Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all 182 articles
Browse latest View live

தீண்டப்படாத முத்தம்

$
0
0


சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாவது முறையாக ஒரு பொதுமேடையில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

கவிதை பற்றிப் பேசக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் மகிழ்ச்சியளிப்பது. அந்த வகையில் இதுவும்மகிழ்ச்சிகரமானது. ஆனால், கவிதை வாசிப்பவர்களை விடக் கவிதை எழுதுபவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சூழலில் சக கவிஞரின் கவிதைகள் பற்றிப் பேச புதிதாக ஒருவர் முன்வராதது பற்றிய ஏமாற்றம். ஒரு கவிதை ஆர்வலனாகவே இந்த ஏமாற்றத்தை முன் வைக்கிறேன்.

இது சுகிர்தராணியின் நான்காவதுதொகுப்பு. எட்டு ஆண்டுகளுக்குள் நான்கு தொகுப்பு என்பது அவருடைய இயக்கத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதுபவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.இந்தத் தொகுதியில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. எல்லாமும் முந்தைய தொகுப்பான 'அவளை மொழி பெயர்த்த'லுக்குப் பின்னர் எழுதப்பட்டவை. கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.இந்தநான்கு தொகுப்புகளையும் ஒருசேர வைத்துப் பார்க்கும்போது தன்னுடைய கவிதைக்கான தரத்தை சுகிர்தராணி அடைந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதற்குப் பொருந்தும் உதாரணமாக இருப்பது இந்தத் தொகுப்பு.தொடர்ச்சியையும் தரத்தையும் எட்டியிருக்கும்ஒரு கவிஞரைசலுகைகள் எதுவுமின்றி நவீன கவிதையின் பொதுப் போக்கின் பிரதிநிதியாகக் கருதுவதுதான் சரி என்று எண்ணுகிறேன். அந்த வகையில் சுகிர்தராணியின் கவிதைகளை எங்கே வைப்பது என்று பார்க்க விரும்புகிறேன்.

தமிழில் பெண்கள் எழுதும்கவிதைகள் பற்றி இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று - பெண்கள் எழுதுவதெல்லாம் சாரமில்லாதவை. இலக்கியப் பெறுமானம் கற்பிக்கத் தகுதியானவையல்ல. இது பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் வாதம். இதில்முக்கியமான கவிஞர்களும் இடம்பெறுகிறார்கள். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் பிரபல எழுத்தாளர் ஒருவர்எழுதியிருந்தார். அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப் பிடிக்கப்படுகிறதுஎன்று இலக்கியக் கோட்பாடுகளைப் பகடி செய்து எழுதியகட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கருத்து - பெருந் தன்மையாளர்களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள். பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம்போக்கானது. இவ்விரு கருத்துக்களும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. ஒரு புதிய போக்கை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக் கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும். இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சுகிர்தராணியின் கவிதைகள் பொருத்தப்பாட்டைக் காண்கின்றன.

பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற பொதுக் கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக்கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சிஅடையச் செய்துமிருக்கிறது. சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை,ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார்.இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது.இதுவரை தன் உடல் மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு.தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம்.இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.

ஆண் மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பெண் என்ற படிமத்தை பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது.சாதி,இன,பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது.ஒரு சமயம் இது மொழியின் சிக்கல்.அதேசமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும் கூட.இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்த சுதந்திரம் பெண்ணை பெண்ணுக் குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். மேற் சொன்ன இயக்கத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகள் சுகிர்தராணியுடையவை என்பதற்கு இந்தத் தொகுப்பு சாட்சியம்.

மையப் பொருளைச் சார்ந்து சுகிர்தராணியின் கவிதைகளை மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று: இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் ஒலிப்பவை ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள். அவை சாதி சார்ந்த ஒடுக்குமுறையாகவோ இனம் சார்ந்த ஒடுக்குமுறையாகவோ பாலினம் சார்ந்த ஒடுக்கு முறையா கவோ இருக்கின்றன. அவை குமுறல், சீற்றம், பழி வாங்கும் ஆவேசம், தமது வரலாற்றின் வெற்றிகள் பற்றிய கர்வம், எல்லாம் வெளிப்படும் குரல்கள் அவை.

இரண்டாவது: பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்று தான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப் படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் 'காமத்தின் புராதனக் கோவில்' என்றே சொல்லுகிறது. சுகிர்த ராணியின் இரண்டாவது தொகுப்பான 'இரவு மிருக'தில் ஒரு கவிதை இருக்கிறது. 'உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.' இந்த மென்மையான கற்பனைகளைபுதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம் பெறும் இயற்கை. சமீப காலத்தில்அதிகஅளவுக்கு மனிதவயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள் கொண்ட கவிதைகள்இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப் படுகின்றன. 'முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை' (பக் 39 ) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மூன்று பகுப்பையும் ஒன்றிணைப்பது

கவிதையாக்கத்தில் சுகிர்தராணி பின்பற்றும் அரசியல். ஒரு அர்த்தத்தில் இது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல்.இன்னொரு அர்த்தத்தில் பெண்நிலை அரசியல். ஒடுக்கப்பட்ட ஆணும் பாலின வேற்றுமையால் கீழானவளாகச் சித்தரிக்கப்படும் பெண்ணும் ஒரே தளத்தில் இருப்பவர்கள். அவர்கள் ஒரே துயரத்தை ஒரே கோபத்தை ஒரே விதியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மைக் காலத்தின் மாபெரும் மானுட அவலங்களான கயர்லாஞ்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு அந்தச் சம்பவங்கள் பற்றியும் பல கவிதைகளில்பேசுகிறது.

பொதுவாக சுகிர்தராணியின் கவிதைகளில் விவிலியக் குறிப்புகள் அங்கங்கே காணப்படும். இந்தத் தொகுப்பில் அவற்றின் செல்வாக்கு அதிகம். கூடுதலாக புத்தனைப் பற்றிய சிந்தனைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கான காரணம் வெளிப்படையானது.'காட்டு வேர்' என்ற கவிதையை இங்கே சொல்லலாம். பக் - 38.

இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போது தென்பட்ட சில விஷயங்கள் சுவாரசியமானவை. தொகுப்பில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் தலைப்புக் கவிதை உட்பட ஏழு கவிதைகள் முத்தம் பற்றியவை. தீண்டப்படாத முத்தம். முதல் முத்தம்,கடைசி முத்தம், சபிக்கப்பட்ட முத்தம்,விலக்கப்பட்ட முத்தம்,சாம்பல் பூக்காத முத்தங்கள், உறையிடாத முத்தம் என்று போகிறது இந்தப் பட்டியல். இவை தவிர 14கவிதைகளுக்குள் முத்தம் இடம்பெறுவதையும் குறிப்பிட வேண்டும். இதில் எந்த முத்தமும் மகிழ்ச்சியின் அடையாளமல்ல; வலியைச் சொல்பவை. தனிஆள் என்ற வகையிலும் சமூகம் சார்ந்தும் அது பரவசத்தை அல்ல; ஓர் இனத்தின் வஞ்சினத்தைச் சொல்லுகிறது. உடல் ஓர் ஆயுதமாக மாறும் அரசியலைப் பேசுகின்றனசுகிர்தராணியின் கவிதைகள். அவருடைய கவிதை இடம் இது என்று தோன்றுகிறது. மிக அதிகமான விமர்சனங்களை வரவழைக்கும் இடம்.

(2 ஜனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் சுகிர்தராணியின் ‘தீண்டப்படாத முத்தம்’ தொகுப்பை வெளியிட்டு நிகழ்த்திய உரை)

@

ச்


சக்திஜோதி கவிதைகள்

$
0
0












தாகம் அமைப்பு அண்மையில் வெளியாகியிருக்கும் ஆறு கவிதை நூல்களுக்காக நடத்தும் விமர்சன உரையாடல் நிகழ்ச்சி. இதில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி. தமிழில் இன்று கவிதை நூல்கள் அதிகம் வெளியாகின்றன.அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் அறிமுக மாகிறார்கள். ஆனால் கவிஞர்களும் கவிதைகளும் பெருகியிருக்கிற அளவுக்குக் கவிதை பற்றிய விவாதங்களோ உரையாடல்களோ நடைபெறுவதில்லை. பத்திரிகைகளிலும் இதே நெருக்கடியைப் பார்க்கலாம். ஒரு கவிதைத் தொகுதிக்குப் பொருட்படுத்தத் தகுந்த மதிப்புரையோ ஒரு கவிஞரின் படைப்புப் பற்றிய விரிவான திறனாய்வோ வெளியாகும் வாய்ப்புக் குறைவு. கவிதையி பொறியில் சிக்கிக் கொண்டிருக்கும் இக்கட்டான தருணத்தில் இந்த உரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருகிறேன். இதில் என்னைப் பங்கேற்கத் தூண்டிய நண்பர்கள் 'காலச்சுவடு' கண்ணன், கவிஞர்கள் சக்திஜோதி, செந்தி மூவருக்கும் நன்றி.

இங்கே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஆறு கவிதை நூல்களில் சக்திஜோதியின் 'எனக்கான ஆகாயம்' தொகுப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாகச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விருப்புகிறேன். இது சக்திஜோதியின் மூன்றாவது தொகுப்பு.இதற்கு முன்பு அவருடைய முதல் தொகுப்பான 'நிலம்புகும் சொற்க'ளை வாசித்திருக்கிறேன். பொருட்படுத்தப்பட வேண்டியகவிஞர் என்ற எண்ணத்தை அந்தத் தொகுப்பு எனக்குத் தந்தது.இந்த நிகழ்ச்சியையொட்டி சக்திஜோதியின் எல்லாத் தொகுப்புகளையும் வாசிக்கும் வாயப்புக் கிடைத்தது. நான் பேசவேண்டியது அவருடைய மூன்றாவது தொகுப்பை முன்வைத்துத்தான். இருந்தாலும் அவருடைய இதுவரையான எல்லாக் கவிதைகளையும் ஒருசேர வாசித்தபோது கிடைத்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு இதை விடப் பொருத்தமான சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது.

சக்திஜோதியின் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெறும் கவிதைகள் பெரும்பான்மையும் ஒரே இயல்பைக் கொண்டிருப்பவை. முதல் தொகுப்பான 'நிலம்புகும் சொற்களில்' இடம் பெறும் 'காதல் வழி' என்ற கவிதையையும் மூன்றாம் தொகுப்பான 'எனக்கான ஆகாயத்'தில் இடம் பெறும் 'தருணம்' என்ற கவிதையையும் எளிதாக ஒப்பிட முடியும்.

ஆற்றின் கரைகளுக்குஇடையில் இருக்கின்றேன்
வெள்ளம் என்மீதுபுரண்டோடுகின்றது
தொண்டை வறண்டுதாகத்தில் தவிக்கின்றேன்
கால்கள்நீரில் மிதக்கின்றன
ஆற்றின் போக்கைஎதிர்க்கஇயலாமல்மீனாய் மாறுகின்றேன்.
தப்பிக்க இயலாது இனிநானும்
என்னிடமிருந்து நீரும்.

இதன் இன்னொரு சாயலை 'தருணம்' என்ற இந்தக் கவிதையில் பார்க்கலாம்.

கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம்
நதியில் நீந்தும் மீன்களைப்போல
நினைவுகளில் பயணிக்கிறதுஒரு சொல்
அருகாமை நறுமணம் உணவுப் பொருட்கள் உடைகளின் வண்ணங்கள் என
ஏதாவது ஒன்றிலிருந்து
ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது.
குளத்துத் தாமரைக் கொடிகளில் சிக்கி
மிதப்பதுபோலவும்
சுழித்து ஓடும் நீரில்வந்தடையும்
சிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்
தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில்
ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது
உன் நினைவு
தாமரை இலைமேல்படர்கிறது
ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்
கூடவே
நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.

ஒரே மனதின் இரு வேறு நிலைகளைச் சொல்பவை இரு கவிதைகளும். ' காதல்வழி' என்ற முதல் கவிதையில் நினைவுகளின் வசப்படும் நிலை. 'தருணம்' கவிதையில் நினைவுகளைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் நிலை. தனிக் கவிதைகளில் அல்லாமல் மூன்று தொகுப்புகளிலும் ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார் சக்திஜோதி. இது அவருடைய கவிதை இயல்பாகத் தோன்றுகிறது. இந்த இயல்பில் ஒரு தீர்மானமும் முறைமையும் தென்படுகின்றன. இந்த முறைமை சார்ந்தே அவருடைய கவிதைத் தொகுப்புகள் உருவாக்கப் படுவதாகவும் தோன்றுகிறது.
இந்த முறைப்படுத்தலின் இன்னொரு அம்சம் தொகுப்புகளுக்கு எழுதப் பட்டிருக்கும் முன்னுரைகள். தமிழில் முன்னோடிகளான மூன்று எழுத்தாளர்களின் முன்னுரைகள் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், கல்யாண்ஜி. இப்படி அமைந்திருப்பது தற்செயலாகவும் இருக்கலாம். கல்யாண்ஜியின் முதன்மையான வெளிப்பாட்டு ஊடகங்களில் கவிதையும் ஒன்று. மற்ற இருவரும் கவிதையிலும் கைவரிசை காட்டியிருப்பவர்கள். இப்படியான பொருத்தமும் தற்செயலானதாக இருக்கலாம். இந்த மூன்று தொகுப்புகளின் தலைப்புகளிலும் ஒரு தேர்வும் தீர்மானமும் தெரிகின்றன. நிலம் புகும் சொற்கள், கடலோடு இசைத்தல், எனக்கான ஆகாயம். ஐம்பூதங்களில் மூன்றைத் தொகுப்புகளில் பிரதிநிதித்துவ ப்படுத்துவது தற்செயலானதல்ல என்பது என் ஊகம். இந்தத் தலைப்புகளையொட்டி யோசிக்கும் போது முன்னுரையாளர்களின் வரிசை கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். கடலுக்குப் பிரபஞ்சனையும் நிலத்துக்கு நாஞ்சில் நாடனையும் ஆகாயத்துக்கு கல்யாண்ஜியையும் முன்னுரையாளர்களாக ஆக்கியிருக்கலாம். கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும். அதனாலென்ன? இன்னும் இரண்டு பூதங்களுக்கான தொகுப்புகள் மிச்சமிருக்கின்றன. யார் யார் காற்றையும் தீயையும் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்ற வாசகக் குறுகுறுப்புடன் காத்திருக்கிறேன். இல்லை இவை யெல்லாம் தற்செயலாக ஏற்பட்டவை என்று சக்திஜோதி சொல்வாரானால் அடுத்த தொகுப்பின்போது என்னுடைய அவதானிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

மூன்று தொகுப்புகளையும் ஒருமித்து வாசித்தபோது கவனித்த இன்னொரு அம்சம் என்னை மிகவும் வியப்படையச் செய்தது. மூன்று தொகுப்புகளும் ஒருவருக்கே சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. இது தற்செயலானதல்ல; தீர்மானமானது. இந்தத் தீர்மானத்தின் வெவ்வேறு சாயல்களில்தான் சக்திஜோதியின் கவிதைகள் உருவாகின்றன. சமர்ப்பணத்தில் தென்படும் அளப்பரிய காதலைத்தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன. இந்தத் தொகுப்பின் தன்னுரையில் அவரே அதை ஒப்புக்கொண்டுமிருக்கிறார். 'காதலும் பிரிவும் அதுசார்ந்த காட்சிகளும் நிரந்தரமாக எனது கவிதைகளின் அடையாளமாகி விட்டன. சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதில் காதல் பெரும் பங்கு வகிக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.

ஓர் நபரின் மீதான காதல் மட்டுமல்ல; பிற உறவுகளின் மீதான காதல்,இயற்கை மீதான காதல் என்று இந்தக் கவிதைகள் வெவ்வேறு உருக் கொள்கின்றன. என்னைப் போன்ற ஒரு சந்தேகப் பேர்வழிக்கு இந்த உலகத்தில் அத்தனை காதல் சாத்தியமா? என்ற கேள்வி எழுவது சகஜம். ஆனால் காதலாகிக் கசியும் இந்த மனநிலையையே கவிதையின் இயல்பாக மாற்றிக் கொண்டி ருக்கிறார் சக்திஜோதி. தமிழில் எழுதும் பிற பெண் கவிஞர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டும் அம்சம் இது.

தமிழில் வாசக கவனத்தைப் பெற எளிய வழி காதலை முன்வைத்து - உருக்கமான சரியாகச் சொல்வதென்றால் அசட்டுத்தனமான கவிதைகளைத் தயாரிப்பதுதான். இது ஆண் வழி.பெண்ணை வியந்து பரவசப்பட்டு அவளைக் கொண்டாடும் கவிதைகள். அல்லது காதலியின் வஞ்கத்தைச் சொல்லிப் புலம்பும் கவிதைகள். இவை ஆண்களின் பங்களிப்பு. மாறாக 'என்னைப் புரிந்து கொள்ளேன்' என்று இறைஞ்சும் அல்லது 'என் காதலுக்கு நீ தகுதியானவனல்லன்' என்று குற்றம் சாட்டும் பெண் வழிக் கவிதைகள். எடுத்துக் காட்டுகள் தராமலே உங்களுக்கு விளங்கும் என்று எண்ணுகிறேன். இந்தத் தேய்வழக்கிலிருந்து தப்பியவை சக்திஜோதியின் கவிதைகள். இவை காதலைப் பற்றிய கவிதைகளல்ல . காதலிலிருந்து உருவான கவிதைகள். காதலைப் பெண்ணும் ஆணும் பார்க்கும் பார்வையிலேயே வேறுபாடு இருக்கிறது. பெண்ணுக்கு அது வாழ்க்கை. ஆணுக்கு வாழ்வின் ஒரு பகுதி. அதனாலேயே சக்திஜோதியின் கவிதைகள் பெரிதும் காதலைச் சார்ந்து இருக்கின்றன என்று கருதுகிறேன்.

சக்திஜோதியின் கவிதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதிய மூன்று பேரும் அவரது கவிதைகளில் சங்க இலக்கியச் சுவடுகள் தென்படுவதாகத் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைக் கவிஞரும் ஏற்பளிப்புச் செய்திருக்கிறார். வெள்ளிவீதியாரின் சந்ததி என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார். இந்த உரிமை பாராட்டலை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கலாம். சங்கக் கவிதைகளில் இடம் பெறும் மாந்தர்களில் தீவினையாளர்களே இல்லை. தலைவனோ தலைவியோ தோழியோ தோழனோ தாயோ செவிலியோ யாரும் காதலுக்குத் தடை விதிப்பவர் களல்லர். சமூகப் பழக்கங்களும் இருத்தலின் தேவைகளும்தான் தடையாக அமைபவை. சக்தி ஜோதியின் கவிதைகளிலும் காதலுக்கு எந்தத் தடையும் இல்லை. பிரிவுகள்தாம் துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. காதலில் நேரும் பிரிவு, தனிமை, விரகம் இவைதாம் இந்தத் தொகுதிக் கவிதைகளின் பாடு பொருட்களாக அமைகின்றன. பெரும்பாலும் பெண் நிலையிலி ருந்தே இந்தக் கவிதைகள் சொல்லப்படுகின்றன. விதிவிலக்கான ஒரு கவிதை 'தீபங்களின் நடுவே'. பெண் மீதான ஆணின் தவிப்பைச் சொல்கிறது. சமயங்களில் பெண்ணுக்கே தன்னுடைய நிலை மீது சந்தேகம் வந்து விடுகிறது. 'இதற்குமுன்' கவிதை அதை வெளிக்காட்டுகிறது. (பக் 51) இன்னொரு கோணத்திலும் சக்திஜோதியின் கவிதைகள் சங்கக் கவிதைகளின் சாயலைக் கொண்டிருக்கின்றன. சங்கக் கவிதைகளில் வெளியில் உள்ள இயற்கைச் சித்தரிப்பு அகத்தையே வெளிப்படுத்துகிறது. நதி.நிலவு, வானம், பறவை, வனம்,சாலைகள்,மழை, மலை, காற்று என்று எல்லாப் புறப் பொருட்களும் இந்தக் கவிதைகளில் அகத்தின் மாற்றுப் பொருட்களாகின்றன . 'அரும்புகள் மலரும் பருவம்' பக் 54 . பொழுதுகளும் காதலுக்கானவையாக மாற்ற மடைகின்றன.

'எனது இரவும் பகலும் / ஒரே நிறத்திலானதாய் மாறிவிட்டது' என்றும்
'அவன் / என்னிலிருந்து நீங்கிச் செல்லும்/ ஒவ்வொரு விடியலும்/ துயரம் மிக்கதாகவே புலர்கிறது' என்றும்

காதலனை முன்வைத்தே பொழுதுகளும் அமைகின்றன. காதலனுடனான இருப்பு. அதில் நேரும் பிரிவு, அது தரும் வேதனை இவையே இந்தத் தொகுப்புக் கவிதைகளின் மையம். பிரிவால் கொள்ளும் ஊடல் கூட காதலுக்கு ஊறு விளைவிக்கும் என்ற பெருந்தன்மையான நிலைப் பாட்டை இந்தக் கவிதை களினிடையில் காண முடிந்தது. சங்க காலக் கவிஞர்களிடமிருந்து சக்திஜோதி முன்னோக்கிச் செல்லும் தருணம் இது.

பெண்ணுரிமைப் பரப்புநர்கள் போற்றவும் தூற்றவுமான இரண்டு கவிதைகள் தொகுப்பில் அடுத்தடுத்து உள்ளன. பெண்ணின் இயல்புகளைப் பறித்துக் கொண்டவர்களுக்கிடையிலிருந்து அவள் மீண்டு எழும் செயலைச் சொல்கிறது இந்தக் கவிதை. பக் - 33.அதே கவிதையின் மறுபக்கம் ஆணின் நேசத்தில் பெண் தன்னை முற்றிலும் இழப்பதை 'பரிமாணம்' பக் - 34 பேசுகிறது. இந்தக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது எதிர்மறையாகத் தோன்றும் கவிதைகளையும் சக்திஜோதி எழுதியிருக்கிறார். குறுகிய பரப்புக்குள் வாழ விதிக்கப்பட்ட பெண்ணின் குமுறலைச் சொல்லும் கவிதை 'சமையலறை உலகிலிருந்து' வெளிப்படுகிறது. பக் - 30. இந்தக் கவிதையும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. தனது இருப்பை எந்த விமர்சனமும் புகாருமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் பெண்நிலையை முன்வைக்கிறது. இவ்வளவு அமைதியானதா காதலின் உலகம்? 'ஆம், என்பது சக்திஜோதியின் ஒப்புதலாக இருக்கிறது. அதை நிறுவுவதற்கான விரிவான சான்றுகள் அவருடைய கவிதைகள். நிகழ் உண்மைகளின் நகலெடுப்பல்ல படைப்பு. அதுவாய்த்த உண்மைகளைச் சார்ந்து உருவாகும் மாற்று உலகம். இந்த நோக்கில் சக்திஜோதியின் கவிதைகள் ஓர் மரபின், அதுவும் மேன்மையானது என்று கொண்டாடப்பட்ட ஓர் மரபின் அடிப்படைக் கூறுகளிலிருந்து சமகால உணர்வுடன் ஒரு மாற்று உலகை உருவாக்குகிறார். கவிதை எப்போதும் சமகாலத்தின் துடிப்புகளைக் கொண்டிருப்பது. நிகழ்காலத்திலிருந்தே கடந்த காலத்தைப் பரிசீலனை செய்கிறது.சக்திஜோதியின் கவிதைகள் கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்தைப் பார்க்க முற்படுகின்றனவா என்ற சந்தேகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நினைவுகளை மீட்கும் முயற்சிகள் இந்தக் கவிதைகள். கடந்து போன வாழ்வின் கணங்களை மீட்கும் ஆசை இந்தக் கவிதைகளில் தென்படுகிறது. ’முடிந்த கதைகள்’, ’தோழி ஒருத்தியின் குரல்’, ‘வேங்கை இருந்த நிலம்’ ஆகியவை இந்த ஆசையின் உதாரணங்கள். முதலிரண்டு கவிதைகளும் தனி மனித உணர்வோட்டமாக நின்று விட மூன்றாவது கவிதை இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நேரும் நவீன அத்துமீறலைச் சொல்கிறது.

