பதுங்கியிருந்த அது 'தேவீ, ஈ கழுகன் மாருடெ கண்ணில் பெடாதெ என்னெ  ரட்சிக்கணே'என்று முணுமுணுத்துக் கொண்டு சரசரத்து ஓடியது.

''தே அண்ணா, அது எழஞ்சு போகணு?''என்று கத்தினான் போக்கு. நிதானத்துக்கு வந்த கரியாச்சன் கால்களை எட்டி வைத்துத் துள்ளினான்.

''எந்தொரு நீளமாண்ணா, தா அங்கெ , பெட்ரோல் கன்னாசின்ட அப்புறத்து''  கழற்றி அடுக்கி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் சக்கரங்களின் மேலே பாதுகாப்பாக நின்று கொண்டு கூவினான் போக்கு.

போக்கின் முகத்தையும் நிற்பையும் கூவலையும் உள் வாங்கிக் கொண்ட நொடியில் கரியாச்சனின் முகம் வியர்த்தது. பயத்தில் போக்கைப் பார்த்துக் கத்தினான். ''நின்னு செலய்க்காதெ ஆரெயெங்கிலும் விளிச்சோண்டு வாடா''4

வழக்கமாகவே தரையைத் துப்பறியும் போக்கின் கண்கள் பயத்தில் இன்னும் விரிந்தன. காலடியில் கிடக்கும் புழுவைக் கொத்தக் குனியும் கொக்குபோல உடலை வளைத்து சக்கர அடுக்கின் கீழே கவனமாகப் பார்த்தான். எதுவும் இல்லை என்று கண்கள் இயல்பான அளவுக்குச் சுருங்கியதும் தரையில் குதித்தான். அப்புறமும் முன்னங்காலில் நின்று அகலமாக எட்டுவைத்து வாசல் கதவருகில் போய் கால்களை ஊன்றினான்.

''அண்ணா அவன் இங்கேதான் உண்டு. நான் ஆரெயாவது கூட்டிட்டு வறேன் ''  என்று ஓடினான்.

நின்ற இடத்திலிருந்தே கரியாச்சன் சுற்றிலும் பார்த்தான். செயின்கள்.  கழற்றிப் போட்ட கேபிள்கள், பெட்ரோல் டியூபுகள் எல்லாம் நெளிந்து ஊர்வதுபோலத் தெரிந்தன. போக்கு இருந்தபோது இருந்த பயத்தை விட இப்போது பயம் அதிகமானதுபோலிருந்தது. 'கர்த்தாவே, இதென்னா  தொந்தரவா? 'என்று சங்கடப்பட்டான். கண்களை மூடிமூடித் திறந்து பார்த்தும் அது தென்படவில்லை. போக்கு சொன்னது உண்மைதானா என்று கூட சந்தேகப்பட்டான். சந்தேகம் என்று வந்த பின்பு ஆதாரங்களை வைத்து நிவர்த்தி செய்யாமல் முன் நோக்கிச் செல்வது சரியல்ல. சொற்ப நேரத்துக்கு அதைப் பற்றி யோசிக்காமல் இருப்போம் என்று யோசனை யின் ஹாண்டில் பாரை வேறு திசையில் திருப்பினான். ஆனால் அவனை ஏமாற்றி யூ டர்ன் அடித்து தொடங்கிய இடத்துக்கே வந்தது யோசனை. யோசனையை விட ஞாபகங்களை விசுவசிக்கலாம் என்று நேற்றுப் பார்த்த காட்சிகளை இமைக்குள் ஓடவிட்டான். 'எடா, மோனே ஈ தாக்ஷாயணியுடே கையில் நின்னும் நீ ரக்ஷப்பெடில்லா'என்ற வசியக் குரல் கால் பெரு விரலிலிருந்து ஊர்ந்து மேலே ஏறி வந்தது,முகத்தை நெருங்கி உதடு களைக் கொத்தியது. கண்களை விழித்துப் பார்த்த இடத்தில் எண்ணெய்க் கறைபடிந்து கருமையேறிக் கிடந்த பனியன் வேஸ்டு அசைந்தது.

''அய்யோ''என்று பெருங்குரலில் கத்திக் கொண்டு உயிரையும் லுங்கி முனையையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தாவி வாசலில் வந்து தடுமாறி நின்றான் கரியாச்சன். ஓடும்போது அவனுடைய கால்களில் பட்டுத் தெறித்த பத்தாம் நம்பர் ஸ்பேனர் பனியன் வேஸ்டுக்குப் பக்கமாக சத்தமில்லாமல் விழுந்தது. அந்த அதிர்வில் அது உஷாராகி 'இவன்மாரு ஜீவிக்கான சம்மதிக் கத்தில்ல'என்று புலம்பிக் கொண்டு உயிரை இழுத்துக் கொண்டு வேகமாக ஊர்ந்து மறைந்தது.

அவனுடைய கூச்சலைக் கேட்டு பக்கத்து மாவேலி ஸ்டோரிலிருந்து சிவன் குட்டியும் பார்பர் ஷாப்பிலிருந்து ஹரியும் தள்ளுவண்டியில் துணி தேய்த்துக் கொண்டிருந்த முத்துவும் ஓடி வந்தார்கள்.  வழிப்போக்கர்களும் வந்தார்கள்.

''எந்தரு கரியாச்சா, எந்தரு சம்பவம்?''என்று சிவன் குட்டி கேட்டான். 'அது உள்ளே இருக்கிறது'என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு 'ஃபூஃபூஃபூ'என்றான் கரியாச்சன்.

'அதே, ஒர்க் ஷோப்புக்குள்ளெ அவன் நுழைஞ்சிட்டான்''என்று என்று சொல்லிக் கொண்டே முதலாளியின் அருகில் வந்து நின்றான் போக்கு. கூடவே நான்கைந்து ஆட்கள். கரியாச்சனின் பார்வையில் அவர்கள் எல்லாருக்கும் ஒரே முகச்சாயல்தான் தென்பட்டது. பயம் எல்லாரையும் சமமானவர்களாக்கி விடுகிறது என்று தோன்றியது. ''ஆரா கண்டது?''என்ற சத்தம் காதில் விழுந்தபோதுதான் வீட்டு உடைமையாளர் பாகுலேயன் பிள்ளையும் வந்திருக்கிறார் என்பதைக் கரியாச்சன் புரிந்து கொண்டான்.

''ஞான் கண்டு. அண்ணன் கண்டில்ல. தோ இத்ரயும் வலுப்பமுண்டு''என்று இரண்டு கைகளையும் தோளேடு நீட்டிக் காட்டினான் போக்கு.

''ஏதாவது சாரையாயிருக்கும்  ''என்றான் ஹரி.

''இல்லெ , அவனே தான், சர்ப்பம்''என்றான் போக்கு.

அந்த வார்த்தை நெளிந்து காதில் விழுந்ததும் பாகுலேயன் பிள்ளை முகத்தில் விசனமும் சந்தோஷமும் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்தன. தறவாட்டில் நேற்றிலிருந்து சம்பவித்துக் கொண்டிருந்த அனர்த்தங்களுக்கு என்ன காரணம் என்று அவருக்குப் பிடிபட்டது. பறம்பில் நிற்கும் மாவிலிருந்து ஒரு பெரிய கொம்பு முறிந்து விழுந்திருந்தது.பென்ஷன் வாங்குவதற்காக இன்று காலை டிரெஷரிக்கு ஸ்கூட்டரில்போனபோது வண்டி பள்ளத்தில் சரிந்து அவருக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் காரணம் அவருடய தறவாட்டின் ஐஸ்வரியம் காணாமற் போனதுதான். அவருடைய தறவாட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய குடும்பக் காவு இருக்கிறது. ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த காவு. நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரதிஷ்டை. அதிகாரத்தி லிருந்த காலத்தில் பொன்னு தம்புரான் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராம வர்மா ராஜா கூட வந்திருக்கிறார் என்று மூத்த காரணவம்மார் சொன்னது பிள்ளையின் ஞாபகத்தில் புரண்டது.

நேற்று சந்தியா நேரத்தில் காவில் விளக்கு வைக்கப்போன பிள்ளையின் மனைவிதான் காவில் அது இல்லாமல்போனதைச் சொன்னாள். எல்லா நாளும் விளக்கு வைக்கும்போது வந்து பார்த்துவிட்டுப் போகும் அவன் அன்று ஸ்ரீகுமாரியம்மாள் ஏழெட்டு நிமிஷங்கள் காத்திருந்தும் வரவில்லை. வெப்ராளத்துடன் அவள் சொன்னபோது காரியமாகத் தோன்றவில்லை. மழையில் எங்காவது பாதுகாப்பாக இருக்கும் என்று பதில் சொன்னார். இப்போது இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அதுதான் இழைந்து வந்து ஏறியிருக்க வேண்டும்.

''டா, நீ செரிக்கும் கண்டோடா?''என்று போக்கைப் பார்த்துக் கேட்டார். போக்கு மறுபடியும் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி''இத்ரேம் நீளோண்டார்ந்நு''என்றான். யாரும் நம்பவில்லைபோலத் தெரிந்ததும் ''சத்யம். பத்தடீங்கிலும் உண்டாவுண்ணா, அதெ நேராப் பிடிச்சு வாளியெ மாட்டினா  நம்ம கெணற்றிலேர்ந்து தண்ணி எறைக்கலாம்’’என்றான்.

''போடா செறுக்கா, புளுவடிக்கல்லே. பத்தடி நீளத்திலு சர்ப்பொந்நும் ஈ ப்ரதேசத்துல இல்ல ''  என்று அவிந்து போன பீடியையும் எச்சிலையும் ஒரே துப்பலில் மண்ணுக்கு அனுப்பினான் சிவன் குட்டி.

''அவன் சொல்றது செரி.  அது நம்ம  காவில இருக்கிறதா இருக்கத்தான்  சாத்யம். நேத்து மொதல்  அவனெக் காணல''என்றார் பிள்ளை .

'பொடியன் சொல்வதுபோல பத்துப் பன்னிரெண்டடி நீளமிருக்கும். பிராயமும் ரொம்ப. நூறு வயசாவது இருக்கும். அவனோட வயசில் இன்னும் ரெண்டு மூணு பேர் காவில் இருக்கிறார்கள். இவன் தான் எல்லாருக்கும் காரணவர். இப்பத்தானே இங்கெயெல்லாம் பிளாட்டும் கடையும் குடியுமெல்லாம் வந்தது. அதற்கு முன்பு வயலும் சதுப்புமாகக் கிடந்த இடம். இவன்கள் சுதந்திரமாக இழைந்து நடந்து கொண்டிருந் தார்கள். இந்தக் கட்டடத்தை கரியாச்சனோட அப்பன் வாடகைக்கு எடுக்கிறவரைக்கும் இங்கே வந்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். அவன் தான் எங்களோட கண்கண்ட தெய்வம். எங்கள் தறவாட்டோட ஐஸ்வரியம். நீங்க சந்தடி பண்ணாமல் யாரையாவது விட்டு அதை வெளியே கொண்டு வந்து காவில் சேர்க்கப் பாருங்கள். கரியாச்சா, வேண்டியதைச் செய்'

பிள்ளை சொன்னதைக் கேட்டதும் கரியாச்சனுக்கு ஆத்திரம் வந்தது. அதுவாக வந்தது. நானா வரச் சொன்னேன். வாடகைக் கட்டடந்தான். ஆனால் சும்மா குடியிருக்கவில்லையே. ஒண்ணாந்தேதி பிறந்து கண் விழிப்பதற்குள்ளேயே ஆக்ராந்தம் பிடித்து வாடகைக்கு ஓடிவருகிற இந்த எரப்பாளி நாயர்  அவனுடைய அடியந்திரத்துக்கும் தன்னிடமே பைசா கேட்பானாக இருக்கும் என்று கரியாச்சனின் நரம்பு துடித்தது. ஆனால் உதடுகள் ''அதுகென்னா, பிள்ளச் சேட்டா,தோ இப்ப ஏற்பாடு பண்ணிடறேன்''என்று பவ்யமாக நெளிந்தன.  

தாழம் பூவின் மகரந்தம் காற்றில் மிதந்து செல்வதுபோல பிள்ளையின் வார்த்தைகள் வாசலிலிருந்து  நாலுகெட்டின் உள்ளே போயின. சொற்களின் சுகந்தத்தை முகர்ந்த கிறக்கத்தில் உடைசல் ரிம்களுகிடையில் பதுங்கியிருந்த அது வாசலை நோக்கி ஊர்ந்தது. 'நானில்லா விட்டால் பிள்ளையின் குடும்ப மானம் என்னாகும்? அவருக்குத்தான் என்மேல் எவ்வளவு வாத்சல்யம். சும்மா அல்ல. என்னுடைய பிராயமும் சீலமும் வேறு யாருக்கு இருக்கிறது?'என்று நினைத்தபோது அதன் தலைப் பகுதி எவ்வி விரியத் தொடங்கியது. சரீரம் பறப்பதுபோல தானாக முன்னோக்கி நீண்டது.

வாசற்படிக்குக் கொஞ்சம் தள்ளி உள்ளே அது படமெடுத்து நிற்பது தெரிந்தவுடன் போக்கு கத்தினான். 'தே, அவன் புறத்து வருன்னு'

''பாம்பு ஒண்ணும் நூறு வருசமெல்லாம் உசிரோடெ இருக்காதாம்னு தினத்தந்தில போட்டிருந்தான்''என்று சொல்லிக் கொண்டிருந்த முத்துவும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவன் குட்டியும் போக்கின் கத்தலில் வெருண்டு கொஞ்சம் பின் வாங்கினார்கள். முற்றத்தில் நின்றிருந்த எல்லாரும் தான் உட்பட பின்னோக்கிச் சாடியதை உணர்ந்ததும்  கரியாச்சன்  வெட்கப்பட்டான். பாகுலேயன் பிள்ளை எல்லாரையும் விடப் பின் தள்ளி நிற்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. 
'தன்னுடைய ஐஸ்வர்யத்தைப் பார்த்தே மனுஷர் பயப்படுகிறார்' . காலில்லாத ஒரு இழை ஜந்து எத்தனை ஜோடிக் கால்களை நடுங்க வைக்கிறது. பைசாசம். அடித்துக் கொன்றால் என்ன? என்று கரியாச்சன் யோசித்தபோது பிள்ளையின் எச்சரிக்கை கேட்டது.''அவனேக் கொல்லருது. சர்ப்பதோஷம் பிடிக்கும்'' .

கிறிஸ்தியானிகளுக்கு சர்ப்பதோஷமும் இல்லை. ஒரு உலக்கையும் இல்லை. சரியாகச் சொன்னால் எல்லா மனுஷர்களும் சர்ப்பதோஷத்தின் சந்ததிகள் தான் என்று முன்பு ஒருமுறை இதே முற்றத்தில் ஒன்றைக் கொன்று சுட்டுக் கரித்துக் கொண்டு அப்பச்சன் சொன்னதை கரியாச்சன் ஞாபகப்படுத்திக் கொண்டான்.

பிள்ளை ஆட்சேபம் சொன்ன நிலவரத்தில் கையில் தடியும் கொம்புமாக ஆயத்தமான சிவன் குட்டியும் ஹரியும் மற்றவர்களும் கரியாச்சனின் முகத்தையே பார்த்தார்கள். கரியாச்சன் யோசித்தான். அவர்கள் பார்ப்பதையும் அவன் யோசிப்பதையும்  வீட்டுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த அதுவும் யோசித்தது. 'கர்த்தாவே என்னே ரக்ஷிக்கேணமே'என்று மன்றாடியதில் விரிந்த தலை உள் வாங்கிக் கொண்டது. ஆலிலைபோல இருந்த தலை கயிறுபோலச் சுருங்கிக் கொண்டிருக் கையில் தானும்  மனிதர்களைப் போல இடத்துக்குத் தகுந்த மாதிரி சுபாவத்தை மாற்றிக் கொள்வதை உணர்ந்தது. குற்ற உணர்ச்சியுடன் 'என்டெ பகவதி பொறுக்கேணமே'என்று பாவ மன்னிப்பை இரட்டை நாக்குகள் நீட்டி அந்தரத்தில் எழுதியது. அப்படியே முற்றத்தில் நிற்பவர்களை நோட்டமிட்டது.

பிள்ளையையும் கரியாச்சனையும் தவிர எல்லார் கைகளிலும் கட்டைகள் இருந்தன. கரியாச்சனின் முகத்தையே பார்த்தபடி அவர்கள் வலது கையிலி ருக்கும் கட்டையை உயர்த்தி இடது உள்ளங்கையில் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

'ஆளுக்கு ஒரு அடி என்று வைத்தால் பாதி பேரின் முறை வருவதற்குள் தன்னுடைய ஜீவன் போய் விடும்'என்று நினைத்ததும் அதன் வால் தன்னிச்சையாகத் துடித்தது. வந்த வழியே திரும்பி விட சரீரத்தை உள்ளே சுருக்கி பின் நோக்கி இழைய ஆயத்தமானது. இடியோசையுடன் அது வந்த வழி இருட்டானது. ஆத்திரத்திலும் பயத்திலும் தலை மறுபடியும் வீங்கியது.

''அண்ணா, பின்பக்கக் கதவை  அடச்சுட்டேன். அங்கேர்ந்த துவாரத்தையும் அடச்சாச்சு.அவன் இனி இந்த  வழியாத்தான் வரணும்''  என்று கரியாச்சனிடம் சொன்னான் போக்கு. கரியாச்சனுக்குக் குழப்பமாக இருந்தது. ''வரட்டேண்ணா, ஒற்றயடிக்கு அவனெ செரியாக்காம்''என்று துள்ளிக் கொண்டிருந்த போக்கைப் பிடித்து நிறுத்திய பாகுலேயன்பிள்ளை கரியாச்சனிடம் திரும்பி ''அதே, கரியாச்சா, அவனெக் கொன்னா பிரச்சனை வேற மாதிரியாகும்,சொல்லிட்டேன்'என்றார்.

கரியாச்சன் எரிச்சலுடன் ''எந்நா பின்னே பிள்ளச் சேட்டன் தன்னே ஒரு வழி பற''என்றான். பிள்ளைக்கும் சட்டென்று வழி புலப்படவில்லை. கண்ணாடியைக் கழற்றி வேட்டி நுனியால் ஒரு முறை துடைத்தார். ஆவி படிய அதன்மேல் ஊதி மறுபடியும் துடைத்தார். வேட்டியைத் தளரவிட்டு கண்ணாடியை மாட்டிக் கொண்ட பிறகும் வழி தென்படவில்லை.'இந்தப் படுபாவிகள் அதை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள். தறவாட்டின் மகத்துவம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? அவன் தறவாட்டின் சம்பத்து. அவனை ஜீவனோடே திரும்ப எடுக்க பகவதி வழி காட்ட மாட்டாயா? 'இதை மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தபோது அவருடைய பார்வை நீர்கோர்த்து மங்கியது.

''அண்ணா நம்மளு ஆ பாம்பு முஸ்தாபயெ விளிச்சாலோ?''என்றான் போக்கு. அதுவரைக்கும் மேகங்களுக்கிடையில் மறைந்திருந்த மாலைச் சூரியன் பிரகாசமாக நகர்ந்தது. வெகு நேரமாக அங்கேயே நிற்பது எல்லாருக்கும் உறைத்தது.

போக்கு சொன்னது சரியான யோசனை. ''ஆனாலும் ஒரு அந்நிய மதக்காரன் காவிலிருக்கும் சர்ப்பத்தைத் தீண்டறது அவ்வளவு செரியா இல்ல, ஆசாரக் கேடு''என்று முனகினார் பிள்ளை.

''ஒரு கேடும் இல்ல பிள்ளேச்சா, அப்படித் தோணினா பூனையையோ நாயையோ கூப்பிடற மாதிரி ச்சோ ச்சோன்னு கூப்பிடுங்க. அது வாலாட்டிகிட்டு பின்னாலே இழஞ்சு வரும்''சிவன் குட்டி சொன்னதைக் கேட்டு எல்லாருக்கும் சிரிப்பு வந்தது. கரியாச்சனும் ஹரியும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். முத்து சிரிக்கலாமா கூடாதா என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தான்.

''என்னாண்ணா, நாம் போய் முஸ்தபாவை கூட்டிட்டு வரணுமா வேண்டாமா?''என்று கேட்டான் போக்கு. அவன் அப்படிக் கேட்பதில் என்னவோ ரகசியம் இருப்பதாகப் பட்டது கரியாச்சனுக்கு.''செரி, போ, ஆனா ஆளை எங்கெ தேடுவே?''

''இந்த சமயத்திலெ  புள்ளிக்காரன் எங்கேருப்பார்னு எனக்குத் தெரியும்''என்றபடி நீலப் பந்தலை  நோக்கி நடந்தான்.

கால் சட்டைப் பையிலிருந்து புல்லட்டின் சாவியை எடுத்து துவாரத்தில் பொருத்தினான். வண்டிச் சாவியை அவன் முன்பே எடுத்து வைத்திருக்க வேண்டும். அதுதான் பொடியன் அவ்வளவு உற்சாகம் காட்டினான் என்று ஊகித்த கரியாச்சன் தரையைப் பார்த்தான். காலையிலிருந்து எந்த வண்டியும் டெலிவரி கொடுத்திருக்காத நிலத்தில் புல்லட்டின் டயர்கள் இரண்டு மூன்று வட்டங்க¨ளைப் பதித்திருந்தன. 'நான் உறங்கிக் கிடந்த போது இந்தக் குட்டிப் பிசாசு புல்லட்டை எடுத்து ஓட்டியிருக்கிறான்'.  யோசித்தபோது கரியாச்சனுக்கு வேறு பயம் வந்தது. போக்குக்கு பதினாறு வயது. லைசென்ஸ் கிடையாது.

சில மணி நேரங்களாகப் பெய்ய மறந்திருந்த வானம் ஞாபகம் வந்தது போல சடசடவெனத் துளிகளை உதிர்த்து ஓய்ந்தது. துளி விழுந்ததும் நகரத் தொடங்கியவர்கள் மறுபடியும் கூட்டமானார்கள். முன்பிருந்ததை விட ஆட்கள் கூடியிருந்தார்கள். அதில் செந்தூரப் பொட்டு வைத்த ஒருவன் பாகுலேயன் பிள்ளையைத் தனியாக அழைத்து நிறுத்திப் பேசிக் கொண்டிருப் பதைக் கரியாச்சன் கவனித்தான். பிள்ளை உற்சவத்துக்குக் கொண்டு வந்த யானைபோல தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டிருந்தார்.

''கரியாச்சா, வனத்துறைக்குச் சொன்னா அவங்க வந்து வேண்டியதை செய்வாங்க இல்ல?''சிவன் குட்டி கேட்டான்.

அதுவும் சரியானதாகப் பட்டது.'செரியா'என்றான். ''அப்படின்னா உன் மொபைலைக் கொடு''என்றான் சிவன் குட்டி.

''அந்தக் குந்தராண்டம் உள்ளே கெடக்கு''

சிவன் குட்டி என்னமோ முணுமுணுத்துக் கொண்டே கூட்டத்தை விலக்கி நடந்தான்.கரியாச்சனுக்கு தான் இன்னும் பல் துலக்கவோ ஒன்றுக்கு இருக்கவோ மலங்கழிக்கவோ முகத்தைக் கழுவக் கூடவோ செய்ய வில்லை என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது.'நாறிப் போனேன்அருவருப்பால் சின்னதாக முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  கூட்டத்தில் யாரும் தன்னைக் கவனிக்க வில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு தன்னையே ஒருமுறை முகர்ந்தான். அவ்வளவு மோசமில்லை. உடம்புக் குள்ளிருந்து  வறுத்த செறு பயறு வாடை அடித்தது. தீனாம்மச் சேச்சியின் உடம்பில் கமழ்கிற அதே மணம். அப்படியானால் ஷகீலாவின் சரீரத்திலும் இதே மணம்தான் இருக்குமா?