சக்திஜோதியின் கவிதைகளை வாசித்துப் பெற்ற நெகிழ்வான மனநிலையில் நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். மலையாளக் கவிஞரான ஜெயதேவன். ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ஆரம்ப வகுப்புகள்தாம் வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டு அதன்படியே சிறு குழந்தைகளுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவர். மிகவும் மென்மையானவர். பள்ளிப் பிள்ளை களிடம் மாளாத அன்பு கொண்டவர். அந்த அன்பு அவர் பேச்சிலும் செய்கைகளிலும் தெரியும். ஓர் ஆள் இப்படி அன்பின் அவதாரமாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியப் பணியில் ஒரு முறை கூடப்பிள்ளைகளை அடித்ததில்லை. அடிப்பது என்ன? குரலை உயர்த்தி மிரட்டியது கூட இல்லை. நான் பணியாற்றிய பதிப்பகத்தின்வாயிலாக அவருடைய இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட் டேன்.அந்த வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் ஜெயதேவனின் கவிதைகளைப் பற்றிப் பேசியதற்கு இணையாக அவரது நல்லியல்புகளைப் பற்றியும் பேசினார்கள். மலையாளத்தின் முக்கிய எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட எல்லாப் பேச்சாளர்களும் கவிதையும் கவிஞரும் ஒன்று என்ற தோரணையில்தான் பேசினார்கள். அன்று அந்தப் பேச்சுகளும் ஜெய தேவனின் செய்கைகளும் கொஞ்சம் செயற்கை யானவயோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் கவிஞருடன் உருவான நெருக்கம் அந்த சந்தேகத்தைப் போக்கியது. அவர் மட்டுமல்ல அவருடைய மனைவியும் ஏழு வயது மகளும் கூட அன்பின் தூதுவர்களாகவே இருந்தார்கள். நேசத்தின் சிறகுகளை தங்கள் உடுப்புகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு நடமாடு கிறார்கள் என்று கூடத் தோன்றியது. ஆனால் அது அவர்களின் இயல்பு. அவர் கவிதைகளும் அந்த இயல்பிலிருந்தே பிறந்தவை. ஜெயதேவனிடம் பின்னர் கேட்டுமிருக்கிறேன்:‘ பூமியில் இவ்வளவு அன்பு சாத்தியமா? அதை மட்டுமே எழுதிக் கொண்டி ருக்கவும் வேண்டுமா?’ . அவருடைய இயல்பைப் பற்றிச் சொல்லி யிருப்பதனால் அவருடைய பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நீங்கள் ஊகிக்க முடியும்.

காதல் மேலான மானுட உணர்வு. அது நெருக்கமும் பிரிவும் பிரிவின் வேதனையும் மட்டும் தானா? அதில் ஒளிந்து கிடக்கும்தவிர்க்க முடியாத வஞ்சனையும் துரோகமும் வன்மமும் காதலின் பகுதிகள் அல்லவா? காலமும் இடமும் காதலால்தான் வரையறுக்கப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளை சக்திஜோதியிடமும் கேட்கலாம். அதற்கான பதில்கள்தான் தனது கவிதைகள் என்று அவர் சொல்லக் கூடும். காதல் என்ற உணர்வுக்காகத் தனி நூலே தொகுக்கப்பட்டிருக்கும் மொழியில் அவர் அப்படிச் சொல்வது இயல்பானதாகவும் இருக்கக் கூடும்.
@
மதுரை தாகம் இலக்கிய அமைப்பு 13 மார்ச் 2011 அன்று நடத்தியஆறு கவிதை நூல்கள் - விமர்சன உரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

சுந்தர ராமசாமியும் எம்.கோவிந்தனும் சில இலக்கிய யூகங்களும்

$
0
0
























என்னுடையஉரை சுந்தர ராமசாமியைமட்டும் பற்றியதல்ல; ஆனால் சுந்தர ராமசாமியையையும் பற்றியது.மலையாள எழுத்தாளரும் சிந்தனையாள ருமான எம். கோவிந்தனைப் பற்றிச் சில கருத்துகளையும் அவருக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையில் நிலவிய பரஸ்பரப் பாதிப்புப் பற்றியயூகங்களையும் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதற்கு இந்த மேடையையும் இந்த ஆர்வலர் கூட்டத்தையும் விடப் பொருத்தமான சூழல் வேறு அமைய முடியாது.



எம். கோவிந்தனைப் பற்றி அதிகம் பேசியவரும் அடிக்கடி பேசியவரும் சுந்தர ராமசாமிதான். தமிழ் மலையாளக் கலை இலக்கியச் சூழல்கள் பற்றிய ஒப்பீடுகளில் தமிழுக்கு அவசியம் வரவேண்டிய மலையாள எழுத்தாளர்களில் ஒருவராக எம். கோவிந்தனைப் பல சமயங்களிலும் முன்னிலைப் படுத்தியிருக்கிறார். 'எம்.கோவிந்தன் மிக முக்கியமான சிந்தனையாளர். ஐரோப்பியச் சிந்தனைகளையும் கீழைத் தேயச் சிந்தனைகளையும்அவற்றின் சாரம் சார்ந்து அறிந்தவர். சகல அறிவுகளும் அவருடைய பார்வையில் வெளிப்படும்போது வயோதிகர் ஒருவர் திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோல் எளிமைப்படுகிறது.எதையும் நீர்க்கச் செய்யாத எளிமை அவருடையது. சிந்தனைக் கூர்மையும் விவேகமும் நகைச்சுவை உணர்ச்சியும் கொப்பளிக்கும் எழுத்து. ஓர் ஆளுமை என்று எடுத்துக் கொண்டால் அவரை எம். என். ராயுடனும் ராம் மனோகர் லோகியாவுடனும் ஒப்பிட்டுப் பேச முடியும். பெரியார்இயக்கத்தை வரவேற்றவர். அவ்வியக்கத்தை சேர்ந்த ஆரம்ப கால லட்சியவாதிகளுடன் தோழமை கொண்டிருந்தவர்.தமிழுக்கு வரவேண்டும் இவருடைய எழுத்து' என்று சாகித்திய அக்காதெமி நடத்திய இரு மொழி சிறுகதைப் பட்டறைபற்றிய கட்டுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். ( ஆளுமைகள் மதிப்பீடுகள் - பக் 367). பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1996 இல் எழுதிய இந்தக் கருத்தை அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே நேர்ப் பேச்சில் சொல்லியிருந்தார்.



அந்தக் காலப் பகுதியில் மாதம் ஒருமுறையாவது சுந்தர ராமசாமியுடன் சில நாட்களைக் கழிக்கும் வாய்ப்பு எனக்குஇருந்தது. மலையாள நவீன இலக்கியத்துடன் அறிமுகம் ஏற்பட்டு வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் சரியானதேர்வுக்குத் துணைபுரிந்தவர் சுந்தர ராமசாமி. மறுபடியும் சந்திக்கும் போது என்னுடைய மலையாள வாசிப்பைப்பற்றி அக்கறையுடன் விசாரிப்பார். இரண்டாவதோ மூன்றாதவதோ சந்தர்ப்பத்தில் அவர் பரிந்துரைத்த பெயர் எம். கோவிந்தன். அது மலையாள இலக்கியத்தில் நவீனத்துவத்தின்கொடிபட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தகாலம். இலக்கிய விவாதங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாக கோவிந்தன் பெயரும் இருந்தது. அதையொட்டி அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தேன். அவர் நடத்திய சிற்றிதழான 'சமீக்ஷா' வின் சில இதழ்களையும் பார்த்திருந்தேன். ஒரு கவிஞராகவும் ம.ராஜாராம் தமிழாக்கம் செய்து நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்திருந்த 'சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்' தொகுப்பில் 'சர்ப்பம்' என்ற நேர்த்தியான நெடுங்கதையை எழுதிய எழுத்தாளராகவும் கோவிந்தன் அறிமுகமாகி இருந்தார். ஆனால் சுந்தர ராமசாமி அவரை எனக்கு அறிமுகப்படுத்த நினைத்தது வெறும் எழுத்தாளராகவோ கவிஞராகவோ மட்டுமல்ல; ஒரு சிந்தனையாளராக.



பெரிய காரியங்களின் கடவுளர்களான சிந்தனையாளர்களின் நிழலைக் கண்டாலே ஓட்டமெடுக்கும் மனநிலை என்னுடையது. தன்னுடைய நூலகத்திலிருந்து கோவிந்தனின் 'தேடலின் ஆரம்பம்' என்ற புத்தகத்தை எடுத்துக் கொடுத்து வாசித்துப் பார்க்கும்படிச் சொன்னார். என்னுடைய அலர்ஜி பற்றிச் சொன்னேன். 'இல்ல, இவர் உங்களை அவ்வளவு ஒண்ணும் கஷ்டப்படுத்த மாட்டார். நீங்க படிக்கலாம்' என்றார். படித்தேன்.உண்மையில் வாசிப்பின் மூலம் புதிய எல்லைகளைக் காட்டக் கூடியவராக இருந்தார் கோவிந்தன். வெளிச்சத்தின் ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் மேலும் வெளிச்சத்துக்கு அதிலிருந்து இன்னும் அதிகம் வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்பவராக இருந்தார்.



'சுதந்திரத்தின் புதிய தொடுவானங்களைத் தேடி முன்னேறிச் செல்வதாக இருக்க வேண்டும் நம்முடைய வாழ்க்கையின்கோட்பாடு.பழைய கருத்துக்கள் தேடலுக்கு வழிகாட்டக் கூடியவனவாக இருந்தால் நல்லது. முடிந்தால் அவற்றின் உதவியுடன் , தேவைப்படுமானால் அவற்றைத் தூர எறிந்தும் தான் புதிய வாழ்க்கை முறையின் வெளிச்சத்தை நோக்கி நம்மால் முன்னேற முடியும். அதைத் தவிர வேறு வழியில்லை' என்ற கோவிந்தனின் கருத்தை சுந்தர ராமசாமியின்படைப்பு வாழ்க்கையோடும் கருத்துக்களுடனும் பொருத்திப் பார்க்கலாம். அவை துல்லியமாக இணைவதை உணரலாம்.



தொடர்ந்து புதிய தேடலுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த வராகவே சுந்தர ராமசாமி இருந்தார். படைப்புகளிலும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்திலும். எழுபது வயதைக் கடந்த பின்னும் இன்னும் செய்து முடிக்கப் புதிய காரியங்கள் இருக்கின்றன என்று நம்பினார். கோவிந்தன் தொண்ணூறு வயதைக் கடந்த பின் மறைந்தார். அவருடையவலுவான பங்களிப்பு என்பது அந்த வயதுக்கும் கொஞ்ச காலத்துக்கு முன்பே முடிந்திருந்தது. ஆனால் அதன் விளைவுகள் அப்போதும் காத்திரமானவை யாகவும் தவிர்க்க முடியாதவையாகவும் இருந்தன. உலக அளவில் சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு. இந்திய அளவில் பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஜனநாயகம் இல்லாத எதேச்சாதி காரமாக உருமாறும்; சடங்குத்தனமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கம்யூனிசம் சிதைவுறும் என்றும் மதத்தை மனிதனுக்கு அடங்கியதாக அல்லாமல் மதத்துக்கு மனிதனைக் கருவியாக எண்ணும்போது பொதுவான மானுட மதிப்பீடுகள் கைவிடப்படும் என்றும் அவர் எழுதியிருந்தவை தீர்க்க தரிசனங்களாகக் கருதப்பட்டன. சரியாகச் சொல்வதென்றால் அவர் எழுதியும் பேசியும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தை விட சிந்தனைக்கு ஓய்வளித்திருந்த காலத்தில் அவரது கருத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தது.



'மதம் ஒரு போதை மருந்தாக இருக்கலாம். ஆனால் அந்த மருந்தைக் கைவிடுவதற்காக இன்னொரு போதை மருந்தை உட்கொள்ளத் தொடங்குவதில் என்ன முற்போக்குத்தன்மை இருக்க முடியும்?' என்று கோவிந்தன் கேட்ட கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்வியைத் தமிழ்ச் சூழலில் எழுப்பியவர் சுந்தர ராமசாமி என்று எண்ணுகிறேன். ஒருவரை யொருவர் பாதித்துக் கொண்ட இரு படைப்பாளர்கள் சந்திக்கும் புள்ளி இது.
சுந்தர ராமசாமியைப் பெரிதும் பாதித்த ஆளுமைகளில் எம். கோவிந்தனும் ஒருவர் என்பது என் யூகம். இலக்கியத்துக்கான அடிப்படைப் பார்வையை புதுமைப்பித்தனிடமிருந்தும் இலக்கியத்தின் தர நிர்ணயம் பற்றிய நோக்கைக் க.நா.சு. விடமிருந்தும் பெற்றிருந்தது போலவே வாழ்க்கை விசார¨ணையை அவர் எம்.கோவிந்தனிடமிருந்து பெற்றிருக்கக் கூடும் என்பதை சுந்தர ராமசாமியை வாசிக்கும் போதல்ல; கோவிந்தனை வாசிக்கும்போதே நான் இனங்காண்கிறேன். புதுமைப் பித்தனிடம் ஓர் எதிர்மறுப்புக் கண்ணோட்டம் இருந்தது. க.நா.சு விடம் ஓர் அத்வைதியின் பெரும்போக்கான அணுகுமுறை இருந்தது. சுந்தர ராமசாமியிடம் இந்த இரண்டுமில்லாத இம்மையியல் சார்ந்த ஒரு பார்வையைப் பார்க்க முடியும். அதனாலேயே ஆன்மீகம்,அமானுஷ்யம், தொன்மம் போன்ற கருத்தாக்கங்கள் அவரிடம் செலாவணி ஆவதில்லை. புதுமைப்பித்தனுக்கு வைதீக மரபில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட அமானுஷ்யமான கூறுகள் படைப்புகளில் இடம் பெறுகின்றன. க.நா.சுவின் எழுத்திலும் ஆன்மீக வேட்கைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த இருவரின் பாதிப்பு சுந்தர ராமசாமியிடம் இருந்தாலும் அவருடைய படைப்புப் பார்வை இம்மை சார்ந்தது.'செக்குலர்ஆனது. அதைக் கோவிந்தன் வழியாக அடைந்த பாதிப்பு என்று கருதுகிறேன். இந்த இம்மையியல்பு நவீனத்துவத்தின் ஒரு கூறு என்று வைத்துக் கொண்டாலும் சுந்தர ராமசாமி கோவிந்தனிடமிருந்து பெற்றிருக்கலாம்.



பாதிப்பு என்று நான் சொல்லுவதைச் சரியாகச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். எம்.கோவிந்தனால் பாதிக்கப் பட்டவர் என்று சொல்வதன் மூலம் சுந்தர ராமசாமி கோவிந்தனை அப்பட்டமாகப் பின் தொடர்ந்தார் என்று அர்த்தமில்லை. அவருடைய மொழியிலேயே சொல்வதென்றால் 'உரலில் உலக்கை விழும்போது தரையில் வைத்திருக்கும் பாத்திரம் அதிர்வதுபோலத்தான்' இந்தப் பாதிப்பு.



ஜெயமோகன் நடத்திய நேர்காணலில் (விரிவும் ஆழமும் தேடி - பக் 59) 'உங்களை மானசீகமாக எம்.கோவிந்தனின் பின்காமி என்று சொல்லலாமா?' என்ற கேள்வி இடம் பெறுகிறது. அதற்கு சுந்தர ராமசாமி அளிக்கும் பதிலில் கோவிந்தனைப் பற்றிய அவருடைய கருத்து நிலை தெளிவாகிறது.
'பின் காமி இல்லை. எங்கள் இருவருக்குமே அந்த வார்த்தை பிடிக்காது. நாங்கள் நண்பர்கள். 1950 களில் எம்.கோவிந்தனையும் சி.ஜே தாமசையும் வெகு தீவிரமாகப் படித்தேன். சி.ஜே.யிடம் எனக்கு மயக்கமிருந்தது அவருடைய மொழியைச் சார்ந்து. கோவிந்தனிடம் மயக்கமற்ற மதிப்புக் கொண்டிருந்தேன். அவரை நான் ஒருபோதும் மறக்க முடியாது. சுயமாகச் சிந்திப்பதில் இருக்கும் பேரழகை நான் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அவரைப் படிக்கும்போது என் குழந்தைகளுக்கு மலையாளம் தெரியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும். சிந்தனையின் இந்த நாட்டுவகை அவர்களுக்குத் தெரியாது. தமிழில் இந்த நாட்டு வகைக்கு உதாரணங்கள் இல்லை. புதுமைப்பித்தன் இந்த வகையாகச்சிந்திக்கக் கூடியவர் என்று தோன்றினாலும் மொழியின் அழகுகளிலும் நளினங்களிலும் சிக்கிக் கொள்ளக் கூடியவர்.திருவள்ளுவர் இந்தக் காலத்தில் இருந்தால் ஒருவேளை கோவிந்தனைப் போல எழுதியிருக்கலாம்.'



கோவிந்தனைப் பற்றிய இத்தகைய இனங்காணலை எந்த மலையாள எழுத்தாளரும் செய்ததில்லை. அவரை ஒரு மார்க்சீய எதிர்ப்பாளராகவும் எதிர் கலாச்சாரவாதியாகவுமே முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். அவரை அடிப்படையில் புரிந்து கொண்டு வகைப்படுத்தியவர் ஒரு தமிழ்ப் படைப்பாளர் என்பது தமிழ் வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.



நீண்ட காலமாக அச்சியற்றப்படாமலிருந்த எம்.கோவிந்தனின் கட்டுரைகள் அண்மையில் ஒரு குட்டித் தலையணைப்பருமனுடன் நூலாக வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 1200 பக்கங்கள். இதுபோன்ற கனமான புத்தகங்களை வாசிக்க நான் கடைபிடிக்கும் உபாயம் ஒன்றிருக்கிறது. நூலின் பின் பகுதியில் இருக்கும் பெயர்க் குறிப்புப் பட்டியலில் எனக்கு விருப்பமான பெயர்களை, தெரிந்த பெயர்களைத் தேடுவது. 'புதிய மனிதன் புதிய உலகம்' என்ற கோவிந்தனின் நூலில் தமிழ்ச் சூழல் சார்ந்த பெயர்களைத் துளாவிக் கொண்டிருந்தேன். அண்ணாதுரை, பெரியார், சுப்ரமண்ய பாரதி, க.நா.சு.ராஜாஜி ஆகிய பெயர்கள் தென்பட்டன. அதில் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்த்த சுந்தர ராமசாமியின் பெயர் இல்லாமல் இருந்தது முதலில் அதிர்ச்சியளித்தது.



ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான நடந்த ஓரிரு சந்திப்புகளில் கோவிந்தன் சுந்தர ராமசாமி மீது கொண்டிருந்த மதிப்புப் புலப்பட்டது. முதல் முறையாக கோவிந்தனை நண்பர்கள் கி.ஆ.சச்சிதானந்தன், சி.மோகன், வசந்தகுமார் ஆகியோருடன் சந்தித்தேன். சுந்தர ராமசாமி சொல்லிச் சொல்லி மனதில் பதிந்திருந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தது போலிருந்த கோவிந்தனால் ஈர்க்கப்பட்டேன். அவருடைய 'உயிர்ப்பு' என்ற கதையை சுருக்கமாகத் தமிழாக்கம் செய்துதர வேண்டும் என்று கேட்டிருந்தார். மறுநாள் அந்த தமிழ்ச் சுருக்கத்துடன் போய்ச் சந்தித்தேன். அந்தக் கதையை குமார் சஹானி தமிழில் சினிமாவாக எடுக்கவிருப்பதாகச் சொன்னார். மயானக் காவல்காரன் ஒருவன் மரணத்தின் முன் தடுமாறுவதுதான் அந்தக் கதையின் மையம். அன்றைக்கு இருந்த இளமைக் குறும்பில் அதை விடவும் சிறப்பான கதையை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' என்ற தலைப்பில் ஜெயகாந்தன் எழுதியிருப்பதாகத் தெரிவித்தேன்.அந்த வகையில் குமார் சஹானி மூலம் தமிழுக்குக் கிடைத்திருக்க வேண்டிய சிறந்த திரைப்படத்துகான தங்கப்பதக்கத்தை கிடைக்காமல் செய்திருக்கிறேன்.



அன்றைய பேச்சில் அதிகம் குறிப்பிடப் பட்டவர் சுந்தர ராமசாமி. 'சுந்தர ராமசாமியெ அறியோ? ' என்று பொன்னானி மலையாளத்தில் கேட்ட போது 'இதென்ன கேள்வி, சுந்தர ராமசாமி என் சட்டைப் பைக்குள்தானே இருக்கிறார்' என்ற பீற்றலுடன் பதில் சொன்னேன். பிற்காலத்தில்தான் தெரிந்தது என் சட்டைப் பைக்குள்ளே இருந்ததுபோலவே சுந்தர ராமசாமி பலருடைய சட்டைப் பைகளுக்குள்ளும் இருந்திருக்கிறார். 'நீ மலையாளத்திலும் வாசிக்கிறாய் இல்லையா? சுந்தர ராமசாமி ஸ்டேட்டஸில் மலையாளத்தில் யாரையாவது சொல்ல முடியுமா?' என்று கேட்டார் கோவிந்தன். நான் பதிலை யோசித்து முடிப்பதற்குள் அவரே சொன்னார். 'இல்லை.யூ குட் நாட் ஹேவ் எ ராமசாமி இன் மலையாளம் அஸ் யூ குட் நாட் ஹேவ் எ கோவிந்தன் இன் தமிழ்'.



கோவிந்தன் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை சுந்தர ராமசாமியும் அளித்திருந்தார். அவருடைய கட்டுரைகளில்கோவிந்தனைப் பற்றி மட்டுமாக எழுதப்பட்ட கட்டுரை எதுவும் இல்லை. இரங்கற் குறிப்புகளாக அவர் எழுதியிருப்பவற்றிலும் கூட மலையாளிகளான ஈ.எம்.எஸ் சும் பஷீரும் மட்டுமே இருக்கிறார்கள். கோவிந்தனின் மறைவுக்குப் பின்பு வெளிவந்த 'காலச் சுவடு' இதழில் கோவிந்தனின் ஒரு கட்டுரை - 'மனித மதிப்பீடுகள்' (சுந்தர ராமசாமின் காலச் சுவடு - பக்: 565) யின் மொழியாக்கம் இடம் பெற்றது. அதற்கு முன்னுரையாகக் கொடுக்கப்பட்டிருந்த வரிகள் சுந்தர ராமசாமி எழுதியவையாக இருக்கலாம் என்ற யூகத்தைத் தந்தது. அவதானியின் நாட்குறிப்பிலிருந்து... என்று அச்சிடப் பட்ட அந்த வரிகள் கோவிந்தனைச் சரியாக மதிப்பிட்டவை. 'என்னிடம் இயற்கையாக இருந்த சுதந்திர உணர்வும் உண்மையை கண்டையும் ஆசையும் கோவிந்தன் எழுத்துக்களால் வளர்ந்தன.' என்று ஜெயமோகனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். 'பலா பலன்களைப் பற்றிக் கவலைப் படாமல் எழுது', ‘சகல மேன்மைகளும் கூடுவது சுதந்திரத்திலிருந்துதான்', ‘ஒரு கலைஞன் தன் காலத்திலேயே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை'இவ்வகையான செய்திகளை அவர்களிடமிருந்து நான் தொடர்ந்து உறிஞ்சிக்கொண்டிருந்தேன்' என்று அதே பேட்டியில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டார்.



பரஸ்பரம் பாதித்துக் கொண்ட நபர்கள் தங்களது எழுத்தில் மற்றவரை முன்னிலைப் படுத்தாமல் விட்டதை இயல்பு என்று இப்போது நினைக்கிறேன். 'இலக்கியத்தில் நேரடியான உறவு இல்லாமலே பாதிப்புக்கு ஆளாகி விடுவதுண்டு. நேரடியான உறவு கொண்டிருந்தும் துர்ப்பலமான செல்வாக்கோடு நின்று விடுவதும் உண்டு. இலக்கியத்தில் செல்வாக்கு என்பது அருவமானது. வாடைக்காற்று அடிப்பதால் மழையிருக்கலாம் என்பது போன்ற அனுமானம்.செல்வாக்கின் வியாபகத்தை உள்ளங்கையில் ஏந்திக் காட்டவோ பார்க்கவோ முடியாது' (ஆளுமைகள் மதிப்பீடுகள் பக் 35) என்று சுந்தர ராமசாமி சொல்லியிருப்பதன் பொருள் கோவிந்தனை வாசிக்கும்போது எனக்குப் புலப்பட்டது.



கோவிந்தன் சிந்தனை அடிப்படையில் ஒரு ராடிகல் ஹூமனிஸ்ட். எம்.என்.ராயிடமிருந்து பெற்ற இந்தக் கருத்தாக்கத்தைதனது சுய சிந்தனை மூலம் விரிவாக்கம் செய்து கொண்டார். அதை இப்படிச் சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன்.' மனிதனின் படைப்பாற்றலுடன் இணைத்துத்தான் சுதந்திரத்தைப் புரிந்து கொண்டார் கோவிந்தன். படைப்பு உருவாக்கத்தின் விதையும் அது முளை விட்டு வளர்வதற்கான சூழலும் அந்தக் கற்பனையில்தான் துலங்குகின்றன. இதில் தனிமனிதன் என்ற கருத்துக்கு அழுத்தம் அதிகம். ஆனால் அவனுடைய சமூக இயல்பை அந்த அழுத்தம் மறுப்பதில்லை. சமூகத்தை தனிநபருக்கு அப்பாற்பட்ட எதிர்த் துருவமாக நிறுத்துவது இல்லை. தனி மனிதனிடம் ஒளிர வேண்டியதும் அவனுடைய அனுபவமாக மாறவேண்டிய இயல்புதான் சுதந்திரம். கலையும் பண்பாடும் அரசியலும் பேரழகுகொள்வது இந்த மதிப்பீட்டை வெளிப்படுத்தும்போதுதான். அதையே படைப்பாற்றல் எனலாம். புதுமை எனலாம்.ஆதன் எதிரி அதிகாரம். மனிதன் மனிதனாக இருக்க இந்த அதிகாரங்களிடமிருந்து விலகி ஓட வேண்டியிருக்கிறது. மனிதன்என்ற மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள இந்த அதிகாரமற்ற சுதந்திரச் சூழலை உருவாக்க வேண்டும். படைப்பாற்றல் வெளிப்படும் பின்புலத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு படைப்பின் நோக்கமும் படைப்பாளியின் நடவடிக்கையும் இந்த மானுடச் சூழலை உருவாக்குவதுதான்.



கோவிந்தனின் இந்தக் கருத்துக்களைக் கருவிகளாக வைத்து சுந்தர ராமசாமியை கூடுதல் ஆழத்தில் புரிந்து கொள்ளமுடியும். சுந்தர ராமசாமியின் படைப்புகளை முன்வைத்து கோவிந்தனையும் புரிந்து கொள்வது சாத்தியம். இரு வேறு மொழிகளில் இயங்கியபோதும் இருவரையும் இப்படிப் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எம்.கோவிந்தனின்ஜீவன் தமிழ் உயிரல்ல என்றாலும் திராவிட உயிர் என்பது ஒரு காரணம். சகல துறைகளிலும் மதிப்பீடுகள் முன்னைவிட வேகமாகச் சரிந்து கொண்டிருக்கும் காலம் இது. இதில் மானிடச் சூழலைப் பற்றிக் கனவு காணவும் யோசிக்கவும்கூட இந்த இருவரும் தேவைப்படுகிறார்கள். இந்தப் பெருங் கனவைப் பற்றி யோசித்தவர்கள் என்ற நிலையில்தான்இவரை வாசிக்கும்போது அவரும் அவரை வாசிக்கும்போது இவரும் நினைவுக்கு வந்தார்கள் என்று நினைக்கிறேன்.தவிர, கோவிந்தனை அண்மையில் வாசிக்கும்போதெல்லாம் சுந்தர ராமசாமி ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருந்தார். மலையாளத் திலிருந்து தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவருடன் அமர்ந்து போட்ட பட்டியலில்எம். கோவிந்தனின் பெயரை முதலாவதாகச் சேர்த்ததும் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது.



சரியாக அறுபது வருடங்களுக்கு முன்னால், 1951 இல் வெளியான எம்.கோவிந்தனின் 'தேடலின் ஆரம்பம்' என்ற நூலில் ஒரு முன்னுரைக் கதை இருக்கிறது. லெஸ்ஸிங் எழுதியது. கடவுள் தன்னுடைய வலது கையில் முழுமையான உண்மையையும் இடது கையில் உண்மைக்கான தேடல் வேட்கையையும் வைத்துக் கொண்டு 'உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்' என்று என்னிடம் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் கடவுளின் இடது கையைப் பிடித்துக் கொண்டு சொல்வேன்: 'எனக்கு இது போதும். முழுமையான உண்மை உங்களுக்குமட்டுமே உரிமையானது'.



சுந்தர ராமசாமியும் எம்.கோவிந்தனும் கடவுளின் இடது கையைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் என்பது அவர்களுக்குஇடையே உள்ள ஒற்றுமை.
@
ஜூன் 3,4, 5 நாட்களில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெற்ற சுரா - 80 பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசியது.

அஸீஸ் பே சம்பவம்

$
0
0


துருக்கிமொழியில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளரான அய்ஃப்ர் டுன்ஷ் எழுதிய நாவல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையத்தில் - பார்த்தேன் படித்தேன் - பகுதியில் பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய குறிப்பு இங்கே.








அஸீஸ் பே சம்பவம்

அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று,

துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத இசையின் துயரநிலையும் நாவல் விவரிக்கிறது

மிலன் குந்தேராவின் நாவல் போல கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள உறவையும் ஆழமான மனஉணர்ச்சிகளையும் நாவல் முதன்மைபடுத்துகிறது, அய்ஃபர் டுன்ஷ் நாவல் இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் தான் வெளியாகியிருக்கிறது,

சுகுமாரனின் மொழிபெயர்ப்பு மிகச்சிறப்பானது, இசையும் கவித்துவமும் நிரம்பிய நாவலை நுட்பமாக மொழியாக்கம் செய்திருக்கிறார், துருக்கிய இசை மற்றும் இலக்கியங்களின் ஆழ்ந்த அனுபவம் இன்றி இது போன்ற மொழியாக்கத்தைச் செய்வது சாத்தியமானதில்லை, சுகுமாரன் துருக்கிய இசை மற்றும் இலக்கியத்தை ஆழ்ந்து அறிந்தே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை மொழிபெயர்ப்பின் சரளம் மற்றும் சொற்பிரேயோகங்கள், கதையின் ஆதாரத்தொனியின் வழியே நன்றாக அறிய முடிகிறது,

அவசியம் வாசிக்க வேண்டிய நாவலிது.


http://www.sramakrishnan.com/?p=2588

••

நதிக் காட்சி

$
0
0



கரையொதுக்கிக் கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழைநீர்
அதில்
சிலிர்த்துக் கொண்டிருக்கிறது நிலவு
பூமிக்கு ஒளிபொழிந்த கருணையில்.

பக்கம் 175 ;பூமியை வாசிக்கும் சிறுமி (2007)

வம்ச புராணம்

$
0
0


பூர்வ ஜென்மத்தில் நாங்களெல்லாம்
கழுதைகளாக இருந்தோமாம்

பரண்பொருட்களுக்கிடையில்
பூசணம் பூத்துப் பதுங்கிக் கிடக்கும்
பழஞ்சுவடி ஆதாரம்
அவரவர்
இருப்பும் நடப்பும் அத்தாட்சி

எப்போதும் உண்மை
அதிர்ச்சியை அதிரச் செய்வது
எனினும் ஒருவேளை
சரியாகவும் இருக்கலாம்

குதிரையாக மாறும் முன்பு
விடுபட்ட பிறவி
கழுதையாகப் பரிணமித்ததுபோல
பிசாசாகவோ கடவுளாகவோ மாறுவதற்கிடையே
மனிதர்களாகத் திரிக்கப்பட்டவர்கள் நாங்கள்

சொல்லக் கேட்ட பாட்டனின்
பார்த்துப் பழகிய அப்பனின்
பார்த்துப் பார்த்து அலுத்த என்
முகங்களில் தெரிகிறது
கைவிடப்பட்ட விலங்கின் துயரம்
கண்களில் ததும்புகிறது
வழிந்து விடாத அப்பிராணிக் கண்ணீர்

எனவே
பழஞ்சுவடிச் சான்று ஒருவேளை
உண்மையாகவும் இருக்கலாம்

ஏழாம் பிறைபோல எனக்கும்
ஐந்தாம் பிறைபோலத் தந்தைக்கும்
மூன்றாம் பிறைபோலத் தாத்தாவுக்கும்
கழுதைக் கூன் முதுகுகளாம்

முதிர்ந்தவர் வார்த்தை ஒருவேளை
மெய்யாகவும் இருக்கலாம்

பாட்டன் சுமந்தது உப்பு மூட்டை
அப்பன் சுமந்தது பஞ்சுப்பொதி
நான் சுமப்பது மண்பாரம்

எனினும்
எங்களை விட அதிகம் சுமந்தாலும்
கழுதையின் முதுகில் கூன் விழவில்லை,
ஏன்?

















சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்

$
0
0


’த சண்டே இந்தியன் ‘ பத்திரிகை தீபாவளிச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.ரசிகர்களாக ஆண் ஆளுமைகள் தங்களுக்குப் பிடித்த திரைநாயகிகளைப் பற்றி எழுதிய கட்டுரைகள் கொண்டது ஒரு புத்தகம். அதில் நான் எழுதிய கட்டுரை இது.




நண்பரும் மலையாளக் கவிஞருமானபாலசந்திரன் சுள்ளிக்காடு 'சௌந்தர்ய லஹரி' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். 'தேவ சபை நர்த்தகியான நீ சாபத்தினால் பூமிக்கு வந்தாய்' என்று தொடங்கும் அந்தக் கவிதை, நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சமர்ப்பணம் செய்யப் பட்டது. வாசகர் களுக்கிடையில் அந்தக் கவிதை வெகுவாகப் பாராட்டப் பட்டது. இலக்கிய வட்டாரங்களில் கடுமையானவிமர்சனத்துக்கு உள்ளானது.கவிதைக்கான முகாந்திரம் என்ன என்றுகேட்ட போது ' இன்றைக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயதை எட்டியிருக்கும் சிலருக்காவது அவர்களுடைய பதின்பருவத்தில் ஸ்ரீவித்யா கனவுப் பதுமையாக இருந்திருப்பார். எனக்கு இருந்தார். நீயும் என் வயதுதானே? ஏன் உனக்குஇல்லையா?' என்று எதிர்க்கேள்விகளை எழுப்பினார். உண்மையை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை.

பாலன் சொன்ன சிலரைப்போல என் விடலைப் பருவக் கனவுகளிலும் இருந்த பெண் பிம்பங்களில் ஒன்று ஸ்ரீ வித்யா. பள்ளிக் கூடத்துக்கு மட்டம் போட்டுப் பார்த்த திரைப்படங்களில் ஒன்றுஸ்ரீவித்யா நடித்த 'நூற்றுக்கு நூறு'. அதே வயதில் வீட்டு ஜன்னல் கதவின்உள் பக்கத்தில்சினிமாப் பத்திரிகை யிலிருந்து வெட்டியெடுத்த படம் ஒன்றை சோற்றுப்பருக்கையைத் தேய்த்து ஒட்டி வைத்திருந்தேன். கவுன் அணிந்த பெண்ணின் மார்பளவுப் புகைப்படம். வலப்பக்கமாகத் தலையைச் சாய்த்துக் கைகளை இறுகக் கட்டி மோனலிசாப் புன்னகையுடன் நிற்கும் ஸ்ரீவித்யாவின் படம். அதுபோன்ற இளமைத் தோற்றத்தில் ஸ்ரீவித்யாவின் படத்தைப் பின்னர் பார்க்கவில்லை. சில படங்களுக்குள்ளேயே அவருடைய உருவத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி தென்பட்டது. என்னுடைய ஜன்னல் படம் எழுபத்தி ஒன்றிலோ எழுபத்தி இரண்டிலோ பத்திரிகையில் வெளியானது. அப்போது ஸ்ரீவித்யாவின் வயது பதினெட்டு அல்லதுபத்தொன்பது. நான்கு வருடங்கள் பிந்தி வந்த 'அபூர்வ ராகங்கள்'(1975) படத்தில் அவரை விடச் சில வருடங்களே இளையவரான ஜெயசுதாவுக்கு அம்மாவாகப் பாத்திரம் ஏற்றிருந்தார். மத்திய வயதுப் பாடகியான எம்.ஆர்.பைரவி பாத்திரத்தில்பொருந்தி நடிப்பதற்கு அன்று அவரளவு திறமைசாலிகள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அவரது தோற்றம் அதைவிட முக்கியமான காரணம் என்று தோன்றியது. திரை உலகில் பெண்களுக்குத்தானே சீக்கிரம் வயதாகிறது. அதன் வெளிப்படையான உதாரணங்களில் ஒருவர் ஸ்ரீவித்யா.

கல்லூரி மாணவியாக 'நூற்றுக்கு நூறு' (1971)படத்தில் அறிமுகமானஸ்ரீவித்யாவுக்குக் கிடைத்த இளமையான நாயகிபாத்திரங்கள்குறைவு. 'சொல்லத்தான் நினைக்கிறேன்' (1973),'ஆறு புஷ்பங்கள் (1977)'போன்ற ஒரு சில படங்களில்தான் அவருடைய வயதும் பாத்திரத்தின் வயதும் ஒத்துப் போயின. பின்னர் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் பெரும்பான்மையும் அவரது வயதுக்கு மீறியவை.அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி, மாமியார், பாத்திரங்கள்தாம் அவருக்காகத்தமிழில் காத்திருந்தன. கொஞ்சம் முயன்றிருந்தால்சினிமா வணிகத்துக்குத் தேவையான தகுதிகளுடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்க முடியும். பொலிவான தோற்றத்தை பராமரித்திருந் திருக்க முடியும். மேலும் சில ஆண்டுகள்இளம் நாயகியாகத் தொடர்ந்திருக்க முடியும். அதை அவர் விரும்பவில்லைபோல. எப்படி இருக்கிறாரோ அப்படியானதோற்றத்தில் நடிப்பதையே தேர்ந்தெடுத்தார். இளம் நாயகியாக இருப்பதால் திரையுலகில் சந்திக்க நேரும் தொல்லை களையும் எப்போது நட்சத்திர ஜொலிப்பு மங்கி விடுமோ என்ற பயத்தையும் சமாளிக்கவே மேற்சொன்ன பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தார் என்றும் தோன்றுகிறது. சோகத்தின் அத்தர் லேசாகப் பூசிய வட்ட முகம், சமுத்திர ரகசியங்கள்ததும்பும் அகன்ற விழிகள், நடனத்தில் பயின்ற உடலசைவுகள். இவை அவருடைய நடிப்புக் கருவிகளாயின.ஸ்ரீவித்யாநடிப்பின் நுட்பங் களைக் கற்றுக் கொண்டது நாட்டியத்திலிருந்து என்று யூகிக்கலாம்..

கவிஞன் இல்லாமல் கவிதையை வாசித்து விடமுடியும். ஓவியன் இல்லாமல் ஓவியத்தைப் பார்த்து விட முடியும். பாடகன் இல்லாமல் இசையைக் கேட்டு விட முடியும். ஆனால் ஆடுபவர் இல்லாமல் நடனத்தையோ நடிப்பவர் இல்லாமல் நடிப்பையோ பார்க்க முடியாது. இந்த நுட்பத்திலிருந்துதான் ஸ்ரீவித்யாவின் நடிப்பை அணுக முடியும்.நாட்டியத்தில் ஆடுபவரின் தோற்றம் மறைந்து ஆட்டம் மட்டுமே புலனாகிறது. இந்த ரகசியம் வெளிப்படுவதை ஸ்ரீவித்யாவின் நடிப்பில் காண முடியும். அப்படிக் காண உதவும் பாத்திரங்கள் தமிழில்அவருக்கு அரிதாகவே வாய்த்தன. அவற்றையும்நாட்டியப் பயிற்சியில் பெற்ற பாடங்கள் மூலம் செழுமைப்படுத்தினார். சின்ன அசைவுகள்மூலம் குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட பாத்திரம் என்ன செய்ய வேண்டுமோ அதை வெளிப்படுத்தினார்.

பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஸ்ரீவித்யாவுக்கு அம்மா வேடம். படம் முழுவதும் பாசமுள்ள தாயாக வந்து உருகுவதைத் தவிர எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் உச்ச கட்டக் காட்சியில் மகன்காதலித்த பெண்ணை அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பும்போது பெண்ணின் தாய் மகளிடம்சொல்லிக் கொண்டு போகச் சொல்லுவார். 'அவளை என் கிட்ட கொடுத்துடுங்க. கண்ணுக்கு கண்ணா வெச்சுப் பார்த்துக்கிறேன்' என்று பதில் சொல்வார் அம்மாவான ஸ்ரீவித்யா.வசனத்தை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும்அவருடைய உடல்மொழியும் விழியசைவுகளும். கவனமாகப் பார்த்தால் அந்தக் காட்சியில் அதிகமான குளோஸ் அப்ஷாட்டுகள் வைக்கப் பட்டிருப்பதும் அவருக்குத்தான் என்பது புரியும். நாட்டியத்தில் சிறு அபிநயத்தின் மூலம் பாத்திரத் தின் இயல்பை வெளிப்படுத்துகிற இந்த நுட்பத்தை ஸ்ரீவித்யா திரைநடிப்பில் தனதாக்கிக் கொண்டார்.

அபூர்வராகங்களின் இந்தி வடிவம் 'ஏக் நை பஹேலி' (1984) என்று வெளியானது. தமிழில் ஸ்ரீவித்யா ஏற்றிருந்த பைரவிபாத்திரத்தில்ஹேமமாலினி நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சி. தீவிரவாதி இளைஞன் பிரசன்னாவை (கமலஹாசன்) மனம் மாறச் செய்வதற்காகத் தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கிறாள் பைரவி. இசை உலவும் அந்த வீட்டில் பிரசன்னாமெல்லமெல்ல மனம் மாறுகிறான். ஒரு மிருதங்கத்தை எடுத்து லய சுத்தமாக வாசிக்கிறான். குளியல் அறையில் நீராடிக்கொண்டிருக்கும் பைரவி அவன் வாசிக்கும் தாளத் கட்டுக்குப் பொருத்தமாக ஸ்வரங்களை ஆலாபனை செய்கிறாள். இலக்கணம் பிசகாத வாசிப்பால் ஈர்க்கப்பட்டு ஈர உடையுடன் வந்து ஆச்சரியப்படுகிறாள். பின்னர் உடை மாற்றி வந்து அவனைப் பாராட்டுவாள். இரண்டு படங்கள். இரண்டிலும் அதே காட்சி. அதே இயக்குநர். கே.பாலசந்தர்.அதே கதாநாயகன் .கமலஹாசன். இரண்டிலும் பைரவியாக நடித்தவர்கள் நாட்டியம் தெரிந்தவர்கள். ஸ்ரீவித்யாவும் ஹேமமாலினியும். எனினும் தமிழ்ப் படக் காட்சியிலிருந்த தீவிரம் இந்தியில் குறைவாகவே தென்பட்டது. காரணம்,ஸ்ரீவித்யா என்று தோன்றுகிறது. இந்த நுட்பம்தான் ஸ்ரீவித்யாவைத் தமிழ்ச் சினிமாவில் புறக்கணிக்க முடியாத நடிகையாக்கியது. நீண்ட காலம் நிலைத்திருக்கவும் உதவியது. அதை இப்படிச் சொல்லலாம்: ஸ்ரீ வித்யா ஒரு ஸ்டார் அல்ல;பெர்ஃபார்மர். குறைந்தபட்ச சலனம் மூலம் பாத்திரத்தை முழுக்கவும் வெளிப்படுத்தும் திறமையைக் காட்டக் கூடியதமிழ் வாய்ப்புகள் சொற்ப மாகவே இருந்திருக்கின்றன. தமிழில்நூற்றுச் சொச்சம் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால்அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை இரு கை விரலளவு கூடத் தேறாது.பதிலாக தனது திறமையை வெளிக்காட்ட இசைவானதாக மலையாளத் திரையுலகை ஸ்ரீவித்யா தேர்ந்தெடுத்தார். மொத்தம் நடித்த கிட்டத்தட்ட முந்நூறுபடங்களில் சரிபாதிக்குமேல் மலையாளப் படங்கள் என்பது அவரது தேர்வை நியாயப்படுத்துகின்றன.

ஸ்ரீவித்யாவின் திரையுலக வாழ்க்கையைநான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த நான்கு கட்டங்களும் அவருடையதனி வாழ்க்கையு டனும் தொடர்பு கொண்டவை.சரியாகச் சொன்னால் அவரது தனி வாழ்க்கைப் பிரச்சனைகள் தாம் இந்தக் கட்டங்களையே உருவாக்கின. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் கட்டம். கதாநாயகியாக இரண்டாம் கட்டம். குணச் சித்திர நடிகையாக மூன்றாம் கட்டம். தொலைக் காட்சி நடிப்பில் ஈடுபட்ட நான்காம் கட்டம்.

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல்.வசந்த குமாரியின் மகளாகப் பிறந்தவர் மீனாட்சி. குழந்தையைப் பார்த்தஸ்ரீவித்யா உபாசகர் ஒருவர் அழைத்த பெயர்தான் பின்னர் அவருடைய அடையாளமானது. தந்தை விகடம் கிருஷ்ண மூர்த்தி அந்தக் கால ஹாஸ்ய நடிகர். ஸ்ரீவித்யாவின் குழந்தைப் பருவத்திலேயே நோய் காரணமாக வீட்டுக்குள் ஒடுங்கி யவர். குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு எம்.எல்.விக்கு வந்து சேர்ந்தது. பகலில் ரிக்கார்டிங். மாலையில் கச்சேரி என்றுசக்கரச் சுழற்சியாக வாழ்ந்தார். ஸ்ரீவித்யாவும் சகோதரர் சங்கரராமனும் தாத்தாவின் பராமரிப்பில் விடப்பட்டனர். பத்தா வது வயதில் தாத்தா மறைந்தார். தனிமையில் விடப்பட்டார். அந்த தனிமை அவரை மரணம்வரை பின்தொடர்ந்தது.குடும்பத்தில் நிலவிய நிதிப் பிரச்சனைகள் பெற்றோரின் உறவில் விரிசலை ஏற்படுத்தின. ஸ்ரீவித்யாவின் இளம்பருவம் பயத்தில் கழிந்தது. இசையும் நாட்டியமும் கற்றுக் கொண்டது தான் பயத்தை விரட்ட உதவின.