புல்லட்டின் குதுகுதுப்பொலியில் கூட்டம் வரிசை குலைந்தது. ''அண்ணா, தோ ஆளு''என்று வண்டியை நிறுத்தினான் போக்கு. கையில் ஒரு கவட்டைக் கொம்பும் நைந்த கோணிப் பையுமாக பின் சீட்டிலிருந்து முஸ்தபா தடுமாறி இறங்கினார். 'கெளவன் கஞ்சா இழுக்காத நேரம் ஒன்று உண்டா? 'என்று கரியாச்சன் முனகினான். பிள்ளையும் என்னவோ முணுமுணுத்தார். 'என்னா பிள்ளேச்சா?'என்று கேட்டான்.

''கரியாச்சா , இந்த அந்நிய மதக்காரனைப் பிடிக்க விடுறதை விட வனம் வகுப்பு உத்தியோகஸ்தர்கள் பிடிக்கறதுதானெ செரியாயிருக்கும். இவன் தீண்டின பிறகு அவனை காவிலே திரும்ப ஏறவிடறது அவ்வளவு அழகாருக்காது.வனம் வகுப்புன்னா சர்க்காரு வகை. அதுக்கு மதமில்லயே. மதமில்லாததும் எங்க மதத்தில சேர்த்திதானே!''

அவர் சொல்லி முடிப்பதற்கு முன் முஸ்தபா வாசல் தாண்டி உள்ளே நுழைந்திருந்தார். மேற்கொண்டு ஒன்றும் செய்வதற்கில்லை. கரியாச்சன் ஆசுவாசமாக உணர்ந்தான். பக்கத்தில் வந்து நின்ற போக்கின் காதை நிமிண்டி, 'கள்ளக் கழுவேறி'என்றான். அவன் செல்லமாகத் திட்டுவதை ரசித்தான் போக்கு.

ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள் பெரும் கலவரம் நடப்பதுபோல சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் நிசப்தம். கொஞ்ச நேரம் சந்தடி. உள்ளே என்னவெல்லாமோ சரிந்து விழும் உலோக இரைச்சல். ''ஆனை நுழஞ்ச கம்போளம் மாதிரி பாம்பு  நுழஞ்ச பட்டறைன்னு நாம புதுசா பழஞ் சொல்லு உண்டாக்கலாம் கரியாச்சா''என்று சிரித்தான் சிவன் குட்டி. கரியாச்சனுக்கு எல்லாம் சேர்ந்து மூளை குழம்பிவிடும்போல இருந்தது. ''எருதுக்குப் புண்ணுன்னா காக்காய்க்குக் கொண்டாட்டம்னும் பழமொழி இருக்கு''என்றான்.

சிவன் குட்டிக்கு முகம் இருண்டது.''அதை விடு கரியாச்சா. ஒரு தமாசு சொன்னேன்''என்றான்.

''உன்னோட தமாசும் நீயும். மனுஷனுக்கு இங்கெ நவ துவாரமும் பத்தி யெரியறப்ப அவனோட தமாசு''

''ஆங். அதான் பாம்பு முஸ்தபா வந்தாச்சே, அவனைப் பிடிச்சிடுவான். எனக்குத் தெரிய இது முஸ்தபா பிடிக்கிற ஐநூறாவது பாம்பா இருக்கும். ஒரு நுள்ளு கஞ்சா கெடச்சா எந்த மலைப்பாம்பையும் கெளவன் பிடிச்சு கோமணம் கட்டிக்குவான்''

''அதில்ல பிரச்சன, அந்நிய மதக்காரன் புடிச்ச பாம்பெ காவிலே ஏத்த மாட்டாங்களாம், பிள்ளச்சேட்டன்  சொன்னரு. அதான் ஆலோசிக்கறேன். அத வீட்டுக்குக் கொண்டு போயி இவங்கள மாதிரிக் கும்புட முடியுமா, இல்ல வளத்த முடியுமா?''

''நான் வனம் வகுப்புல கூப்பிட்டுச் சொல்லியிருக்கேன். வந்ததும் அவனோட காரியத்தை அவங்க பாத்துக்குவாங்க''

கூட்டம் ஒரு முறை சலசலத்தது. எல்லார் பார்வையும் வாசல் கதவருகே குவிந்தது. கரியாச்சனும் பிள்ளையும் ஆட்களை விலக்கி முன்னால் போனார்கள்.

முஸ்தபாவின் வலது கையில் அது மூன்றடி நீளத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. துண்டுக் கயிறுபோல. கிழவர் கையை உயர்த்தி ஆட்டிக் காட்டும்போது அதன் வால் ஸ்பிரிங்க்போல மேல்நோக்கிச் சுருண்டது. கிழவர் வலது உள்ளங்கைக்குள் அதன் தலை வெளியேதெரிய விட்டு கழுத்துப் பகுதியில் கட்டை விரலால் இறுக்கிப் பிடித்திருந்தார் 'நெரித்தே கொன்று விடுவான்'என்று அது பயந்தது. பயத்தில் கண்கள் உருண்டன, பிளவுபட்ட நாக்கு காற்றை உறிஞ்சியது. இடையிடையே முஸ்தபா அதை கூட்டத்தை மேல் வீசுவதாக வேடிக்கை காட்டினார். ஆட்கள் சிதறி ஓடி மீண்டும் திரண்டார்கள்.'இவன்களுக்கு நான் சாகிறதைப் பார்க்கத்தான் என்ன ஆவேசம்?'என்று அது பிள்ளையை ஏக்கத்துடன் பார்த்தது. 'நான் உங்களோட ஐஸ்வரியமில்லையா? என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா?'என்ற இறைஞ்சல் அதன் கண்களில் தெரிந்தது. கிழவரின் பிடிக்குள் ஒரு  விறைத்த பிரம்பு மாதிரி இருந்தது.

''கண்டீங்களா, மூசா நபி கையில பிடிச்சிருந்த வடிபோல இருக்கிறான். படைச்சோன்  நிலத்துல போடச் சொன்னதும் வடி இழஞ்சுதாம். வேதத்துல சொல்லீருக்கு. நெலத்துல போடவா?''என்று கையை இறக்கினார். வாலின் நுனி தரையைத் தொட்டதும் அது நெளிந்தது.

''தே, மூப்பே, அதெ அந்த சாக்கு பையில போட்டு பிள்ள சாரோட காவில விடணும்''கரியாச்சனைப் பார்த்துக் கண்ணடித்தான் சிவன் குட்டி.

''இல்ல, அது செரி வராது''பதைப்புடன் மறுத்தார் பிள்ளை.

''பின்னெ என்ன செய்ய? உங்க காவிலருந்து வந்ததுன்னு நீங்கதானெ சொன்னீங்க?''என்றான் சிவன் குட்டி.

''ஆமா, ஆனா இப்ப அங்க வேண்டா. கரியாச்சனோட எடத்துலதான அவன் இருந்தான். அதனாலே கரியாச்சனே தீர்மானிக்கட்டும்''

''அண்ணா, அவனெ சாக்கில் கெட்டி  பழைய வேஸ்டெல்லாம் போட்டு எரிச்சுடலாம்''என்று பற்கள் நற நறக்கச் சொன்னான் போக்கு.

''ஆமா, அவஞ் சொல்லுகதான் செரி. பாம்பெப் பாத்துட்டு உசிரோட விட்டா அது பழி வாங்காம உடாதுன்னு சொல்லுவாங்க''என்றான் முத்து.

''ஹே, அது மகா பாவம்''என்றார் பிள்ளை. முஸ்தபாவின் கையிலிருக்கிற அதைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தும் அதைப் பார்த்தபடியே சொன்னார். முஸ்தபா, இடது கையில் பிடித்திருந்த கோணிப்பையை உதறி விரித்து இவ்வளவு நேரமும் கொதித்துக் கொண்டிருந்த கரியாச்சனின் மண்டை வெடித்தது. சொற்கள் ஆவி பறக்க வழிந்தன.

''அதே, பிள்ளே, விவரமில்லாமெப் பேசாதீங்க. இது என்னோட எடமாம். மாசம் பொறக்கிறதுக்கு முன்னெ வாடகைக் காசை வாங்கி நொட்டுறப்போ இது என்னோட எடம்னு சொல்லுவீங்களா, இல்லயே? இப்ப மாத்திரம் இது எப்படி என்னோட எடமாச்சு? நானா அந்த சாதனத்தே வா, வான்னு அழச்சேன். அதா வந்துச்சு. நீங்க சொன்ன மாதிரியே வெச்சுகிட்டா என்னோட எடத்துலெ வந்தத நான் கொன்னா என்னா எரிச்சா என்னஇந்தப் பறம்புலெ ரண்டு தேங்காயோ நாலு மாங்காயோ தரையிலெ விழற சத்தம் கேட்டதும் சாடி வர்ற நீங்க இந்த ஜீவன மட்டும் ஏன் எனக்கு விட்டுக் கொடுக்கணும்? உங்களதுலேதான் எல்லா தோஷத்துக்கும் பரிகாரமிருக்கே. இத அங்கெ கொண்டு விட்டுட்டு பரிகாரம் செய்யறது?''

பாகுலேயன் பிள்ளைமேல் கரியாச்சனின் அம்புகள் குறிபார்த்துத் தைத்தன. அவர் பேசாமல் நின்றார்.கரியாச்சனுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது.'கர்த்தாவே, இந்த ஆளிடம் நாலு வார்த்தை சொல்லி பதிலடி கொடுக்க வேண்டும் என்று எத்தனை நாளாகக் காத்திருந்தேன். இன்று அதை பூர்த்தி பண்ணிய உனக்கு ஸ்தோத்திரம்'

பிள்ளையிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்த செந்தூரப் பொட்டுக்காரன் கரியாச்சன் பக்கத்தில் வந்து நின்றான்.அவனுடைய தோளில் தட்டி ''மாப்ளே, பேசறத கவனமாப் பேசணும். இல்லேன்னா விதம் மாறும்''என்றான்.

கரியாச்சன் அவன் கையைத் தட்டி விட்டான்''போடா மயிரே, நீ ஆருடா என்னெ கவனமாப் பேசச் சொல்றது? மனுஷன் வெளிக்கிருக்காம தின்னாம இந்தப் பிசாசால பயந்து கெடந்து வட்டம் திரியறப்ப அவனோட தாக்கீது. போ போயி உன்னொட ஜோலியப் பாரு''என்று கத்தினான்.

''தே, மாப்ளே, பின்னெயும் சொல்றேன். கவனமாப் பேசு. உனக்கும் அந்த தாடிக்காரனுக்கும் வேணுமானா அது காரியமா இல்லாமயிருக்கலாம். உங்க வேதத்துல அது பிசாசும் சைத்தனுமா இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்ல. அது தெய்வமாக்கும்''

சாக்கு மூட்டையுடன் கரியாச்சனை நோக்கி வந்த முஸ்தபாவுடன் கூட்டமும் நகர்ந்து வந்தது. பொட்டுக்காரனுக்கும் கரியாச்சனுக்கும் நடுவில் நின்ற பிள்ளை முன்னால் மூட்டையை நீட்டி ''இவனைப் பாக்க வேண்டாமா?''என்று கேட்டார்.

மூத்திரம் முட்டி வலியில் கனத்திருந்த அடி வயிற்றிலிருந்து எழுந்த ஆத்திரத்துடன் கரியாச்சன் வலது காலால் அதை எற்றி உதைத்தான். சாக்கு மூட்டை எல்லாத் தலைகளுக்கும் மேலாக அந்தரத்தில் எவ்வி உயர்ந்ததும் மூட்டையின் வாய் காற்றில் விரிந்து குப்புற விழ ஆரம்பித்ததும் உள்ளே இருந்த அது  வளைந்து நெளிந்து அபாரமான வேகத்தில் கீழே உதிரத் தொடங்கியதும் ஒரே சமயத்தில் நடந்தன. அதே நொடியில் கூட்டம் சிதறியோடியதும் வனத்துறையின் ஜீப் முற்றத்தில் நின்றதும் ஏதோ ஒரு கை முஸ்தபாவின் மண்டையில் ஓங்கியடித்ததும் பாகுலேயன் பிள்ளையின் மூக்குக் கண்ணாடி தரையில் இறங்கி சேற்றுக்குள் புதைந்ததும் பயத்திலும் ஆத்திரத்திலும் கரியாச்சன் காலோடு ஒன்றுக்குப் போனதும் சிவன் குட்டியும் ஹரியும் ஓங்கி வீசிய முஷ்டிகள் யார் முகத்திலோ பலமாகப்பட்டு வலியுடன் திரும்பியதும் போக்கு கூட்டத்தைப் பிளந்து புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள்  ஓடிவேலை நேரத்தில் கழற்றி ஸ்பானர் ஸ்டாண்டில் தொங்க விடும் புதுக்காடு ஃபுட்பால் கிளப் ஜெர்சியை எடுத்தது அணிந்து கொண்டதும் இஸ்திரி வண்டியை நோக்கி முத்து  பறந்ததும் மழையின் புதுத் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதி சத்த மெழுப்பியதும் நடந்தது.

சனிக்கிழமை பத்திரிகையில்  சம்பவத்தைப் பற்றி ஸ்வந்தம் லேககன்  (நமது நிருபர்) செய்தி வெளியிட்டிருந்தார்.

புதுக்காடு பகுதியில் இரண்டு மதப் பிரிவினருக்கிடையில்  வெள்ளிக் கிழமை ஏற்பட்ட மோதலில் அம்பலத்தற கரிம்புவிள வாழக்கல் புத்தன் வீட்டில் ஹமீம் முஸ்தபா (62) பலத்த காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். சம்பவத்தில் லேசாகக் காயமடைந்த  ஜேக்கப் சக்கரியா (28), பாகுலேயன் பிள்ளை (65) உட்பட ஏழு பேர் முதற் கட்ட சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். புதுக்காடு சிற்ற விளாகத்து வீட்டுக்குரிமையான குடும்ப க்ஷேத்திரத்தையொட்டிய பகவதி காவில் சர்ப்பதோஷப் பரிகாரச் சடங்கில் பிற மதத்தினர் தலையிட்டதனால் மோதல் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புள்ள நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வனத் துறைப் பணியாளர்கள் சம்பவத்துக்குக் காரணமான மூன்றடி நீளமுள்ள சர்ப்பத்தைத் தேடி வருகிறார்கள்.

அன்றுஇரவு தீனாம்மச் சேச்சி வீட்டில் படுத்திருந்த கரியாச்சன் இருட்டை வகிர்ந்து கொண்டு தன் மேல் ஊர்ந்த வறுத்த செறு பயறு வாசனையிடம் 'சேச்சி, இது தெற்றாணு'என்றான். பாகுலேயன் பிள்ளை  பகவதிக் காவிலிருந்து மூடிய ஜன்னல்களைத் தாண்டி வந்த 'உஸ்'என்ற முனகலிடம் 'என்டெ ஐஸ்வர்யமே, பொறுக்குகஎன்று மன்றாடினார். புதுக்காடு ஃபுட்பால் கிளப் அலுவலகத்தின் பெஞ்சில் கிடந்த போக்கு அன்றைய ஆட்டத்தில் அடித்த பந்து ஆகாயத்தில் உயர்ந்து கோல் போஸ்டுக்குள் விழும்போது பாம்பாக மாறுவதாகக் கனாக் கண்டு அலறி எழுந்தான்.மருத்துவமனைப் படுக்கையில் ஒருக்களித்துக் கிடந்த பாம்பு முஸ்தபா கட்டிலுக்கு அடியில் போட்டிருந்த தன்னுடைய கவட்டைக் கம்பு எப்போது நெளியும் என்று காத்திருந்தார்.

வனத்துறைஜீப்பின் தார்பாலின் மேற்கூரைமேல் விழுந்து பக்கவாட்டு ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பகல் முழுவதும் நகராமலிருந்த ஜீப்பின் பின் சீட்டுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த அது, சனிக்கிழமை இரவு வனக் காவலர்களை ஏற்றிக் கொண்டு நெடுமங்காட்டுக்குப் போகும் வழியில் புதுக்காடு மார்க்கெட் சந்திப்பில் தட்டு கடையில் சாயா குடிப்பதற்காக நின்றபோது திடுக்கிட்டு விழித்து அவசரமாக இறங்கியது. கவனக் குறைவாக ஜீப்பிலிருந்து சாடியதால் வால் பகுதியில் சுரீர் என்ற வலியை உணர்ந்தது. மழை ஈரத்தில் ஊறியிருந்த தார்ச் சாலையில் மார்பை ஊன்றி நிமிர்ந்தபோது எதிரில் மங்கலான வெளிச்சத்தில் புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி என்ற போர்டு தென்பட்டது.

@























ரவி வியாஸ்

$
0
0








நினைவூட்டலையே இலக்கியப் பணியாக மேற்கொண்டிருந்தவர் எழுத்தாளர், பத்தியாளர் ரவி வியாஸ். ஆனால் அவர் யாராலும் நினைக்கப்படாமல் மறைந்தார்.  அவரது மரணம் அவர் புழங்கிய கருத்துப்புலத்தில் கூட அறியப்படாமல் போனது. எழுபதுகளின் இறுதி முதல் இரண்டாயிரத்தின் முதல் பதிற்றாண்டு வரைஇரண்டு ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து பத்திகள் எழுதி வந்தார். தி ஹிந்து நாளிதழின் இலக்கிய சஞ்சிகையிலும்  டெலிகிராப் இதழின் ஞாயிற்றுக் கிழமைப்  பதிப்பிலும் அவர் எழுதி வந்த பத்திகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்புப் பெற்றவை. ஓரளவுக்குப் பரவலான வாசக அறிமுகம் இருந்து அவரது மறைவுஅதற்குரிய கவனத்துடன் அறியப்படவில்லை. அவர் பங்களித்த இதழ்களிலேயே கூட சிறு செய்தியாகத்தான் வெளியிடப் பட்டிருந்திருக்கிறது. அவுட் லுக்வார இதழில்  ( 9மார்ச் 2015 ) வெளியான குறிப்பிலிருந்துதான் அவரது மறைவு பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. தகவல் தொடர்பு யுகத்தின் அட்சய பாத்திரமான இணையத் தளத்திலும் ரவி வியாஸைப் பற்றிய தகவல்கள் குறைவு. டெலிகிராப் நாளிதழில் மட்டுமே விரிவான அஞ்சலிக் குறிப்பு வெளிவந்திருக்கிறது.  அதுவே கூட ரவி வியாஸின் நண்பரான ருத்ராங்க்ஷு முகர்ஜி எழுதியது. பல பதிற்றாண்டுக் காலம் ஊடகங்களில் செயல்பட்டவரும் அந்தச் செயல்பாடுகளுக்காக வாசக கவனம் பெற்றவருமான  ரவி வியாஸ் விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி நின்றது வியப்பளிக்கிறது.

ரவி வியாஸ் பதிப்பாளரும் பத்தியாளருமான கதை சுவாரசியமானது. தில்லியில் உயர் கல்வி முடித்து விட்டுக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வேலை எதுவும்  இல்லாமலிருந்த ரவி வியாஸ் வாசிப்பதையே முழு நேர வேலையாக வைத்துக் கொண்டார். தில்லி லோடி கார்டனில் மரத்தடியில் அமர்ந்து புத்தகங்களை வாசித்துத் தீர்ப்பதையே  அன்றாட நியமமாக்கியிருந்தார். இளைஞன் ஒருவன் மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக அந்த வழியில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த எழுத்தாளரும் அன்று ஓரியண்ட் லாங்மன் பதிப்பகத்தின் இயக்குநருமாக இருந்த பிரபல எழுத்தாளர் கவனித்தார். எப்போதும்  இங்கே உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருப்பது ஏன்? என்ற கேள்விக்கு ரவி வியாஸ் சொன்ன பதில் அவருக்கு ஆச்சரியமளித்தது. வேறு வேலை எதுவும் இல்லைஎன்பதனால் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற பதிலை எழுத்தாளர் ரசித்தார். வாசிப்பையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கும் ரவி வியாஸுக்குத் தனதுநிறுவனத்தில் வேலை கொடுப்பதாகச் சொன்னார்.மறுநாள் ரவி வியாஸ் ஓரியண்ட் லாங்மெனில் வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனம் அவரை லண்டனிலுள்ள தலைமை யகத்துக்குப் பயிற்சிக்காக அனுப்பியது. பயிற்சி முடித்துத் திரும்பிய ரவி வியாஸ் ஓரியண்ட் லாங்மன் பதிப்பகத்தின் எடிட்டராகவும் பதிப்பாளரா கவும்செய்த பணிகள் இந்தியப் பதிப்புத் துறை வரலாற்றில் திருப்பு முனைகளாக அமைந்தன. நீண்ட காலம் ஓரியண்ட் லாங்மனில் பணியாற்றிய ரவி வியாஸ்பின்னர் மாக்மில்லன் நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுபேற்றார். இந்த இரு பதிப்பகப் பணிக்காலத்தில் அவர் அறிமுகப் படுத்திய மாற்றங்கள், முன் வைத்த  மதிப்பீடுகள் முக்கிய மானவை. கல்விப்புலம் சார்ந்து அவர் பதிப்பித்த புத்தகங்கள் புதுமை யையும் சமகாலத் தேவையையும் கணக்கில் கொண்டு உருவானவை.பிற துறை நூல்களில் புத்தகத்துக்கும் வாசகனுக்கும் நடுவே, அந்த இரண்டு முனைகளையும் இணைப்பவர் எடிட்டர் என்ற கண்ணுக்குத் தென்படாத ஆனால் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதை நிறுவினார்.

ரவி வியாஸை புத்தகப்பதிப்புத் துறையில் வேலைக்குச் சேர்த்து விட்ட குஷ்வந்த சிங் தனது பத்தியொன்றில் ரவி வியாஸை தான் கொஞ்சம் பொறாமையுடன் பார்க்கும் எடிட்டர் என்று செல்லப் பெருமிதத்துடன் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

எனது ஆங்கில வாசிப்பின் முறையியலுக்குக் கடன்பட்டிருப்பவர்களில் ரவி வியாஸும் ஒருவர் என்பதே இந்தக் குறிப்பை எழுதக் காரணம். பள்ளி இறுதி  வகுப்புகளிலும் கல்லூரிக் காலங்களிலும் ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுத்திச் சொன்ன செயல்,'உன்னுடைய ஆங்கிலம் செம்மையடைய வேண்டுமானால் நாள் தவறாமல் ஹிந்து பத்திரிகையைப் படி'என்பது. அந்த வலியுறுத்தலில் தொடர்ந்த பழக்கம் சலிப்பூட்டத் தொடங்கிய நாட்களில் அந்த இதழில் எழுதி வந்த பத்தியாளர்கள் இருவர் மனதுக்கு இதமளிப்பவர்களானார்கள்.சிந்தனையைப் பாதிப்பவர்களானார்கள்.ஒருவர் ஓவியம் நுண் கலைகள் பற்றி எழுதிய அஞ்சலி சர்க்கார். இரண்டாமவர் - ரவி வியாஸ்.