பதின் மூன்றாம் வயதில் குழந்தை நட்சத்திரமாக 'திருவருட் செல்வர்' (1966) படத்தில் அறிமுகமானார். ஏறத்தாழ அதையொட்டியே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.படம் - 'குமார சம்பவம்' (1969). இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுகே.பாலசந்தரின் அறிமுக நாயகியாக 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் நடித்தார். ஆனால்அவரது ஆர்வம் நடிப்பில் அல்ல; நடனத்தில்தான்.அந்தக் கட்டத்தில் திருமண வாய்ப்பும் தகைந்தது. அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஒருவர் அவரை மணந்து கொள்ள விரும்பினார். குடும்பச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டிருந்த எம்.எல்.வி. மூன்று ஆண்டுக ளுக்குப் பிறகே திருமணம் என்று சொன்னதில் அந்த வாய்ப்பு தட்டிப் போனது. 'நடிக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்த மகள் முன்னால் வீட்டுக் கடன் பத்திரங்களைப் போட்டார் எம்.எல்.வி. காமிரா முன் நிற்கத் தயாரானார் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் வந்தன. 1973இல் ஏ.வின்சென்ட் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'செண்ட' மூலம் மலையாளத் திலும் 'அபூர்வ ராகங்கள்' மூலம் தமிழிலும் முன்னணிக் கதாநாயகியானார். தனி வாழ்க்கையிலும் 'அபூர்வ ராகங்கள்'அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதன் கதா நாயகனும் நாயகியும் பரஸ்பரம் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. நாயகன் நாயகி இருவரது குடும்பமும் சம்மதமும் தெரிவித்தன. நாயகனுக்குத் தன்னிடம் இருந்தது போலவே வேறொருபெண் மீதும் காதல் இருப்பது தெரிந்ததும்சோர்ந்து போனார். அவரே இடக்கரடக்கல் நிமித்தம் ஆங்கிலத்தில் சொன்னவாக்கியத்தை இப்படி மொழிபெயர்க்கலாம்: ' இன்னொரு பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை'

காதல் நிறைவேறாத ஆற்றாமையில் வாழ்க்கையில் பெருந் தவறைச் செய்ததாகப் பின்னர் குறிப்பிட்டார்ஸ்ரீவித்யா. 'தீக்கனல்' (1976) மலையாளப் படத்தில் நடிக்கும்போது அதன் துணைத் தயாரிப்பாளரும் துணை இயக்குநருமான ஜார்ஜ்தாமசைக் காதலிக்கத் தொடங்கினார். கிறித்துவ மதத்துக்கு மாறும் அளவுக்குத் தீவிரமாக இருந்த காதல் இரண்டுஆண்டுகளுக்குப் பிறகு திருமணத்தில் முடிந்தது. அவர் விரும்பியது அமைதியான குடும்ப வாழ்க்கையை. ஆனால் கணவரின் பணத்தாசை அதைத் தடை செய்தது. உறவில் பூசல்கள்தொடங்கி ஒன்பதாவது ஆண்டு விவாகரத்தில் முற்றுப் பெற்றது. அதுவரை சம்பாதித்தஎல்லாவற்றையும் ஸ்ரீவித்யா இழந்தார். வீடு, வங்கிக் கையிருப்பு, சொத்துகள்எல்லாம் பறிபோயின. அவற்றை மீட்கப் போராடியதில் அவருடைய தனி வாழ்க்கை நரகமானது. இயக்குநர் ஆர்.சி.சக்தியும் மறைந்த நடிகர் செந்தாமரையும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீள அவருக்குத் துணையாக இருந்ததாகச்சொல்லப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் புதிய தலைமுறைக் கதாநாயகிகள்அறிமுக மானார்கள். ஸ்ரீவித்யா குணச் சித்திரப் பாத்திரங்க ளுக்கு மாறினார். தமிழில் அவருக்குக் கிடைத்த குணச்சித்திரப் பாத்திரங்கள் ஒரே வார்ப்பில் அமைந்தவை. இந்தப் பாத்திரங்களை அவரைத் தவிர வேறு யாரும் செய்திருக்கக் கூடும். அவற்றுக்குத் தொழில்முறை நியாயத்தைச் செய்தார். நடிகையாகவாழ்ந்த காலம் முழுவதும் அவர் மட்டுமே செய்திருக்க முடியும் என்று தமிழ்த் திரையுலகில் அமைந்த பாத்திரங்களாக சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வராகங்கள், மதுரகீதம் (1977), புன்னகை மன்னன்(1986), தளபதி (1991), கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் (2000) படங்களைத்தான் சொல்ல முடியும்.

தனது திறமைக்கான இடம் மலையாள சினிமாவில் இருப்பதை ஸ்ரீவித்யா இந்த மூன்றாம் கட்டத்தில் உணர்ந்தார். எண்பதுகளில் மலையாளத்தில் உருவான இடைநிலைப் படங்கள்அவருக்கான வாய்ப்பை விசாலமாக்கின. எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரது திரைக்கதையிலும் (இடவழியிலே பூச்ச மிண்டா பூச்ச 1979, வில்கானுண்டு ஸ்வப்னங்ங்கள் (1980)அன்றைய முக்கிய இயக்குநர்களின்படங்களிலும் ஸ்ரீவித்யா தவிர்க்க இயலாத வரானார். ஸ்ரீவித்யா என்ற பெர்ஃபார்மர் முழுப் பிரகாசத்துடன் தெரியவந்தது மலையாளப் படங்களில்தான்.'காற்றத்தே கிளிக் கூடு' ( 1983 - பரதன்), ஆதாமின்டெ வாரியெல்லு (1983), இரைகள் (1985 - கே.ஜி.ஜார்ஜ்),திங்களாழ்ச்ச நல்ல திவசம் ( 1985 - பத்மராஜன்), ஸ்வாதி திருநாள் (1987), தெய்வத்தின்டெ விக்ருதிகள் (1992- லெனின்ராஜேந்திரன்), ரசனா ( 1983 - மோகன்), கஸல், என்டெ சூர்ய புத்ரிக்கு ( கமல்)பவித்ரம் (1994 - டி.கே.ராஜீவ் குமார்)ஆகிய படங்களில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு பரவசப் படுத்துவது. தமிழ்ப் படங்களில் கொஞ்சம் உரத்த நடிப்பை வெளிப்படுத்திய அவரே இந்த மலையாளப் படங்களில் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் அமைந்த பாத்திரங்களை தன் நடிப்பால் ஜீவனுள்ளதாக மாற்றினார். 'இரைகளில் கிறித்தவப் பெண், கஸலில் முஸ்லிம், பவித்ரத்தில் திருமண வயதில் மகனிருக்க கர்ப்பிணியாகும் தாய், ஆதாமின் வாரியெல்லில்பணக்காரக் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெறப் போராடித் தற்கொலை செய்து கொள்ளும் மனைவி ஆகிய பாத்திரங்களில் அவரைத் தவிர வேறு யாரும் சோபித்திருக்க முடியாது என்பது என் ரசிக விசுவாசம்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எம்.எல்.வி. காலமானார். ஸ்ரீவித்யாவுக்கு இருந்த ஒரே அடைக்கலமும் போனது.அந்தக் கட்டத்தில் அவருக்கு ஆறுதலாக அமைந்தது நீண்ட காலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கு முடிவுக்குவந்ததுதான். உச்சநீதி மன்றம் அவருடைய சொத்துக் களை மீட்டுக் கொடுத்தது. தொண்ணூறுகளின் இறுதியில்வாய்ப்புகள் குறையத் தொடங்கின. முன்னாள் கனவுக் கன்னிகளாக இருந்த நடிகைகள் பலரும் அம்மாக்க ளாகவும் அண்ணிகளாகவும் மறு பிறவியெடுத்தபோது ஸ்ரீவித்யா தொலைக் காட்சிக்குத் திரும்பினார். அழைக்கப்பட்ட சினிமா வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக் கொண்டார். அவற்றில் பெயர் சொல்லும் படியானவை குறைவு.

புதிய நூற்றாண்டில்ஸ்ரீவித்யாசென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். மலையாளப் படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.தெலுங்கு நடிகை சாரதாவுக்குப் பிறகு மலையாளக் கலாச்சார உலகம் சொந்தம் பாராட்டியது தமிழ் நடிகை ஸ்ரீவித்யாவிடம்தான் என்று படுகிறது. ஒரு நடிகையாக அவரை மதிப்பிட அவர் நடித்த மலையாளப் படங்கள்தான் துணைவரக் கூடும். தமிழில் செய்ததை விட வித்தியாசமான பாத்திரங்கள் அவற்றில்தான் கிடைத்தன. இரண்டு முறை மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் மூன்று முறை சிறந்த குணச்சித்திர நடிகைகான விருதையும் பெற்றார். எல்லா வற்றுக்கும் மேலாகஅவருடைய இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.

ஸ்ரீவித்யாவை ஓரிரு முறைசந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழின் ஆசிரியர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டபோது நான் பேட்டி காண விரும்பிய பிரபலங்களில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேலிருந்த 'நல்லெண்ணம்' காரணமாக அவர் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு நெருங்கிய திரைப் பிரமுகர் ஒருவரின் சிபாரிசுக்கு இசைந்து அரை மனதுடன் சம்மதித்தார். ஆழ்வார் பேட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்த முதல் பத்து நிமிடங்கள் ஒரு காலத்திய கனவு தேவதையை நேரில் பார்ப்பதில் விடலைத்தனமான அசட்டுணர்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையில் இருந்தேன். எப்படியாவது என்னை சீக்கிரம் வழியனுப்பி வைத்துவிடும் எண்ணத்தில் அவர் இருந்தார். சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு அவர் நடித்த படங்களைப் பற்றி. குறிப்பாக மலையாளப் படங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் அந்தப் பெரிய கண்களில் தோழமை சிரித்தது. முக்கால் மணி நேர உரையாடலில் அவருடைய மனம் கிட்டத்தட்டக் கொட்டப்பட்டிருந்தது. தண்டாயுத பாணிப் பிள்ளையிடம் நாட்டியம் கற்றுக் கொண்ட நாட்கள், முறையாகப் பயிலா விட்டாலும் ரத்தத்தில் இசை ஓடுவதை உணர்ந்த கணம், முதல் காதல், இரண்டாவது அவசரக் காதல், அதன் விபரீதங்கள். அம்மா எம்.எல்வியின் பாட்டு, மலையாள சினிமா, தமிழ் சினிமா, சொந்த வாழ்வு என்று எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். விடை பெற்ற போது பெருமிதமாக இருந்தது. பத்திரிகையாளனின் வெற்றிப் பூரிப்பு இருந்தது. இவ்வளவு பட்டவர்த்தனமான நேர்காணலை வெளியிட முடியுமாஎன்ற தயக்கமும் இருந்தது. மறுநாள் நேர்காணலைத் தாளில் எழுதத் தொடங்கிய சற்று நேரத்தில் தொலைபேசி அழைப்பு. எதிர்பார்த்தது போலவே ஸ்ரீவித்யா. நேர்காணலைவெளியிட வேண்டா மென்று கேட்டுக் கொண்டார். அது வெளியானால் பலரும் தர்மசங்கடப்படுவார்கள் என்றார். தேவதையின் வேண்டுகோளை எப்படி மீற? பேட்டி வெளியாகவில்லை. சில வருடங் களுக்குப் பிறகு அதே தகவல்களை வேறொரு தொலைக்காட்சிப் பேட்டியில்சொல்லியிருந்தார். சொந்த வாழ்க்கையின் கசப்புகளைபுன்னகையுடனும் சிரிப்புடனும் யாரையும் குற்றம் சாட்டாமல் சொன்ன விதம் அவரை மேலும் மதிப்புக்குரியவராக்கியது.

மலையாளத் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் ஸ்ரீவித்யாவை மீண்டும் சந்திக்க வாய்த்தது. பத்திரிகையாளர் யூனியன் நடத்தும் கருத்தரங்கத்துக்கு அழைப்பதற்காகச் சென்றிருந்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டபோது பழைய பேட்டியை நினைவுபடுத்தினேன். என்னை வெளியிட வேண்டாம் என்று தடுத்த அதேதகவல்களை தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லியிருப்பதை ஆதங்கத்துடன் சொன்னேன். 'அன்றைக்கு வேண்டாமென்று தோன்றியது. இப்போது பேசலாம் என்று பட்டது. அன்றைக்கு இருந்ததை விடஇன்றைக்குப் பக்குவம் கூடியிருக்கிறதில்லையா? ஒவ்வொரு அனுபவத் திலிருந்தும் பக்குவமடையவில்லை என்றால் அப்புறம் நாமென்ன மனிதர்கள்?' என்றார்.அந்த பதில் என்னை வெட்கமடையச் செய்தது. வருவதாக ஒப்புக் கொண்டிருந்தும் அவர் கருத்தரங்கத்துக்கு வரவில்லை. காரணம் உடல் நலமின்மைஎன்று தெரிவிக்கப் பட்டது. உண்மையில் அந்தச் சமயத்தில்தான் அவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் கடைசிவரைஅதை ரகசியமாகவே வைத்திருந்தார். உருவக் குலைவு ஏற்படாமலிருக்கச் சிகிச்சைகள் மேற்கொண்டார். கடைசி வரை அந்த அகன்ற விழிகளின் உயிர்ப்பையும் முகத்தின் பிரகாசத்தையும் மருந்துவம் காப்பாற்றியது. மரணம் நெருங்குவது தெரிந்ததனாலோ என்னவோ தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். படங்கள், தொடர்கள் என்று தன்னை மறந்து நடிப்பில் ஈடுபட்டார். மேடையேறிக் கச்சேரிகள் செய்தார். சாயிபாபாவின் பக்தராகியிருந்தார்.

கடைசியாக அவரைச் சந்தித்தது 'வேனல் மழ' என்றதொலைக்காட்சித் தொடரின்பூஜை வேளையில். நான் பணியாற்றிய தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த தொடர். அதில் மையப் பாத்திரம் ஸ்ரீவித்யா. அந்தத் தொலைக்காட்சியில் அதுவரை ஒளிபரப்பான தொடர்களில் அசட்டுத் தனமில்லாத தொடர் அதுதான். நலம் விசாரிப்புடன் முடிந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரைப் பார்த்தது திருவனந்தபுரம் வி.ஜே. டி.ஹாலின் மையத்தில் திரளான மக்கள் கூட்டத்தின் நடுவில் உயரமான மேடைமேல் வைத்திருந்த கண்ணாடிப் பேழைக்குள். யாரோ ஒருவர் கூடையிலிருந்து ரோஜா இதழ்களை அள்ளிக் கையில் திணித்தார். அதைப் பேழைமேல் தூவியபோதுஎந்த நொடியும் 'ஷாட் ஓகே' என்ற குரல் வரும். விளக்குகள் மங்கும். பேழைக்குள்ளிருந்து எழுந்து வருவார் என்று தோன்றியது.

***


இணைப்பு: www.thesundayindian.com

திருவுடை மன்னரைக் காணில்...

$
0
0


ஊடகங்கள் மூலம் பரபரப்புக்குள்ளாகியிருக்கும்திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தொடர்பான செய்திகளைப் படிக்கும்,பார்க்கும்,கேட்கும் போதெல்லாம் பின்வரும் காட்சி நினைவில் ஓடிக்கொண்டிருக்கும்.

கருவூல ரகசியம் வெளியாவதற்குச் சில மாதங்கள் முன்பு பத்மநாப சுவாமிகோவிலுக்குப் போயிருந்தேன். ஊரிலிருந்த வந்திருந்த தங்கையும் அவள்குழந்தையும் சுவாமி தரிசனம் செய்ய ஆசைப்பட்டிருந்தார்கள். தரிசனம் முடிந்ததும் ஆலய வளாகத்துக்குள்ளிருக்கும் குதிரை மாளிகை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். திருவிதாங்கூர் மன்னராட்சியின் பெருமைகளைச் சொல்லும் அருங் காட்சியகம். வரலாற்றுச் சின்னங்களும் பண்பாட்டு அடையாளங்களும் கலைப் பொருட்களும் நேர்த்தியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அறைகள். பழங்காலக் கட்டக் கலையும் சிற்பக் கலையும் இணைந்த குதிரைமாளிகை அரண்மனை இன்றைய பார்வையில் ஓர் அற்புதம். அதன் மேல் தளத்திலிருக்கும் மாடத்திலிருந்து பார்த்தால் ஆலயத்தின்கோபுரம் தென்படும். அந்த மாடத்தில் அமர்ந்துதான் இசை விற்பன்னரான மகாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகளை இயற்றிஇருக்கிறார். நுழைவுக் கட்டணம் செலுத்திக் காத்திருந்த பார்வையாளர்களான எங்களை வழிகாட்டியான ஒரு பெண்மணி ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். ஒவ்வொரு காட்சிப் பொருளின் முன்னாலும் நின்று அவற்றின் வரலாற்றையும் பண்பாட்டுமுக்கியத்துவத்தையும் விளக்கினார். ஞானத்தின் பெருமிதம் ததும்பும் குரலில் பல மொழிகளில் விளக்கங்களைச் சொன்னார். துல்லியமான ஆங்கிலம். தெளிவான இந்தி, தீர்க்கமான மலையாளம், கொச்சைத் தமிழ் ஆகிய இந்திய மொழிகளிலும் கூட்டத்திலிருந்த சில வெளிநாட்டுப் பயணிகளுக்காக ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் அநாயாசமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

மூன்று ஆண்டுக் காலம் பத்மநாப சுவாமியின் அண்டை வீட்டுக்காரனாகக் குடியிருந்திருக்கிறேன். அவ்வப்போது உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் ஆலயப் பிரவேசம் செய்து வழிகாட்டியாகச் சுற்றிக் காட்டி விளக்கியிருக்கிறேன். அதற்காக படித்தும் கேட்டும் விவரங்கள் சேகரித்திருந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை விடவும் விரிவான அறிவை வழிகாட்டிப் பெண் அளித்தார். திருவிதாங்கூர் மன்னர்களோ அல்லது மகாராணிகளோ கூட அவரளவுக்கு அந்த வரலாற்றை விளக்கிச் சொல்ல முடியாது என்ற பிரமிப்பு ஏற்பட்டது. எல்லாம் முடிந்து பார்வையாளர் கூட்டம் வாசலுக்கு வந்தபோது வழிகாட்டி ஓர் அறிவிப்பைச் செய்தார். 'இந்த அருங்காட்சியகம் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. அதற்குப் பெரிய நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே என் போன்ற கைடுகளுக்குச் சொற்பத் தொகையே சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட எனக்குப் பேருதவியாக இருக்கும். உங்களால் உதவ முடியுமா? ' இதை அவர் ஆங்கிலத்தில் கேட்டார். அதனால் கௌரவக் குறைச்சலாகத் தோன்றவில்லை. பார்வையாளர்கள் எங்களால் முடிந்ததை அளித்தோம். அந்தத் தொகை நிச்சயமாக அறக்கட்டளை அவருக்கு அளிக்கும் ஊதியத்தை விடக் குறைவானதல்ல.

இந்தியாவிலேயே மிகப் பெரும் பணக்காரக் கடவுள் திருவனந்தபுரத்தில் வீற்றிருக்கும் அனந்த பத்மநாபசுவாமிதான் என்ற தகவல் தெரிய வந்தபோது மேற்சொன்ன காட்சி இன்னும் தெளிவாக மனதில் படர்ந்தது. இரண்டுக்கும் இடையிலுள்ள முரணைப்பற்றி யோசிக்கத் தூண்டியது.

த்மநாபசுவாமியின் சொத்து மதிப்பு இப்போது உலகம் அறிந்த ரகசியம். நூற்றி முப்பத்து ஆறு ஆண்டுகளாகத் திறக்கப்படாமலிருந்த ஆறு கருவூலங்கள் உச்ச நீதி மன்றத்தின்ஆணைப்படி திறக்கப்பட்டதும் வெளியான இந்த ரகசியம் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருக்கிறது. மிகப் பெரிய செல்வந்தரைத் தரிசிக்கும் ஆர்வத்தில் பக்தர்களும் பயணிகளும் ஆலய வாசலில் வரிசையில் காத்து நிற்கிறார்கள். இன்றைய கணக்கில் இந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு தோராயமாக ஒருலட்சம்கோடி ரூபாய். இவை எல்லாம் நூற்றாண்டுகளின் பழைமை வாய்ந்தவை. தொல்லியல் மதிப்பை வைத்துப் பார்த்தால் இவற்றின் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகம்.

நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட இந்தச் செல்வம் பத்மநாபசுவாமிக்கு மன்னர்களாலும் சாதாரணக் குடிமக்களாலும்அளிக்கப்பட்டவை. திருவிதாங்கூர் அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது அதற்குள் அடக்கப்பட்ட சிற்றரசர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டவை. திருவிதாங்கூர் அரசின் வரி விதிப்பால் குடிமக்களிட மிருந்து வசூலிக்கப்பட்டவை. கேரளத்துடன் குறிப்பாக, திருவிதாங்கூருடன் வாணிபத் தொடர்பிலிருந்த வெளிநாட்டு வணிகர்களிடமிருந்து கப்பமாகவும் பொருட்கள் மீதான சுங்கமாகவும் பெறப்பட்டவை. இப்படிச் சொல்வது வியப்பை ஏற்படுத்தலாம். கோவிலுக்குக் காணிக்கைகளும் தட்சணைகளும்தானே அளிக்கப்படும்?வரியும், சுங்கமும் எப்படி ஆலயத்துக்கு அளிக்கப்பட முடியும் என்ற கேள்விகள் எழும். விடை திருவிதாங்கூர் வரலாற்றில் இருக்கிறது. புராணங்களில் திருவனந்தபுரத்தைப் பற்றிச் சொல்லப்படும் குறிப்புகள் நம்பிக்கைக் கதைகள். ஆதார வலுவில்லாதவை. ஆகவே, அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்க்கலாம்.

கேரளத்தின் தெற்குப் பகுதியில் இருந்த சிற்றரசுகளில் அளவில் பெரிய நாடு வேணாடு. சேரமான் பெருமாளின் பரம்பரை என்று சொல்லப்படும் மன்னர்களின் ஆட்சி நடந்து வந்தது. வேணாட்டின் முக்கிய நகரமாகத் திருவனந்தபுரமும் இதயமாக அனந்தபத்மநாபசுவாமி ஆலயமும் கருதப்பட்டன.

சங்க இலக்கிய நூலான'பதிற்றுப் பத்'தில்இடம் பெறும் குறிப்பே திருவனந்த புரத்தைப் பற்றிய முதல் வரலாற்றுச் சான்று. பின்னர் சிலப்பதிகாரத்தில்அனந்தபத்ம நாப சுவாமி ஆலயம் குறிப்பிடப்படுகிறது. கோவலன் படுகொலை செய்யப்பட்ட சீற்றத்தில் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். நகரம் அழிகிறது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் அடைக்கலம் கொடுத்த இடையர் குலப்பெண் மாதரி தங்களது குல தெய்வம் திருமாலிருக்கும் இடமான அனந்தன் காட்டுக்கு வருகிறாள் என்பது முதல் குறிப்பு. கனக விசயர்களுடன் போர் தொடுக்க ஆயத்தமாகும் சேரன் செங்குட்டுவன் படையெடுப்புக்கு முன்பு எல்லா ஆலயங்களிலிருந்தும் பிரசாதம் பெறுகிறான். அனந்தன் காட்டிலிருக்கும் திருமாலின் பிரசாதமும் அதில் ஒன்று என்பது இரண்டாவது குறிப்பு. இவை இரண்டையும் கடந்த சான்றுகள் பக்தி இயக்கக் காலத்தில் முன்வைக்கப்பட்டவை. நம்மாழ்வாரின் பாசுரங்களில் பத்மநாப சுவாமியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஏறத்தாழ இந்தக் காலப் பகுதியில்தான் திருவனந்தபுரம் வைணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருகிறது. திவ்ய பிரபந்தத்தின்பதினோரு பாசுரங்களில் திருவனந்தபுரமும் பத்மநாபனும் இடம் பெறுகிறார்கள். சேர மன்னர்கள் மட்டுமல்லாமல் சோழ, பாண்டிய மன்னர்களும் இந்த ஆலயத்தின் உருவாக்கத்தில் பங்கு வகித்திருக்கிறார்கள்.

வெவ்வேறு மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் சிறுசிறு நாடுகளாக இருந்த பகுதிகளை பதினாறாம் நூற்றாண்டில் வேணாடு அரசராகப் பதவியேற்ற மார்த்தாண்ட வர்மா ஒன்றிணைத்தார். சிற்றரசர்களையும் ’நாடுவாழிகள்’ என்று அழைக்கப்பட்ட நில உடைமையளார்களையும் வீழ்த்தி அந்தப் பகுதிகளைக் கைப்பற்றினார். தெற்கே கன்னியாகுமரியையும் வடக்கே பரவூரையும் எல்லைகளாகக் கொண்ட நாடாக திருவிதாங்கூர் உருவானது. எல்லா முடியரசையும் போலவே திருவிதாங்கூரும் ரத்தச் சகதியிலிருந்து எழுந்த பூமிதான். அங்கிருந்தே திருவிதாங்கூர் என்ற நாட்டின் வரலாறும் பத்மநாப சுவாமி ஆலயத்தின் நவீன வரலாறும் ஆரம்பமாகின்றன.

மாமாவான ராம வர்மா மகாராஜா 'நாடு நீங்கி'யதைத் தொடர்ந்து மருமகனான அனிழம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மா தன்னுடைய இருபத்து நான்காவது வயதில் அரியணையேறினார். தாய்வழிச் சமூகத்தில் மகன்களுக்கு அதிகாரமும் உரிமையும் இல்லை. மருமக்கள்தாய சம்பிரதாயத்தின்படி மருமகன்களே வாரிசுரிமை கொண்டவர்கள். இந்த மரபுக்கு விரோதமாக மறைந்த மன்னரின் மகன்கள் இருவர் ஆட்சிக்கு உரிமை கோரினர். அவர்களை அடக்கினார். முன்னர் ஆண்ட அரசருக்கு எதிராக உள்ளிருந்தே கலகம் செய்து வந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எட்டரை யோகம் போற்றிகளையும் எட்டு வீட்டுப் பிள்ளைமாரையும் அதிகார பீடங்களிருந்து நீக்கினார். அரியணையேறி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் தனக்கெதிராகச் சதியில் ஈடுபட்டவர்களை அழித்தொழித்து மார்த்தாண்ட வர்மா முழு அதிகாரத்தைப் பெற முடிந்தது. அதுவரை வேணாட்டின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்து வந்தது. அதையும் திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். இந்தச் சமயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கையை திருவிதாங்கூர் வரலாறு ஆன்மீகமானது என்றும் தியாகம் பொருந்தியது என்றும் சிலாகிக்கிறது. உண்மையில் அது ராஜதந்திரமானது. பத்மநாப சுவாமியின் பக்தரான மார்த்தாண்ட வர்மான தமது அதிகார அடையாளங்களான உடைவாளையும் கேடயத்தையும் பத்மநாப சுவாமி சன்னதியின் படிக்கட்டில் வைத்தார். நாட்டைக் கடவுளுக்குச் சமர்ப்பித்ததன் குறியீடு அது. அன்று முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் ஆட்சி கடவுளான பத்மநாபருக்கு உரிமையானது. இந்தச் சடங்குக்கு திருப்படித் தானம் என்று பெயர். பத்மநாப சுவாமிக்கு மூன்று பாத்திரங்களைக் கொடுத்த பெருமை மார்த்தாண்ட வர்மாவுக்கு உரியது. பத்ம நாபனைக் குலதெய்வம், காவல் தெய்வம், ராஜ்ஜியத்துக்கே அதிபதி என்று மூன்று பாத்திரங்களில் இயங்க வைத்தார். அவரது பிரதிநிதியாகவே தாம் ஆட்சியேற்பதாக அறிவித்தார். அந்த வகையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் மன்னர் பிரதிநிதியாக பத்மநாப தாசன் என்ற பணிவான அடையாளத்துடன் ஆட்சியை நடத்தத் தொடங்கினார். ஆக, திருவிதாங்கூரின் உண்மையான அரசர் சாட்சாத் ஸ்ரீ பத்மநாபன். அவரது ஆலயமே அதிகார மையம். அதற்கு ஏற்பவே கோட்டையும் காவலும் ஏற்படுத்தப்பட்டன. இன்றும் பத்மநாப சுவாமி கோவிலின் பிரதான உற்சவமான பங்குனி ஆறாட்டின்போது குதிரைப் படைகளும் சிப்பாய்களும் ஊர்வலத்தில் அணிவகுப்பது இந்த மரபின் தொடர்ச்சிதான்.

மார்த்தாண்ட வர்மாவைச் சிறந்த நிர்வாகி என்றும் திறமான ஆட்சியாளர் என்றும் தீரமான போர் வீரர் என்றும் தீவிரமான பக்தர் என்றும் வரலாறு சொல்கிறது. உண்மை. அவற்றையெல்லாம் விட அவர் தேர்ந்த ராஜ தந்திரி. ஆட்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் ஆங்கிலேயர்களுடன் ஒத்துப் போனார். அதனால் ஆத்திர மடைந்த டச்சு படைத்தளபதி யூஷ்டாஷியஸ் டி லென்னாய் திருவிதாங்கூரின் மீது படையெடுத்தார். அவரை மார்த்தாண்ட வர்மா தோற்கடித்துச் சரணடையச் செய்தார். பின்னர் நண்பரும் ஆலோசகருமாக்கிக் கொண்டார்.

திருவிதாங்கூர் வரலாற்றில் நாட்டைக் காப்பதற்காக நடந்த போர் இதுமட்டுமே. மற்றவை மண்ணைக் கைப்பற்றுவதற்காகச் செய்யப்பட்டவை. பெரும்பான்மையான ஆக்கிரமிப்புகள் அமைதி உடன்படிக்கைகளில் முடிந்தன. மார்த்தாண்ட வர்மா காலம் முதல் இந்திய விடுதலை வரையிலான ஆண்டுகளில் திருவிதாங்கூர் அரச வம்சத்தின் எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் அரசியல் போராட்டங் களும் குறு நில மன்னர்கள், ஜமீந்தார்கள் இடையிலான சண்டைகளும் நடந்திருக் கின்றன. வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.அவ்வளவு கொந்தளிப்பான காலத்திலும் திருவிதாங்கூர் ராஜ்யம் ஆட்டம் காணாமல் நின்றதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று; நாட்டின் பாதுகாப்புக் கருதி மன்னர்கள் மேற்கொண்ட சமரசப் போக்கு. உண்மையில் அது அதிகாரத்தை இழந்துவிடாமலிருக்கச் செய்த தற்காப்பு ஏற்பாடு. பிரிட்டிஷ்காரர்களுக்குக் கப்பம் கட்டுவதற்காகவே குடிமக்கள் மீது வரி சுமத்தப்பட்டது. மிகவும்கீழ் நிலையிலிருந்த மக்களிடமிருந்து தலைக்கும் முலைக்கும் வரி வசூலிக்கப்பட்டது. இவையெல்லாம் பத்மநாப சுவாமியின் பெயராலேயே நடத்தப்பட்டன. இரண்டாவது காரணமும் கடவுளை மையப்படுத்தியதுத்தான்.நாட்டின் உண்மையான அரசர் பத்மநாப சுவாமியே என்றால் கடவுளுக்கு எதிராக யார் படை யெடுக்க முடியும்? இந்த இரண்டு காரணங்களுமே ஆட்சியைத் தொடர உதவியவை.

பதவிக்கு வந்த காலம் முதலே பத்மநாப சுவாமி ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற சிந்தனை மார்த்தாண்ட வர்மாவுக்கு இருந்தது. அவர் பதவிக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னர் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஆலயத்தின் பல பகுதிகள்

எரிந்து போயிருந்தன. அவற்றின் சுவடுகள் எஞ்சியிருந்தன. அவை பக்தரான மார்த்தாண்ட வர்மாவின் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்தின. அரியணை ஏறியதும் ஆலயத்தைச் செப்பமிடுவதற்கான பணிகளை முடுக்கி விட்டார். அவரது கற்பனையின் விரிவுதான் இன்று காணும் பத்மநாப சுவாமி ஆலயம். அவருக்குப் பின் வந்த மகாராஜாக்களும் மகாராணிகளும் பத்மநாபதாசன் என்றும் பத்மநாப சேவினி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களது கைங்கரியங்களும் தொடர்ந்தன. திருவிதாங்கூர் ராஜ வம்சம் கடைப்பிடித்த சமரசப் போக்கு அந்நியப் படையெடுப் புகளைத் தடுத்தது. அவர்கள் வலியுறுத்திய தெய்வ நம்பிக்கை மக்களை இடையூறில் லாமல் ஆட்சி செய்யத் துணை புரிந்தது. கடவுளின் மீது வைத்த நம்பிக்கையின் சாயலில்தான் திருவிதாங்கூர் பிரஜைகள் மகாராஜாக்களைப் பார்த்திருந்தார்கள். 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்' நம்மாழ்வார் பாசுர வரிகளை விசுவாசத்துடன் பின்பற்றிய சாதாரண மக்கள்தாம் எல்லாப் படையெடுப்பு களிலிருந்தும் கடவுளையும் அரச பரம்பரையையும் பாதுகாத்தவர்கள்.

காலங்காலமாக இந்தப் பிரஜைகள் மன்னருக்குச் செலுத்திய வரியும் தெய்வத்துக்குச் சமர்ப்பித்த காணிக்கைகளும் நூற்றாண்டுகளாகத் திரண்டுதான் அனந்த பத்மநாபனின் அளப்பரிய செல்வத்தை உண்டாக்கியிருக்கிறது. அவை மட்டுமே இந்த அளவு செல்வத்தை உருவாக்கியிருக்குமா? இல்லை. விதேச வாணிபத்தின் மூலம் ஈட்டப் பட்ட நிதி. சிற்றரசுகளை முற்றுகையிட்டுப் பறிமுதல் செய்த திரவியங்கள், வியாபார நிமித்தம் கேரளக் கடல் பகுதிகளில் வந்தேறிய அந்நியர்கள் சுங்கமாகச் செலுத்திய வைர,வைடூரியங்கள், கேரளத்தில் விளைந்த நறுமணப் பொருட்களைப் பண்ட மாற்றுச் செய்து சேகரித்த தங்க நாணயங்கள் இவை அனைத்தும் சேர்ந்தே கருவூலத்தை நிரப்பியிருக்கின்றன. இவை தவிர திருவிதாங்கூர் அரச வம்சத்தினர் அவ்வப்போது செலுத்திய காணிக்கைப் பொருட்கள். மன்னரின் முன்னால் பிரதிநிதி அன்றாடம் ஆஜராக வேண்டும் என்ற அரச கட்டளையை திருவிதாங்கூர் வம்சம் கறாராகப் பின்பற்றி யிருக்கிறது. ஒருநாள் ஆலயம் சென்று வழிபடத் தவறினால் குறிப்பிட்ட தொகை அபராதமாகச் செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் மூலம் சேர்ந்த தொகைகள். குடிமக்களில் தவறு செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்கள், மன்னரும் மக்களுமே செலுத்திய பிராயச்சித்த தண்டங்கள், திருநெல் வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் பரவிக் கிடந்த பண்டாரபூமி மூலம் கிடைத்த முப்பது சதவீத வருமானம். இந்த மொத்த வருமானங் கள்தாம் உலகின் பணக்காரக் கடவுளாக பத்மநாப சுவாமியை இன்று காட்டுகின்றன.

இந்த மொத்த நிதியும் ஆறு நிலவறைகளில் சேமித்து வைக்கப்பட்டன. இவற்றுக்குத் துல்லியமான கணக்கு வைக்கப்பட்டது என்பது திருவிதாங்கூர் ராஜ வம்சத்தைப் பாராட்டுவதற்கான வாய்ப்பு. மார்த்தாண்ட வர்மா காலம் முதல் இன்றுவரை கோவிலுக்கு வந்து சேரும் எல்லா காணிக்கைகளுக்கும் நடை வரவுக்கும் கணக்குகள் உள்ளன. இந்தக் கணக்குகள் குறிக்கப்பட்ட ஓலைச் சுவடிகள் சுருள்களாகச் சேமிக்கப் பட்டன. அவற்றின் எண்ணிக்கை முப்பது லட்சம் என்று சொல்லப் படுகிறது. ஆலயத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பல சுவடிகள் சாம்பலாயின. மிஞ்சிய ஓலைச் சுவடிகளிருந்து மதிலகம் ரேகைகள் என்ற பதிவுகள் தயாரிக்கப் பட்டன. ஆலயத்துக்கு வரும் பொருள் வரவுகள் கணக்கு வைக்கப்பட்டதே தவிர அவற்றின் எண்ணிக்கை ஒருபோதும் சரிபார்க்கப் படவில்லை. சேரமான் பெருமாள் மூன்றாம் பாஸ்கர ரவிவர்மா முதல் திருவிதாங்கூரின் கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் ராமவர்மா காலம் வரையிலும் குவிந்த செல்வம். இது அளவற்றது என்று பொதுவாகத் தெரியும். இந்தப் பொக்கிஷங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் நிலவறைகளில் இரண்டு மட்டுமே அன்றாட வழிபாட்டுச் சடங்குகளுக்காகவும் உற்சவ கால அலங்காரங்களூக்காகவும் திறக்கப்பட்டு வந்தன. இந்தப் பொக்கிஷங்களின் அளவு சொல்லப்படாத காரணத்தால் இதிலிருந்து என்ன எடுக்கப்பட்டாலும் தெரியாது. சோற்று மலையிலிருந்து ஒரு பருக்கையை எடுத்தால் தெரியாது; குறையாது என்று நினைப்பது போன்ற எண்ணமே இது. ஆனால் ஒரு பருக்கை குறைந்தாலும் அது தவறு; குறைவு என்று நம்பிய பத்மநாபசுவாமியின் பரம பக்தரான டி.பி. சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கே இந்த ரகசியக் கருவூலத்தைத் திறக்கிற சாவியாக மாறியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நிலவறைகளைத் திறந்து உருப்படிகளின் எண்ணிக்கையைப் பட்டியல் போடத்தான் ஆணையிட்டது. பட்டியல் தயாரிப்புக்கு இடையில்தான் அந்தப் பொருட்களின் மதிப்பும் வெளிவந்தது. உலகம் ஆச்சரியத்தில் கண்களை அகலமாக முழித்துப் பார்க்க நேர்ந்தது.

பொற் சிம்மாசனங்கள், பொற்கிரீடங்கள், தங்க விக்கிரகங்கள், பொன் நாணயங்கள், பொற்கயிறுகள், பதினெட்ட்டி நீளமுள்ள சரப்பொளி மாலைகள், தங்கக் கிண்டிகள், பொன் விக்கிரகங்கள், வெள்ளி ராசிகள், தங்க அங்கிகள்,தங்க மாலைகள், தங்கக் கட்டிகள், நவரத்தினக் கற்கள் போன்ற காலத்தால் அழியாத பொருட்கள்தாம்

கருவூலத்தில் காணப்பட்டவை. இவற்றின் நிகழ்கால சந்தை மதிப்புத்தான் இதுவரை

சொல்லப்பட்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொல்பொருட்கள், கலைப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இவற்றியெல்லாம் தொல்பொருட்களாகவே எண்ண வேண்டும். அதே ஆண்டு யுனெஸ்கோ பாரீசில் நடத்திய உலகப் பண்பாட்டு, இயற்கை மரபுச் செல்வங்கள் பாதுகாப்பு மாநாடு நூறு ஆண்டுகளைக் கடந்த எந்தக் கலைப் பொருளும் கட்டடமும் மரபுச் சின்னங்களாகக் காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி இவை எல்லாம் தொல்பொருட்கள்.இவற்றுக்கு தனிநபர் உரிமை கொண்டாட முடியாது. இந்த இடத்தில்தான் பத்மநாபசுவாமியின் செல்வம் பிரச்சனைக்குரியதாகிறது. இது திருவிதாங்கூர் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமானதா? முடியாட்சியே ஒழிக்கப்பட்ட பின் மன்னர் குடும்பத்துக்கு எப்படி உரிமை இருக்கும்? சரியாகப் பார்த்தால் ஜனநாயக அரசு அமைந்த பின்னர் பத்மநாப சுவாமியின் மன்னர் பதவியே பறி போயிருக்கிறதே?. ஆலயமே இந்தச் சொத்தின் உடைமையா? வைதீக மரபுப்படி பத்மநாப சுவாமி ஆலயத்துக்குள் செல்லவும்

வழிபடவும் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால் மன்னர் என்ற நிலையில் பத்மநாப சுவாமிக்கு வரி செலுத்தியவர்கள் இந்துக்கள் மட்டும்ல்ல; பிறமதத்தினரும் கூட. அவர்கள் அளித்த செல்வமும் இதில் இருக்கிறதே? அதை எப்படி வகைப் படுத்துவது? மன்னராட்சி இல்லாத நிலையில் இந்தச் சொத்துக்கள் பொதுவானவை.மக்களுடையவை. ஆனால் இதுவரையான ஜனநாயக அரசுகள் பொதுச் சொத்தில் நடத்தியிருக்கும் முறைகேடுகள் இந்தச் செல்வத்தின் மீதும் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பத்மநாப சுவாமியின் சொத்து முன்வைத்திருக்கும் கேள்விகள் பதில் காணச் சிரமமானவை. காலங்காலமாகத் திரண்ட செல்வவளம் மன்னர்களின் பங்களிப்பு மட்டுமல்ல. மக்களின் நன்கொடையும்தான். அதை மக்கள் நலத்துக்காகச் செலவிடு வதுதான் உசிதம் என்பது ஒரு வாதம். இவை பக்தியால் அளிக்கப்பட்டவை. அதனால் தெய்வ சம்மதமில்லாமல் தொடக் கூடாது என்பது மறு தரப்பின் வாதம். இவை இரண்டையும் மீறி இந்தச் சொத்துக்கு வேறு மதிப்புகளும் இருக்கின்றன. அதன் பழைமை சார்ந்த மதிப்பு. பண்பாட்டு மதிப்பு. கலை மதிப்பு. வரலாற்று மதிப்பு. இந்தச் செல்வத்தில் காணப்படும் நாணயங்கள் மூலம் அந்தக் கால வெளிநாட்டுத் தொடர்புகள் புலனாகின்றன. கலைப்பொருட்கள் மூலம் ஒரு கால கட்டத்தின் கலை ஞானம் தெரியவருகிறது. அணிகலன்கள், ஆபரணங்களிலிருந்து கலாச்சாரப் போக்குகள் தென்படுகின்றன. சில பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்து வதன் மூலம் பழைமையையும் வரலாற்றையும் அறிய முடியும். இது வருங்காலத் தலைமுறைக்கு உதவும்.

பத்மநாபசுவாமி சொத்தின் கலாச்சார மதிப்பை முன்னிருத்தி அதை இரண்டாகப் பிரிக்கலாம் என்பது மூன்றாவது தரப்பு. தொன்மையானவையும் கலாச்சாரம் தொடர்பானவையுமான பொருட்களை வகைப்படுத்தி அவற்றை ஓர் அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாப்பது. எஞ்சியுள்ள சொத்தை கேரள மக்களின் மேம்பாட்டுக்காகச் செலவு செய்வது. ஆலோசனை சரியானது. மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் இதன் மூலம் ’’’மகேசன் குரலே மக்கள் குரல்’’என்று அமைதியடையலாம். உண்மையான பக்தர்கள் ‘ஆமாம், கடவுள் உலகியல் செல்வங்களுக்கு அப்பாற் பட்டவர்’’’என்று ஆன்மீகமாகச் சிந்திக்கலாம். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல.

அபரிமிதமான செல்வம் நிம்மதியைக் குலைக்கும் என்பது மனிதர்களுக்குமட்டுமல்ல; கடவுளுக்கும் பொருந்தும்.


நன்றி: டைம்ஸ் இன்று தீபாவளி மலர் 2011


புத்தகங்களின் கூட்டறிக்கை

$
0
0





பொதுவாக நாங்கள் நிர்க்குணமானவர்கள்
எங்களைப் புரட்டும்போது
முனகலைவிடவும்
சுவாசத்தைப்போலவும் எழும்
மெல்லிய ஓசையிலிருந்து
நீங்கள் அதைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.


நீங்கள் அறியாத ஏதோ வனத்தின்
பூர்வ ஜென்ம பந்தம்
இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது
நாங்கள் புரண்டுகொடுக்கும்போது
ஒரு கானகமும் அசைவதைக் கவனித்திருக்கலாம்


நீங்கள் தொட்டுத் துடிப்பறியாத நாளங்களில்
மண்ணின் குருதி
இன்றும் எங்களுக்குள் பாய்கிறது
மை வரிகளுக்கிடையில் விரலோட்டும்போது
அதன் ஓட்டம் அதிர்வதை உணர்ந்திருக்கலாம்


உங்களில் யாரோ ஒருவரின்
கண்டு தீராக் கனவு
இன்றும் எங்களுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
திரைக் காட்சியைப்போல
முதுகுக்குப் பின்னாலிருந்தல்ல
தொலைக்காட்சியைப்போல
தலைக்கு முன்னாலிருந்தே
அது எல்லார் கண்களுக்குள்ளும் நுழைவதைப் பார்த்திருக்கலாம்

பொதுவாக நாங்கள் சாத்வீகமானவர்கள்
எங்களில்
உன்னதர்களும் நடுவர்களும் கடையர்களும்
நிர்வாணிகளும் வேடதாரிகளும்
வழிகாட்டிகளும் திசைதிருப்பிகளும் இருப்பது உண்மை
எனினும்
நாங்கள் விதிகளை மதிப்பவர்கள்
எங்களைப்போல வரிசையைக் கடைப்பிடிப்பவர்களை
நீங்கள் ஒருபோதும் காணமுடியாது

நாங்கள் சமாதானப் பிரியர்கள்
எங்களுடைய
ஒரு பக்கம் கிழியும்போது
மறுபக்கம் தானாகவே பிய்த்துக் கொள்கிறது
அழிந்தும் அழியாமல் இருக்கிறோம் என்பது உண்மை
ஏனெனில்
நாங்கள் பக்கங்களில் மட்டும் இருப்பவர்களல்ல

நாங்கள்
குணமற்றவர்கள்
இன்முறையானவர்கள்
அமைதி விரும்பிகள்

எனினும் நீங்கள்
எப்போதும் எங்களை நினைத்து மிரளுகிறீர்கள்
வரிசையாக நிற்கும் நாங்கள்
விதிகளை மீறி
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படுவோம் என்றும்
அதன் உயரம்
உங்களை விட உயர்ந்திருக்குமென்றும்
அஞ்சுகிறீர்கள்
பிய்த்துக் கிழித்தாலும்
எங்கள் பக்கங்களுக்கிடையிலிருந்து
அழியாக் கனவுகளின் சாபம்
உங்களைப் பின் தொடரும் என்று
பயப்படுகிறீர்கள்

உங்கள் வெருட்சிக்குக் காரணம்
நாங்களல்ல
பயத்தின் களிமண் கால்களில் நிற்கும்
உங்கள் அதிகார உடல்

நாங்கள் அப்பாவிகள்
தன்னியக்கமில்லாத வெறும் ஜடங்கள் -
மனதில் ஜுவாலையுள்ள ஒருவர்
எங்களைத் தொடும்வரை.






வாசிப்பு

$
0
0





காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது -

காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.

காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது -

காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.

நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.

எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.

கபீர் நெய்துகொண்டிருக்கிறார்

$
0
0





மனம் - தறி
வாக்கு - இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்

நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?

சொல்கிறார் கபீர்:
'உருவமற்ற நாடா
ஊடோடிப் பின்னிய துணி
கரையோ நுனியோ இல்லாதது'.

நெசவின் தரமென்ன?
கனத்த கம்பளியா?
இழைத்த பருத்தியா?
மெல்லிய பட்டா?

சொல்கிறார் கபீர்:
'நீரினும் மெல்லியது
புகையினும் நுண்ணியது
காற்றினும் எளியது'

நெய்த துணிக்குச் சாயமெது?
வெயிலின் காவி?
பிறையின் பசுமை?
நட்சத்திர வெள்ளி ?

சொல்கிறார் கபீர்:
'நிறம் நிறத்திலிருந்தே பிறக்கிறது
எனவே
எல்லாம் ஒரேநிறம்
உயிரின் நிறமென்ன சகோதரா!
நீதான் கண்டுபிடியேன்'

தறி இறக்கி நிறந்தோய்த்த துணியை
எப்படிப்போய் விற்க?
எவர்வந்து வாங்க?

சொல்கிறார் கபீர்:
'வாங்குபவர் மொய்க்கும்
சந்தையில் நானில்லை
என் இடம்தேடி
வாடிக்கை வருவதில்லை'

உடுப்பவர் இல்லாமலா உடை?
எவர் அணிவார் பூமியின் வஸ்திரம்?

சொல்கிறார் கபீர்:
'தோல் ஒன்று எலும்பும் ஒன்று
சிறுநீர் மலம் எல்லாம் ஒன்று
ஒரே ரத்தம்
ஒரே மாமிசம்
ஒரே துளியில் உருவானது பிரபஞ்சம்
பிராமணனென்ன? சூத்திரனென்ன?
உடுப்பவன் யாரானால் உடைக்கு என்ன?'

எவர் நிர்வாணம் காக்குமிந்தச் சொல்?
ஆண் அல்லது பெண்?

சொல்கிறார் கபீர்:
அதுதானே மனிதா, பெருங்குழப்பம்
வேதம் எது?
குர் ஆன் எது?
எது புனிதம்?
எது நரகம்?
ஆண் எது? பெண் எது?
காற்றோடு விந்துமுயங்கி
இறுகிச் சுட்ட மண்பாண்டம்
விழுந்துடைந்த பின்பு
என்ன என்பாய்?