ரவி வியாஸின் 'கிளாசிக்ஸ் ரீவிசிட்டட்'என்ற பத்தி வாசகனாக எனக்கு அளித்த இலக்கிய அறிவும் படைப்பு அனுபவமும் ஆழமானவை.ஆங்கிலத்திலுள்ள  செவ்வியல் நூல்களையும்  ஆங்கிலம் வழியாக வந்த  பிற மொழி செவ்வியல் படைப்புகளையும் பற்றி அவர் எழுதிய அந்தப் பத்தி மறு வாசிப்பு என்ற வகையை  சேர்ந்தது. ஆனால் அது மறு அறிமுகம் என்பதைத் தாண்டிக் கறாரான பார்வையைக் கொண்டிருந்தது. உண்மையில் ரவி வியாஸ் மறு வாசிப்புக்காக எடுத்துக்  கொண்ட பல படைப்புகளை அந்தப் பத்தி வாசிப்பின் விளைவாகவே முதன்முறையாக வாசித்திருக்கிறேன். பதிப்பக எடிட்டராகப் பணியாற்றிய ரவி வியாஸின்நோக்கம் பத்தி எழுத்திலும் பிரதிபலித்தது என்று இப்போது தோன்றுகிறது. வாசகன் எதை வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தீர்மானி ப்பதில் ஒரு எடிட்டருக்கு முக்கியமான பங்கு இருப்பதாகக் கருதியிருந்தவர் அவர். அந்த அடிப்படைப் பார்வையை கிளாசிக் படைப்புகளின் வாசிப்பிலும்முன்னிருத்தினார். 'பைபிள் மறு வாசிப்புப் பற்றிய  பத்தியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பைபிளை ஒரு மத நூலாகவோ அல்லது வெறும் கிளாசிக்காக வோ அவர் மறு வாசிப்புச் செய்யவில்லை. ஒரு புதிய படைப்பாகவும் புதிய அணுகுமுறையுடனுமே பார்க்கிறார். பைபிளின் மொத்தத்தையும் பத்து மையக் கருக் களாகப் பார்க்க்கிறார். முக்கியமான பத்து தீம்களின் தொகுப்பாகவே பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் வகுக்கிறார். இந்தப் பார்வை பைபிளை  வெறும் இறை நூல் என்பதிலிருந்து விடுவித்து அதை மேற்கத்திய பண்பாடு, உணர்வுகளின் வரலாறு, நீதி, மொழி, இலக்கியம் ஆகியவற்றை நிர்மாணம் செய்தபடைப்பாக நிறுகிறது. ஒரு சிந்தனைப் பருவத்தின் தொகுப்பாக ( Climate of thought ) அதை முன் வைக்கிறது. இந்த நோக்கில் மறு வாசிப்பு என்பது ஒரு படைப் பை நவீனப் படுத்துதல் என்று மாற்றியவர் ரவி வியாஸ். இந்தச் செயல் இன்னொரு இலக்கிய மதிப்பீட்டையும் எடுத்துக் காட்டுகிறது. எந்தப் படைப்பும் அதன்  காலத்தை யும் இடத்தையும் கடந்தது என்ற மதிப்பீட்டை.

ரஷ்ய இலக்கியங்களில் எனக்கு விருப்பமானவர்கள் டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, ஆன் டன் செக்காவ், இவான் துர்கனீவ் ஆகியவர்களே. இவர்களுடன் ஒப்பிடும்  போது மக்சீம் கார்க்கி கொஞ்சம் கனம் குறைந்தவராகவே எனக்குத் தோன்றியிருந்திருக்கிறார். அவரது மாபெரும் படைப்பாகச் சொல்லப்படும் 'தாய்'நாவலில்   கலையின் வெகுளித்தன்மையை விட பரப்புரையின் செயற்கைத்தன்மை அதிகம் என்று தோன்றியிருந்தது. ரவி வியாஸின் மறு வாசிப்புப் பத்திக் கட்டுரை அதை  மாற்றியது. குறிப்பாக கார்க்கியின் தன் வரலாற்று நூல்களான, எனது குழந்தைப் பருவம், எனது பயிற்சிக் காலம், எனது பல்கலைக் கழகங்கள் ஆகிய மூன்ரைப்  பற்றியும் எழுதப்பட்ட கட்டுரை கார்க்கியைப் புதிய வெளிச்சத்தில் காட்டியது.

புத்தகங்கள்புத்தகப் பதிப்புத்துறை பற்றித் தொடர்ந்து எழுதி வந்தவர் ரவி வியாஸ். தி ஹிந்து வில் 'கிளாசிக்ஸ் ரீவிசிட்டட்', டெலிகிராப் பில் 'புக் வைஸ்'ஆகிய பத்திகளைப் பல ஆண்டுகளாகத் தொடந்து எழுதினார். இரண்டும் வாசிப்பின் நேற்றையும் இன்றையும் மையமாகக் கொண்டவை. இந்தியப் பதிப்புத் துறையில் தான் விரும்பிய மாற்றங்களுடன் தான் நிராகரித்த சந்தர்ப்பவாதப் போக்குகளும் அரங்கேறியபோது ரவி வியாஸ் விலகிக் கொண்டார் என்று கூறப் படுகிறது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது பத்தி எழுத்து இந்த இதழ்களில் இடம் பெறவில்லை. பத்தியாளரும் மறதியின் இருளுக்குள் முக விவரமற்று மறைந்து போனார். மீண்டும் அவர் அரைகுறையாக நினைக்கப்பட்டது மரணத்தை ஒட்டித்தான். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் வேறு என்ன செய்திருப்பார் என்று  தெரியவில்லை. ஆனால் அதை ஊகிப்பதும் சிரமமல்ல. ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்திருப்பார்.
@

நன்றி: காலச்சுவடு இதழ் 184 - ஏப்ரல் 2015









கதையின் கதை

$
0
0
காபோ,காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், எப்போதும் செய்திகளில் இருந்துகொண்டிருந்தார்; இறந்தபின்னும் இருந்து கொண்டேயிருக்கிறார். இருந்தபோதைவிடவும் இறந்தபின்னர் மிக அதிகமாகச் செய்திகளில் விவாதிக்கப்படுகிறார். ஆளுமையாக அவரது இயல்புகள் பேசப்படுகின்றன. படைப்பாளியாக அவரது எழுத்துகள் வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகின்றன. அவர் பெயரில் இருக்கும் இணையதளத்தில் காபோ தொடர்பாக ஏதாவது புதுத்தகவல் வாரத்துக்கு ஒருமுறையாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவரது படைப்புகள் பற்றிய சொல்லப்படாத செய்திகள், அவரது செயல்களைப் பற்றிய விவரங்கள் என்று கண்டுபிடிப்பின் சுவாரசியத்துடன் ஏதாவது ஒன்று பகிர்ந்துகொள்ளப்படுகிறது. லத்தீன் அமெரிக்க இதழ்களிலும் அவற்றின் இணையப் பதிப்புகளிலும் காபோ முன்னர் சொன்ன கருத்துகள் இன்று புதிய வெளிச்சத்துடன் புரிந்துகொள்ளப்படுகின்றன. வாழ்ந்த காலத்தில் வெளியானதைவிட அதிக எண்ணிக்கையில் அவரது நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன.
மார்க்கேஸின் மறைவுக்குப் பின்னர் பலர் ஒரு சுவாரசியமான ரகசியத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அவரது கதைகளில் இடம்பெறும் கதை மாந்தர்களின் நிழல் வடிவம் தாங்கள்தாம் என்று உரிமை பாராட்டத் தொடங்கினார்கள். புகழ்பெற்ற மனிதரின் கவனத்துக்குரியவர்களாகத் தாங்கள் இருந்தோம் என்ற தற்பெருமைக்காகச் சொல்லப்பட்டவையே பலதும் என்று மார்க்கேஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜெரால்ட் மார்ட்டின் அவற்றை ஒதுக்கிவிடுகிறார். ஏனெனில் காபோ அப்படிப்பட்ட சம்பவங்களைப் பகிரங்கப்படுத்த விரும்பாதவர். ‘ஒவ்வொருவருக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை’ என்று மார்ட்டினிடம் குறிப்பிட்டிருக்கிறார் காபோ. ‘அதை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு காபோவின் பதில் ‘ஒருபோதும் இல்லை’. ஆனால் காபோவின் அந்த வாழ்க்கையை நாம் அவரது படைப்புகளிலிருந்து ஊகித்துவிட முடியும். படைப்புகளிலிருந்து கண்டுபிடிக்கமுடியாத ஒன்றை ஒரு நிழல் பாத்திரம் வெளிப்படுத்தியது.
சென்ற ஆண்டு ஏப்ரல் 17 அன்று காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மறைந்தார். அந்த ஆண்டுக் கோடைக்காலத்தில் பிரித்தானிய எழுத்தாளரும் மார்க்கேஸின் தீவிர வாசகரும் அபிமானியுமான நிக்கோலஸ் ஷேக்ஸ்பியருக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. எழுதியவர் லண்டனில் வசிக்கும் ஒரு பெண். மார்க்கேஸின் ‘காலராக் காலத்தில் காதல்’ (Love in the time of Cholera ) நாவலின் பிரித்தானியப் பதிப்புக்குத் தான் எழுதியிருக்கும் முன்னுரையை முகாந்திரமாக வைத்தே அந்தப் பெண் தனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் நிக்கோலஸ். “நீங்கள் முன்னுரை எழுதியிருக்கும் அந்த கொலம்பிய எழுத்தாளருடன் எனக்குச் சின்னத் தொடர்பு இருக்கிறது. என்னை வைத்துத்தான் அவர் ஒரு கதையை எழுதியிருக்கிறார். 1990 இல் பாரிஸிலுள்ள ‘சார்ள்ஸ் தி கால்’ விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன்” என்பது கடித வாசகம்.
அந்தக் கதை மார்க்கேஸின் ‘விந்தையான புனிதப் பயணிகள்’ ( The strange pilgrims ) தொகுப்பில் இடம் பெற்றிருப்பது. ‘உறங்கும் அழகியும் விமானமும்’ என்ற கதை. நமது சுயத்தின் அறியப்படாத இன்னொரு சுயத்தை மையக் கருவாகவைத்து எழுதப்பட்ட கதைகள்கொண்ட ஒரு தொகுப்பை மார்க்கேஸ் பதினெட்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்தார். கதைக்கான குறிப்புகளை ஒரு குறிப்பேட்டில் கிறுக்கி வைத்திருந்தார். அதில் ஒரு கதைக்கான வரி முதல் பார்வையிலேயே தோன்றும் காதலைப் பற்றியது. உறங்கும் அழகியும் விமானமும் கதையும் கண்டதும் காதல் கொள்வது பற்றியதுதான்.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘சார்ள்ஸ் தி கால்’ விமான நிலையத்தில் நியூயார்க் செல்லும் விமானத்துக்காகக் காத்திருக்கும்போது பிரேசிலைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்திக்கிறார்.பெயர் சில்வானா தே ஃபாரியா. காலை ஒன்பதுமணிக்குப் புறப்படவேண்டிய விமானம் பருவநிலைக் கோளாறு காரணமாக மாலை நான்கு மணிக்குத்தான் கிளம்புகிறது. அதுவரை எல்லாரும் காத்திருக்கிறார்கள். பயணிகள் அறையில் மார்க்கேஸின் பக்கத்து இருக்கையில் வந்து உட்காருகிறார் சில்வானா. அவளுடன் உரையாடுகிறார் மார்க்கேஸ். அவள் எழுந்துபோகும் இடைவெளியில் இருக்கையையும் அவளது லக்கேஜுகளையும் பார்த்துக் கொள்கிறார். சில்வானா நம்பிக்கையுடன் தன்னைப்பற்றிய எல்லாவற்றையும் சொல்கிறாள். ஒரு நடிகையாக பாரிசில் வாழ்ந்த வாழ்க்கையை, பிரெஞ்சு இயக்குநரான கில்ஸ் பீட்டை முதலில் பார்த்தவுடன் காதல் கொண்டதை (நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தோம் உடனேயே காதல் கொண்டோம் கண்டதும் காதல்) , ஒரு குழந்தைபெற்றதும் காதல் முறிந்துபோனதை, பின்னர் விலைமகளாகப் பிழைக்கநேர்ந்ததை, சில படங்களில் துண்டுவேடங்களில் நடித்ததை, மார்க்கேஸ் என்பவர் எழுதிய சிறுகதையை ஆதாரமாகவைத்து உருவாக்கப்பட்ட சினிமாவின் படப்பிடிப்பைப் பார்த்ததை, உடலின் சகல உபாதைகளுக்கும் நிவாரணிகளாகப் பல வண்ண மாத்திரைகளை வைத்திருப்பதை, வாழ்க்கையின் வேதனையை -எல்லாவற்றையும் மார்க்கேஸிடம் சொல்லுகிறார்: கேட்டுக் கொண்டிருப்பவர் ஓர் எழுத்தாளர் என்பதை அறியாமலே. ‘உனது வாயிலிருந்து வெளிப்படும் உண்மையுணர்வு என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று மட்டுமே எதிர்வினையாற்றுகிறார் மார்க்கேஸ். அந்தப் பதிலில் விழித்துக்கொள்கிற சில்வானா ‘நீங்கள் யார்?’ என்று கேட்கிறாள். ‘நான் ஒரு பத்திரிகையாளன்’. எந்தப் பத்திரிகைக்கு? ‘நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை’ என்று மார்க்கேஸ் சொன்னதும், தான் பேசிக்கொண்டிருப்பது தனது அம்மா மும்முரமாக வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இந்த நபரின் படத்தைப் பார்த்திருக்கிறோம் என்று அவளுக்குத் தெரிகிறது. தனது அடையாளத்தை லத்தீன் அமெரிக்கப் பெண் ஒருத்தியால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்ற தன்னுடைய நம்பிக்கை பலித்த சந்தோஷத்தில் மார்க்கேஸ் தனது முகவரியை எழுதி அவளிடம் கொடுக்கிறார். கடிதம் எழுது என்கிறார். ஆனால் சில்வானா தே ஃபாரியா ஒருபோதும் காபோவுக்குக் கடிதம் எழுதவில்லை.
இந்த உண்மை விவரங்கள்தாம் ‘உறங்கும் அழகியும் விமானமும்’ கதையின் கூறுகள். இந்த விவரங்களையெல்லாம் நேர்ச்சந்திப்பில் நிக்கோலஸ் ஷேக்ஸ்பியரிடம் எடுத்துச் சொல்கிறார் சில்வானா. இப்போது அவர் லண்டன்வாசி. ஐம்பதுவயதுப் பாட்டி. மார்க்கேசின் மரணச் செய்தி அறிந்தபின்னர் அவரது ‘விந்தையான புனிதப் பயணிகள்’ தொகுப்பை வாசித்ததாகவும் அதில் மூன்றாவதாக இடம் பெற்றிருக்கும் உறங்கும் அழகி கதையின் சம்பவங்கள் காப்ரியேல் கார்சியா மார்க்கேசை விமான நிலையத்தில் முதலில் சந்தித்தபோது தான் சொன்னவை என்பதும் சில்வானாவின் தரப்பு. சில விஷயங்கள் எழுத்தாளரின் கைச்சரக்கு என்றும் திருத்தம் சொல்லுகிறார். தான் அன்று விமானத்தில் பயணம் செய்யவில்லை. பாரிசில் தான் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட கணவர் பீட் தனக்கு ஆறுதல் சொல்வதற்காக பிரேசிலிலிருக்கும் சில்வானாவின் பெற்றோருக்கு விமான டிக்கெட் அனுப்பி பாரீசுக்கு வரவழைத்ததாகவும் அவர்களை வரவேற்கப் போனபோதுதான் மார்க்கேஸைச் சந்தித்ததாகவும் சொல்லுகிறார். இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சில்வானா குறிப்பிடுகிறார். “நான் இதுவரை பார்த்தவர்களிலேயே மிக அழகான பெண் இவள்தான் என்று கதையில் மார்க்கேஸ் குறிப்பிடுகிறாரே அது எழுத்தாளரின் பொய்”.
கதையில் அப்பட்டமான உண்மைக்கு இடமில்லை. நிஜமான பொய்க்குத்தானே படைப்பில் வேலை. காபோவே சொல்லுகிறாரே ‘ஒரு கதைக்கு தொடக்கம் இல்லை; முடிவும் இல்லை. ஒன்று அது செயலாற்றுகிறது. அல்லது சும்மா இருக்கிறது’ என்று.
நன்றி: Newsweek, July 24 2014
http://www.kalachuvadu.com/issue-184/page62.asp

தனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு

$
0
0

தனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு




1

ங்ஙம்புழையைத் தெரியுந்தானே உங்களுக்கு?
கிருஷ்ணப் பிள்ளையைத் தெரியாவிட்டாலும்
சங்ஙம்புழையைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
கபட லோகத்தில் ஆத்மார்த்தமான
இதயம் சுமந்திருந்த தோத்தாங்குளிக் கவிஞன்.
ஒவ்வொரு இரவும் பூமொட்டின் நறுமணத்தில்
உறங்கி எழுந்த பாட்டுப் பிசாசு.
நண்பன் ராகவனின்
காவியக் காதலை நாடகமாக்கி
கோடானு கோடி விழிகளைப் பிழிந்தவன்.
தரித்திர ராகவனை ரமணனாக்கினான்.
செல்வக் காதலியைப் பெயரிலி ஆக்கினான்.
எல்லாக் காதலர்களும் ரமணன்கள்.
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகள்.

2

சங்ஙம்புழையைத் தெரியுந்தானே உங்களுக்கு?
சங்ஙம்புழையைத் தெரியாவிட்டாலும்
சந்திரிகையைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
கானகச் சாயலில் காதல் இடையனுடன்
ஆடு மேய்க்க வீடு துறந்த சீமாட்டி
சந்திரிகையைத் தெரியாவிட்டாலும்
ராகவனைத் தெரியுந்தானே உங்களுக்கு?
காதலில் தோற்றுக் கயிற்றில் தொங்கியவன்
ராகவனாய் மரித்து ரமணனாய் வாழ்பவன்
தற்கொலையில் முடிந்த
எல்லாக் காதலர்களும்  ரமணன்கள்
தற்கொலைக்குத் தள்ளிய
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகள்.

3

சங்ஙம்புழையை, ராகவனை, சந்திரிகையை,
ரமணனை தெரியாவிட்டாலும்
தனுவச்சபுரத்தைத் தெரியுந்தானே உங்களுக்கு?
ரயில் நிற்கும்போதெல்லாம் யாரேனும்
தனுவைத்தபுரம் என்று திருத்தி உச்சரிக்கும் பெயரூர்
எல்லா ஊரும் இன்று தனுவச்சபுரந்தான் என்று
பசுவய்யா பண்டு சாட்சி பகர்ந்த இடம்

இன்றும் ரயில்  நின்றதும்
நானும் சரியாக உச்சரித்தேன் தனு வைத்த புரம்
நின்ற ரயில் நகராமல் நின்றிருக்க
பார்த்து வந்து யாரோ சொன்னார்கள்
'பாய்ந்து செத்திருக்கிறாள், பாவம் இடைச்சி'
ஆமோதித்துக் கலங்கியது இன்னொரு குரல்
'அயல்காரிதான் சந்திரிகா, அநியாயச் சாவு'

நடுங்கும் குரலில் அந்தரத்தில் கேட்டேன்
'சாவுக்குள் தள்ளியது ரமணனா?'

ஏன் அப்படிக் கேட்டேன் என்று
இப்போதும் விளங்கவில்லை
தனு வைத்த புரமும் சங்ஙம்புழையும் தெரியுமா உங்களுக்கு?
எல்லாக் காதலர்களும் ரமணன்களா?
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகளா?
@




நாளையின் பாடல்கள்

$
0
0






பேற்று நோவடங்கி உடல்பரப்பிக்  கிடக்கிறது நிலம்
கரு ஈன்ற அசதிப் பெருமூச்சாய் விம்மி அலைகிறது காற்று
உயிர்ப் பிசுக்கின் ஒளிர்வுடன்  ததும்புகிறது கானல்
கதிரிலிருந்து உதிர்ந்து மண்ணுக்குள் உறங்கும்
ஆதரவற்ற வித்துக்கள் திசையதிர விசும்புகின்றன
அவற்றைச் சமாதானம் செய்கின்றன 

வரப்பின்மேல்  குந்தியமர்ந்திருக்கும் சில  பாடல்கள்.

நான் பறக்கும் மீன்

$
0
0








ழுகடல் நீந்திவந்த மீனிடம்
கண்ணாடிப் பேழைக்குள்ததும்பும் நீரைக்காட்டி
ஏழைவிடப் பெரிய சமுத்திரம் என்கிறாய்

எண்திசை கடந்து வந்த பறவையிடம்
கம்பிக்குள் சிக்கிய வானைக்காட்டி
அளவற்ற ஆகாயம் என்கிறாய்

மூடாத விழிகளால் சிரிக்கிறது மீன்
படபடக்கும் சிறகுகளால் சிரிக்கிறது பறவை

விழிமூடி
வெளியைத் துழாவிச் சிரிக்கிறேன் நான்

நானே அந்த நீச்சல்
நானே அந்தப் பறத்தல்.


(மே 2014 )




வெறுப்பின் உச்சத்திலிருக்கிறேன் நான்

$
0
0



வெறுப்பின் உச்சத்திலிருக்கிறேன்
நான்
வெறுப்பில் தகித்துக் கனன்றிருக்கிறது
இன்றைய நாள்

முன்னே வாராது ஒழியுங்கள்
வெறுப்பேற்றாமல் சும்மா விடுங்கள்
என்னை

யோசிக்கவே வெறுப்பைத் தரும்
ஓர் அபத்தக் கனவால்
கலைந்தே தொடங்கியது
வெறுக்கத்தக்க இந்த நாள்

கால அட்டவணையை முந்திக் கொண்டு விடிந்த
அவசரப் பொழுதும்
விட்டுவிட்டு ஒலித்த
பறவையின் சுருதிபிசகிய அன்றாடக் கூவலும்
குளியலறைக்குள் என்னை வேவுபார்த்து
சூள் கொட்டிய அசட்டுப் பல்லியும்
உணவு மேஜையில் அமரும் முன்பே
ஆறித் தொலைத்த பதார்த்தமும் பானமும்
கடன் நிலுவைக்குத் தாக்கீது செய்த
நச்சரிப்புத் தொலைபேசிக் குரலும்
இடையில் குறுக்கிட்டுக் கிடைத்த  பதிலால்
தொடர்பைத் துண்டித்தவளின் விஷக் கொஞ்சலும்
என்னைப் பிணையாக வைத்து வென்றவனின்
திக் விஜயக் குளம்பொலியும்...

எல்லாமும் எல்லாரும் வெறுப்பாகத்
தென்படும்  இந்த வேளைகெட்ட
வேளையில்
அன்பின் உறையிலிருந்து உருவிய வாளுடன்
வெறுப்புக்குரியவர்களாக
எதற்காகக் கண்முன் வந்து நிற்கிறீர்கள்?

என் சிரசைக் கொய்தெடுத்துப் போகவா?
ஆஹா, எத்தனை பேரதிர்ஷ்டம்.
ஆனால் இதுவல்ல அதற்கான நாள் - இன்று
வெறுப்பின் உச்சத்தில் காய்ந்து சிவந்திருக்கிறேன்

நல்லது,
அந்த வாளை விட்டுப்போங்கள்
வெறுப்பை வெறுத்திருக்கும்
நன்னாளின் சுபவேளையில் அழைத்து
கச்சிதக்குறைவின்றி வெட்டிச்சமர்ப்பிக்கிறேன்
கடலுறங்கும் என் தலையை.

ஏப்ரல் 2015





 










ஈரம்

$
0
0


றிவிப்பில்லாமல் வந்த கனமழையில்
இருண்டன புறங்கள்
சட்டென்று இரவானது பகல்

ஆங்காரக் காற்றில் அதிர்ந்து நடுங்கி
இலைகளை உதிர்த்தது
முற்றத்து  மரம்

அகால மழை அவசரமாக விடைபெற்றதும்
மீண்டது பகல்

திசைகள்பெருமூச்சு விட்டன

கிளையில் மிஞ்சிய
ஒரேயொரு தளிரை
ஈரம்போகத்  துவட்டிக் கொண்டிருக்கிறது
வெயில்.


ஏப்ரல் 2015

காதல் கவிதை

$
0
0



ப்புக்குள் ஒளிந்திருக்கும்
ஓயாத அலைகளை எழுப்பி
சமுத்திரத்தை உண்டாக்குவது...

கல்லுக்குள் மறைந்திருக்கும்
திட சித்தத்தைச் சேர்த்து அடுக்கி
மலையைச் சமைப்பது...