மனம் - தறி
உண்மை - இழை
பூமிக்கான வாக்கை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்.




பசியின் வாசனை

$
0
0







திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து
சென்னை சென்ட்ரல்வரை செல்லும்
12624 சென்னை மெயில்
பத்தொன்பது மணி பதினைந்து நிமிடத்துக்கு
எர்ணாகுளம் டவுன் சந்திப்பைக் கடந்ததும்
கூட்டம் நிரம்பிய பொதுப் பெட்டிக்குள்
வாசனைகளின் மாநாடு ஆரம்பமானது.

விறைப்போ குழைவோ இல்லாமல்
பதமாகக் கிளறப்பட்ட புளியோதரை
சம்புடத்தைத் திறக்கச் சொல்லி
மூடி வழியாகக் கசிந்து கொண்டிருந்தது.

சிட்டிகைப் பெருங்காயம் கூடிப்போன
கத்தரிக்காய் சாம்பார்
பிளாஸ்டிக் கலத்துக்குள்ளிருந்து
வழியத் தயாராகிக் கொண்டிருந்தது

ஒட்டி நின்ற இன்னொரு கலத்துக்குள்
மூழ்கி மிதந்து கொண்டிருந்த கொத்துமல்லி
இனியும் உடம்பில் ரசமில்லை என்று
ஒப்புதல் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தது.

தருணம் இது; விட்டால்
மறுதரப்புக்கு மாறிவிடுவேன் என்று
தியாகத்தால் வாடிய இலையின் ஆதரவுடன்
தயிர் சாதம்
புளித்த அறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருந்தது.

அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து
சப்பாத்திகளில் புரண்டெழுந்த லவங்கக் கும்மாளம்
மின்விசிறியை ஒருமுறை வட்டமிட்டு
பல்லேபல்லே என்று இருக்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது

இணையைப் பிரிந்த கோழிக்கால்
வெள்ளி மினுக்கும் அலுமினிய உறையை
உதைத்துக் கிழித்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது

குடம்புளியும் உப்பும் சொன்ன
அந்தரங்க நகைச்சுவைக்குக் கெக்கலித்த சாளைமீன்
நகைச்சுவையின் அர்த்தத்தை யோசித்துப்
பிளாஸ்டிக் உறைக்குள் குழம்பிக் கொண்டிருந்தது

கொஞ்சம் கூட அடக்கமில்லை என்று
செய்தித்தாள் பொதிக்குள்ளிருந்த அயிரைக் கருவாடு
உரத்த குரலில் அதட்டிக் கொண்டிருந்தது

இருக்கைகளில் இருந்தபடியும்
எழுந்தபடியும் நடந்தபடியும்
வாசனைகள்
ஒன்றோடு ஒன்று கைகுலுக்கிக் கொண்டன
வாசனைகளின் சகவாசனைகளும்
எல்லா வாசனைகளையும் அணைத்துக் கொண்டன

வாசனைகளின் சந்தடிக்கிடையில்
பார்வையற்ற பாடலொன்று
எந்த வாசனை மேலும்
மோதி விடாமல் தள்ளாடியபடியே
'கண்ணு திறக்காத தெய்வங்களே,
களிமண் பொம்மைகளே' என்று
தாவணி ஏந்திப் போய்க் கொண்டிருந்தது


சென்னை மெயிலை அங்கமாலி ரயில் நிலையம்
பத்தொன்பது மணி நாற்பத்தேழு நிமிடங்களுக்கு
வரவேற்று நிறுத்தியது
எல்லா வாசனைகளும் இருக்கையில் அமர்ந்தன

வாசலைத் துளாவி நடந்த
பார்வையற்ற பாடல்
'இன்றும் ஒன்றுமில்லை' என்ற
சொற்களை மென்று விழுங்கி
ஏப்பத்தை ரயில் பெட்டிக்குள் விட்டுவிட்டு
இறங்கிப் போனது

பத்தொன்பது மணி நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு
அங்கமாலியை ரயில் கடந்ததும்
உள்ளே திரும்பிய பார்வையற்ற ஏப்பம்
ஒவ்வொரு வாசனையையும் முகர்ந்து கொண்டிருந்தது
ஏக்கத்துடன்.

Article 12

Article 11

புத்தக விழாக் குறிப்புகள்

$
0
0

முப்பதைந்து ஆண்டுகளாக நடை பெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சுமார் இருபது முறையாவது சென்று வந்திருப்பேன். ஒரு வாசகனாகவும் இலக்கியவாதியாகவும். சிலமுறை கவிதை வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டுதான் ஒரு நட்சத்திரமாகி யிருக்கிறேன். நட்சத்திரமாக்கியவர் நண்பர் மனுஷ்யபுத்திரன்.உயிர்மையின் இந்த ஆண்டு நட்சத்திரங்கள் என்று அவர் வைத்திருந்த பானரில் முதல் நட்சத்திரம். அடுத்த ஆண்டும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலை இப்போதே உலுக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை முன்னிருத்தி வேகமாகச் செயல்பட்டிருக்கிறேன். என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. 'நீருக்குக் கதவுகள் இல்லை' என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. 'வாழிய நிலனே' என்று உயிர்மை, உயிரோசை, வார்த்தை இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத்திலிருந்து அவ்வப்போது மொழியாக்கம் செய்த கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளின் தொகுப்பு. இவை மூன்றும் உயிர்மை வெளியீடுகள். ஏறத்தாழ அதே கால அளவில் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த 13 கதைகளின் தொகுப்பு 'லயோலா என்ற பெரும் பாம்பின் கதை' காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு கதைத் தொகுதிகளுக்கும் எழுதிய முன்னுரைகள் என் அளவில் மிக முக்கியமானவை; கதைகளைப் பற்றியல்ல கதைகளுக்கு வந்து சேர்ந்த வழியின் நினைவுகளையும் காலங்களையும் பற்றிப் பேசக் கிடைத்த வாய்ப்பு
என்பதால்.

இவை சொந்தக் கதையின் பக்கங்கள். இவற்றுக்கிணையான சிரத்தையுடனும் மரியாதையுடனும் ஈடுபட்ட பிற செயல்பாடுகள்தாம் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்தவை.

காலச்சுவடு நவீன தமிழ் கிளாஸிக் வரிசையில் வெளியாகி இருக்கும் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்த வாய்ப்பு மனதுக்குள் கொண்டாட்டத்தைத் தந்தது. என் தனிப்பட்ட ரசனையில்தமிழின் மிகப் பெரும் எழுத்துக் கலைஞர்களில் ஒருவராக ஜானகிராமனை மதிக்கிறேன்.கலைத்தன்மை கூடா தஅவருடைய எழுத்துக்களிலும் கூட ஓர் உயிர்ப்பை, இன்றும் பழசாகாத மலர்ச்சியைக் காண முடியும். எனில் அவரது ஆகச் சிறந்த படைப்பான 'அம்மா வந்தா'ளில் நான் எவ்வளவு குதூகலத்தை அடைந்திருப்பேன் என்பதற்குச் சான்று இந்த முன்னுரை.

லாவண்யா சுந்தரராஜனின் ' இரவைப் பருகும் பறவை' (காலச்சுவடு பதிப்பகம்), சக்தி ஜோதியின் ' காற்றில் மிதக்கும்
நீலம்'
( உயிரெழுத்து பதிப்பகம்), திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் ' காற்றால் நடந்தேன்' ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கும் த சண்டே இந்தியன் இதழின் ஆசிரியர், நண்பர் அசோகனின் 'போதியின் நிழல்'என்ற நூலுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறேன்.எல்லாம் விரும்பிச் செய்தவை. முன்னுரை எழுதுவதில் சில வசதிகள் இருக்கின்றன. ஒரு நூலை முதல் வாசகனாக வாசிக்கும் வாய்ப்பு. அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்றால் அந்த நூலை பின்னர் என்றாவது வாசிக்க வேண்டிய தேவையும் எழாமற் போகலாம்.

நூல் வெளியீட்டு விழாக்கள் நான்கில் பேசியிருக்கிறேன். உயிர்மை சார்பில் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பு ' நான் நீ மீன்'நூல் வெளியீட்டில், காலச்சுவடு கொண்டுவந்திருக்கும் ஏழு கவிதை நூல்கள் வெளியீட்டில்
சிறப்புரையாகவும் மண்குதிரையின் தொகுப்பு ' புதிய அறையின் சித்திரம்'பற்றியும். ஈழத்து எழுத்தாளர் நௌஸாத்தின்
'வெள்ளி விரல்'சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும்.

ஞாநியும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் ஒருங்கிணைத்த வாசகர் எழுத்தாளர் சந்திப்பில் பேசியதுதான் உண்மையில் நட்சத்திர மதிப்பைக் கூட்டியது. 'முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். கவிதைகள் தவிர கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும். இருந்தும் நான் பிரபலமானவனல்ல; மிகப் பிரபலமான வார இதழிலும் தொலைக் காட்சியிலும் பணி புரிந்திருக்கிறேன். அவை மூலம் என்னை முன்னிருத்திக் கொள்ள விரும்பியதில்லை. எழுத்தை முன் வைத்து மட்டுமே அறியப்பட விரும்பியிருக்கிறேன். இந்தப் புத்தகக் கண் காட்சியை ஒட்டி வெளியான நான்கு புத்தகங்களையும் சேர்த்து 25 நூல்கள் வெளியாகி யிருக்கின்றன. இதில் எதையாவது நீங்கள் படித்திருக்கலாம் என்ற அவ்வளவு வலுவில்லாத நம்பிக்கையுடன் பேசுகிறேன்' என்றுதான் பேச்சையே தொடங்கினேன். ஒரு மணி நேரப் பேச்சுக்குப் பிறகு வெளியே வந்தபோது ஓர் இளைஞர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 'நான் சரவணன்.உங்கள் எழுத்துகளைப் படித்திருக்கிறேன் என்று சொல்வதற்காகவே வந்தேன்' என்றவர் எனக்கே நினைவில் இராத என்னுடைய கவிதை ஒன்றை உணர்ச்சிபூர்வமாகச் சொன்னார்.

'வாழையடி வாழையாக வரும் எவனோ ஒரு வாசகனுக்காகவே எழுதுகிறேன்' என்றார் புதுமைப்பித்தன்.உண்மைதான்போல.சரவணன் என்ற வாழையின் அடிவாழையாக இன்னொரு வாசகன் இருக்கக்கூடும். நட்சத்திரமாக இருப்பதல்ல; வானத்தில் இருப்பதே முக்கியம். இதற்கு மேலே என்ன வேண்டும்?

லீலை - 12 மலையாளக் கதைகள்

$
0
0
எழுத்தின் கடைசி இலக்கிய வடிவம் சிறுகதைதான்.

1985இல் வெளியான ஆ.மாதவன் கதைகள் தொகுப்பில் முன்னுரையாகச் சேர்க்கப்பட்டிருந்த 'கலைகள், கதைகள்,சிறுகதைகள்' என்ற கட்டுரையில் 'சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச் சக்தி அதற்குப் பின் இன்றுவரை கருத்தரிக்கவில்லை' என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை படைப்புச் சக்தி கருத்தரித்திருந்தாலும் பேர் சொல்லும் சந்ததிகள் பிறக்கவில்லை. எழுதப்படும் மொழிகள் எல்லா வற்றிலும் இதுவே நிலைமை.

சிறுகதையைத் தாண்டிய ஓர் இலக்கிய வடிவத்தைக் கண்டுபிடிக்க எழுத்தாளர்கள் முயற்சி செய்யாமலில்லை.தமிழில் அதுபோன்ற முயற்சியை மேற்கொண்டவர் மு.தளையசிங்கம். பெரும் கனவுடன் மெய்யுள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார். அவரைத் தவிர வேறு யாரும் அந்த வடிவத்தைப் பொருட்படுத்தவில்லை. மலையாள எழுத்தாளரான எஸ்.கே.பொற்றேக்காடு நாவலையும் நாடகத்தையும் இணைத்து நாவடகம் என்ற வடிவத்தை முன்வைத்தார். அதுவும் பின் தொடரப்படவில்லை. மினிக் கதைகள் என்ற பெயரில் ஒரு சோதனையை மலையாள எழுத்தாளர்கள் செய்து பார்த்தார்கள். பி.கே.பாறக்கடவு என்ற ஓர் எழுத்தாளர் மட்டுமே தொடர்ந்து இந்த வடிவத்தைப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். இந்த முயற்சிகள் எதுவும் 'சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை' என்ற இலக்கியத் தகுதியைக் கேள்விக்குட்படுத்தவில்லை.

ஆக நூற்றாண்டைக் கடந்த சிறுகதையே இலக்கியத்தில் இன்றைக்கும் இளமை மாறாத வடிவம்.ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்ல முதலில் பரிந்துரைக் கப்படுவது சிறுகதைகள்தாம் என்று தோன்றுகிறது.ஓர் எளிய மொழிபெயர்ப்பாளனின் தேர்விலும் சிறுகதையே முதன்மையாக இருக்கும். நாவல் அதன் நீளம் காரணமாக மொழியாக்கத்தில் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. கவிதை அதன் மொழி நுட்பம், பண்பாட்டுக் குறிப்பீடுகள் ஆகியவை காரணமாகத் தயக்கத்தைக் கொடுக்கிறது. ஆனால் ஆர்வமுள்ள மொழிபெயர்ப்பாளன் எந்தத் தடையும் இல்லாமல் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்யக் கூடுமென்று என்ணுகிறேன். மொழிபெயர்ப்பில் வெற்றி பெறாத கவிதைகள் இருக்கலாம். புனை கதைகள் இருக்க முடியாது. குறிப்பாகச் சிறுகதைகள். உலக மொழிகளிருந்தும் இந்திய மொழிகளிருந்தும் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுத் தொகுக்கப்படும் கதைகள் இதற்கு எடுத்துக் காட்டுகள். எளிதில் மொழியாக்கம் செய்யப்பட இசைவானது என்பது மட்டுமல்ல; பிற மொழி வாசகர்களை உடனடியாக நெருங்க உதவும் வடிவம் என்பதும் காரணம். கவிதையின் ஆழத்தையும் நாவலின் விரிந்த காட்சியையும் சிறுகதைகள் சாத்தியப்படுத்துகின்றன என்று சொல்லப்படும் கருத்தும் ஒருவேளை அவற்றின் மொழியாக்கத்துக்குத் தூண்டுதலாக இருக்கலாம்.

கவிதைக்கும் நாவலுக்கும் கொஞ்சமும் மாற்றுக் குறையாத இலக்கிய வடிவம் சிறுகதை என்று நம்பும் இலக்கியவாதிகளில் ஒருவர் இந்தத் தொகுதியிலுள்ள 'கடையநல்லூரில் ஒரு பெண்' ணின் ஆசிரியர் டி.பத்மநாபன். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணூரில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் சந்தித்தேன். அறிமுகப்படுத்தியவர் 'இவர் எழுத்தாளர் டி.பத்மநாபன்' என்றார். சற்றுக் கோபமான குரலில் பத்மநாபன் திருத்தினார்.'இல்லா,செறுகதா க்ருத்து டி.பத்மநாபன்'. அந்தத் திருத்தம் அவரளவில் சரியானது. கட்டுரைகள் சிலவற்றை எழுதி யிருக்கிறார் என்பதை விட்டுவிட்டால் அவரது முதன்மையான எழுத்துக்கள் சிறுகதைகள் மட்டுமே.அவரது சம காலத்தவர்களாக சிறுகதைகள் வாயிலாக அறிமுகமான எம்.டி.வாசுதேவன் நாயரும் மாதவிக் குட்டியும் நாவல் ஆக்கத்தில் நுழைந்தபோதும் பத்மநாபன் 'செறுகதாக்ருத்'தாகவே (சிறுகதைப் படைப்பாளியாகவே) தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அமெரிக்க இலக்கியத்தின் நவீனத் தலைமுறை எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் கவிதைகள் எழுதியிருந்தாலும் இலக்கியப் புகழ் பெற்றது சிறுகதைகளால் மட்டுமே.

இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கதைகளை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தபோது எழுந்த எண்ணங்கள் இவை.எல்லா மொழிகளிலும் சிறுகதையில்தான் பெரும் சாதனைகள் நிகழ்ந் திருக்கின்றன என்ற மையக் கருத்தை நோக்கியே இந்த எண்ணங்கள் சுழன்றன. நூற்றாண்டைக் கடந்த மலையாளச் சிறுகதையும் இதற்கு விதிவிலக்கல்ல.

பகுத்துப் பேசும் வசதிக்காக மலையாளச் சிறுகதை வரலாற்றை ஆரம்பக் காலம், மறு மலர்ச்சிக் காலம், நவீனத்துவம், நவீனத்துவத்துக்குப் பின், தற்காலம் என்று வகைப் படுத்தலாம். சிறுகதைப் பிரக்ஞை உருவாகி வந்த ஆரம்பக் காலக் கதைகளைவிலக்கி வைத்தால் தகழி சிவசங்கரப் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், பொன்குன்னம் வர்க்கி, பி.கேசவதேவ் ஆகியோர் கதைகள் எழுதிய மறுமலர்ச்சிக் கால முதற்கட்டம். காரூர் நீல கண்டப் பிள்ளை, எஸ்.கே.பொற்றேக்காடு, லலிதாம்பிகா அந்தர்ஜனம் போன்றவர்கள் எழுதிய இரண்டாம் கட்டம்,எம்.டி.வாசுதேவன் நாயர், மாதவிக்குட்டி, டி.பத்மநாபன், என்.மோகனன் முதலானவர்கள் செயல்பட்ட மூன்றாம் கட்டங்களில் சிறுகதை தனிக் கலையாகத் தன்னை அறிவித்தது. முதற்கட்ட கதைகள் வாழ்வின் புறச் செயல்பாடுகளில் ஊன்றிய பார்வையைக் கொண்டவை. இரண்டாம் கட்டம் வாழ்வின் உளவியலை உணர்ச்சி ததும்பும் நடையில் ஆராய்ந்தவை. மூன்றாம் கட்டக் கதைகள் வாழ்வின் மையமான மனிதனின் மன வோட்டங்களில் கவனம் செலுத்தியவை. இப்படி வகைப்படுத்துவது ஒரு வசதிக்காகத்தான். முற்போக்குக் கதைகளின் மிகச் சிறந்த முன் மாதிரிகள் என்று சொல்லப்படும் பஷீரின் கதைகள் எந்த நவீனப் போக்குக்கும் சவால் விடும் கலையழகு கொண்டவை என்பதை நினைவில் வைத்துக் கொண்டே இதைக் குறிப்பிடுகிறேன். இதேபோன்று எந்தக் போக்கிலும் வசப்படாத இன்னொரு எழுத்தாளர் வி.கே.என்.

ஆதுனிகதா என்று அழைக்கப்பட்ட நவீனத்துவக் காலக் கதைகள் மலையாள இலக்கியத்தில் புதிய திசை மாற்றத்தை உருவாக்கியவை. நாலு கெட்டுத் தறவாடுகளிலிருந்தும் கிராமியப் புனிதங்களிருந்தும் விடுபட்டமலையாளியின் சமூக வாழ்க்கையைப் பல கோணங்களில் முன் வைத்தவை இந்தக் கதைகள். ஓ.வி.விஜயன், எம். முகுந்தன், காக்கநாடன், சேது, எம்.சுகுமாரன், பட்டத்துவிள சக்கரியா,புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.பி. நாராயணப் பிள்ளை, வி.பி.சிவகுமார், டி.ஆர். ஆனந்த்,என்.எஸ்.மாதவன் என்ற முதன்மையான போக்கும் அதற்கிணையாக யூ.பி.ஜெயராஜ், விக்டர் லீனஸ், டி.பி.கிஷோர் என்று தொடர்ந்த சமாந்தரப் போக்கும் நவீனத்துவக் காலம்தான் மலையாளச் சிறுகதையில் உச்ச பட்ச சாதனைகள் நிகழ்ந்த கட்டம் என்று சொல்லலாம். இடதுசாரிச் சிந்தனைகளை மையமாகக் கொண்டு எழுதிய எம்.சுகுமாரன், யூ.பி ஜெயராஜ் ஆகியவர்களை வேறுபடுத்திப் பார்க்கலாம். இந்தத் தொகுப்புக்கான கதைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும்போது நவீனத்துவத்தின் நடைமுறைக் காலம் பற்றிய ஒரு தகவல் கவனத்தில் துலங்கியது. அறுபதுகளின் மைய ஆண்டுகளில் தொடங்கி எண்பதுகளின் முற்பாதிவரை நீண்டிருந்த நவீனத்துவ காலத்தில் ஒரு பெண் கூட முதன்மையான போக்கில் சேர்க்கப்படவில்லை. பெண்நிலை அணுகுமுறையுடன் மானஸி சில கதைகளை எழுதினார். சாரா ஜோசப்பும் கிரேசியும் சந்திரமதியும் பெண்மையவாதம் சார்ந்த பார்வையுடன் கதைகளை எழுதினார்கள். அவை நவீனத்துவத்தின் பெரும் வீச்சில் கவனிக்கப் படாமற் போயின.

நவீனத்துவத்துக்குப் பிந்தைய காலப் பகுதியை மலையாளச் சிறுகதையின் தேக்க காலம் என்று சொல்லலாம். ஒரு புதியதலைமுறை சிறுகதை எழுத்தில் கவனம் செலுத்தியது. சதீஷ்பாபு பையன்னூர், எம்.ராஜீவ்குமார், அசோகன் சருவில், பாபு குழிமற்றம், பி.சுரேந்திரன், என். பிரபாகரன், கே.பி.ராமனுண்ணி, டி.வி.கொச்சுபாவா, வி.ஆர் சுதீஷ் என்று குறிப்பிடத் தகுந்த பெயர்கள் தென்பட்டாலும், சராசரிக்கு மேம்பட்ட கதைகளையே இவர்கள் எழுதியிருந்தாலும் அவை மறுமலர்ச்சிக் கால எழுத்துக்களைப் போலவோ, நவீனத்துவக் கால ஆக்கங்கள் போலவோ அழுத்தமான பாதிப்புகளை ஏனோ உருவாக்கவில்லை.

தொண்ணூறுகளுக்குப் பின்வந்த தலைமுறையின் பங்களிப்புத்தான் மலையாளச் சிறுகதையை மீண்டும் கவனத்துக்குரிய வடிவமாக நிறுவியது. சுபாஷ் சந்திரன், தாமஸ் ஜோசப், சந்தோஷ் எச்சிக்கானம், பி.முரளி, உண்ணி ஆர், பிரியா ஏ.எஸ்.சி.எஸ். சந்திரிகா, கே,ரேகா, ஈ.சந்தோஷ்குமார், எஸ்.சிதாரா, கே.ஆர்.மீரா, இந்து மேனோன் என்று அறிமுகமான தலைமுறை சிறுகதைக்குப் புதிய களங்களையும் புதிய நுட்பங்களையும் அளித்திருக்கிறது. தலித் வாழ்க்கையைச் சொல்லும் கதைகளை சி.அய்யப்பன் எழுதி இன்னொரு கிளைவழியை அமைத்தார். இந்த வரிசையில் இன்னும் சில பெயர்களையும் குறிப்பிட முடியும். .

தொகுப்புக்குள் நுழையும் வாசகனுக்கு உதவக் கூடும் என்று எண்ணத்தில் இந்தக் குறிப்புகள் முன்வைக்கப் படுகின்றன. இவை விமர்சனக் குறிப்புகள் அல்ல. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக மலையாளச் சிறுகதை இலக்கியத்தை வாசிப்பில் பின் தொடரும் வாசகனின் குறிப்புகள். இது முற்றான பட்டியலும் அல்ல.

@

இனி இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் பற்றி.

கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முன்னர் குறிப்பிட்ட வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் இவை. வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை. அதனாலேயே மொழிபெயர்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவை. ஏதேனும் போக்கையோ காலத்தையோ பிரதிபலிப்பவையாகவோ அல்லது எழுதப்பட்ட மொழியின் மிகச் சிறந்த கதைகளாகவோ இவை அமையும் வாய்ப்பு இல்லை. அவ்வப்போது வெளியான கதைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமெ இந்தத் தொகுப்பின் முறையியல். நான் படித்துச் சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் ஈர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அதை உருவாக்கிய படைப்பாளியின் எழுத்தாளுமையைச் சிறிதாவது வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையுமே இந்தத் தொகுப்பின் முறையியலாகக் கருதப்படலாம்.

இந்தக் கதைகள் முன்னரே அச்சிதழ்களிலும் இணையப் பத்திரிகைகளிலும் வெளியானவை. இவ்விரு ஊடகங்களின் தேவையையொட்டி வெளியானவை. எனினும் கதைத் தேர்வு என் விருப்பம் சார்ந்தே அமைந்தது. ஏற்கனவே செய்து வைத்திருந்த தமிழாக்கங்கள்தாம் பொருத்தமான தருணத்தில் ஊடகங்களில் வெளி வந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் கதை அவரது நூற்றாண்டையொட்டி 'காலச்சுவடு' இதழில் வெளியானது. டி.பத்மநாபனின் கதை 'இந்தியா டூடே' இலக்கிய மலரில் வெளியானது. எழுத்து முறையால் வாசிப்பில் இடம் பிடித்த கதை 'தூது'. கதையைப் புரிந்து கொள்வதற்காகத் தமிழாக்கம் செய்து வைத்துக் கொண்டேன். நண்பர் ராஜமார்த்தாண்டன் அதை ' தினமணி கதிர்' இதழில் வெளியிட்டார். சிவசங்கரியின் இலக்கியம் மூலம் இந்தியாவை இணைக்கும் திட்டத்தின் கீழ் கதிரில் வெளியான சேதுவின் நேர்காணலுக்கு உபரி மதிப்பாக அதே பத்திரிகையின் அடுத்த இதழில் கதையின் மொழிபெயர்ப்பும் வெளிவந்தது. அவருடைய 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - (முதல் தொகுப்பு: தென்னிந்திய மொழிகள்' நூலிலும் இடம் பெற்றுள்ளது. மாதவிக் குட்டி. சக்கரியா, பி.முரளி, உண்ணி ஆர். ஆகியவர்களின் கதைகள் 'உயிர்மை'யில் வெளிவந்தவை. கீதா ஹிரண்யன், கே.ஆர்.மீரா, சி.எஸ்.சந்திரிகா, தாமஸ் ஜோசப், இந்து மேனோன் கதைகள் 'தோழி' இணைய இதழில் பதிவேற்றம் செய்யப்பட்டன. திவாகர் ரங்கநாதனின் தூண்டுதல்தான் அதற்கு மூலகாரணம். மொழிபெயர்ப்புக்கு பத்துக் கதாசிரியர்களும் மனமுவந்து அனுமதியளித்தார்கள். அமரர்களாகிவிட்ட பஷீரிடமும் கீதாவிடமும் அனுமதி பெற முடியவில்லை. அவர்கள் சார்பாக குடும்பத்தினர் இசைவு தெரிவித்தார்கள். இந்தப் பன்னிரண்டு கதைகளையும் வாசித்துக் கருத்துகளையும் திருத்தங்களையும் சொன்னவர் கே.என்.செந்தில். உதிரியாக கிடந்த இந்தக் கதைகளைத் திரட்டித் தொகுக்கும் யோசனையைத் தெரிவித்ததுடன் அதை நூலாகவும் வெளியிடுகிறார் மனுஷ்யபுத்திரன். இவர்கள் அனைவரின் ஆதரவுக்கும் மனதை ஒற்றைச் சொல்லில் மொழிபெயர்த்து முன்வைக்கிறேன் -' நன்றி'.

நான் நீ மீன் - கலாப்ரியா தொகுப்பு வெளியீடு

$
0
0















எல்லாருக்கும் வணக்கம்.
நண்பர் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வெளியிடப்பட்ட 'நான் நீ மீன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்து என்னுடைய பேச்சைத் தொடர விரும்புகிறேன். 'மந்திரச் சிமிழ்' என்ற கவிதை எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் - அது கவிதையாக இருக்கிறது. கவிதையல்லாத நிறைய சமாச்சாரங்களுக்கு இடையில் ஒரு கவிதையை வாசிக்கக் கிடைத்த மகிழ்ச்சியால் பிடித்துப் போனது. இரண்டாவது காரணமும் இருக்கிறது. சுய நலமான காரணம். அது என்னவென்பதைக் கவிதையை வாசித்து முடிப்பதற்குள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இனி கவிதை.

இதை
வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா,
எனில் நீங்கள்தான்
ஏழு கடல்தாண்டி
ஏழுமலைதாண்டி
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
சிமிழ் தேடிப் போகும் இளவரசன்.

முதல் கடலின் கரையில்
நம்பிக்கையளிக்கும் விதமாய்
'உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது' என்கிறது
பிரமிளின் வண்ணத்துப் பூச்சி

மலையேறி இறங்கிக்
கடலேகும் முன் கழிமுகத்தில்
அள்ளிப் பருகிய நீரில்
சுகுமாரன் கை கவிழ்த்த நீரும்
கலந்திருக்கிறது

கானகமொன்றின் இசை
உங்கள் முகம் கை கழுத்தைத்
தழுவி உவகையுறுகிறது
நகுலனின் அம்மா என
'நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்' என
அவர் காதில் விழும் குரலை
நீங்களும் செவியுறுகிறீர்கள்
அது அவரது அம்மாவா
கொல்லிப் பாவைகளா

தீவை விட்டுத் தெப்பத்தை
அலையுள் சரிக்கும்பொழுது
கரையில் வேறெதுவும்
செய்ய முடியாமல்
ஒதுங்கப் பாடை நிழலுமின்றிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஞானக்கூத்தனின் நாய்

தெப்பம் சிதையக்
கடலுக்குக் கீழ்
ஓட்டமும் நடையுமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
தேவதச்சனின் அன்பின் சிப்பிகள்

பொன்னிலைகள் ஆபரணமாய் உதிர்ந்து கிடக்கும்
மரத்தின் கழுத்தைக் காலடி எனக் கற்பித்து
இளைப்பாறியதை நினைக்கக்
கவ்விக்கொள்ளும் தேவதேவனின் வெட்கம்

கண்டு கொள்கிறீர்கள்
பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஜோடிக் கண்களென
இரண்டு வண்டுகளைச் சிமிழுக்குள்
எதில் மந்திரவாதியின் உயிர்

படைப்பின் மகத்துவம் புரிந்த
வாசகன் நீங்கள்
கொல்ல மனமின்றி
இரண்டையும் தப்பவிட்டு
மறுபடியும் தேடத் துவங்குகிறீர்கள்
இம்முறை என்னோடு.
@
நண்பர்களே, இன்று இங்கே தங்களுடைய புதிய தொகுப்புகளை வெளியிட்ட இரண்டு கவிஞர்களுடனும் எனக்குத் தொடர்பும் உறவும் இருக்கிறது. கலாப்ரியா, அய்யப்ப மாதவன் இரண்டு பேருடைய தலா ஒரு தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். அந்த அடிப்படையில் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாகவே கவிதை பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. கவிதை ஆர்வலனாக நான் வாசிக்கிற சிந்திக்கிற யோசிக்கிற மொழியில் கவிதை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி. கவிஞனாக நானும் அதே மொழியில் எழுதுகிறவன். அதனால் கவிதையைப் பற்றிய பேச்சு நான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுகிற மகிழ்ச்சி. ஆனால் எல்லா சமயத்திலும் கவிதையைப் பற்றி மகிழ்ச்சியாகவே பேசிவிட முடிவதில்லை.

தமிழில் இன்று ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. அதை விட அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் இருக்கிறார்கள்.எல்லாக் கவிதைகளையும் எல்லாக் கவிஞர்களையும் பற்றிப் பேசப் பேராசை இருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. சில கவிதைகளைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய அறிவுக்கு நல்லது. சில கவிஞர் களைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய வளர்ச்சிக்கு உதவும். சில கவிதைகளையும் சில கவிஞர்களையும் பற்றிப் பேசாமலிருக்கலாம். அது நம்முடைய உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது. அண்மையில் கவிஞர் ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவருடைய வெளிவரவிருக்கும் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்டார். ஏற்கனவே முன்னுரைக் கவிஞன் என்ற நற்பெயரைப் பெற்று விட்டேன். அதனால் இனிமேல் யாருக்கும் முன்னுரை எழுதுவதாக இல்லை. மன்னிக்கவும் என்றேன். மறுமுனையிலிருந்து வசவுமழை பெய்யத் தொடங்கியது. இதுவரை நான் முன்னுரை எழுதிய கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு அதையெல்லாம் விட மோசமான கவிதையைத் தான் எழுதவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டார். அவர் பேசியது வெளிநாட்டிலிருந்து என்பதால் தப்பித்தேன். உள்ளூராக இருந்தால் அவர் பேச்சில் தெரிந்த ஆவேசத்துக்கு என்னை தேக உபத்திரவம் செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை. அதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.கவிஞன் என்று அறியப்பட கவிதை மட்டும் எழுதினால் போதாது காட்டுக் கூச்சல் போடவும் தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய கவிதைகள் மூலமாகவே தன்னை நிறுவிக் கொண்டவர் கலாப்ரியா. எழுத வந்த நாள் முதல் இன்றுவரை அவரைப் பின் தொடர்பவனாகவே இருக்கிறேன். அதிகம் பேச வாய்ப்புத்தரும் கவிதைகளை எழுதியிருப்பவர். கவிதைகளைப் பற்றி விரிவாக ஒரு முன்னுரையிலும் சுருக்கமாக இரண்டு மேடைகளிலும் பேசியிருக்கிறேன். இங்கே பேசக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. அதற்குக் காரணமும் அவர்தான். நினைவின் தாழ்வாரங்கள் என்ற அவருடைய புத்தகத்தின் முன்னுரையில் ஒரு வாசகம் இருக்கிறது. 'பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரணனாகிய நான்' என்று ஒரு வாசகம். அந்த வாசகத்தைப் படித்த பிறகு அவரைப் பற்றிப் பேச ஒருவிதமான தயக்கம் வந்து விட்டது. யோசித்துப் பார்த்தால் எழுதுகிற எல்லாரும் பாராட்டை மட்டுமே விரும்புகி றவர்கள்தான். அதை அவர்கள் அவ்வளவு வெளிப் படையாகச் சொல்லு வதில்லை. கலாப்ரியா சொல்கிறார். அந்தப் பாசாங்கு இல்லாத தன்மைதான் அவருடைய இயல்பு. அவரது கவிதைகளின் இயல்பு.

நவீனக் கவிஞர்களில் தீர்க்கதரிசி கலாப்ரியா என்று நினைக்கிறேன். இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளைப் பற்றி மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஆருடம் எழுதியவர் .

'படிம
உருவக
குறியீட்டு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ
எப்போது தியானிக்கப் போகிறாய்? என்பது அவர் கவிதை. இன்று எழுதும் புதியவர்கள் இந்த தியானத்தைத்தான் கவிதையில் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் 'திறந்த கவிதைகளாக' plain poetry ஆக இருப்பவை. கலாப்ரியாவைப் படித்துத்தான் இதைச் செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை.கவிதை ஆக்கத்தில் நிகழும் தொடர்ச்சியாக இதைச் சொல்லலாம். அதற்கு உந்துதல் கொடுத்த கவிஞர்களில் ஒருவர் கலாப்ரியா.

கலாப்ரியா கவிதைகளில் நான் முக்கியமானதாகக் கருதுவது மூன்று அம்சங்களை.

ஒன்று; காட்சிப்படுத்துதல்.நான்கைந்து காட்சிகளை ஒன்றின் பின் ஒன்றாகவோ பக்கம் பக்கமாகவோ முன்னும் பின்னுமாகவோ அடுக்கி வைத்து விட்டுக் கவிதை என்கிறார். வாசிக்கவும் வாசித்ததும் இதைப் போல நாமும் எழுதி விட முடியுமே என்று சுலபமாக எண்ணவைக்கிற கவிதையாக்கம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அந்தக் காட்சிகளின் தேர்வில் அவர் காட்டுகிற கவனமும் அவை ஒன்று சேரும்போது பொருள்தருவதாக அமைவதும்தான் கவிதையாக மாறுகிறது.

இரண்டாவது: நவீன கவிதையில் ஒரு இடத்தின் சித்திரமும் அங்கே வாழ்பவர்களின் சூழலையும் சித்தரித்தவர் கலாப்ரியா. ஒரு சமூகத்தின் அகப் பிரச்சனைகளை அவர் அதிகம் ஆராயவில்லை. புறத் தோற்றங்களைச் சார்ந்து அந்த சமூகத்தின் அந்த மனிதர்களின் இருப்பைப் பற்றிச் சொல்லி யிருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் அந்த மாதிரியான ஒரு கவிதை இருக்கிறது. வீடுகளையொட்டிய வாய்க்காலில் நல்ல நீர் ஓடியபோது அதை எல்லாரும் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் வாழைமட்டையில் தெப்பம் செய்து விளையாடுகிறார்கள். காலப்போக்கில் வாய்க்கால் சாக்கடையாக மாறுகிறது. நீர் தேங்குகிறது. அதில் பிணம் மிதக்கிறது. இப்போதும் எல்லாரும் கழியுடன் சாக்கடையை நெருங்குகிறார்கள். மிதக்கிற பிணம் தங்கள் வீட்டு எல்லைக்குள் வந்து விடக் கூடாது என்று கழியால் தள்ளி விடுகிறார்கள். 'வளர்ச்சி' என்ற கவிதை இது. இந்தச் சித்திரமும் அதற்குள் இருக்கும் கதைத்தன்மையும் தான் கவிதை ஆகின்றன. இது அவர் கவிதைகளில் முக்கியமான அம்சம். கலாப்ரியா சிறுகதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் எழுதாமல் விட்ட பல சிறுகதைகள்தாம் அவரிடம் கவிதையாகியிருக்கின்றன.

மூன்றாவது: தமிழ்க் கவிஞர்களில் வாசகர்களின் பங்களிப்பை அதிகம் கேட்கிற கவிஞர் கலாப்ரியா. வாசகனை சக கவிஞனாக்குபவை அவரது கவிதைகள். நான்கைந்து காட்சிகளை முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விடுகிறார். அவற்றை இணைக்கிற வேலை வாசகனுடையது. அவன் அதைச் செய்கிறபோதுதான் கவிதை முழுமையடைகிறது.

இப்படி நிறையப் பேச இடமளிப்பவை கலாப்ரியாவின் கவிதைகள். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருபவர். அவருடைய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு 2000 ஆவது ஆண்டில் தமிழினி வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகும் இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. post complete collection வரிசையில் இந்த 'நான் நீ மீன்'மூன்றாவது தொகுப்பு. மூன்று தலை முறைகளைத் தாண்டியும் பேசப்படும் பெயராகக் கலாப்ரியா இருப்பது அவருடைய வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 'பெயர்களின் நிழலை அழிய விடுவதில்லை ஒளி' என்று இந்தத் தொகுப்பில் ஒரு கவிதையில் அவரே குறிப்பிடுகிறார்.

பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கலாப்ரியா சம்பந்தப்பட்டதுதான்.அவருடைய 'வனம் புகுதல்' தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். முன்னுரையை எழுதி அவருக்கு அனுப்பிய பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 'இந்த முன்னுரையில் 37 இடங்களில் 'கலாப்ரியா' என்று என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்க சந்தோஷமாக இருக்கிறது' என்று எழுதியிருந்தார். படித்ததும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, ஒருவன் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ஆளின் கவிதைகளை வாசித்து, அரை மாதம் குறிப்பெடுத்து, ஐந்தாறு நாள் வார்த்தை வார்த்தையாகத் திரட்டி பத்து பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அந்த ஆள் இத்தனை இடத்திலே என் பேர் வந்திருக்கு என்று பதில் எழுதிறாரே என்று இருந்தது. யோசித்துப் பார்த்த போது இந்த 'சௌந்தர்யக் கிறுக்குதானே கவிதைக்கு அடிப்படை' என்ற ஞானம் வந்தது. சிரித்துக் கொண்டேன். இந்தப் பேச்சிலும் 'கலாப்ரியா' என்ற பெயரை 15 முறை மனநிறைவுடன் குறிப்பிட்டிருக்கிறேன் என்ற அறிவிப்புடன் என் பேச்சை நிறைவு செய்கிறேன். எல்லாருக்கும் வணக்கம். நன்றி.

ஏழு கவிதை நூல்கள் - காலச்சுவடு வெளியீடு

$
0
0
நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம். இன்று இங்கே காலச்சுவடு பதிப்பகம் ஏழு கவிதை நூல்களை வெளியிடுகிறது. இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. நானும் கவிதை எழுதுகிறவன் என்பதால் இந்த நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் கொடுக்கிறது. ஏனென்றால் இதன் மூலம் கவிதை மீது கவனம் செலுத்தப் படுகிறது. கவிதைக்கான இடம் உறுதி செய்யப்படுகிறது. பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு 'இப்போதெல்லாம் யாரும் கவிதைகளை வாசிப்பதில்லை' என்பது. பதிப்பாளர்கள் சொல்லும் குறை 'கவிதை நூல்கள் விற்பனையே ஆவதில்லை' என்பது. இந்தக் குற்றச் சாட்டிலும் குறை கூறலிலும் உண்மை இருக்கலாம்.

இருந்தாலும் கவிதை நூல்கள் தொடர்ந்து வெளியாகின்றன. காலச்சுவடு பதிப்பகம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடும் ஏழு நூல்கள் உட்பட மொத்தம் பதினோரு நூல்களை இந்தப் பருவத்தில் வெளியிடுகிறது. இது ஒரு பதிப்பகத்தின் கணக்கு. இதே போல பிற பதிப்பகங்களும் குறைந்த பட்சம் ஐந்து அதிக பட்சம் பத்து என்ற எண்ணிக்கையில் கவிதை நூல்களை வெளியிடுகின்றன. கவிதை நூல்களை வெளியிடுவது தவிர்க்க முடியாதது என்றோ அல்லது அப்படி வெளியிடுவது அந்தப் பதிப்பகத்தை மதிப்புக் குரியதாக்குகிறது என்றோ நாம் எடுத்துக் கொள்ளலாம். காரணம் எதுவானாலும் இவ்வளவு கவிதைப் புத்தகங்கள் வெளியிடப்படுவது கவிதைக்கான இடம் பத்திரமாக இருக்கிறது என்பதை, கவிதை வாசிப்ப வர்கள் என்ற இனம் அழிந்து விடவில்லை என்பதைக் காட்டுகிறது.

இங்கே ஏழு கவிஞர்களின் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன. இளங்கோ கிருஷ்ணனின் 'பட்சியன் சரிதம்', பூமா ஈஸ்வரமூர்த்தியின் 'நீள்தினம்' இசையின் 'சிவாஜி கணேசனின் முத்தங்கள்', குவளைக்கண்ணனின் 'கண்ணுக்குத் தெரியாததன் காதலன்', தேவேந்திர பூபதியின் 'ஆகவே நானும்' , லாவண்யா சுந்தரராஜனின் 'இரவைப் பருகும் பறவை' மண்குதிரையின் ' புதிய அறையின் சித்திரம்' - ஆக ஏழு தொகுப்புகள். இந்த தொகுப்புகளையும் முதல் வாசகனாக ஒருமுறை வாசித்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் நண்பர்கள் பேச இருக்கிறார்கள். எனவே ஒட்டு மொத்தமாகப் பார்த்தபோது இந்தத் தொகுப்புகள் ஏற்படுத்திய சில எண்ணங்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இவை இந்தக் கவிதைகளைப் பற்றிய என்னுடைய பார்வையோ விமர்சனமோ அல்ல. வாசிப்பின்போது தென்பட்ட சில சுவாரசியமான செய்திகள், ஒப்பிட்டுப் பார்த்தபோது கண்டுபிடித்த சில விஷயங்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழு தொகுப்புகளில் ஒன்று மட்டுமே பெண் எழுதியது. 'இரவைப் பருகும் பறவை'யை எழுதிய லாவண்யா சுந்தரராஜன்.ஆறு பேருக்கு இது அவர்களுடைய முதல் தொகுப்பல்ல. லாவண்யா, இளங்கோ கிருஷ்ணன் ஆகியவர்களுக்கு இது இரண்டாவது தொகுப்பு. இசைக்கும் குவளைக் கண்ணனுக்கும் மூன்றாவது தொகுப்பு. தேவேந்திர பூபதியின் ஐந்தாவதும் பூமா ஈஸ்வர மூர்த்தியின் ஆறாவதும் தொகுப்புகள் இங்கே வெளியிடப்படுபவை. இந்த அறிமுகங்களுக்கு இடையில் புது முகம் மண்குதிரை. 'புதிய அறையின் சித்திரம்' அவருடைய முதல் தொகுப்பு.

இவ்வளவு கவிஞர்கள் தொடர்ந்து எழுத முடிகிறது என்றால் தமிழ்க் கவிதை முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கவிஞர்கள் அந்த ஆரோக்கியத்தை மேலும் கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக இந்த என் சக கவிஞர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள். இந்தப் பட்டியலில் கடைக் குட்டியான மண்குதிரைக்கு பிரத்தியேக வாழ்த்துகள்.

நூலில் உள்ள ஆசிரியர் பற்றிய குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கவிஞர்களின் வயதை ஒட்டி ஒரு வரிசை உருவானது. பூமா ஈஸ்வரமூர்த்தி, குவளைக்கண்ணன், லாவண்யா சுந்தரராஜன், இசை, இளங்கோ கிருஷ்ணன், மண்குதிரை என்று வயது வாரியான வரிசை. இதில் வயதைச் சொல்லாத ஒரு கவிஞரும் இருக்கிறார். ஆக அவரே இந்தப் பட்டியலில் மிகவும் இளைஞர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். நண்பர் தேவேந்திர பூபதிக்கு அவரது நித்திய யௌவனத்துக்குப் பாராட்டுகள்.

கவிதை வாசித்தால் போதாதா, கவிஞரின் வயதைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் இல்லை என்றுதான் நானும் சொல்வேன். ஆனால் தெரிந்து வைத்திருப்பது ஒரு தூண்டுதலுக்கு உதவும் என்றும் சொல்வேன். என் வயது ஐம்பத்து நான்கு. இந்த மூப்பின் சலுகையில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. முப்பத்து ஒன்பது வயது கூட நிறைவடையாமல் மறைந்துபோன ஒரு ’சின்னப் பைய’னிடமிருந்துதான் நம்முடைய நவ கவிதை ஆரம்பமாகிறது. அவன் எழுதியது போன்ற நாலு வரியை எழுதி விட முடியாதா என்ற உந்துதல்தான் நமது கவிதை உலகத்தை சுழலச் செய்கிறது. அவன் மகா கவியா இல்லையா என்று இன்றும் விவாதம் நடக்கிறது. அது ஓர் இலக்கு. அதை நோக்கித்தான் தமிழ்க் கவிதை முன்னேறுகிறது. நாற்பது வயசுக்குள் ஒருவன் நிகழ்த்திய சாதனைக்கு எட்டவாவது நம்மால் ஐம்பது அறுபது எழுபது வயதிலாவது நெருங்க முடியுமா என்பதுதான் இந்த மொழியில் எழுதும் யாருக்கும் கனவாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

இதைச் சொல்லும்போது அண்மையில் வாசித்த ஒரு புத்தகத்தின் பக்கங்கள் நினைவுக்கு வருகின்றன. பழைய புத்தகம்தான். 'மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்' என்ற தலைப்பில் தி.முத்துக் கிருஷ்ணன் எழுதியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1986 இல் வெளியிட்ட புத்தகம். பாரதியின் வாழ்க்கையை அவருடைய கவிதைகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் உருவாக்கும் முயற்சி இந்தப் புத்தகம். இதைப் பலமுறைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். சிலமுறை வாசித்திருக்கிறேன். இப்போது வாசித்தபோது ஒரு நிகழ்ச்சி பற்றிய குறிப்பு மனதில் பதிந்தது. புதுச்சேரி வாழ்க்கைக் காலத்தில் பாரதியின் இருப்பில் 1916 மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடந்த உல்லாச சபையில் கவிதை பற்றிய விவாதம் அது.

குண்டுராவ் என்பவர் சொல்கிறார்.