எப்போதோ விழுங்கியும்
தொண்டையை விட்டு இன்னும் இறங்காத
விஷத்தை வடித்து அமிர்தத்தைத் திரட்டுவது...

பெருமக்களே
பெண்ணைக் காதலிப்பதென்றால்
இவையெல்லாம் தான்.

மின்சார இஸ்திரிப் பெட்டி
சூடேறிவிட்டதா என்று
விரலில் எச்சில் தொட்டுப் பரிசோதிப்பதும்

இதில் சேர்த்திதான். 

டி சே இளங்கோவின் மதிப்புரை

$
0
0
Monday, December 08, 2014
-சுகுமாரனின் 'வெல்லிங்டன்'குறித்த வாசிப்பனுபவம்- 



ரு ஊரைக் கடந்து போகையில் நாம் அதனை நினைவுகொள்ள எத்தனையோ விடயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் பார்க்காத, கடக்காத ஓர் இடத்தை நெருக்கமாக உணர சிலவேளைகளில் ஒரு புத்தகமே போதுமாயிருக்கும். அவ்வாறு நாம் விலகியோ/விலத்தியோ போக முடியாதவளவிற்கு 'வெல்லிங்டன்'என்கின்ற தான் சிறுவயதுகளில் வசித்த ஊரை இந்தப் புதினத்தில் மிக நுட்பமாகக் கட்டியெழுப்பியிருக்கின்றார் சுகுமாரன். சிறுவர்கள் வயதுக்கு வரும் நாவல்களிற்கு சாலிஞ்சரின் "Catcher in the Rye'ல் இருந்து அண்மையில் வெளிவந்த மைக்கல் ஒண்டாச்சியின் 'Cat's Table'வரை நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். வெல்லிங்டன் உருவாகிய வரலாற்றை ஆங்கிலேயரின் குறிப்புக்களிலிருந்து தொடங்கி, அங்கே விஸ்தரிக்கப்படுகின்ற இராணுவ முகாங்களால் எவ்வாறு மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதையும், காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் சிறுவன் பாபுவின் பார்வையினூடு வெளிக்கொணரப்படுகின்றது.

மனிதர்கள் எங்கு போனாலும் 'மனிதர்களாகவே'இருக்கின்றார்கள். அன்பாய் வாழப் பிரியப்படுகின்றார்கள், பிடித்த யாரோடோ ஓடிப்போகின்றார்கள், பிறன்மனை தேடி அலைகின்றார்கள், சிறுவர்கள் மீது வன்முறை செலுத்துகின்றார்கள், மற்றவர்களுக்குக் கிடைப்பது தங்களுக்கு வாய்க்கவில்லையென பொறாமைப்படுகின்றார்கள், காதலுக்குத் துரோகம் செய்கின்றார்கள், துயரத்தின் மிகுதியின் வாழமுடியாது தற்கொலை செய்யவும் துணிகின்றார்கள். நாவலை வாசித்து முடிக்கும்போது நீங்களும் வெலிங்டனுக்குள், இன்னும் வாழ்ந்திருக்கலாமே என்று ஒரு பாத்திரமாக நிச்சயம் மாறியிருப்பீர்கள். சரஸ்வதி ரீச்சர் ஊரை விட்டு முற்றுமுழுதாக விலகும்போது ஏன் கண்கள் ஈரமாயின என்பதற்கு இப்போதும் சரியான காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை. பாபுவிற்கு பிரியமான, காமத்தின் முதல் அரும்பை கிளர்த்திய சக்குக்காவைப் போல, யாரேனும் ஒருவரைத் தாண்டாது நம்மில் அநேகர் வந்திருக்கவே முடியாது. 

இந்த நாவலைப் போலவே, இந்த நாவல் எழுதியது பற்றி சுகுமாரன் எழுதிய பின்னுரையும் முக்கியமானது. நாவலை எழுதத் தொடங்கிய காலம்,  ஆரம்ப காலத்தில் எழுதியவை பிடிக்காமல் போனது, நாவலிற்கான மொழி கைவராமல் ஒரு தற்கொலையிற்கான மனதைப் போல சோர்ந்து நின்றது, பிறகு எழுதியதை நிறைய வெட்டியெறிந்துவிட்டு வேறொரு திசையில் எழுதிப்போனது, நாவலிற்கு ஆதாரமாய் வாசித்த நூற்கள், ஒருகட்டத்தில் நாவலை அதன்போக்கிலே போகவிட்டு, அதனைப் பின் தொடர்ந்து போனது என்று எழுதுகின்ற சுகுமாரனின் குறிப்புகள், நாவல்கள் எழுதப் பிரியப்படும் எந்த ஒருவருக்கும் மிகவும் பயன்படக்கூடியவை. 

சுகுமாரன் பாபுவினூடாக முன்வைக்கும் அக்காக்கள் பலரின் வாழ்க்கை, எனக்கும் நெருக்கமானது. சிறுவன்களுக்கும் அக்காக்களுக்கும் உறவை, சிலவேளைகளில் அம்மாக்களால் கூட அறிந்து கொள்ளவோ/ விளங்கிக்கொள்ளவோ முடியாத அந்தரங்கங்களை உடையது. அக்காக்கள் காட்டும் அல்லது அவர்களின் பார்வையினூடு விரியும் ஒரு உலகைக் காணும் சிறுவன்கள் ஏதோ ஒருவகையில் வித்தியாசமான பருவத்தை பதினமங்களில் அடைகின்றார்கள். ஊரில் இருந்தபோது மட்டுமின்றி பிறகு இடம்பெயர்ந்து அலைந்தபோதும் நான் வெவ்வேறான அக்காக்களில் அரவணைப்பிற்குள்ளே இருந்திருக்கின்றேன். பதினமங்களை அடைந்தபோது, என் வயதொத்த பெண்களை விட, அக்காக்கள் போன்ற அனுபவங்களுள்ள பெண்களைத் தேடியே அலைந்திருக்கின்றேன், அது ஏனென்று நினைக்கும்போது சற்று வியப்பே வருகின்றது.

வெல்லிங்டனை வாசிக்கும்போது அந்த நிலப்பரப்பிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அதன்பிறகு நாமும் ஒரு சாட்சியாக மாறும்போது நம்மால் நாவலின் பலத்தைப் பாராட்ட மட்டுமில்லை, பலவீனங்களைக் கூட புரிந்து ஏற்றுக்கொள்ள முடிகின்றது. நம்மை அதன் நிலப்பரப்பிற்குள்/பின்னணியிற்குள் அழைத்துச் செல்லாத நாவல் எத்தகைய சிறப்பாக இருந்தாலும், நாம் அதற்கு அந்நியராகிப் போய் முற்றுமுழுதாக அதனோடு ஒட்டிக்கொள்ள முடியாது போய்விடுகிறது. ஏன் வெலிங்டனோ, பூனையின் மேசையோ, சடங்கோ, காடோ, யாமமோ எனக்கு மிக நெருக்கமாய் இருக்கிறதென்று யோசிக்கும்போது, அவை தமக்கான நிலப்பரப்பை வாசிப்பவரிடையே ஆழமாய் உள்ளிறக்கியவை என்பது ஒரு முக்கிய காரணமென நினைக்கின்றேன்

நிறைய நண்பர்களோடு அலையும் பாபு, நண்பர்கள் ஒவ்வொருவராய் ஊர் விட்டு நீங்கி வேறு நகர்களுக்குப் போகின்றபோது, தனிமையில் உளைந்தலைகின்றார். பின்னர் தனிமையை தனக்குப் பிடித்தமான ஒன்றாக ஆக்கி, நெருக்கமும் கொள்கின்றார். அவ்வாறு பழக்கப்படுத்திக்கொண்டதாலேயே சரஸ்வதி ரீச்சர் ஊர் நீங்கிப் போகும்போதோ, கெளரி அக்கா வேலை நிமித்தம் செல்லும்போதோ துயரத்துடன் அந்நிகழ்வுகள் தரும் வெறுமையைத் தாங்கிக்கொள்ள முடிகின்றது. இவ்வாறு அனுபவங்கள் நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கும்போது, நாம் அவற்றைக் கடக்கையில் வளர்ந்த மனிதர்களாக ஆகிவிடுகின்றோம் அல்லவாஇதை மிக நேர்த்தியாக சுகுமாரன் இந்நாவலில் கொண்டு வருகின்றார். இங்கேதான் சிறுவனான பாபு, வளர்ந்தவனாகி விடுகின்றான் என்பதையும் வாசிக்கும் நாங்கள் கண்டுகொள்கின்றோம்.


சுகுமாரன் இந்த நாவலெழுதிய வரலாற்றைச் சொல்லும்போது, மார்க்வெஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்'பாதிப்பு இதில் தன்னையறியாமலே வந்திருக்கின்றது எனச் சொல்லி மார்க்வெஸின் நாவலில் ஒரு பாத்திரம் அறிமுகமாகும்போதெல்லாம் மஞ்சள்நிற வண்ணத்துப்பூச்சி பறக்கின்றமாதிரி, தனது நாவலில் வரும் பாத்திரமான மம்மது வரும்போதும் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றார். ஒருநாள் மாலையில் வெலிங்டனை வாசித்துக்கொண்டிருந்தபோது, நாவல் மீதான பித்தத்தில் நள்ளிரவு தாண்டி இரவுணவைக் கூட சாப்பிடாது தொடர்ந்து வாசித்து முடித்தபோது, இடையில் என்னறைக்குள் ஒரு வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சி வந்து பறந்துகொண்டிருந்தது தற்செயலானது என்றாலும் மறக்கமுடியாத தருணந்தான் அதுவும்.

ஒரு கவிஞராக அறிமுகமாகி, தனது 50களில் முதல் நாவலென்றாலும் முக்கியமான புனைவை எழுதிய சுகுமாரன், நாம் எழுத விரும்பும் கதையை எப்போதேனும் எழுதிவிட முடியும் என்று நம்பிக்கை தந்திருக்கின்றார். இந்தக் கணத்தில் என்னோடு நாவல் வாசிப்பில் கூடவே பறந்த வண்ணத்துப்பூச்சியிடம் சுகுமாரனிற்கான என் கதகதப்பான நேசத்தை நன்றியுடன் அனுப்பிவைக்கின்றேன்.

நன்றி:    ’காலம்’     இதழ் 45

மௌனமாக வந்தது

$
0
0







காதல் மௌனமாக வந்தது
வெறுமொரு கனவுபோலத் தோன்றியது
எனவே   நான்
காதலை உள்ளே வரவேற்கவில்லை
காதல் கதவைத் தாண்டிச் சென்றதும் விழித்தெழுந்தேன்
அந்த உடலற்ற கனவின் பின் விரைந்து செல்கையில்
இருளில் கரைந்தது அது
காதலின் தூரத்து வெளிச்சம்
மிஞ்சியது உதிரச் சிவப்புக் கானலாக.

- ரவீந்திர நாத் தாகூர். ( Sehnai 1937 )

எப்போதும் கடல்

$
0
0


எல்லாக் காலத்திலும் அமைதியாக அடங்கியிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் கொந்தளித்துக் குமுறுவதில்லை
எல்லாக் காலத்திலும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் நிசப்தமாக முணுமுணுத்துக் கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் ஒளிசிதற அலைந்து கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் அந்தகாரத்தில் ஒளிந்திருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் மூழ்கடித்துக் கொல்வதில்லை
எல்லாக் காலத்திலும் உயிர்ப் பிச்சையளித்துக் கரையேற்றுவதில்லை
எல்லாக் காலத்திலும் கடலுக்குள் மட்டுமே கடலிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் கையளவு கடலொன்று
கடலில் இருப்பதுபோலவும் கடலில் இல்லாதது போலவும்
கைக்குள் இருக்கிறது
எனினும்
எல்லாக் காலத்திலும் கடலிலும்
கடல் இருந்துகொண்டேயிருக்கிறது.


13மே 2015

செவ்வாய்க்கு அடுத்த நாள் , ஆனால் புதன்கிழமை அல்ல.

$
0
0


செவ்வாய்க்கு  அடுத்த நாள் , ஆனால்
புதன்கிழமை அல்ல.




வீடு தவறியோ  விலாசம் விசாரித்தோ
உதவிகோரியோ  நன்கொடை திரட்டவோ 
எப்போதாவது  யாராவது வருவார்கள்
என்பதைத் தவிர்த்தால்
வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர
வருகையாளர் அதிகமில்லை  வீட்டுக்கு

அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும் 
அபூர்வமாக நுழைவதுண்டு

விடிந்ததும் காற்றின் வெளிச்சம்
வீட்டைப் பிரியாத பூனையின் காதலன்
காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி
முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று
விசாரணை செய்ய வரும் நீல வால் குருவி
தொட்டிப் பூவைப் பறித்தது ஏன் என்று
பிராது சொல்லும் தேன் சிட்டு
மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை
அறைகளுக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக்
கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு
இவையெல்லாம் தற்செயல் வருகைகள்

இன்று
வெய்யிலின் இளநீர் வாசனையோடு
கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும்
நட்டநடுப் பகலில்
மூடிய கதவைக் கடந்து
யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன்
கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன்
யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை
எனினும் யாரோ வந்து
வீடு முழுவதும்
ஊன்றி நடந்து திரும்பிய  அடையாளமாய்
தாழிட்ட கதவுக்கு இப்பால்
வாசல் நிலையருகில் தரையில்
ஒரு ஜோடிக் காற்சுவடுகள்
ஆரஞ்சு ஒளியுடன்
விட்டுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன்

அப்போது  முதல்தான்
இதயத் துடிப்பின் நிமிடக் கணக்கில்
ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன்
அன்று
செவ்வாய்க்கு மறுநாள், ஆனால்
புதன்கிழமை அல்ல.





















மூன்று கவிதைகள் பற்றி ஒரு குறிப்பு

$
0
0


ண்பர் அஞ்சென் சென்  வங்காளத்தின் உத்தர் ஆதுனிக் ( பின் நவீனத்துவம் ) போக்கின் முக்கியமான கவிஞர். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தால் பழங்குடியினரின் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டிருந்தார். சில கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்திருந்தார். ஆங்கில மொழியாக்கத்தின் பிரதியொன்று என்னிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதிலிருந்து சில கவிதைகளை தமிழில் ஆக்கவும் முயன்றிருந்தேன். அதில் ஒரு கவிதை இங்கே இடம் பெறுகிறது.

சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்த முடிவற்ற இரவொன்றில் இந்தக் கவிதை தொடர்பே இல்லாமல் நினைவுக்கு வந்தது. அப்போது எம்.எஸ். சுப்பு லட்சுமியின்குரலில் தியாகராஜரின் பிரசித்தமான கீர்த்தனையான 'சோபில்லு சப்தஸ்வர'வைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  அனுபல்லவியை எம்.எஸ். பாடிக் கொண்டிருந்தபோது தன்னிச்சையாக ஒரு கவிதையின் பொறி தட்டியது. அதை எழுதி முடித்தேன். இங்கே இடம் பெறும் இரண்டாவது கவிதை அதுதான். சந்தால் கவிதையின் வரிகளும் தியாகய்யர் கீர்த்தனையின்  அனுபல்லவியும் - நாபி ஹ்ருத் கண்ட ரசன நாஸாதுலு அந்து  ( நாபி, இதயம், தொண்டை, நாக்கு, நாசி முதலான உடலின் இடங்களிலிருந்துதே ஏழு ஸ்வரங்களும் பொலிந்து வருகின்றன ) - இந்தக் கவிதையைத் தூண்டியிருக்கின்றன. உண்மையில் நான் கவிதையில் எழுத விரும்பியது நான் பலமுறை கேட்டும் அலுக்காத புதிதாகக் கேட்பதுபோலத் தொனிக்கும் அந்த ராகத்தைப் பற்றித்தான். ஆனால் உள்ளுக்குள் இருந்த பழங்குடி உணர்வு அதை வேறு ஒன்றாக மாற்றி விட்டது. ஆனாலும் கவிதையைத் தூண்டி விட்ட அந்த ராகத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக அதையே தலைப்பாக்கினேன். ‘ஜகன்மோகினி’.

மே 2008இல் எழுதிய கவிதையை அச்சுக்குக் கொடுக்கவில்லை. சங்கோஜம். 2011இல் 'நீருக்குக் கதவுகள் இல்லை'தொகுப்பில்  சேர்த்து விட்டு அதே கூச்சம் காரணமாக உடனேயே விலக்கிக் கொண்டேன்.

க.மோகனரங்கனின் புதிய  தொகுப்பு 'மீகாம'த்தை வாசித்துக் கொண்டிருந்த போது அதில் இடம் பெற்றிருக்கும் 'யவனராணி'கவிதை மேற்சொன்ன இரண்டு கவிதைகளையும் மறுபடியும் நினைத்துப் பார்க்கச் செய்தது; இரண்டாம் முறையாக. மோகனரங்கனின் தொகுப்புப் பற்றிப் பேசிய தருணத்தில் நண்பர் இசை இந்தக் கவிதையைப் பற்றிச் சொன்னது முதல் முறை. நான் வேகமாக 'இது என்னோட கவிதையாச்சே?'  என்றேன். இந்த அந்தரங்கத் தகவலை இசை மோகனரங்கனின் நூல் மதிப்புரைக் கூட்டத்தில் எழுத்து வடிவிலும் குரல் வடிவிலும் பதிவு செய்திருக்கிறார். ஏங்க இப்படிப் பண்ணினீங்க? என்றால் 'பேரைச் சொல்லலியே? அது    மட்டுமில்லே என் பேருக்குப் பொருத்தமாக இருக்கவேண்டாமா? என்கிறார். இசை என்பார் சத்தியமூர்த்தி என்பதை வாசகர்கள் அறிவார்கள்தானே?

மூன்று கவிதைகளும் இங்கே.மூன்றுக்கும் ஏதாவது தொடர்புஇருக்கிறதா?

கவிதை 1                                            மர்மம் 


டைகளில்லாத உன்னைப் பார்த்திருக்கிறேன்
அட, என்ன அழகு?

ஆடைகள் புனைந்த உன்னைப் பார்த்திருக்கிறேன்
அட, என்ன அழகு?

வெள்ளி மூக்குவளையம் அணிந்தவளே,

ஆடைகளில்லாமல் கண்டதெல்லாம்
ஆடைஉடுத்ததும் மர்மமாவது எவ்விதம்?

அட,
தழையாடை உடுத்தவனிலிருந்து
இழையாடை உடுத்தவன்வரை
எத்தனை காலமாகத் தேடுகிறோம் இந்த ரகசியத்தை?

- சந்தால் பழங்குடிப் பாடல்

                                                                சந்தால் பழங்குடிப் பெண்





கவிதை  2                                   ஜகன்மோகினி

றைக்கப்படாத உன் இடங்களை எல்லாம்
பகல் ஒளியின் உண்மைபோலத்
பார்த்த  எனக்கு
ஆடையின் இருளில் அதே  இடங்கள்
அறியாமையின் திகைப்பாய்த்
திணறவைப்பதேன்?

தெளிந்த ரகசியம் எந்தப் பொழுதில்
தெரியாப் புதிராகிறது ஜகன் மோகினி

( ஜகன்மோகினி: 15ஆவது மேளகர்த்தா ராகமான மாயாமாளவகௌளையின் ஜன்ய ராகம்) .



- சுகுமாரன் 

@

கவிதை 3                யவனராணி


ளைந்த பின்
தேடி
ஏமாறுகிறேன்.
உடுத்தி
நீ
நடக்கையில்
பிறப்பித்து
உலவவிட்ட
இரகசியங்கள்

ஒவ்வொன்றையும்.

- க.மோகனரங்கன் ( மீகாமம் )

அண்ணாச்சி விக்ரமாதித்யன்

$
0
0


விக்ரமாதித்யன் என் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.  என் நண்பர். என் அண்ணாச்சி.

இந்த வரிசையைக் கவனமாக யோசித்தே சொல்கிறேன். கவிஞர் என்ற நிலையில்தான் முதன் முதலாக விக்ரமாதித்யனைத் தெரிந்துவைத்திருந்தேன். அந்த அறிமுகத்தின் அடிப்படையில்தான் நண்பர் ஆனார். அதுதான் பின்னர் அவரை அண்ணாச்சி என்ற இடத்துக்குக் கொண்டு போய் வைத்தது. இந்த நட்புக்கு இப்போது முப்பத்திச் சொச்சம் வயதாகிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவுக்கும் நாங்கள் இருவரும்அடிக்கடி சந்தித்துக் கொள்கிறவர் களோ அட்டவணை போட்டு அன்றாடம் பேசிக் கொள்கிறவர்களோ அல்ல. தற்செயலாக அமைகிற சந்திப்புகளில் நலம் விசாரித்துக் கொள்வதும் வாய்ப்பிருந்தால் பேசிக் கொள்வதுமாகவே இந்த நட்பைப் பராமரித் திருக்கிறோம். நான் பேசியதை விட அவர் பேசக் கேட்டதே அதிகம். அதுவும் இலக்கியம் பற்றி  மட்டுமே. அதன் மூலம் நுட்பமான பலன்களை நான் அடைந்திருக்கிறேன்.


கவிதைகள் எழுதி அவை வெளியாகியும் வந்த காலத்தில் விக்ரமாதித்யன் என்ற பெயரைத் தெரிந்து கொண்டேன். குறிப்பாக ஒரு கவிதை மூலம். இந்துமதி ஆசிரியராக இருந்துநடத்திய 'அஸ்வினி' இதழில் அந்தப் பெயரை முதலில் பார்த்தேன்.  அந்தி வெளிச்சத்தில் எடுத்த புகைப் படத்துடன் கறுப்புப் பக்கத்தில் வெள்ளை எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்த கவிதை. 'ஆகாசம் நீல நிறம்' . 'திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீல நிறம்'என்று முடியும் அந்தக் கவிதை மனதில் பதிந்தது. சில மாதங்களுக்குப் பின்னர் 'கணையாழி'இதழில் ஒரு கவிதையை வாசித்தேன். 'எழுதாத கலைஞன்'. ஆனால், அதை எழுதியவரின் பெயர் பாணபட்டன் என்று இருந்தது. அந்தக் கவிதையின் விட்டேற்றித்தனமான தொனி, வரிகளின் அமைப்பு, அதிலிருந்த திறந்த தன்மை -இவையெல்லாம் அது விக்ரமாதித்யனின் கவிதையாக இருக்கலாம் என்று ஊகிக்கச்செய்தன. என் ஊகத்தை அன்றைய சக தோழரான விஸ்வநாதனிடம்,  இன்றைய பாதசாரியிடம் சொன்னேன். 'இது விக்ரமாதித்யனாத் தெரியலேப்பா'என்று விஸ்வநாதன் பதில் சொன்னார்.


இருந்தும்அந்த ஊகத்தை என்னால் கைவிட முடியவில்லை. அதன் பின்னர் விக்ரமாதித்யன் என்ற பெயரில் பல கவிதைகளை வாசித்த போதும் அந்த ஊகம் மனதுக்குள்ளேயே இருந்தது.


1982இல் அன்னம் நவ கவிதை வரிசையில் விக்ரமாதித்யனின் முதல் தொகுப்பு 'ஆகாசம் நீல நிற நிறம்'வந்த பிறகே அந்த ஊகம் கலைந்தது. விக்ரமாதித்யனின் இன்னொருஅவதாரம்தான் பாணபட்டன் என்று தெரிந்து கொண்ட அந்த நொடியின் சந்தோஷம் இப்போதும் சிரிப்பைத் தருகிறது. அதன் பின்னர்'பூர்ணன், விக்கி, பிரேம், அமர்'என்றுஅவ்வப்போது அவர் எடுத்த அவதார ரகசியங்களை மிக எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது.


விக்ரமாதித்யன் என்னுடைய சில முதல் முயற்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். கோடைகாலக் குறிப்புகள்என்னுடையமுதல் தொகுப்பு. அன்றைய மரபுப்படிசொந்தக் காசில் வெளியிட்ட தொகுப்பு. கவிதைகளின் பிரதியையும் காசையும் கொடுத்ததைத் தவிர அந்தத் தொகுப்புக்கு என்னுடைய பங்களிப்பு வேறு எதுவுமில்லை. நண்பர்விமலாதித்த மாமல்லனின் உழைப்பில்தான் புத்தகம் வெளிவந்தது. புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து மாமல்லனைச் சந்தித்தபோது புத்தகத் தயாரிப்புச் செலவுக் கணக்கு எழுதிய ஒரு தாளை நீட்டினார். காகித விலை, அச்சுக் கூலி, பைண்டிங்க் கட்டணம் , ஆட்டோ வாடகை, பார்சல் செலவு எல்லாம்  எழுதப்பட்டிருந்தது. கூடவே இதர செலவுகள் என்றும் எழுதப் பட்டிருந்தது. அதில் புரூப் ரீடிங் - நம்பிராஜன் - என்று ஒரு தொகையும் இருந்தது. மிகவும் சொற்பமான தொகை அது. சந்தேகத்துடன்மாமல்லனிடம் புரூப் ரீடிங்குக்கு இவ்வளவுதான் ஆகுமா? என்று கேட்டேன். 'ஒரு குவார்ட்டருக்கு அதுக்கு மேலே ஆவாதுப்பா'என்று பதில் வந்தது.

அன்றைய இரவே முதல் முதலாக விக்ரமாதித்யனைச் சந்தித்தேன். அவர் வீட்டில். அன்று அவர் பெற்றோருடன் மாம்பலம் மேட்லி சாலையருகில் குடியிருந்தார் என்று நினைவு. மாமல்லனின் ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் அவர் வீட்டுக்குப் போனோம். விக்ரமாதித்யனை விட அடர்த்தியான மீசை வைத்திருந்த அவர் தந்தை வரவேற்று வீட்டுக்குள்ளே பார்த்து 'நம்பி'என்று  குரல் கொடுத்தார். உள்ளே இருந்து சட்டையை அணிந்தபடியே வெளியே வந்த மனிதர் 'அட, வாங்கய்யா'என்றார். 'வணக்கம்  அண்ணாச்சி'என்றேன். நம்பிராஜன் என்ற விக்ரமாதித்யன் என் அண்ணாச்சி ஆனார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் வழக்கமாக எல்லாரையும் சொல்லுவது போல 'சார்'என்று சொல்லாமல் ஏன் அண்ணாச்சி என்று சொன்னேன் என்று இன்றுவரை புரியவில்லை. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில்தான் ராஜமார்த்தாண்டனும் அறிமுகமானார். ஆரம்ப நாட்களில் அவரை 'மார்த்தாண்டன்'என்றே அழைத்து வந்திருக்கிறேன். மிகவும் நெருக்கம் ஏற்பட்ட பிறகுதான் அண்ணாச்சி என்று சொல்ல முடிந்தது. ஆனால் நம்பியை முதல் சந்திப்பிலேயே அண்ணாச்சி என்று அழைத்தது அவருடைய தோற்றம் காரணமாக இருக்கலாம்.


அன்றைக்கிருந்த அடர்கருந்தாடி இன்று வெண் தாடியாக மாறியிருக்கிறது என்பதைத் தவிர அவர் தோற்றத்தில் மாற்றமில்லை. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவரப்  பங்காற்றினார் என்பது இன்றும் மகிழ்வளிக்கும் செய்தியாகவே இருக்கிறது.


சென்ற ஆண்டு கோடைகாலக்குறிப்புகளின் புதிய பதிப்பு வெளியானது. முதல் பதிப்பில் இடம்பெற்றதுபோலவே இந்தப் பதிப்பிலும் விக்ரமாதித்யன் பெயர் இருக்க வேண்டும் என்று விரும்பியதுஅந்த நட்பைப் பாராட்டிக் கொள்ளத்தான்.


கவிதையாக்கம் அல்லது விமர்சனம் என்று நான் எழுதத் தொடங்கியதும் விக்ரமாதித்யனை முன்வைத்துத்தான். 1988 இல் வெளிவந்த அவரது மூன்றாவது தொகுப்பான'உள்வாங்கும் உலகம்'பற்றி எழுதிய கட்டுரை தான் நான் கவிதை இயல் சார்ந்து எழுதிய முதல் கட்டுரை. தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டில் அதை வாசித்தது தான் கவிதை விமர்சகனாக நான் பங்கேற்ற முதல்  நிகழ்ச்சி. அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை 'கவனமாப் படிச்சிட்டுத்தான் சொல்றீங்க'என்று அண்ணாச்சி  சொன்னதுதான் தொடர்ந்து எழுத ஊக்கமூட்டிய காரணங்களில் ஒன்று. அவரே எழுதிய பல கவிதையியல் கட்டுரைகளில் நான் பின்னர் எழுதிய வரிகளை மேற்கோளாகப்  பயன்படுத்தியிருக்கிறார். இவனும் ஏதோ சரியாகத்தான் சொல்கிறான் 'என்று மறைமுகமாக அவர் அளித்த அங்கீகாரம் அது என்றே எண்ணுகிறேன். அந்த அங்கீகாரத்தின் உச்சம்அவருடைய ஒரு தொகுப்புக்கு என்னை முன்னுரை எழுதச் செய்தது. விக்ரமாதித்யன் கவிதைகள் பற்றிய அடிப்படையான கருத்து களைத் தொகுத்துக் கொள்ள அந்த வாய்ப்புஉதவியது. அதில் சொல்லப் பட்ட கருத்துகளிலிருந்து மாறவோ பின் வாங்கவோ தேவையில்லாத தடத்தில்தான் விக்ரமாதித்யனின் கவிதைப் பயணம் இப்போதும் தொடர்கிறதுஎன்று நினைக்கிறேன்; பதினேழு தொகுப்பு களைக் கடந்த பின்னும்.


விக்ரமாதித்யனின் கவிதைகளைப் பகுத்தும் வகைப்படுத்தியும் பேசுவதை விட நவீன கவிதையில் அவரது பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். அவரது பங்களிப்பை மூன்று நிலைகளில் பார்க்கலாம். கவிஞராக, கவிதையியலாளராக,கவிதைச் சூழலை நிர்ணயிப்பவராக.


விக்ரமாதித்யன் எழுத வந்த கால அளவில் நடைமுறையிலிருந்த கவிதை வேறு. எழுத்து மரபிலிருந்து தொடர்ந்து வந்த சில குணங்கள் கவிதையில் பின்பற்றப்பட்டு வந்தன.


கவிதை இறுக்கமானதாக இருக்க வேண்டும். சிக்கலானதாக இருக்க வேண்டும். கொஞ்சம் இருண்மையுடன் இருந்தால் சிலாக்கியம். கவிதையின் மையப் பொருள் வாசகனுக்கு எளிதில் பிடிபட்டு விடாததாக இருப்பது அவசியம். படிமச் செறிவு கொண்டதாக இருக்க வேண்டும். அன்று வெளியான பெரும்பான்மைக் கவிதைகள் அவ்வாறுதான் இருந்தன.அது தேவையாகவும் இருந்தது. வெறும் முழக்கங்களும் ஆர்ப்பாட்டக் கூச்சல்களும் நிரம்பிய மரபையே கவிதை என்று பாராட்டிக் கொண்டிருந்த பண்டித காலக் கவித்துவத்துக்கு  எதிராகவே மௌன வாசிப்புக்குரியதாகவும் கச்சிதமானதாகவும் கவிதை முன்வைக்கப்பட்டது. அது காலத்தின் வற்புறுத்தலாகவும் இருந்தது. அதே சமயம் வெறும் வார்த்தைஜாலங்களும் கவிதைகளாக வெகுஜனப் பரப்பில் கொண்டாடப் பட்டன. இந்தத் திசை மாற்றப் புள்ளியில்தான் விக்ரமாதித்யனின் கவிதை அறிமுகமானது.


எளிமை. நேரடித்தன்மை.திறந்ததன்மை. படிமச் செறிவோ இருண்மையோ இல்லாமல் அனுபவத்தின் மையத்துக்கு நெருங்கும் கவிதையாக்க முறையையே விக்ரமாதித்யன்  முன்வைத்தார். அதுவரை புதுக்கவிதை என்று அறிமுகமானவை பெரும்பான்மையும் மேற்கத்தியக் கவிதை யியலின் பாதிப்பைக் கொண்டிருந்தன. அதற்கு மாறாக தமிழ்க்கவிதையின் தெளிவு நிலையை விக்ரமாதித்யன் முன்னிருத்தினார். மரபு ஒரு சுமையாகவும் தீண்டத் தகாததாகவும் கருதப்பட்ட சூழலில் மரபின் சாரமான கூறுகளைநவீன உணர்வுடன் கவிதையாக்கத்தில் கொண்டு வந்தார் அவர். சங்க இலக்கியக் கவிதைகளின் இம்மையியல்பையும் பக்தி இலக்கியத்தின் உணர்வுப் பெருக்கையும்கவிதைகளில் புகுத்தினார். அதை மரபின் மீதுள்ள முரட்டுப் பற்றாக அல்லாமல் அதன் மீதான நவீன அணுகுமுறையாகவே அவரால் சாத்தியப்படுத்த முடிந்தது. ஒரு கவிஞராகஅவரை நான் மதிப்பிடும் இடம் இது.


மரபின் கூறுகளுடன் எழுதும்போதும் நிகழ் காலத்துடன் உறவு கொண்டவராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது. அவரது கவிதைகளில்இறந்த காலத்தின் பெருமை இல்லை. எதிர்காலம் பற்றிய பகல் கனவும் இல்லை. நிகழ்கால ஸ்திதியைப் பற்றியே அவரது கவிதைகள் பேசுகின்றன. அந்த வகையில் அவர் பாரதியின்  வழிமுறைக்காரர். பாரதியின் அநேகமாக, எல்லாக் கவிதைகளும் நிகழ் காலத்தின் குரலாகவே எழுதப்பட்டவை.

ஆனால் தனி வாழ்வில் அண்ணாச்சி எதிர்கொண்ட நிகழ்காலம் நம்பிக்கை தர லாயக்கில்லாதது. புலம்பவைப்பது. அதுவே அவரது கவிதைகளில் பெரும் பாலானவற்றுக்குக் கழிவிரக்கத் தொனியைக் கொடுத்தது என்று எண்ணுகிறேன். தனது துக்கத்தைப் பொதுவயப்படுத்திப் பேசும் கவிதைகளில் மிகப் பெரும் அனுபவத்தை அவரால்அளிக்க முடிகிறது. விக்ரமாதித்யனின் புகழ் பெற்ற கவிதை வரிகள் அந்த வகையிலானவை.

கரடி சைக்கிள் விடும்போது
நம்மால் வாழ்க்கையை
அர்த்தப்படுத்த முடியாதா'’ என்பதும்
நெஞ்சு படபடக்கிறது
யாராவது
அருவியை நீர் வீழ்ச்சி என்று
சொல்லி விட்டால்..'
என்பதும் எல்லாம் அந்த அனுபவத்தை அளிப்பவை.


சம காலத்தில் எந்த வரிகள் அதிகம் உச்சரிக்கப்படுகின்றனவோ அதை எழுதியவன் கவிஞனாக மதிக்கப்படுவான் என்று பாப்லோ நெரூடா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். எல்லா இலக்கிய விதிகளும் தமிழில் விலக்காகவதுபோலவே இந்த வரிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கே சினிமா வசனமும் பாடல் வரிகளும் காமெடித் துணுக்குகளும் தான் பொதுப் புத்தியில் மண்டிக் கிடக்கின்றன. எனினும் சிலரது சில வரிகள் வாழ்க்கையின் தருணங்களில் நினைவூட்டப் படுகின்றன. அண்மையில்இணையத்தில் பார்க்கக் கிடைத்த  ஒரு சச்சரவில் இடம் பெற்ற ஒரு வரி அந்தச் சண்டையையே நிறுத்தியது. 'நக்கவும்  துழாவவும் நாக்கை வைத்திருந்தால் போதும்'என்பதுஅந்த வரி. எழுதியவர் விக்ரமாதித்யன். இந்த இடத்தில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் விக்ரமாதித்ய வரியையும் சொல்லி விடுகிறேன்.

'சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்'.

நவீன கவிதையில் அதிகம் நகலெடுக்கப்பட்ட கவிதை வடிவங்களில் விக்ரமாதித்யனுடையவையும் அதிகம் இருக்கும். மிக அண்மையில் வாசித்த ஒரு தொகுதியின் கவிதை இது.

'உன் மனது எத்தனை பெரிய மலர்
உன் மனது எத்தனை பெரிய அகல்
உன் மனது எத்தனை பெரிய கோட்டை
உன் மனது எத்தனை பெரிய வனம்
புதிரெல்லாம் சொல்கிறது
நீயிடும் மாக்கோலம்

இந்தக் கவிதை தனியாகப் பத்திரிகையில் வந்திருந்தால் விக்ரமாதித்யன் கவிதை என்றே நினைத்திருப்பேன். வந்திருப்பது மகுடேசுவரனின் சமீபத்திய தொகுப்பான ‘நிறைசூலியில் இதை ஆரோக்கியமான பாதிப்பாகவே நினைக்கிறேன். விக்ரமாதித்யனின் பாதிப்பை இதற்கு முன்பும் பலரது கவிதைகளில் பார்க்க முடிந்திருக்கிறது. சிலரை அவரே ஊக்குவித்துமிருக்கிறார். அவர்கள் காணாமற் போய் விட்டார்கள். வந்து நின்று கொண்டே இருக்கிறார் விக்ரமாதித்யன்.

இவையெல்லாம் கவிஞராக அவரிடம் நான் காணும் நிலை.

சம காலத்தில் கவிதைஇயல் பற்றி அதிகம் எழுதியவர் விக்ரமாதித்யன் மட்டுமே. அவரது கவிதை ரசனை, கவி மூலம், தற்காலச் சிறந்த கவிதைகள் ஆகிய நூல்கள் அதற்குஉதாரணங்கள். அவரது கவிதையியல் கோட்பாடுகளைச் சார்ந்ததல்ல. ரசனை சார்ந்தது. அனுபவத்தையும் உணர்வையும்  எந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றனவோ அவற்றையே நல்ல கவிதைகள் என்று ஏற்கும் எளிய வரையறையைக் கொண்டது. அதனால்தான் அவரால் எல்லாக் கவிதைகளையும் சிலாகிக்க முடிகிறது. குறிப்பிடத் தகுந்த ஒரு கவிதை  எழுதிய கவிஞனைக் கூடப் பாராட்டிப் பேச முடிகிறது. கவிதை ரசனை, தற்கால சிறந்த கவிதைகள் இரண்டு நூல்களிலுமாக 54பேரின் கவிதைகளைப் பற்றி எழுதியிருக் கிறார். இந்தப்பெருந் தன்மை அல்லது பெரும்போக்கு தமிழில் அரிது. இப்படி ஒரு பெருந்தன்மை யான மனம் எனக்கில்லை என்ற ஒப்புதலை விக்ரமாதித்யனுக்குப் பாராட்டாகவே தெரிவிக்கிறேன். இந்தப் பெருந் தன்மையே அவரை நவீனக் கவிதையின் சூழலை நிர்ணயிப்பவராகவும் ஆக்கியிருக்கிறது. முன் தலைமுறை. சமகாலத் தலைமுறை, புதிய தலைமுறைஎன்று எல்லாரிடமும் அவரால் இலக்கிய உரையாடலில் ஈடுபட முடிகிறது. குறிப்பாக, புதிய இளைஞர்களுடன். திருமேனி, லட்சுமி மணிவண்ணன், சங்கரராம சுப்ரமணியன்,கைலாஷ் சிவன், பாலை நிலைவன் என்று பலரையும் முன்னிலைப்படுத்தியவர் அவர்தான். அந்த வகையில் கவிதையில் புதிய சூழலுக்கான வாய்ப்பை உருவாக்கியவர்.


இங்கே ஒரு குறையையும்  சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 54  கவிஞர்களை முன்வைத்துப் பேசும் இரு நூல்களிலும் ஒரு பெண் கவிஞர் கூடக் குறிப்பிடப் படவில்லை. அவர் கவிதை வரியையே இங்கே சொல்ல விரும்புகிறேன்.

'பெண்ணாலே வாழ்கிறவன்
பெண்ணுக்கு எப்படி எதிரியாக?'

ண்ணாச்சியாக காட்டிய அன்புக்குக் கொஞ்சமும் குறையாதது அவர் கொடுத்த அவஸ்தைகள். படுத்திய பாடுகள். அதைப் பற்றி ஒருபோதும் பேசக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது.ஆனால் சேகர் சைக்கிள் ஷாப்என்ற தொகுதிக்கு எழுதிய கவிவாக்கில் அவரே ஒப்புதல்செய்திருக் கிறார். எனவே அதைச் சலுகையாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 


நான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்துக்கு தன்னை மறந்த நிலையில் வந்ததையும் நான்  கவனித்துக் கொண்டதையும் விவரிக்கிறார். அதெல்லாம் சரி. என்தரப்பில் நான் பட்ட துயரத்தை என்ன சொல்ல? அவர் வந்து என்னைப் படுத்திக் கொண்டிருந்தபோது வளாகத்தின் தலைவர் வந்து சேர்ந்தார். காரை விட்டு இறங்கும்போதே அண்ணாச்சியின் லீலையைக் கவனித்திருந்தார் என்று பிறகு அறைக்கு அழைத்தபோதுதான் தெரிந்தது. யார் அது? ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார்? ஏன் அவரை இங்கேஅனுமதித்தாய்? என்று கேள்விகளால் துளைத்தார்.அவர் கேட்ட தோரணையில் இன்றோடு என் வேலை காலி என்றே நினைத்தேன் 'அவர் என் நண்பர். என்னைப் பார்க்க வந்திருக்கிறார்? தமிழில் முக்கியமான கவிஞர்'என்று பதில் சொன்னேன். தன்னை விட  முக்கியமான கவிஞரா என்று தலைவர் நிமிர்ந்து பார்த்தார். எங்கே , அவரு எழுதின கவிதை வரியைச் சொல்லு பார்ப்போம். நீ நண்பன் தானே , கவிதை வரியெல்லாம் தெரிஞ்சிருக்குமில்ல?'என்றார். ஒரு நிமிடம் தயங்கினேன். ஞாபகத்திலிருந்து சொன்னேன்.


பிரம்மாண்டமானவன் பிருகதீஸ்வரன்
பிரம்மாண்டமானவள் பெரியநாயகி
வழிமறித்துக்கலவரப்படுத்தும் பெரும் நந்தி
எங்கே போகும் எளிய உயிர்கள்

கேட்டதும் புன்னகைத்தார். 'நம்ம ஆளா?' என்று கேட்டார். அவர் கேட்டது தஞ்சாவூரைச் சேர்ந்தவரா என்று? கவிஞர்கள் எல்லாம் ஒரே இனம்தானே என்று தப்பாகப் புரிந்து கொண்டு ‘ஆமாம்என்றேன். ‘தஞ்சாவூர்ல எங்கே?என்று அவர் மீண்டும் கேட்டபோதுதான் தவறு புரிந்த்து. இல்லை, திரு நெல்வேலிக்காரர்என்று சொன்னேன். நெல்லைக்காரருக்குத் தஞ்சை புரிஞ்சிருக்குஎன்றார். ‘நல்ல வேளை, கவிதை என் வேலையைக் காப்பாற்றியதுஎன்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.


சேகர் சைக்கிள் ஷாப் என்ற விக்ரமாதித்யனின் தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருப்பதை முன்பே சொன்னேன். அதில் அவருக்கு உடன்பாடு இருந்தாலும் சின்ன மனத்தாங்கள் இருந்தது. அதை  வெளிப் படையாகவே சொல்லவும் செய்தார். ‘கவிஞர்களை இன்னும் தாராளமாவே பாராட்டலாம்யா”. இன்று இத்தனைப் பிரபலங்களும் மூத்த கவிஞரும் வாசகர்களும் கூடியிருக்கும் அரங்கில் விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது வழங்கபட்டிருக்கிறது. அது மிகத் தாராளமான பாராட்டு என்று நினைக்கிறேன். அந்த தாராளப் பாராட்டில் என் பங்கையும் சேர்க்கிறேன். இவ்வளவு தாராளமாகப் பாராட்டும் வாய்ப்பை உருவாக்கிய ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளையின் நண்பர் ஜேடிக்கும் ஜெர்ரிக்கும் வாழ்த்துகள். உங்கள் அனைவருக்கும் நன்றி.


(25.01.2013 அன்று சென்னை புக் பாயிண்ட் அரங்கில் ராபர்ட் – ஆரோக்கியம் அறக் கட்டளை யின் சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்ட விழாவில் ஆற்றிய உரை)






தீராக் கடன்

$
0
0




வ்வொரு ஆண்டும் சாகித்திய அக்காதெமி இந்திய மொழிப்படைப்புகளத் தேர்ந்தெடுத்து விருதுகளை  வழங்கி வருகிறது. படைப்புகளை முன் வைத்து வழங்கப்படும் விருதுகள்  என்று சொல்லப்பட்டாலும் அவை வழங்கப்படுவது அந்தந்த மொழியில் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிகளுக்குத்தான்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளுக்கு உரிய பெயர்கள் அறிவிக்கப் படும்போதும் ஒரு கதை எனக்கு நினைவுக்கு வரும் .கி.ராஜநாராயணன் தொகுத்த தமிழக நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று.

ஒரு ராஜா இருந்தான். கவிஞர்கள் இவனைப் புகழ்ந்து கவிதை எழுதிக் கொண்டு வருவார்கள். ராஜாவுக்கோ அதைப் படித்துப் பார்த்துத் தரத்துக்கு ஏற்ற சன்மானம் கொடுக்கத் தெரியாது. அதனால் அப்படிக் கவிதை எழுதிக் கொண்டு வந்த ஏட்டை ஒரு தட்டிலும்அதற்குச் சமமான பொன்னை இன்னொரு தட்டிலும் வைத்து நிறுத்துக் கொடுத்து அனுப்பி விடுவான். கவிதைகளின் தரத்தைஅனுபவித்து அறிந்து பரிசு வழங்காமல் சகட்டு மேனிக்கு நல்ல கவிதைக்கும் மட்டமான கவிதைக்கும் ஒரே மாதிரியாகப் பரிசைநிறுத்துக் கொடுப்பதைக் கண்டு கவிஞர்கள்கலங்கினார்கள். ஒருநாள், ஒருவன் ராஜாவிடம்  கவிதை எழுதிக் கொண்டு வந்திருப்ப தாகத் தெரிவித்தான். ராஜா மந்திரியைக் கூப்பிட்டு அதன் எடைக்குச் சமமான பொன்னைக் கொடுத்து கவிஞனை அனுப்பிவைக்கும்படிச் சொன்னான். மந்திரி வந்தவனைப் பார்த்து 'அதைக் கொண்டு வாப்பா'என்றான். 'அதை என் ஒருவனால் மட்டும் தூக்கிக் கொண்டு வரமுடியாது. வெளியில் வைத்திருக்கிறேன் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் 'என்றான். வெளியில் வந்து பார்த்தால் ஒரு வண்டி. அதில் ஒரு பாறைக் கல். பாறை மேல் நாலு வரிகள் எதுகை மோனையோடு உளியால் செதுக்கி வைத்தி ருந்தது.எத்தனையோ படை வீரர்கள், பயில்வான்கள் சேர்ந்து அதைப் புரட்டிக் கொண்டு வந்து ஒரு பெரிய தராசில் வைத்தார்கள். ராஜாவின்பொக்கிஷத்திலுள்ள அத்தனைதங்கத்தையும் போட்டும் பாறாங்கள் அசையவில்லை. ராஜாவும் மந்திரியும் என்ன செய்வது என்றுதோன்றாமல் முழித்தார்கள். அதிலிருந்து  ராஜா எடைபோட்டுப் பரிசு வழங்குவதைநிறுத்தினான். அப்புறந்தான்  கவிஞர்களுக்கு உயிர் வந்தது.

சாகித்திய அக்காதெமி கிட்டத்தட்ட ஐம்பத்து நான்குவருடங்களாக இலக்கியப் படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. இதில்
கணிசமானவை கதையில் வரும் ராஜா எடை பார்த்துக்கொடுத்ததுபோன்றவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஓலை எடையுள்ளவையும் பாறாங்கல் எடையுள்ளவையும்தான் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. அபூர்வமான சிலசந்தர்ப்பங்களில் தரமான படைப்பு களைத் தந்தபடைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கௌரவிக்கப்பட வேண்டுமானால் ஒன்று அந்தப் படைப்பாளி அமரராகி இருக்க வேண்டும். அல்லது படைப்புப் பணியிலிருந்தே ஓய்வு
பெற்றிருக்க வேண்டும். சாகித்திய அக்காதெமி விருது இழப்பீடு அல்லது ஓய்வூதியம். தமிழில் பெரும் இலக்கிய ஆளுமைகளான பாரதிதாசனுக்கும் அழகிரிசாமிக்கும் சி.சு.செல்லப்பாவுக்கும் அளிக்கப்பட்ட விருதுகள் இழப்பீடுகள். தங்களுடைய படைப்புகள் மூலம் இந்த மொழியில் சாதனைகளை நிகழ்த்தியதி.ஜானகி ராமன்,  நீல பத்மநாபன் போன்ற படைப்பாளிகள் அவர்களது எழுச்சிமிக்க காலத்துக்குப் பின்னர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஓய்வூதியச் சலுகை. 

இலக்கியத்தைப் போற்றிப் பரிசளிக்கும் தனியார் அமைப்புகள் உள்ளன. அவை வழங்கும் விருதுகள் பற்றிப் பெரும்விவாதங்கள் முன்வைக்கப் படுவதில்லை. ஏனெனில் அவற்றின் தேர்வு முறை குறிப்பிட்ட நோக்கங்களையும் விருப்பங்களையும் கொண்டவை.சாகித்திய அக்காதெமி விருது அவற்றிலிலிருந்து மாறுபட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசால் மக்களுக்குஉரிமையானபணத்திலிருந்து வழங்கப்படுவது. ஒரு மொழியில் செயல்படும் படைப்பாளியைத் தரத்தின் அடிப்படையில் நிர்ணயித்து அந்த மொழிக்காக அவர் வழங்கிய பங்களிப்பை முன்னிருத்தி வழங்கப்படுவது. அந்த விருதின் மூலம் பிற மொழிகளின் மத்தியில்நமது மொழியின் இலக்கியச் செழுமையை அறிமுகப்படுத்துவது. சாகித்திய அக்காதெமி விருதளிப்பின் பின்னால் இந்தநோக்கங்கள்தாம் உள்ளன. எல்லா ஜனநாயக அமைப்பிலும் கோளாறு இருப்பதைபோலவே இதிலும் ஓட்டைகள் இருக்கின்றன.அந்த ஓட்டைகள் வழியாக சிபாரிசுகளையும் செல்வாக்கையும் அரசியல் தேவையையும் கணக்கிட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அப்படி எந்தக் குறுக்கீடும் இல்லாமல் சரியான படைப்பாளிகளுக்கு அபூர்வமாக விருதுகள் வழங்கப்பட்டும்இருக்கின்றன. அப்படியான அபூர்வ சம்பவங்களில் ஒன்று இந்த ஆண்டின் விருது.

நாஞ்சில்நாடன் இன்றும் இலக்கியக் களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சரியாகச் சொன்னால் அவரது மிக முக்கியமானபடைப்புகள் உருவான காலப் பகுதியில் எந்தத் தீவிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ அதை விடவும் வேகமாகச்செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். முன்னை விடவும் அதிக எண்ணிக்கையுள்ள வாசகர்களைப் பெற்றவராக இருக்கிறார். ஆரோக்கியவானாகவும் இருக்கிறார். சாகித்திய அக்காதெமி விருதுக்குரிய பின்வாசல் விதிகளைமீறி அவர் விருது பெற்றிருப்பதை அபூர்வமானது என்றே நினைக்கிறேன். இது ஓர் இலக்கிய வாசகனுக்கும் சக படைப்பாளிகளுக்கும் உற்சாகம் அளிக்கும் நிகழ்வு. இதுவரை அக்காதெமி விருது பெற்ற எந்த எழுத்தாளருக்கும் இல்லாத வகையில் நாஞ்சில்நாடனுக்கு அளிக்கப்பட்ட விருது பாராட்டப்படுவதன் காரணம் இதுதான் என்றும் தோன்றுகிறது. அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'இன்னும் ஆறு மாசத்துக்கு டேட் கிடையாது. கால்ஷீட் ஃபுல்'.

ஜீ. சுப்ரமணியம் இந்துக் கல்லூரி மாணவராகப் படித்துப் பட்டம் பெற்று நாற்பது வருடங்கள் கழிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இங்கே படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர்நாஞ்சில்நாடனாக அவதாரம் எடுத்திருப்ப தற்கான வாய்ப்பு இல்லை என்றும் எண்ணுகிறேன். தனது முன்னாள் மாணவரை அவரது இலக்கியம் சார்ந்த பெருமைக்காக ஒரு கல்லூரி அழைத்துப் பாராட்டுவதும் அபூர்வமான நிகழ்வுதான். ஒரு கல்லூரி அதன் மாணவனால் உயர்வடைகிறது. மாணவரும் அந்தக் கல்லூரியால்உயர்வடைகிறார்.நாஞ்சில்நாடன் என்ற ஜீ.சுப்ரமணியத்தால் இந்துக் கல்லூரியின் பெருமைகளில் ஒரு மாற்றுக் கூடுகிறது. இந்துக் கல்லூரியால்பாராட்டப்படுவதன் மூலம் நாஞ்சில்நாடனின் புகழுக்கு இன்னும் மெருகு கூடுகிறது. வேறு அர்த்தத்தில் இலக்கியத்திலும் இதுதான்நடக்கிறது. படைப்பாளி வாசகனை உயர்த்துவதும் வாசகனால் படைப்பாளி உயர்வு பெறுவதுமான ஓர் அம்சம் இலக்கியத்தில்இருக்கிறது என்று நம்புகிறேன். சமகால எழுத்தாளர்களில் இந்த அம்சத்தை நான் அதிகம் காண்பது இருவரிடம் ஒருவர்- தமிழ்நாடு அரசின் கலைமாமணி நாஞ்சில்நாடன். மற்றொருவர் புதுவை அரசின் கலைமாமணி பிரபஞ்சன்.

தன்னுடைய படைப்புகள் மூலமாக மட்டுமல்லாமல்புனைவல்லாத கட்டுரைகள் மூலமாகவும் நாஞ்சில் நாடன் இதைச் செய்கிறார்.வாசித்திருக்கும் அவரது மூன்றுகட்டுரை நூல்களை வைத்து - நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று,நதியின் பிழையன்று நறும்புனலின்மை, தீதும் நன்றும் - இதைச் சொல்ல விரும்புகிறேன். படைப்புகளை மீறிய தொடர் உரையாடலை படைப்பாளிவாசகர்களிடம் இந்தக் கட்டுரைகளில் நிகழ்த்துகிறார். தான் வாழும் காலத்தின் சிக்கல்களையும் அதற்கானகாரணங் களையும்சக மனிதனிடம் பொருமித் தள்ளுகிற ஆற்றாமையை இந்தக் கட்டுரைகளில் காணலாம். நாஞ்சில் நாடனின் எழுத்து களின்பொதுவான இயல்பே இந்த ஆற்றாமையும்  பொருமலும் தான் என்றும் படுகிறது. அவரது படைப்புகளைப் பொறுத்தவரை மனிதனின் பசியும் ருசியும்தான்  ஆற்றாமையையும்  பொருமலையும் உருவாக்குபவை. பசி - இயற்கையான உணர்வு. ருசி - தேவை மூலம்  எழும் உணர்வு. அவருடைய இரண்டு கதைகளை ஒப்பிட்டால் இது விளங்கும்.

'விரதம்'என்ற கதையில் வரும் சின்னத்தம்பியா பிள்ளைஎப்போதும் இரண்டு மணிக்குத்தான் 'தேரேகாலில் குளிப்பார். சாப்பாட்டுக்கு மூன்று மணி ஆகிவிடும். கதை நடக்கிற தினத்தன்று மனிதர் பதினோரு மணிக்கே குளித்துத் தொலைக்கிறார். அன்றைக்கு அமாவாசை. ஜலக்கிரீடை செய்ததன் பலன்.வயிறு பசியால் எரிகிறது. வீட்டில் மனைவிக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவளுக்குக் கஞ்சி. பழையது பானை நிறையக் கிடக்கிறது. அமாவாசை நாளில் 'பழையதை எப்படி சாப்பிடுகது? 'என்பது அவருடைய பிரச்சனை. ஆறு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் மகள் வீட்டுக்குப் போகிறார். 'இந்த வேணா வெயில்ல எதுக்கு ஓடி வாறே? சாப்பிட்டாச்சுன்னா படுத்து ஒறக்கம் போடுகது'என்று கடிந்து கொள்கிறாள். அவளிடம் தன்னுடைய பசியைச் சொல்லக் கூச்சப்பட்டு இளைய மகள் வீட்டுக்குப் போகிறாள்.தான் போய்ச் சேர்வதற்குள் அங்கே எல்லாரும் சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது என்று பதற்றப்படுகிறார்.போய்ச் சேர்ந்த வேளையில்தான் அங்கே இலை போடப்படுகிறது. 'அக்கா வீட்டுல சாப்பிட்டுட்டு இங்கே வாரே?'என்று சின்ன மகள் செல்லமாக அதட்டுகிறாள். இங்கேயும் வயிற்றுக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ஒன்றரை மணி வெயிலில் இறங்கி நடக்கிறார். வீட்டுக்கு வந்து பானையிலிருந்த பழையதைப் பிழிந்துபோட்டு ஊறுகாய்
பரணியைத் தேடுகிறார்.சின்னத்தம்பியாப் பிள்ளையை ஏமாற்றியது அவருடைய ஐம்பதாண்டுப் பழக்கம். குளித்து விட்டுத் திருநீறுஅணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில் நீறு துலங்கினால் பிள்ளைவாள் சாப்பிட்டாகி விட்டது என்று அர்த்தம்.

இந்தக் கதையில் வரும் இக்கட்டைத்தான் 'கனகக் குன்று கொட்டாரத்தில் கல்யாணம் 'கதையில் வரும் பண்டாரம் பிள்ளையும்அனுபவிக்கிறார். ஒன்று விட்ட அக்காள் மகள் கல்யாணத்துக்காக திருவனந்தபுரம் கனகக் குன்றுகொட்டாரத்துக்குப் போகிறார்.அவரை அங்கே யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.ஒன்று விட்ட தாய் மாமனுக்கு அவ்வளவுதானே மதிப்பு.வெறும் வயிற்றுடன் வந்த பண்டாரம் பிள்ளைக்கு அது ஆற்றாமையை ஏற்படுத்துகிறது. விறுவிறுவெனவெளியேறுகிறார். 'நாஞ்சி நாட்டுக்கு வரட்டு... காட்டித் தாறேன்'என்று பொருமிக் கொண்டே திரும்புகிறார்.

இந்தக் கதைகளில் கையாளப்படும் ஆற்றாமையும் பொருமலும் பசியை யையும் ருசியையும் மையமாகக் கொண்டவை. இவையே அதிகாரத்துக் கான பசியாகவும் இருக்கிறோம் என்பதைஅடையாளம் காட்டும் ருசியாக வும் அவரது பிற படைப்புகளில் விரவிக்கிடப்பதாகத் தோன்றுகிறது. 

நாஞ்சில்நாடனுடன் எனக்கு நெருக்கமான தொடர்பில்லை.ஆனால் இங்கே சொன்ன பசியையும் ருசியையும் சார்ந்து அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அந்தரங்கக் கடன் எனக்கு இருக்கிறது. எண்பத்தி ஐந்தாம் ஆண்டு வாக்கில் பல நாட்கள் நாஞ்சில்நாடன் உபயத்தால் என்னுடைய பசியைப் போக்கிக்கொண்டிருந்திருக்கிறேன். அப்போது ஒரு சிறுநிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சம்பளமும் சொற்பம். மூன்று வேளை தவறாமல் சாப்பிட்டு விட்டால்
மாதச் சம்பளம் பத்தாம் தேதியோடு கரைந்து போய்விடக் கூடிய சம்பளம். அந்தச் சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சியில்சீரியல் களுக்கு கதை தேடிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் பலர் அதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்துத் தேறிய அழகேசன் என்ற நண்பர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தார். தமிழ்த்தொடர் களுக்குத்தான் எல்லாரும் மோதுகிறார்கள். அவர் மலையாள சீரியலுக்காக முயற்சி செய்தார். அவருக்கு அனுமதியும் கிடைத்தது. ஒரு தமிழ்நாவலை மலையாளத்தில் தொடராக சமர்ப்பிக்கத் தீர்மானித்தார். இன்னொரு எழுத்தாள நண்பரான விமலாதித்த மாமல்லன் வாயிலாக அதை மலையாளத்தில் திரைக்கதையாக்கும் வேலை எனக்குக் கிடைத்தது. தொலைக்காட்சி நிலையத்துக்கு தொடரின் முதல் நான்கு எபிசோடுகளைப் படமாக்கிக் கொடுக்க வேண்டும்.  நான்கு பகுதிகளையும் மலையாளத்தில் திரைக்கதை வடிவில் எழுதினேன். ஒரு பகுதிக்கு இத்தனை என்று கூலி பேசி எழுதிக் கொடுத்தேன். அதற்குக் கிடைத்த தொகையில் இரண்டு மாதம் மூன்று வேளையும் ருசியுடன் பசியாற முடிந்தது. உதர நிமித்தம் அன்று கட்டிய அந்த வேடத்துக்குக் காரணமாக இருந்தவர் நாஞ்சில்நாடன். அதை இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த மேடையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். எனது பசியைப் போக்கிய அந்த நாவல் அவர் எழுதியது. தலைப்பு 'மிதவை'.

( நாஞ்சில்நாடன் சாகித்திய அக்காதெமி விருது பெற்றதை யொட்டி நாகர்கோவில் இந்துக் கல்லூரி 2011 மார்ச் 3 ஆம் தேதி நடத்திய பாராட்டு விழாவில் ஆற்றிய உரை. )  















ஒரு புகைப்படக் குறிப்பு

$
0
0
தற்செயல் ஆச்சரியம். பழைய சில புகைப்படங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடுவே ஃபேஸ்புக்கின் பக்கங்களை மேய்ந்தபோது கிரிக்கெட் பற்றிய ஒரு பதிவு கண்ணில் பட்டது. பகிர்ந்திருந்தவர் வயலின் இசை மேதை டாக்டர். எல். சுப்ரமணியம். என் சேகரிப்பில் இருந்த பழைய படங்களைப் பார்த்து இழந்த கணங்களை நினைவு கூர்ந்து கொண்டிருந்தபோது எல். சுப்ரமணியத்தின்பதிவும் காணக் கிடைத்தது வியப்பளித்தது. ஏனெனில் நான் பார்த்துக் கொண்டிருந்த படங்களில் ஒன்று இங்கே இருப்பது. 2004 அல்லது 2005 கால அளவில் எடுக்கப்பட்டது. அவ்வளவு பெரிய மேதை கால்கடுக்க நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அது அரை மணி நேர சங்கீத சொர்க்கம்.
டாக்டர். எல்.சுப்ரமணியத்துடன் ஓர் அற்புத கணம்



ச ர் ப் ப ம்

$
0
0
            ச ர் ப் ப ம் 



துலாவர்ஷ மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்த நாட்களில் தாமதமாக  வெயில் படர ஆரம்பித்த  ஒரு வெள்ளிக் கிழமை நண்பகல் வேளையில், அது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள்  ஊர்ந்து நுழைந்தது. ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியின் பின் புற வழியாக நுழைந்ததால் அதை யாரும் கவனிக்கவில்லை.


புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி இருப்பது புதுக்காடு மார்க்கெட் சந்திப்புக்குப் பக்கத்தில். பழைய ஒரு நாலுகெட்டு வீடு. வீட்டுக்குமுன்னாலும் பின்னாலும் சௌகரியமான திறந்தவெளி. வீட்டைச் சுற்றியுள்ள மதில் அங்கங்கே இடிந்து குட்டிச் சுவராக மிஞ்சியிருந்தது. முன் வாசல் பழுது பார்த்து முடித்து பட்டுவாடா செய்யக் காத்திருக்கும் வாகனங்களுக்காக. பின் வாசல் புதிதாக சிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வண்டிகளுக்காக. இரண்டு இடங்களிலும் வண்டிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக நீல நிற டார்பாலின் பந்தல் இழுத்துக் கட்டியிருந்தது.பின்வாசல் படியருகில்தான் பையன்கள் வாகனங் களிலிருந்து கழற்றி எடுத்த துருவும் கசடும் ஏறிய திருகாணிகளையும்  மரைகளையும் மோட்டார் சைக்கிள் செயின்களையும் பேரிங்குகளையும் மண்ணெண்ணெய் ஊற்றிய இரும்புச் சட்டியில் ஊற வைப்பார்கள். படியில் உட்கார்ந்து அவற்றைச் சுத்தம் செய்வார்கள். படிக்குப் பக்கத்திலேயே சட்டியை வைத்திருப்பார்கள். மழைபெய்கிறபோது கூரை ஓட்டிலிருந்து சொட்டிச் சொட்டி சட்டியில் நீர் நிரம்பும். அதன் மேற் பரப்பில் வானவில் நிறத்தில் ஒரு படலம் மிதக்கும். ஆட்டோ மொபைல் ஆஸ்பத்திரியை காலையில் வழக்கமாகத் திறக்கும்  போக்கு என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படும் வினுவுக்கு  மழை இரவுக்கு அடுத்த நாள் அந்த எண்ணெய்ச் சரிகையை  ரசித்துப் பார்ப்பதுதான் முதல் வேலை. சிறு காற்று வீசியதும் சரிகை பளபளப்புடன் நலுங்கும்.சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குள் முதலாளியின் குரல் கேட்பதும் அவசரமாக சட்டியை எடுத்து தண்ணீரைக் கொட்டுவதும் வழக்கமாக நடக்கும். மண்ணில் விழுந்த சரிகை கசங்கி உருக்குலைந்து அழிவதைப் பார்க்கும் போதெல்லாம் போக்குக்கு ஏனென்று தெரியாத சங்கடம் வரும்.   

வெள்ளிக் கிழமை மத்தியான்னம் அது ஊர்ந்து  மண்ணெண்ணெய்ச் சட்டியைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளே நுழைந்தது. ஊரும்போது அதன் சரீரம் உரசி சரியாக வைக்கப்படாத சட்டி கொஞ்சம் அலுங்கியது. நீர்மேல் மிதந்திருந்த வானவில் படலம் நொறுங்குவதற்குள் அதன் சரீரம் சட்டிப் பிரதேசத்தைக் கடந்திருந்தது. 'நல்ல காலம். அதுமட்டும் நொறுங்கி யிருந்தால் நான் அனுமதியில்லாமல் உள்ளே பிரவேசித்ததை யாராவாது கண்டு பிடித்திருப்பார்கள்'என்று டம்பமாக நினைத்துக் கொண்டது அது. அப்படி யோசித்தததற்கும் காரணம்  ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே 'அந்நியர்க்குப் பிரவேசனமில்ல'என்ற மலையாள அறிவிப்பு தொங்க விடப்பட்டிருந்தது. ஆனால்,மழை ஊறிய மண்ணில் ஊர்ந்து வந்ததால் பின் வாசல் நிலைப்படியையொட்டிய கருப்பு கிரானைட் தரையில் கொஞ்ச நேரத்துக்கு தனது நெளிவின் ஈரம் பதிந்திருந்தது அந்த அசடுக்கு ஞாபகமில்லா மலிருந்தது. உண்மையில் அது அதிருஷ்ட ஜென்மம்தான். அன்று காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்ததால் உச்சி வேளைக்குப் பிறகுதான் போக்கு வேலைக்கு வந்தான். அவன் வருவதற்குள் வெயில் ஏறி விட்டதில் நீர்ச் சுவடு மறைந்து விட்டிருந்தது. அவன் மட்டும் அது நுழைவதற்கு முன்பே வந்திருந்தால் அத்துமீறலைக் கண்டு பிடித்திருக்கக்கூடும். ஏனெனில் போக்கு எப்போதும் நிலத்தைப் பார்த்தே நடப்பவன்.

இந்த ஊடுருவல் நடைபெறும்போது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி உரிமையாளன் ஜேக்கப் சக்கரியா என்ற கரியாச்சன் உள்ளேதான் இருந்தான். மழை சற்றே விட்டிருந்த  வியாழக் கிழமை முற்பகலில் ஜோலி தீர்த்து வெள்ளிக் கிழமை  டெலிவரி கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டருக்கு ஸ்பார்க் பிளக் வாங்குவதற்காக தகரப் பறம்பு மார்க்கெட்டுக்குப் போயிருந்தான். வாடிக்கையாகப் போகும் எல்லாக் கடைகளிலும் விசாரித்தும் சாதனம் கிடைக்கவில்லை. 'எந்தரு கரியாச்சா, மார்த்தாண்ட வர்ம மகாராஜா காலத்தெ வண்டிக்கு இப்ப  ஸ்பேர் கிட்டானா?'என்ற கேலி வார்த்தைகள் மட்டும் கிடைத்தன.அதற்கிடையில் ஓய்ந்திருந்த மழை உஷாராகப் பொழிய ஆரம்பித்தது. இந்த மழையில் பஸ்ஸுக்குக் காத்திருந்து புதுக்காடு போய்ச் சேர்ந்தாற்போலத்தான் என்று அலுத்துக் கொண்டான். அலுப்பு வாயைக் கசப்பாக்கியது. கசப்பைத் துப்பும்போது 'தள்ளே, நசிச்ச  மழ'என்று சபித்தான். ஒரு வீச்சுக்குப் பிறகு மழை பொடித் தூறலாக விழத் தொடங்கியது. நின்றிருந்த கடையை விட்டு இறங்கி சாலையில் கால் வைத்ததும் 'சபிக்கவா செய்கிறாய் புல்லே'என்ற ஆக்ரோஷத்துடன் மழையின் சாட்டை கரியாச்சனின் முகத்தில் அடித்தது. 'எந்தொரு நசிச்ச திவசம்?'என்று காலத்திடம் புகார் சொல்லிக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தான்.  பதினொரு மணி இருபது நிமிடம். தன்னை சபித்தவனுக்கு அந்தச் சாட்டையடியே போதுமான தண்டனை என்று தீர்மானம் செய்தது போல மழை சுத்தமாக நின்றிருந்தது. பழவங்காடி வழியாக நடந்து கிழக்கே கோட்டை வெளி வாசல்  தட்டுக் கடையில் கட்டன் குடித்தான். மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தான்.  இருபத்தியேழு. நேராக அட்டக்குளங்கரை ஸ்ரீபாலா தியேட்டருக்குள் நுழைந்தான். டிக்கெட் எடுத்த பிறகு வெளியே வந்து சுவரொட்டியைப் பார்த்தான். 'கின்னாரத் தும்பிகள்'போஸ்டரில் ஒரு பையன்மேல் உடம்பைக் கிடத்தியிருந்த ஷகீலா கரியாச்சனைப் பார்த்துக் கண்களால் சிரித்தாள். 'ஒந்நு வேகம் வா, கரியாச்சா'என்றாள். 'தன்னே'என்று சொல்லும்போது தன்னையறியாமலே வேகமாக நடப்பதை  உணர்ந்தான்.

படம் ஓடிக் கொண்டிருந்தது. இருட்டில் துளாவி சீட்டில் உட்கார்ந்தபோது உடம்பில் அலாதியான வெதுவெதுப்புத் தோன்றியது. தணுப்பிலிருந்து உஷ்ணத்துக்குள் வந்ததாக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே கரியாச்சனின் கண்கள் மூடிக் கொண்டன. காதருகில் விரகம் தகிக்கும் குரலைக் கேட்டதும் விழிப்புத் தட்டியது. சிவப்பு ரவிக்கையும் நீல லுங்கியும் உடுத்து கட்டிலில் படுத்திருக்கும்  ஷகீலா வெள்ளை பனியனும் சாய வேட்டியும் அணிந்து தரையில் பாய்விரித்துப் படுத்துக் கிடக்கும் சஞ்சுவின்மேல் தாபத்துடன் புரண்டு கொண்டிருக்கிறாள். 'சேச்சி, தப்பாக்கும்' என்கிறான் சஞ்சு. 'ஆமா ,தப்புதான்,எடா மோனே, தப்பு செய்யாத்தவர் ஆராடா?'என்று ஷகீலா கரியாச்சனிடம் சொன்னாள். ஷகீலா சஞ்சுவிடம் செய்யும் அதே தப்பைத்தான் தன்னிடம்  பக்கத்து வீட்டு தீனாம்மச் சேச்சி செய்கிறாள் என்பது நினைவுக்கு வந்ததும் கரியாச்சனின் முதுகெலும்பு விறைத்தது.ஷகீலா சொல்வதுபோல தீனாம்மச் சேச்சி சொல்லியிருந்தால் அவள் தன்மீது கவிழ்கிற வேளைகளில் இன்னும் ஆசுவாசமாக இருக்கும். ஷகீலா அந்த வார்த்தைகளைச் சொல்லுகிறபோது சஞ்சுவின் கண்களும் தன்னைப் போலவே மூடியிருப்பதைக் கவனித்தான்.வாஸ்தவத்தில் சஞ்சு கண்களை மூடிக் கொண்டிருக்கிறானா என்று  தெரிந்து கொள்ள  மேட்னிக் காட்சி யையும் ஷகீலா 'மோனே, தெற்று செய்யாத்தவர் ஆராடா?'  என்று கேள்வியாக இல்லாமல் சம்மதம்போலக் கொஞ்சுவதைக் கேட்க ஈவினிங் ஷோவையும் பார்த்தான்.

படம் முடிந்து திரையரங்க வளாகத்திலேயே  படம் பார்க்க நிற்பதா இல்லை திரும்பிப் போவதா என்ற தீவிரமான சிந்தனையில் சட்டைப் பைக்குளிருந்த கைப்பேசியை ஆன் செய்து  ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி எண்ணில் அழைத்தான் கரியாச்சன். தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக இருப்பதால் சிறிது நேரத்துக்குப் பிறகு தொடர்பு கொள்ளவும் என்ற பெண்குரல் தீனாம்மாச் சேச்சியுடைய குரல்போலவும் ஷகீலாவின் குரல் போலவும் இருப்பதாகக் அவனுக்குத் தோன்றியது. அதே சமயத்தில் தான் இவ்வளவுநேரம் கைப்பேசியை அணைத்து வைத்திருந்ததும் ஞாபகம் வந்தது.'ஈ ஷகீலடெ மாயம்'என்று செல்லமாக வைதுகொண்டிருந்த போது கைப்பேசி 'தாமசமெந்தே வருவான் ப்ராணசகி என் டெ முன்னில்'என்று பாடி அழைத்தது.பொத்தானை அமுக்கிக் காதருகில் கருவியைக் கொண்டு போனான். போக்குதான் கூப்பிட்டான்.

'அண்ணனெ எத்தன நேரமா க் கூப்புடறேன். எங்கெ நிக்கறீங்க? அந்த  லாம்ப்ரெட்டா ஓணரு வந்து கலிப்பாக்கிட்டு போனாரு அண்ணன் இப்ப வரத்தில்லே?''என்று கேட்டான்.

கரியாச்சன் அவனை அடங்கியிருக்கச் சொல்லிவிட்டு கைப் பேசியை சட்டைப்பைக்குள் போட்டான். திரையரங்க வாசலைத் தாண்டும்போது'கரியாச்சன் போவாணோ?'என்று தீனாம்மச் சேச்சியின் குரலில் போஸ்டரிலிருந்து ஷகீலா கேட்டாள். அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே 'போகாமல் முடியுமா?'என்று கிழக்கேகோட்டை பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.

பத்து மணிக்கு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரியை அடைந்தபோது பூட்டியிருந்தது. போக்கு உத்தரவாதித்துவமுள்ள வேலைக்காரன். கரியாச்சன் வெளியே போகும் நாட்களில் செய்வதுபோல வாசல் கதவைப் பூட்டி சாவியை முன் அறை சன்னல் திட்டில் வைத்து கதவை ஒருக் களித்துச் சாத்தியிருந்தான். சாவியை எடுத்துத் திறந்து உள்ளே நுழைந்த போது அம்மச்சியின் புன்னகை மாதிரியான குண்டு பல்பின் வெளிச்சமும் அப்பச்சனின் வசவுபோன்ற இரும்பு வாசனையும் அவனைத் தயங்கச் செய்தன. 'தே, மனுஷ்யா, நீங்க பையன ஒண்ணும் சொல்லாதீங்க'என்று வெளிச்சம் வாசனையை வேண்டிக் கொண்டது. வாசனை காட்டமாக எதையோ சொல்ல வருவதற்குள்  மழைக் காற்று வாசலைத் தாண்டி வந்தது. இரும்பு வாசனை மட்டுப்பட்டது. குட்டையான டினோசார்களின் எலும்புக் கூடுகள்போல நிறுத்தி வைத்திருந்த புல்லட்டுக்கும் யமாஹாவுக்கும் இடையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான் கரியாச்சன். ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்த களைப்பில் கண்கள் திரையிறங்கின.

சற்றுத் தள்ளி எண்ணெய்க் குளியல் முடித்துச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் செயின்களுக்கிடையிலிருந்து அது தலையை ஒரு நொடி தூக்கிப் பார்த்து'என்டெ பகவதி காத்து'என்று பெருமூச்சு விட்டது.

'எடா கொச்சனே, ஒரு பொன்னு மோனும் இந்த  தாக்ஷாயணி கையிலேருந்து தப்பிச்சதில்லஎன்ற சம்பாஷணம் சஞ்சுவிடம் ஷகீலா சொன்னதா இல்லை தீனாம்மச் சேச்சி தன்னிடம் சொன்னதா என்ற குழப்ப யோசனையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது 'என்டம்மோ 'என்ற அலறல் கேட்டது. தன் மேலிருந்து யாரை உதறித் தள்ளினோம்,தாக்ஷாயணி பாத்திரமான ஷகீலாவையா இல்லை தீனாம்மச் சேச்சியையா  என்ற சந்தேகத்துடன் கரியாச்சன் கண்களைத் திறந்ததும் மத்தியான வெயில் இமைகளுக்குள் இருட்டை நிறைத்தது. தள்ளாட்டத் துடன் நின்று லுங்கியைச் சரி செய்யக் கைகளை நீட்டியதில் குட்டை டினோசர்கள் இரண்டும் உலோகக் கூச்சலுடன் சரிந்தன. அந்தச் சந்தடியில் செயின்களுக் கிடையில் பதுங்கியிருந்த அது 'தேவீ, ஈ கழுகன் மாருடெ கண்ணில் பெடாதெ என்னெ  ரட்சிக்கணே'என்று முணுமுணுத்துக் கொண்டு சரசரத்து ஓடியது.

''தே அண்ணா, அது எழஞ்சு போகணு?''என்று கத்தினான் போக்கு. நிதானத்துக்கு வந்த கரியாச்சன் கால்களை எட்டி வைத்துத் துள்ளினான்.

''எந்தொரு நீளமாண்ணா, தா அங்கெ , பெட்ரோல் கன்னாசின்ட அப்புறத்து''  கழற்றி அடுக்கி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் சக்கரங்களின் மேலே பாதுகாப்பாக நின்று கொண்டு கூவினான் போக்கு.

போக்கின் முகத்தையும் நிற்பையும் கூவலையும் உள் வாங்கிக் கொண்ட நொடியில் கரியாச்சனின் முகம் வியர்த்தது. பயத்தில் போக்கைப் பார்த்துக் கத்தினான். ''நின்னு செலய்க்காதெ ஆரெயெங்கிலும் விளிச்சோண்டு வாடா''4

வழக்கமாகவே தரையைத் துப்பறியும் போக்கின் கண்கள் பயத்தில் இன்னும் விரிந்தன. காலடியில் கிடக்கும் புழுவைக் கொத்தக் குனியும் கொக்குபோல உடலை வளைத்து சக்கர அடுக்கின் கீழே கவனமாகப் பார்த்தான். எதுவும் இல்லை என்று கண்கள் இயல்பான அளவுக்குச் சுருங்கியதும் தரையில் குதித்தான். அப்புறமும் முன்னங்காலில் நின்று அகலமாக எட்டுவைத்து வாசல் கதவருகில் போய் கால்களை ஊன்றினான்.

''அண்ணா அவன் இங்கேதான் உண்டு. நான் ஆரெயாவது கூட்டிட்டு வறேன் ''  என்று ஓடினான்.

நின்ற இடத்திலிருந்தே கரியாச்சன் சுற்றிலும் பார்த்தான். செயின்கள்.  கழற்றிப் போட்ட கேபிள்கள், பெட்ரோல் டியூபுகள் எல்லாம் நெளிந்து ஊர்வதுபோலத் தெரிந்தன. போக்கு இருந்தபோது இருந்த பயத்தை விட இப்போது பயம் அதிகமானதுபோலிருந்தது. 'கர்த்தாவே, இதென்னா  தொந்தரவா? 'என்று சங்கடப்பட்டான். கண்களை மூடிமூடித் திறந்து பார்த்தும் அது தென்படவில்லை. போக்கு சொன்னது உண்மைதானா என்று கூட சந்தேகப்பட்டான். சந்தேகம் என்று வந்த பின்பு ஆதாரங்களை வைத்து நிவர்த்தி செய்யாமல் முன் நோக்கிச் செல்வது சரியல்ல. சொற்ப நேரத்துக்கு அதைப் பற்றி யோசிக்காமல் இருப்போம் என்று யோசனை யின் ஹாண்டில் பாரை வேறு திசையில் திருப்பினான். ஆனால் அவனை ஏமாற்றி யூ டர்ன் அடித்து தொடங்கிய இடத்துக்கே வந்தது யோசனை. யோசனையை விட ஞாபகங்களை விசுவசிக்கலாம் என்று நேற்றுப் பார்த்த காட்சிகளை இமைக்குள் ஓடவிட்டான். 'எடா, மோனே ஈ தாக்ஷாயணியுடே கையில் நின்னும் நீ ரக்ஷப்பெடில்லா'என்ற வசியக் குரல் கால் பெரு விரலிலிருந்து ஊர்ந்து மேலே ஏறி வந்தது,முகத்தை நெருங்கி உதடு களைக் கொத்தியது. கண்களை விழித்துப் பார்த்த இடத்தில் எண்ணெய்க் கறைபடிந்து கருமையேறிக் கிடந்த பனியன் வேஸ்டு அசைந்தது.

''அய்யோ''என்று பெருங்குரலில் கத்திக் கொண்டு உயிரையும் லுங்கி முனையையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தாவி வாசலில் வந்து தடுமாறி நின்றான் கரியாச்சன். ஓடும்போது அவனுடைய கால்களில் பட்டுத் தெறித்த பத்தாம் நம்பர் ஸ்பேனர் பனியன் வேஸ்டுக்குப் பக்கமாக சத்தமில்லாமல் விழுந்தது. அந்த அதிர்வில் அது உஷாராகி 'இவன்மாரு ஜீவிக்கான சம்மதிக் கத்தில்ல'என்று புலம்பிக் கொண்டு உயிரை இழுத்துக் கொண்டு வேகமாக ஊர்ந்து மறைந்தது.

அவனுடைய கூச்சலைக் கேட்டு பக்கத்து மாவேலி ஸ்டோரிலிருந்து சிவன் குட்டியும் பார்பர் ஷாப்பிலிருந்து ஹரியும் தள்ளுவண்டியில் துணி தேய்த்துக் கொண்டிருந்த முத்துவும் ஓடி வந்தார்கள்.  வழிப்போக்கர்களும் வந்தார்கள்.

''எந்தரு கரியாச்சா, எந்தரு சம்பவம்?''என்று சிவன் குட்டி கேட்டான். 'அது உள்ளே இருக்கிறது'என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு 'ஃபூஃபூஃபூ'என்றான் கரியாச்சன்.

'அதே, ஒர்க் ஷோப்புக்குள்ளெ அவன் நுழைஞ்சிட்டான்''என்று என்று சொல்லிக் கொண்டே முதலாளியின் அருகில் வந்து நின்றான் போக்கு. கூடவே நான்கைந்து ஆட்கள். கரியாச்சனின் பார்வையில் அவர்கள் எல்லாருக்கும் ஒரே முகச்சாயல்தான் தென்பட்டது. பயம் எல்லாரையும் சமமானவர்களாக்கி விடுகிறது என்று தோன்றியது. ''ஆரா கண்டது?''என்ற சத்தம் காதில் விழுந்தபோதுதான் வீட்டு உடைமையாளர் பாகுலேயன் பிள்ளையும் வந்திருக்கிறார் என்பதைக் கரியாச்சன் புரிந்து கொண்டான்.

''ஞான் கண்டு. அண்ணன் கண்டில்ல. தோ இத்ரயும் வலுப்பமுண்டு''என்று இரண்டு கைகளையும் தோளேடு நீட்டிக் காட்டினான் போக்கு.

''ஏதாவது சாரையாயிருக்கும்  ''என்றான் ஹரி.

''இல்லெ , அவனே தான், சர்ப்பம்''என்றான் போக்கு.

அந்த வார்த்தை நெளிந்து காதில் விழுந்ததும் பாகுலேயன் பிள்ளை முகத்தில் விசனமும் சந்தோஷமும் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்தன. தறவாட்டில் நேற்றிலிருந்து சம்பவித்துக் கொண்டிருந்த அனர்த்தங்களுக்கு என்ன காரணம் என்று அவருக்குப் பிடிபட்டது. பறம்பில் நிற்கும் மாவிலிருந்து ஒரு பெரிய கொம்பு முறிந்து விழுந்திருந்தது.பென்ஷன் வாங்குவதற்காக இன்று காலை டிரெஷரிக்கு ஸ்கூட்டரில்போனபோது வண்டி பள்ளத்தில் சரிந்து அவருக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் காரணம் அவருடய தறவாட்டின் ஐஸ்வரியம் காணாமற் போனதுதான். அவருடைய தறவாட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய குடும்பக் காவு இருக்கிறது. ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த காவு. நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரதிஷ்டை. அதிகாரத்தி லிருந்த காலத்தில் பொன்னு தம்புரான் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராம வர்மா ராஜா கூட வந்திருக்கிறார் என்று மூத்த காரணவம்மார் சொன்னது பிள்ளையின் ஞாபகத்தில் புரண்டது.

நேற்று சந்தியா நேரத்தில் காவில் விளக்கு வைக்கப்போன பிள்ளையின் மனைவிதான் காவில் அது இல்லாமல்போனதைச் சொன்னாள். எல்லா நாளும் விளக்கு வைக்கும்போது வந்து பார்த்துவிட்டுப் போகும் அவன் அன்று ஸ்ரீகுமாரியம்மாள் ஏழெட்டு நிமிஷங்கள் காத்திருந்தும் வரவில்லை. வெப்ராளத்துடன் அவள் சொன்னபோது காரியமாகத் தோன்றவில்லை. மழையில் எங்காவது பாதுகாப்பாக இருக்கும் என்று பதில் சொன்னார். இப்போது இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அதுதான் இழைந்து வந்து ஏறியிருக்க வேண்டும்.

''டா, நீ செரிக்கும் கண்டோடா?''என்று போக்கைப் பார்த்துக் கேட்டார். போக்கு மறுபடியும் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி''இத்ரேம் நீளோண்டார்ந்நு''என்றான். யாரும் நம்பவில்லைபோலத் தெரிந்ததும் ''சத்யம். பத்தடீங்கிலும் உண்டாவுண்ணா, அதெ நேராப் பிடிச்சு வாளியெ மாட்டினா  நம்ம கெணற்றிலேர்ந்து தண்ணி எறைக்கலாம்’’என்றான்.

''போடா செறுக்கா, புளுவடிக்கல்லே. பத்தடி நீளத்திலு சர்ப்பொந்நும் ஈ ப்ரதேசத்துல இல்ல ''  என்று அவிந்து போன பீடியையும் எச்சிலையும் ஒரே துப்பலில் மண்ணுக்கு அனுப்பினான் சிவன் குட்டி.

''அவன் சொல்றது செரி.  அது நம்ம  காவில இருக்கிறதா இருக்கத்தான்  சாத்யம். நேத்து மொதல்  அவனெக் காணல''என்றார் பிள்ளை .

'பொடியன் சொல்வதுபோல பத்துப் பன்னிரெண்டடி நீளமிருக்கும். பிராயமும் ரொம்ப. நூறு வயசாவது இருக்கும். அவனோட வயசில் இன்னும் ரெண்டு மூணு பேர் காவில் இருக்கிறார்கள். இவன் தான் எல்லாருக்கும் காரணவர். இப்பத்தானே இங்கெயெல்லாம் பிளாட்டும் கடையும் குடியுமெல்லாம் வந்தது. அதற்கு முன்பு வயலும் சதுப்புமாகக் கிடந்த இடம். இவன்கள் சுதந்திரமாக இழைந்து நடந்து கொண்டிருந் தார்கள். இந்தக் கட்டடத்தை கரியாச்சனோட அப்பன் வாடகைக்கு எடுக்கிறவரைக்கும் இங்கே வந்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். அவன் தான் எங்களோட கண்கண்ட தெய்வம். எங்கள் தறவாட்டோட ஐஸ்வரியம். நீங்க சந்தடி பண்ணாமல் யாரையாவது விட்டு அதை வெளியே கொண்டு வந்து காவில் சேர்க்கப் பாருங்கள். கரியாச்சா, வேண்டியதைச் செய்'

பிள்ளை சொன்னதைக் கேட்டதும் கரியாச்சனுக்கு ஆத்திரம் வந்தது. அதுவாக வந்தது. நானா வரச் சொன்னேன். வாடகைக் கட்டடந்தான். ஆனால் சும்மா குடியிருக்கவில்லையே. ஒண்ணாந்தேதி பிறந்து கண் விழிப்பதற்குள்ளேயே ஆக்ராந்தம் பிடித்து வாடகைக்கு ஓடிவருகிற இந்த எரப்பாளி நாயர்  அவனுடைய அடியந்திரத்துக்கும் தன்னிடமே பைசா கேட்பானாக இருக்கும் என்று கரியாச்சனின் நரம்பு துடித்தது. ஆனால் உதடுகள் ''அதுகென்னா, பிள்ளச் சேட்டா,தோ இப்ப ஏற்பாடு பண்ணிடறேன்''என்று பவ்யமாக நெளிந்தன.  

தாழம் பூவின் மகரந்தம் காற்றில் மிதந்து செல்வதுபோல பிள்ளையின் வார்த்தைகள் வாசலிலிருந்து  நாலுகெட்டின் உள்ளே போயின. சொற்களின் சுகந்தத்தை முகர்ந்த கிறக்கத்தில் உடைசல் ரிம்களுகிடையில் பதுங்கியிருந்த அது வாசலை நோக்கி ஊர்ந்தது. 'நானில்லா விட்டால் பிள்ளையின் குடும்ப மானம் என்னாகும்? அவருக்குத்தான் என்மேல் எவ்வளவு வாத்சல்யம். சும்மா அல்ல. என்னுடைய பிராயமும் சீலமும் வேறு யாருக்கு இருக்கிறது?'என்று நினைத்தபோது அதன் தலைப் பகுதி எவ்வி விரியத் தொடங்கியது. சரீரம் பறப்பதுபோல தானாக முன்னோக்கி நீண்டது.

வாசற்படிக்குக் கொஞ்சம் தள்ளி உள்ளே அது படமெடுத்து நிற்பது தெரிந்தவுடன் போக்கு கத்தினான். 'தே, அவன் புறத்து வருன்னு'

''பாம்பு ஒண்ணும் நூறு வருசமெல்லாம் உசிரோடெ இருக்காதாம்னு தினத்தந்தில போட்டிருந்தான்''என்று சொல்லிக் கொண்டிருந்த முத்துவும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவன் குட்டியும் போக்கின் கத்தலில் வெருண்டு கொஞ்சம் பின் வாங்கினார்கள். முற்றத்தில் நின்றிருந்த எல்லாரும் தான் உட்பட பின்னோக்கிச் சாடியதை உணர்ந்ததும்  கரியாச்சன்  வெட்கப்பட்டான். பாகுலேயன் பிள்ளை எல்லாரையும் விடப் பின் தள்ளி நிற்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. 
'தன்னுடைய ஐஸ்வர்யத்தைப் பார்த்தே மனுஷர் பயப்படுகிறார்' . காலில்லாத ஒரு இழை ஜந்து எத்தனை ஜோடிக் கால்களை நடுங்க வைக்கிறது. பைசாசம். அடித்துக் கொன்றால் என்ன? என்று கரியாச்சன் யோசித்தபோது பிள்ளையின் எச்சரிக்கை கேட்டது.''அவனேக் கொல்லருது. சர்ப்பதோஷம் பிடிக்கும்'' .

கிறிஸ்தியானிகளுக்கு சர்ப்பதோஷமும் இல்லை. ஒரு உலக்கையும் இல்லை. சரியாகச் சொன்னால் எல்லா மனுஷர்களும் சர்ப்பதோஷத்தின் சந்ததிகள் தான் என்று முன்பு ஒருமுறை இதே முற்றத்தில் ஒன்றைக் கொன்று சுட்டுக் கரித்துக் கொண்டு அப்பச்சன் சொன்னதை கரியாச்சன் ஞாபகப்படுத்திக் கொண்டான்.

பிள்ளை ஆட்சேபம் சொன்ன நிலவரத்தில் கையில் தடியும் கொம்புமாக ஆயத்தமான சிவன் குட்டியும் ஹரியும் மற்றவர்களும் கரியாச்சனின் முகத்தையே பார்த்தார்கள். கரியாச்சன் யோசித்தான். அவர்கள் பார்ப்பதையும் அவன் யோசிப்பதையும்  வீட்டுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த அதுவும் யோசித்தது. 'கர்த்தாவே என்னே ரக்ஷிக்கேணமே'என்று மன்றாடியதில் விரிந்த தலை உள் வாங்கிக் கொண்டது. ஆலிலைபோல இருந்த தலை கயிறுபோலச் சுருங்கிக் கொண்டிருக் கையில் தானும்  மனிதர்களைப் போல இடத்துக்குத் தகுந்த மாதிரி சுபாவத்தை மாற்றிக் கொள்வதை உணர்ந்தது. குற்ற உணர்ச்சியுடன் 'என்டெ பகவதி பொறுக்கேணமே'என்று பாவ மன்னிப்பை இரட்டை நாக்குகள் நீட்டி அந்தரத்தில் எழுதியது. அப்படியே முற்றத்தில் நிற்பவர்களை நோட்டமிட்டது.

பிள்ளையையும் கரியாச்சனையும் தவிர எல்லார் கைகளிலும் கட்டைகள் இருந்தன. கரியாச்சனின் முகத்தையே பார்த்தபடி அவர்கள் வலது கையிலி ருக்கும் கட்டையை உயர்த்தி இடது உள்ளங்கையில் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

'ஆளுக்கு ஒரு அடி என்று வைத்தால் பாதி பேரின் முறை வருவதற்குள் தன்னுடைய ஜீவன் போய் விடும்'என்று நினைத்ததும் அதன் வால் தன்னிச்சையாகத் துடித்தது. வந்த வழியே திரும்பி விட சரீரத்தை உள்ளே சுருக்கி பின் நோக்கி இழைய ஆயத்தமானது. இடியோசையுடன் அது வந்த வழி இருட்டானது. ஆத்திரத்திலும் பயத்திலும் தலை மறுபடியும் வீங்கியது.

''அண்ணா, பின்பக்கக் கதவை  அடச்சுட்டேன். அங்கேர்ந்த துவாரத்தையும் அடச்சாச்சு.அவன் இனி இந்த  வழியாத்தான் வரணும்''  என்று கரியாச்சனிடம் சொன்னான் போக்கு. கரியாச்சனுக்குக் குழப்பமாக இருந்தது. ''வரட்டேண்ணா, ஒற்றயடிக்கு அவனெ செரியாக்காம்''என்று துள்ளிக் கொண்டிருந்த போக்கைப் பிடித்து நிறுத்திய பாகுலேயன்பிள்ளை கரியாச்சனிடம் திரும்பி ''அதே, கரியாச்சா, அவனெக் கொன்னா பிரச்சனை வேற மாதிரியாகும்,சொல்லிட்டேன்'என்றார்.

கரியாச்சன் எரிச்சலுடன் ''எந்நா பின்னே பிள்ளச் சேட்டன் தன்னே ஒரு வழி பற''என்றான். பிள்ளைக்கும் சட்டென்று வழி புலப்படவில்லை. கண்ணாடியைக் கழற்றி வேட்டி நுனியால் ஒரு முறை துடைத்தார். ஆவி படிய அதன்மேல் ஊதி மறுபடியும் துடைத்தார். வேட்டியைத் தளரவிட்டு கண்ணாடியை மாட்டிக் கொண்ட பிறகும் வழி தென்படவில்லை.'இந்தப் படுபாவிகள் அதை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள். தறவாட்டின் மகத்துவம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? அவன் தறவாட்டின் சம்பத்து. அவனை ஜீவனோடே திரும்ப எடுக்க பகவதி வழி காட்ட மாட்டாயா? 'இதை மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தபோது அவருடைய பார்வை நீர்கோர்த்து மங்கியது.

''அண்ணா நம்மளு ஆ பாம்பு முஸ்தாபயெ விளிச்சாலோ?''என்றான் போக்கு. அதுவரைக்கும் மேகங்களுக்கிடையில் மறைந்திருந்த மாலைச் சூரியன் பிரகாசமாக நகர்ந்தது. வெகு நேரமாக அங்கேயே நிற்பது எல்லாருக்கும் உறைத்தது.

போக்கு சொன்னது சரியான யோசனை. ''ஆனாலும் ஒரு அந்நிய மதக்காரன் காவிலிருக்கும் சர்ப்பத்தைத் தீண்டறது அவ்வளவு செரியா இல்ல, ஆசாரக் கேடு''என்று முனகினார் பிள்ளை.

''ஒரு கேடும் இல்ல பிள்ளேச்சா, அப்படித் தோணினா பூனையையோ நாயையோ கூப்பிடற மாதிரி ச்சோ ச்சோன்னு கூப்பிடுங்க. அது வாலாட்டிகிட்டு பின்னாலே இழஞ்சு வரும்''சிவன் குட்டி சொன்னதைக் கேட்டு எல்லாருக்கும் சிரிப்பு வந்தது. கரியாச்சனும் ஹரியும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். முத்து சிரிக்கலாமா கூடாதா என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தான்.

''என்னாண்ணா, நாம் போய் முஸ்தபாவை கூட்டிட்டு வரணுமா வேண்டாமா?''என்று கேட்டான் போக்கு. அவன் அப்படிக் கேட்பதில் என்னவோ ரகசியம் இருப்பதாகப் பட்டது கரியாச்சனுக்கு.''செரி, போ, ஆனா ஆளை எங்கெ தேடுவே?''

''இந்த சமயத்திலெ  புள்ளிக்காரன் எங்கேருப்பார்னு எனக்குத் தெரியும்''என்றபடி நீலப் பந்தலை  நோக்கி நடந்தான்.

கால் சட்டைப் பையிலிருந்து புல்லட்டின் சாவியை எடுத்து துவாரத்தில் பொருத்தினான். வண்டிச் சாவியை அவன் முன்பே எடுத்து வைத்திருக்க வேண்டும். அதுதான் பொடியன் அவ்வளவு உற்சாகம் காட்டினான் என்று ஊகித்த கரியாச்சன் தரையைப் பார்த்தான். காலையிலிருந்து எந்த வண்டியும் டெலிவரி கொடுத்திருக்காத நிலத்தில் புல்லட்டின் டயர்கள் இரண்டு மூன்று வட்டங்க¨ளைப் பதித்திருந்தன. 'நான் உறங்கிக் கிடந்த போது இந்தக் குட்டிப் பிசாசு புல்லட்டை எடுத்து ஓட்டியிருக்கிறான்'.  யோசித்தபோது கரியாச்சனுக்கு வேறு பயம் வந்தது. போக்குக்கு பதினாறு வயது. லைசென்ஸ் கிடையாது.

சில மணி நேரங்களாகப் பெய்ய மறந்திருந்த வானம் ஞாபகம் வந்தது போல சடசடவெனத் துளிகளை உதிர்த்து ஓய்ந்தது. துளி விழுந்ததும் நகரத் தொடங்கியவர்கள் மறுபடியும் கூட்டமானார்கள். முன்பிருந்ததை விட ஆட்கள் கூடியிருந்தார்கள். அதில் செந்தூரப் பொட்டு வைத்த ஒருவன் பாகுலேயன் பிள்ளையைத் தனியாக அழைத்து நிறுத்திப் பேசிக் கொண்டிருப் பதைக் கரியாச்சன் கவனித்தான். பிள்ளை உற்சவத்துக்குக் கொண்டு வந்த யானைபோல தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டிருந்தார்.

''கரியாச்சா, வனத்துறைக்குச் சொன்னா அவங்க வந்து வேண்டியதை செய்வாங்க இல்ல?''சிவன் குட்டி கேட்டான்.

அதுவும் சரியானதாகப் பட்டது.'செரியா'என்றான். ''அப்படின்னா உன் மொபைலைக் கொடு''என்றான் சிவன் குட்டி.

''அந்தக் குந்தராண்டம் உள்ளே கெடக்கு''

சிவன் குட்டி என்னமோ முணுமுணுத்துக் கொண்டே கூட்டத்தை விலக்கி நடந்தான்.கரியாச்சனுக்கு தான் இன்னும் பல் துலக்கவோ ஒன்றுக்கு இருக்கவோ மலங்கழிக்கவோ முகத்தைக் கழுவக் கூடவோ செய்ய வில்லை என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது.'நாறிப் போனேன்அருவருப்பால் சின்னதாக முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  கூட்டத்தில் யாரும் தன்னைக் கவனிக்க வில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு தன்னையே ஒருமுறை முகர்ந்தான். அவ்வளவு மோசமில்லை. உடம்புக் குள்ளிருந்து  வறுத்த செறு பயறு வாடை அடித்தது. தீனாம்மச் சேச்சியின் உடம்பில் கமழ்கிற அதே மணம். அப்படியானால் ஷகீலாவின் சரீரத்திலும் இதே மணம்தான் இருக்குமா?

புல்லட்டின் குதுகுதுப்பொலியில் கூட்டம் வரிசை குலைந்தது. ''அண்ணா, தோ ஆளு''என்று வண்டியை நிறுத்தினான் போக்கு. கையில் ஒரு கவட்டைக் கொம்பும் நைந்த கோணிப் பையுமாக பின் சீட்டிலிருந்து முஸ்தபா தடுமாறி இறங்கினார். 'கெளவன் கஞ்சா இழுக்காத நேரம் ஒன்று உண்டா? 'என்று கரியாச்சன் முனகினான். பிள்ளையும் என்னவோ முணுமுணுத்தார். 'என்னா பிள்ளேச்சா?'என்று கேட்டான்.

''கரியாச்சா , இந்த அந்நிய மதக்காரனைப் பிடிக்க விடுறதை விட வனம் வகுப்பு உத்தியோகஸ்தர்கள் பிடிக்கறதுதானெ செரியாயிருக்கும். இவன் தீண்டின பிறகு அவனை காவிலே திரும்ப ஏறவிடறது அவ்வளவு அழகாருக்காது.வனம் வகுப்புன்னா சர்க்காரு வகை. அதுக்கு மதமில்லயே. மதமில்லாததும் எங்க மதத்தில சேர்த்திதானே!''

அவர் சொல்லி முடிப்பதற்கு முன் முஸ்தபா வாசல் தாண்டி உள்ளே நுழைந்திருந்தார். மேற்கொண்டு ஒன்றும் செய்வதற்கில்லை. கரியாச்சன் ஆசுவாசமாக உணர்ந்தான். பக்கத்தில் வந்து நின்ற போக்கின் காதை நிமிண்டி, 'கள்ளக் கழுவேறி'என்றான். அவன் செல்லமாகத் திட்டுவதை ரசித்தான் போக்கு.

ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள் பெரும் கலவரம் நடப்பதுபோல சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் நிசப்தம். கொஞ்ச நேரம் சந்தடி. உள்ளே என்னவெல்லாமோ சரிந்து விழும் உலோக இரைச்சல். ''ஆனை நுழஞ்ச கம்போளம் மாதிரி பாம்பு  நுழஞ்ச பட்டறைன்னு நாம புதுசா பழஞ் சொல்லு உண்டாக்கலாம் கரியாச்சா''என்று சிரித்தான் சிவன் குட்டி. கரியாச்சனுக்கு எல்லாம் சேர்ந்து மூளை குழம்பிவிடும்போல இருந்தது. ''எருதுக்குப் புண்ணுன்னா காக்காய்க்குக் கொண்டாட்டம்னும் பழமொழி இருக்கு''என்றான்.

சிவன் குட்டிக்கு முகம் இருண்டது.''அதை விடு கரியாச்சா. ஒரு தமாசு சொன்னேன்''என்றான்.

''உன்னோட தமாசும் நீயும். மனுஷனுக்கு இங்கெ நவ துவாரமும் பத்தி யெரியறப்ப அவனோட தமாசு''

''ஆங். அதான் பாம்பு முஸ்தபா வந்தாச்சே, அவனைப் பிடிச்சிடுவான். எனக்குத் தெரிய இது முஸ்தபா பிடிக்கிற ஐநூறாவது பாம்பா இருக்கும். ஒரு நுள்ளு கஞ்சா கெடச்சா எந்த மலைப்பாம்பையும் கெளவன் பிடிச்சு கோமணம் கட்டிக்குவான்''

''அதில்ல பிரச்சன, அந்நிய மதக்காரன் புடிச்ச பாம்பெ காவிலே ஏத்த மாட்டாங்களாம், பிள்ளச்சேட்டன்  சொன்னரு. அதான் ஆலோசிக்கறேன். அத வீட்டுக்குக் கொண்டு போயி இவங்கள மாதிரிக் கும்புட முடியுமா, இல்ல வளத்த முடியுமா?''

''நான் வனம் வகுப்புல கூப்பிட்டுச் சொல்லியிருக்கேன். வந்ததும் அவனோட காரியத்தை அவங்க பாத்துக்குவாங்க''

கூட்டம் ஒரு முறை சலசலத்தது. எல்லார் பார்வையும் வாசல் கதவருகே குவிந்தது. கரியாச்சனும் பிள்ளையும் ஆட்களை விலக்கி முன்னால் போனார்கள்.

முஸ்தபாவின் வலது கையில் அது மூன்றடி நீளத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. துண்டுக் கயிறுபோல. கிழவர் கையை உயர்த்தி ஆட்டிக் காட்டும்போது அதன் வால் ஸ்பிரிங்க்போல மேல்நோக்கிச் சுருண்டது. கிழவர் வலது உள்ளங்கைக்குள் அதன் தலை வெளியேதெரிய விட்டு கழுத்துப் பகுதியில் கட்டை விரலால் இறுக்கிப் பிடித்திருந்தார் 'நெரித்தே கொன்று விடுவான்'என்று அது பயந்தது. பயத்தில் கண்கள் உருண்டன, பிளவுபட்ட நாக்கு காற்றை உறிஞ்சியது. இடையிடையே முஸ்தபா அதை கூட்டத்தை மேல் வீசுவதாக வேடிக்கை காட்டினார். ஆட்கள் சிதறி ஓடி மீண்டும் திரண்டார்கள்.'இவன்களுக்கு நான் சாகிறதைப் பார்க்கத்தான் என்ன ஆவேசம்?'என்று அது பிள்ளையை ஏக்கத்துடன் பார்த்தது. 'நான் உங்களோட ஐஸ்வரியமில்லையா? என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா?'என்ற இறைஞ்சல் அதன் கண்களில் தெரிந்தது. கிழவரின் பிடிக்குள் ஒரு  விறைத்த பிரம்பு மாதிரி இருந்தது.

''கண்டீங்களா, மூசா நபி கையில பிடிச்சிருந்த வடிபோல இருக்கிறான். படைச்சோன்  நிலத்துல போடச் சொன்னதும் வடி இழஞ்சுதாம். வேதத்துல சொல்லீருக்கு. நெலத்துல போடவா?''என்று கையை இறக்கினார். வாலின் நுனி தரையைத் தொட்டதும் அது நெளிந்தது.

''தே, மூப்பே, அதெ அந்த சாக்கு பையில போட்டு பிள்ள சாரோட காவில விடணும்''கரியாச்சனைப் பார்த்துக் கண்ணடித்தான் சிவன் குட்டி.

''இல்ல, அது செரி வராது''பதைப்புடன் மறுத்தார் பிள்ளை.

''பின்னெ என்ன செய்ய? உங்க காவிலருந்து வந்ததுன்னு நீங்கதானெ சொன்னீங்க?''என்றான் சிவன் குட்டி.

''ஆமா, ஆனா இப்ப அங்க வேண்டா. கரியாச்சனோட எடத்துலதான அவன் இருந்தான். அதனாலே கரியாச்சனே தீர்மானிக்கட்டும்''

''அண்ணா, அவனெ சாக்கில் கெட்டி  பழைய வேஸ்டெல்லாம் போட்டு எரிச்சுடலாம்''என்று பற்கள் நற நறக்கச் சொன்னான் போக்கு.

''ஆமா, அவஞ் சொல்லுகதான் செரி. பாம்பெப் பாத்துட்டு உசிரோட விட்டா அது பழி வாங்காம உடாதுன்னு சொல்லுவாங்க''என்றான் முத்து.

''ஹே, அது மகா பாவம்''என்றார் பிள்ளை. முஸ்தபாவின் கையிலிருக்கிற அதைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தும் அதைப் பார்த்தபடியே சொன்னார். முஸ்தபா, இடது கையில் பிடித்திருந்த கோணிப்பையை உதறி விரித்து இவ்வளவு நேரமும் கொதித்துக் கொண்டிருந்த கரியாச்சனின் மண்டை வெடித்தது. சொற்கள் ஆவி பறக்க வழிந்தன.

''அதே, பிள்ளே, விவரமில்லாமெப் பேசாதீங்க. இது என்னோட எடமாம். மாசம் பொறக்கிறதுக்கு முன்னெ வாடகைக் காசை வாங்கி நொட்டுறப்போ இது என்னோட எடம்னு சொல்லுவீங்களா, இல்லயே? இப்ப மாத்திரம் இது எப்படி என்னோட எடமாச்சு? நானா அந்த சாதனத்தே வா, வான்னு அழச்சேன். அதா வந்துச்சு. நீங்க சொன்ன மாதிரியே வெச்சுகிட்டா என்னோட எடத்துலெ வந்தத நான் கொன்னா என்னா எரிச்சா என்னஇந்தப் பறம்புலெ ரண்டு தேங்காயோ நாலு மாங்காயோ தரையிலெ விழற சத்தம் கேட்டதும் சாடி வர்ற நீங்க இந்த ஜீவன மட்டும் ஏன் எனக்கு விட்டுக் கொடுக்கணும்? உங்களதுலேதான் எல்லா தோஷத்துக்கும் பரிகாரமிருக்கே. இத அங்கெ கொண்டு விட்டுட்டு பரிகாரம் செய்யறது?''

பாகுலேயன் பிள்ளைமேல் கரியாச்சனின் அம்புகள் குறிபார்த்துத் தைத்தன. அவர் பேசாமல் நின்றார்.கரியாச்சனுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது.'கர்த்தாவே, இந்த ஆளிடம் நாலு வார்த்தை சொல்லி பதிலடி கொடுக்க வேண்டும் என்று எத்தனை நாளாகக் காத்திருந்தேன். இன்று அதை பூர்த்தி பண்ணிய உனக்கு ஸ்தோத்திரம்'

பிள்ளையிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்த செந்தூரப் பொட்டுக்காரன் கரியாச்சன் பக்கத்தில் வந்து நின்றான்.அவனுடைய தோளில் தட்டி ''மாப்ளே, பேசறத கவனமாப் பேசணும். இல்லேன்னா விதம் மாறும்''என்றான்.

கரியாச்சன் அவன் கையைத் தட்டி விட்டான்''போடா மயிரே, நீ ஆருடா என்னெ கவனமாப் பேசச் சொல்றது? மனுஷன் வெளிக்கிருக்காம தின்னாம இந்தப் பிசாசால பயந்து கெடந்து வட்டம் திரியறப்ப அவனோட தாக்கீது. போ போயி உன்னொட ஜோலியப் பாரு''என்று கத்தினான்.

''தே, மாப்ளே, பின்னெயும் சொல்றேன். கவனமாப் பேசு. உனக்கும் அந்த தாடிக்காரனுக்கும் வேணுமானா அது காரியமா இல்லாமயிருக்கலாம். உங்க வேதத்துல அது பிசாசும் சைத்தனுமா இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்ல. அது தெய்வமாக்கும்''

சாக்கு மூட்டையுடன் கரியாச்சனை நோக்கி வந்த முஸ்தபாவுடன் கூட்டமும் நகர்ந்து வந்தது. பொட்டுக்காரனுக்கும் கரியாச்சனுக்கும் நடுவில் நின்ற பிள்ளை முன்னால் மூட்டையை நீட்டி ''இவனைப் பாக்க வேண்டாமா?''என்று கேட்டார்.

மூத்திரம் முட்டி வலியில் கனத்திருந்த அடி வயிற்றிலிருந்து எழுந்த ஆத்திரத்துடன் கரியாச்சன் வலது காலால் அதை எற்றி உதைத்தான். சாக்கு மூட்டை எல்லாத் தலைகளுக்கும் மேலாக அந்தரத்தில் எவ்வி உயர்ந்ததும் மூட்டையின் வாய் காற்றில் விரிந்து குப்புற விழ ஆரம்பித்ததும் உள்ளே இருந்த அது  வளைந்து நெளிந்து அபாரமான வேகத்தில் கீழே உதிரத் தொடங்கியதும் ஒரே சமயத்தில் நடந்தன. அதே நொடியில் கூட்டம் சிதறியோடியதும் வனத்துறையின் ஜீப் முற்றத்தில் நின்றதும் ஏதோ ஒரு கை முஸ்தபாவின் மண்டையில் ஓங்கியடித்ததும் பாகுலேயன் பிள்ளையின் மூக்குக் கண்ணாடி தரையில் இறங்கி சேற்றுக்குள் புதைந்ததும் பயத்திலும் ஆத்திரத்திலும் கரியாச்சன் காலோடு ஒன்றுக்குப் போனதும் சிவன் குட்டியும் ஹரியும் ஓங்கி வீசிய முஷ்டிகள் யார் முகத்திலோ பலமாகப்பட்டு வலியுடன் திரும்பியதும் போக்கு கூட்டத்தைப் பிளந்து புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள்  ஓடிவேலை நேரத்தில் கழற்றி ஸ்பானர் ஸ்டாண்டில் தொங்க விடும் புதுக்காடு ஃபுட்பால் கிளப் ஜெர்சியை எடுத்தது அணிந்து கொண்டதும் இஸ்திரி வண்டியை நோக்கி முத்து  பறந்ததும் மழையின் புதுத் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதி சத்த மெழுப்பியதும் நடந்தது.

சனிக்கிழமை பத்திரிகையில்  சம்பவத்தைப் பற்றி ஸ்வந்தம் லேககன்  (நமது நிருபர்) செய்தி வெளியிட்டிருந்தார்.

புதுக்காடு பகுதியில் இரண்டு மதப் பிரிவினருக்கிடையில்  வெள்ளிக் கிழமை ஏற்பட்ட மோதலில் அம்பலத்தற கரிம்புவிள வாழக்கல் புத்தன் வீட்டில் ஹமீம் முஸ்தபா (62) பலத்த காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். சம்பவத்தில் லேசாகக் காயமடைந்த  ஜேக்கப் சக்கரியா (28), பாகுலேயன் பிள்ளை (65) உட்பட ஏழு பேர் முதற் கட்ட சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். புதுக்காடு சிற்ற விளாகத்து வீட்டுக்குரிமையான குடும்ப க்ஷேத்திரத்தையொட்டிய பகவதி காவில் சர்ப்பதோஷப் பரிகாரச் சடங்கில் பிற மதத்தினர் தலையிட்டதனால் மோதல் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புள்ள நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வனத் துறைப் பணியாளர்கள் சம்பவத்துக்குக் காரணமான மூன்றடி நீளமுள்ள சர்ப்பத்தைத் தேடி வருகிறார்கள்.

அன்றுஇரவு தீனாம்மச் சேச்சி வீட்டில் படுத்திருந்த கரியாச்சன் இருட்டை வகிர்ந்து கொண்டு தன் மேல் ஊர்ந்த வறுத்த செறு பயறு வாசனையிடம் 'சேச்சி, இது தெற்றாணு'என்றான். பாகுலேயன் பிள்ளை  பகவதிக் காவிலிருந்து மூடிய ஜன்னல்களைத் தாண்டி வந்த 'உஸ்'என்ற முனகலிடம் 'என்டெ ஐஸ்வர்யமே, பொறுக்குகஎன்று மன்றாடினார். புதுக்காடு ஃபுட்பால் கிளப் அலுவலகத்தின் பெஞ்சில் கிடந்த போக்கு அன்றைய ஆட்டத்தில் அடித்த பந்து ஆகாயத்தில் உயர்ந்து கோல் போஸ்டுக்குள் விழும்போது பாம்பாக மாறுவதாகக் கனாக் கண்டு அலறி எழுந்தான்.மருத்துவமனைப் படுக்கையில் ஒருக்களித்துக் கிடந்த பாம்பு முஸ்தபா கட்டிலுக்கு அடியில் போட்டிருந்த தன்னுடைய கவட்டைக் கம்பு எப்போது நெளியும் என்று காத்திருந்தார்.

வனத்துறைஜீப்பின் தார்பாலின் மேற்கூரைமேல் விழுந்து பக்கவாட்டு ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பகல் முழுவதும் நகராமலிருந்த ஜீப்பின் பின் சீட்டுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த அது, சனிக்கிழமை இரவு வனக் காவலர்களை ஏற்றிக் கொண்டு நெடுமங்காட்டுக்குப் போகும் வழியில் புதுக்காடு மார்க்கெட் சந்திப்பில் தட்டு கடையில் சாயா குடிப்பதற்காக நின்றபோது திடுக்கிட்டு விழித்து அவசரமாக இறங்கியது. கவனக் குறைவாக ஜீப்பிலிருந்து சாடியதால் வால் பகுதியில் சுரீர் என்ற வலியை உணர்ந்தது. மழை ஈரத்தில் ஊறியிருந்த தார்ச் சாலையில் மார்பை ஊன்றி நிமிர்ந்தபோது எதிரில் மங்கலான வெளிச்சத்தில் புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரி என்ற போர்டு தென்பட்டது.

@























Viewing all 182 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>