'பெல்ஜியம் தேசத்திலே எமில் வெர்ஹேரன் என்ற கவி இருக்கிறார். அவருடைய கவிதை புது வழியாக இருக்கிறது என்று பத்திரிகையிலே வாசித்தேன். எப்படி என்றால் இதுவரை உலகத்துக் கவிதைகள் நமது நவீன நகரங்களிலுள்ள யந்திர ஆலைகள் மோட்டார் வண்டிகள் முதலிய வஸ்துக்களைக் கவிதையில் சேர்ப்பதில்லை.இந்த வஸ்துக்களில் அழகில்லையாதலால் கவிதையிலே சேர்க்கத் தகாதென நினைத்துக் கொண்டிருந்தார்கள். காற்று, வானம் நீர் மலை பெண் செல்வம் மது தெய்வம் தவம் குழந்தைகள் முதலிய அழகுடைய வஸ்துக்களையே கவிகள் வர்ணிப்பது வழக்கம். எமில் வெர்ஹேரனுடைய கொள்கை யாதென்றால் வலிமையே அழகு. ஒரு பொருளின் வெளி உருவத்தைப் பார்த்து அது அழகா இல்லையா என்று தீர்மானம் செய்யலாகாது. யந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றன. ஆதலால் அவை அழகுடையன. அவற்றைக் கவி புகழ்தல் தகும்.

இதற்குப் பாரதியின் பதில்.

வலிமை ஓர் அழகு. அழகு ஓர் வலிமை. யந்திர ஆலை.நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத்தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகுதான். உயர்ந்த கவிகள் வலிமையுடைய பொருள்களை அவ்வக் காலத்தில் வழங்கிய வரையில் வர்ணித்தே இருக்கிறார்கள். இதிலே புதுமையொன்றுமில்லை. வலிமைக் கருவிகள் சில இப்போது புதுமையாகத் தோன்றுகின்றன. இவற்றை ஐரோப்பியக் கவிகள் விலக்கி வைத்தது பிழை. ஆனால் பழைய தெய்வத்தையும் இயற்கையையும் மறந்து யந்திரங்களைப் பாடத் தொடங்கினால் கவிதை செத்துப் போய்விடும்.

இந்தப் பகுதியைப் படித்தபோது இரண்டு நிலையில் வியப்பு ஏற்பட்டது. இன்றைக்கு நமக்கு இருக்கும் அறிவுத் தேடலுக்குரிய வசதிகள் எதுவும் இல்லாமலிருந்த காலத்தில் ஒரு தமிழ்க் கவிஞன் அயல்மொழிக் கவிதை பற்றிக் கொண்டிருந்த கருத்து முதலாவது ஆச்சரியம். தகவல் தொடர்புகள் எளிதானவையாக இருக்கும் இந்தக் காலம் வரைக்கும் கூட எமில் வெர்ஹேரன் என்ற கவிஞரைப் பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று வெட்கம் வந்தது.வெட்கத்திலிருந்து விடுபடுவதற்காக வெர்ஹேர்னைப் பற்றிய தகவல்களைத் தேடத் தொடங்கினேன்.

பாரதி பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்ட வெர்ஹேரன் பிரெஞ்சு மொழியில் கவிதைகள் எழுதியவர். சிம்பலிசத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.கிட்டத் தட்ட பாரதியின் சமகாலத்தவர். 1911இல் நோபெல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் படவிருந்து வாய்ப்பை இழந்தவர். புதுச்சேரி போன்ற உலகத்தின் இந்தக் கோடியில் இருந்த ஒரு கவிஞன் எட்டாத் தொலைவில் இருந்த இன்னொரு கவிஞனை அடையாளம் கண்டு கொண்டது வியப்பை அதிகமாக்கியது. பாரதியின் மழை, காற்று ஆகிய கவிதைகள் வெர்ஹேரனின் பாதிப்பில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றியது. வெர்ஹேரனின் கவிதை இயல்பை இந்த உதாரணத்தை வைத்துச் சொல்லலாம். 'ஒரு பழைய ஆலை மெல்லிய வெளிறிய பாசியுடன் குன்றின் மேல் தெரிகிறது ஒரு திடீர் மருபோல'என்பது வெர்ஹேரனின் கவிதையில் ஒரு வரி. ஒரு தகவலுக்காக மட்டுமே இது.

பாரதியின் வாதத்தையொட்டி யோசித்தபோது இன்றைய கவிதைக்கும் அது பொருந்துவதாகவே பட்டது. இது இரண்டாவது நிலையில் ஏற்பட்ட வியப்பு. கவிதையின் உள் தளத்தில் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற இரண்டு தன்மைகள் இருப்பதாக யோசிக்க முடிந்தது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தன்மை கவிதையை நிர்ணயிக்கிறது. நேற்றைய கவிதையின் பிரச்சனை எதைச் சொல்வது என்பதாக இருந்திருக்கலாம். இயற்கையை,
வாழ்வின் சிக்கலை, அறம் சார்ந்த தடுமாற்றங்களைச் சொல்வதாக இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் சொல்லியாகி விட்ட பின்னர் என்ன செய்வது? உதாரணத்துக்குப் பெண்களின் நிலையைக் கவிதையில் சொல்லலாம். சரி,சொல்லியாகி விட்டது. தொடர்ந்து அதையே சொல்லிக் கொண்டிருப்பதா கவிதையின் பணி? இந்தக் கேள்விக்கு விடை காண்பதுதான் இன்றைய கவிதையின் சிக்கல். எதைச் சொல்வது என்பதல்ல; எப்படிச் சொல்வது என்பதுதான். பெண்களின் நிலையை எப்படிச் சொல்வது என்பதில்தான் பல குரல்களும், பல நிறங்களும் பல கோணங்களும் உருவாகின்றன. இந்தத் தன்மைதான் கவிதையை என்றும் புத்துணர்வோடு வைத்திருக்கிறது. கவிதை எப்போதும் புதுமையை நாடி நிற்கும் இலக்கியத் துறை. புதிய மொழியை, புதிய உணர்வை, புதிய நடையைப் பிடிவாதமாகக் கோரும் துறை. முன்னோடிகளின் நடையிலோ அவர்கள் மொழியிலோ அவர்கள் உணர்வு சார்ந்தோ இன்றுள்ள கவிஞன் எழுத முடியாது. இது இயற்கையின் கட்டாயமும் கூட. எந்தச் செடியிலாவது நீங்கள் பழைய பூவைப் பார்த்திருக்கிறீர்களா?

எப்படிச் சொல்வது என்பதில் மேலும் சில சிக்கல்கள் ஒளிந்திருக்கின்றன. கவிதைக்கான ஒரு விஷயத்தை யோசிக்கும் போதே அதில் உங்கள் அனுபவம் என்ன? உங்கள் பார்வை என்ன? உங்கள் சார்பு என்ன? எவ்வளவு தூரம் உண்மையாக அந்த விஷயத்தைக் கவிதையாக்கப் போகிறீர்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளைக் கடந்துதான் கவிதையாக்கம் நிகழ்கிறது. அதனால்தான் கவிதை இன்னும் கவிதையாக இருக்கிறது; அதன் இடம் பத்திரமாக இருக்கிறது. எப்படிச் சொல்வது என்பது முக்கியமானதாக இருப்பதனால்தான் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன. இத்தனை கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஓர் உதாரணம் சொல்லலாம். ஈழப் பிரச்சனையை எழுத ஒரு கவிஞர் போதும். அதை எப்படிச் சொல்வது என்ற கேள்வி முளைக்கிறபோதுதான் இத்தனை கவிதைகள். இந்தப் புதுமைதான் மொழியை வளப்படுத்துகிறது.வாழ்க்கையை விளக்க முயற்சி செய்கிறது என்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் பேசியதன் அடிப்படையில் இங்கே வெளியிடப்படும் நூல்களில் கவிதை எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்க விரும்புகிறேன். இது இந்தக் கவிதைகள் பற்றிய திட்டவட்டமான கருத்து அல்ல. இவற்றை அறிமுகப்படுத்துகிற வாசகங்கள் மட்டுமே.

பூமா ஈஸ்வர மூர்த்தி அன்றாட நிகழ்வுகளில் மறைந்திருக்கும் எளிய ரகசியங்களைப் பிரபஞ்ச அளவில் விரித்துப் பார்க்கிறார்; 'சிறு துளி நீர் எறும்புக்குப் பெருமழையாகிறது' அவரிடம். குவளைக் கண்ணன், எளிய செயல்களில் அவை கொண்டிருப்பதைத் தாண்டிய பொருளைத் தேடுகிறார், 'நகரத்தில் மனிதர்களோடு மனிதர்களாக தெய்வங்களை வசிக்கச் செய்ய முடிகிறது' அவரால். லாவண்யா சுந்தரராஜன் எல்லாச் சொற்க¨ளையும் அன்பின் சுகந்த திரவியத்தால் துடைத்துத் தூய்மை செய்து முன்வைக்கிறார்; அவரது கவிதையில் 'பிரியங்களைப் பொழிவிக்கும் மழை பாறையென்றும் மண்ணென்றும் பார்ப்பதில்லை'. இளங்கோ கிருஷ்ணன் நேற்றைய வரலாற்றை இன்றைய சம்பவமாகவும் இன்றைய செயலை என்றைக்குமான தொன்மமாகவும் மாற்றுகிறார். கிரகோர் சம்சா என்ற விற்பனைப் பிரதி நிதியைக் கரப்பான் பூச்சியாக மாற்றினார் காஃப்கா. கரப்பான் பூச்சியை கிரகோர் சம்சாவாக அல்லல்பட வைக்கிறது இளங்கோ கிருஷ்ணன் கவிதை. கை நழுவிப் போன நற்கணங்களை மீண்டும் எதார்த்தமாக்க விரும்புகிறார் தேவேந்திர பூபதி. அவருடைய வயதைக் காலத்தின் குறுக்காகக் கடந்து போகும் உன்னில் அல்லது பெண்ணில் அளவிட்டுக் கொள்கிறார். கவிதையை ஆபத்தான கேளிக்கையாக மாற்றுகிறார் இசை. ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு அவருடைய கவிதை. இடம் காலம் உணர்வு எல்லாவற்றையும் இயற்கையின் சாயலில் முன்வைக்கிறார் மண்குதிரை. அவர் கவிதைக்குள் புயல் அதிர்ச்சியிலிருந்து மீளாத மரங்கள் முணு முணுத்துக் கொண்டிருக்கின்றன' பறவைகள் கம்பளி அணிந்து பறக்கின்றன.

இந்த ஏழு தொகுப்புகளிலுமாக மொத்தம் 356 கவிதைகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒருமுறை வாசித்திருக்கிறேன். சில கவிதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு உண்மை புலப்பட்டது. இந்த ஏழு கவிஞர்களும் இலக்காகக் கொண்டிருப்பது ஒரே வாசகனைத்தான். அவனிடம்தான் இவர்கள் சொல்லுவது வார்த்தையாகப் பொருள்பட்டு அவனுடைய புரிந்து கொள்ளலில் மீண்டும் கவிதையாக அனுபவமாகிறது. அந்த வாசகனுக்குப் பல்வேறு தோற்றங்கள். பல்வேறு இருப்புகள். இத்தனை கவிதைகளுக்கிடையில் அந்த வாசகன் கையை உயர்த்தி தானிருப்பதைக் காட்டுகிறான்.

வாழும் கணங்கள்

$
0
0
















திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் இதழியல் பட்டய வகுப்புக்கான தேர்வுத்தாளைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மனோரமா நாளிதழின் ஊழியரும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளருமான நண்பர் ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கினேன். அச்சு, புகைப்படம், தொலைக்காட்சி ஆகிய எல்லா ஊடகங்களுக்குமான வினாத்தாளை உருவாக்க வேண்டும். ஜெயச்சந்திரன் புகைப்படக் கலைஞர். மனோரமாவின் தலைமைப் புகைப்படக்காரர். சுந்தர ராமசாமி சிறு வயதில் வாழ்ந்த கோட்டயம் வீட்டை - குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் களம் - படமெடுத்தவர். எனவே போட்டோகிராபி பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் நல்லது என்பது அவர் விருப்பம். சம்மந்தமே இல்லாத துறை பற்றி என்ன கேள்வி எழுதுவது என்று தயக்கமாக இருந்தது. கூடவே புகைப்பட இதழியலைப் பாடமாக எடுத்துக்கொண்ட மாணவர்கள் யாருமில்லை என்பதும் யோசனையை நடைமுறைப்படுத்தத் தடையாக இருந்தது. யோசனையைச் சொன்னவரே கேள்வியையும் உருவாக்கித் தந்தார்.

'உலகின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் யார்? இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் யார்?'இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தேர்வெழுதிய மாணவர்களில் யாருக்கும் தெரியவில்லை. பத்து மாதங்கள் பாடம் படித்த அவர்களுக்கே தெரியாதபோது இரண்டு மூன்று நாட்கள் பாடத்திட்டத்தைப் புரட்டிப் பார்த்த எனக்கு எப்படித் தெரியும்? ' இல்லை, நான் புகைப்படக் கலை பற்றி இந்த மாணவ்ர்களுக்கு நடத்திய முதல் வகுப்பிலேயே அந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறேன்' என்றார் ஜெயச்சந்திரன். மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்காகத் தயாரித்து வாசித்த கட்டுரையின் படியையும் காண்பித்தார்.

மார்கரெட் வைட் போர்க்கே என்ற அமெரிக்கப் பெண்தான் உலகின் முதலாவது புகைப்படப் பத்திரிகையாளர் என்று பரவலாக நம்பப்படுகிறது.ஃபார்ச்சூன் பத்திரிகையில் பணியாற்றியவர். தகப்பனார் அச்சுத்துறையில் பொறியியல் வடிவமைப்பாளராக இருந்தவர். தாயார் பதிப்புத் துறையில் ஈடுபட்டிருந்தார்.மார்கரெட் பயின்றது ஊர்வனவற்றையும் நீந்துவனவற்றையும் பற்றிய உயிரியல் பாடங்களை. ஆனால் விருப்பம் புகைப்படத்துறையில். அந்தக் கலை மீது இருந்த ஆர்வம் காரணமாக வெவ்வேறு கல்வி நிலையங்களில் பயின்றார். கல்லூரி மலருக்காக அவர் எடுத்த புகைப்படங்கள் அவரை புகைப்படக்காரராக அறிமுகப்படுத்தின. அதற்கிடையில் திருமணமும் ஓராண்டுக்குப் பின்னர் மணவிலக்கும் நிறைவேறியது. அந்தக் காயத்தை ஆற்றிக்கொள்வதற்காக பத்திரிகைப் புகைப்படக்காரராக ஆனார். பொதுவாகப் பெண்கள் காலூன்றாத துறை. ஆனால் மார்கரெட் அதை அறைகூவலாக எடுத்துக்கொண்டார். உலகப்போர் மூண்டிருந்த அந்தத் தருணத்தில் புகைப்படக் கலைஞராக சோவியத் யூனியனுக்குப் போனார்.போர்க்களத்தில் அனுமதிக்கப்பட்ட சொற்பமான புகைப்படக்காரர்களில் அவரும் ஒருவர். சோவியத் யூனியனுக்குள் அனுமதிக்கப்பட்ட முதல் ஐரோப்பியப் புகைப்படக்காரரும் அவர்தான்.

தொடர்ந்து போரில் ஈடுபட்டிருந்த எல்லா நாடுகளிலும் மார்கரெட் காமிராவுடன் அலைந்தார்.அந்த அலைச்சல் அவரை லைஃப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞராக்கியது. போர்க்களக் காட்சிகள், நாஜி வதைமுகாமில் எடுத்த படங்கள் இன்றும் பெரும் ஆவனங்களாகக் கருதப்படுகின்றன. போர்க்கள வன்முறையைப் படம் பிடிப்பதை விட அதனால் நேர்ந்த பாதிப்புகளையே தன்னுடைய காமிராவில் சுருட்டினார். உறவிழந்த பெண்கள், தவித்து அழும் சிறார்கள், சாவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள், வதை முகாம்கள், யுத்த நாசங்கள், அழிவின் மிச்சங்கள் இவற்றை அவர் படமாக்கிய விதம் முன்னுதாரணமாக அமைந்தது. இந்தப் படங்களின் தொகுப்பை இரண்டு நூல்களாகவும் வெளியிட்டார். படங்களுக்கான குறிப்புகளை அவரது இரண்டாவது கணவரும் எழுத்தாளருமான எர்ஸ்கின் கால்டுவெல் எழுதினார். லைஃப் பத்திரிகையின் தலைமைப் புகைப்படக்காரராகப் பிரசித்தி பெற்றார் மார்கரெட். அந்தப் பிரசித்தியும் மார்கரெட்டின் சாகசக் குணமும் கால்டுவெல்லை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இருவரும் மணவிலக்குச் செய்துகொண்டார்கள். இரண்டாம் உலகப் போர் இறுதிக் கட்டத்தை எட்டிய காலப் பகுதியில் மார்கரெட் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1950 வாக்கில் பார்க்கின்சன் நோய் அவரைப் பீடித்தது.அதைப் பொருட்படுத்தாமல் ஆப்பிரிக்காவில் பணியாற்றச் சென்றார்.கொரியப் போர்முனைக்குப் போய் படங்களை எடுத்தார். 1971 ஆம் ஆண்டு தன்னுடைய அறுபத்தியேழாம் வயதில் மறைந்தார்.
இந்தத் தகவல்களை நண்பரின் கட்டுரையில் வாசித்தேன். கூடவே அவர் மார்கரெட் வைட்டின் தன்வரலாற்று நூலையும் கொடுத்தார் - 'என்னுடைய உருவப்படம்' (Portrait of Myself). அதிலிருந்த ஓர் உருவப்படம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. லைஃப் இதழில் வெளியான படம். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மிகப் பிரபலமான அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அதைப் படமாக்கியவர் யாரென்று கவனித்ததில்லை. அந்தப் புகழ் பெற்ற படத்தில் மகாத்மா காந்தி தியான மனோநிலையுடன் ராட்டை அருகில் அமர்ந்து சிரத்தையாக பத்திரிகை வாசிதுக் கொண்டிருக்கிறார் அந்த அபூர்வ கணத்தை நிரந்தமாக்கியவர் மார்கரெட் வைட்.

ஜெயச்சந்திரன் காண்பித்த இன்னொரு புகைப்படமும் அபூர்வமானது. லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிரிட்டிஷ் விமானத்தின் உட்பகுதி. உதடுகளில் பற்றவைக்கப்படாத சிகரெட்டுடன் உட்கார்ந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பிரிட்டிஷ் ஹை கமிஷனரான சைமனின் மனைவி உதட்டில் பொருத்தியிருக்கும் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறார்.

'இது இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் எடுத்த படம்' என்று ஜெயச்சந்திரன் விளக்கம் சொன்னார். கண நேர அசிரத்தையில் அந்தப் பெயர் நினைவில் தங்காமல் நழுவிப் போனது. கடந்துபோன மகளிர் தினத்தன்று அந்தப் படம் நினைவுக்கு வந்தது. ஒரு வித்தியாசமான கட்டுரைக்கான சங்கதி என்று ஆயத்தமானேன்.பெயரை மறந்த காரணத்தால் யோசனையைச் செயல்படுத்த முடியாமலாயிற்று. ஜெயச்சந்திரனையே தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். 'நேருவின் படத்தை எடுத்த அம்மணியின் பெயர் என்ன?' மறுநொடியே பதில் கிடைத்தது. 'ஹோமாய் வியாரவாலா - இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர். அவரைப் பற்றிய புத்தகத்தைக் கூட உங்களிடம் காண்பித் திருக்கிறேன்.கேமரா கிரானிக்கிள்ஸ் என்று பெயர்'. ஜெயச்சந்திரன் சொடுக்கிய பதில் ஞாபகத்தின் இருட்டில் வெளிச்சத்தைப் பரப்பியது. பெயர் தெரியவந்ததும் அகழ்வாராய்ச்சியில் இறங்கினேன்.

புகைப்படக்கலை இந்தியாவுக்கு அறிமுகமானது 1840இல். இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த மெக்கென்சி நில அளவை நடத்திய இடங்களையும் புராதன இந்தியக்கலைச் செல்வங்க¨ளையும் பதிவு செய்வதற்கு ஓவியத்தையே நம்பியிருந்தார். அஜந்தா குகைச் சிற்பங்களையும் புடைப்போவியங்களையும் கிட்டத்தட்ட அதே அளவில்ஓவியங்களாகவே தீட்டச் செய்திருந்தார். 1850வரை இதுதான் நடைமுறை. மெட்ராஸ் மிலிட்டரி சர்வீசில் பணியாற்றிய கேப்டன் ராபர்ட் கில் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுநேர ஓவியராக பாலங்களையும் சாலைகளையும் புராதனச் சின்னங்களையும் தீட்டித் தள்ளிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசால் அவருக்குஒரு காமிரா வழங்கப்பட்டது. அதை வைத்து அவர் எடுத்த முதல் படங்கள் எல்லோரா குகை ஓவியங்கள். ஆக அவர்தான் இந்தியாவின் முதல் புகைப்படக்காரர்.

சொற்ப காலத்துக்குள் கேமராக்கள் பரவலாயின. பிரிட்டிஷ்காரர்களும் மேல்தட்டு இந்தியர்களும் காமிராக்களுடன் திரிய ஆரம்பித்தார்கள். மேல்தட்டுப் பெண்களும் கேமராக்களுடன் உலாவினார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் குஜராத்தி பார்சி வகுப்பைச் சேர்ந்த பெண்ணான ஹோமாய். தகப்பனார் பார்சி, குஜராத்தி நாடக நடிகர். வறிய குடும்பம்.எனினும் ஹோமாயின் கலை ஆர்வத்தைப் பெற்றோர் ஊக்குவித்தனர். பம்பாய்ப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஜேஜே ஓவியப் பள்ளியிலும் படிக்க அனுப்பினர். கல்லூரிக் காலத்தில் மானெக்ஷா என்ற புகைப்படக் கலைஞரைக் காதலித்து மணந்தார். அவர்தான் ஹோமாய்க்குப் படமெடுக்கக் கற்றுக் கொடுத்தார். முதலில் அவர் எடுத்தவைமிகச் சாதாரணக் காட்சிகள்தாம். பம்பாய்ச் சாலைகளில் ஓடும் வாகனங்கள். கிளப்பில் கூடியிருக்கும் பெண்கள். அவற்றிலேயே ஹோமாய் தன்னையறியாமல் காமிராவை கலைக்கருவியாக்கியிருந்தார். மானெக்ஷாவுக்கு ஹோமாய் தன்னை விட நேர்த்தியான புகைப்படக்காரர் என்று விளங்கியது. பாராட்டுதலுடன் ஒத்துழைத்தார். ஹோமாயின் படங்களைப் பிரிண்ட் போட்டவர் அவர்தான்.

சுதந்திரப் புகைப்படக்காரராக இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் சேர்ந்தார் ஹோமாய். முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் அவருடைய காமிரா இருந்தது. பதவி உறுதி பெற்று டில்லிக்குக் குடிபெயர்ந்தார்கள் தம்பதியர். அது இந்திய வரலாற்றின் சாட்சியத்துக்கான தருணமாக மாறியது. உடுத்திய சேலையை சொருகிக் கொண்டு பெரிய ஸ்டாண்டுகளை ஒரு கையிலும் ஏரிபிளக்ஸ் காமிராவை இன்னொரு கையிலும் சுமந்து உலக வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்துக்கும் கண் கண்ட சாட்சியானார் ஹோமாய்.இருபதாம்நூற்றாண்டின் அரசியல் பிரபலங்களில் ஹோமாயின் விரல் சொடுக்கில் சிறைப்படாதவர்கள் அநேகமாக யாருமில்லை. மவுண்ட்பாட்டன் பிரபு, மார்ஷல் டிட்டோ, கென்னடி,குருசேவ், சூ யென்லாய். ஆனால் ஹோமாயின் காமிரா அதிகம் கண் சிமிட்டியது நேருவை நோக்கித்தான். நேருவின் தனிப்பட்ட நொடிகள் கூட ஹோமாயின் காமிராவிலிருந்து தப்பியதில்லை. முப்பத்தைந்து ஆண்டுக்காலம் புகைப்படப் பத்திரிகையாளராக புகழ் மிளிர இயங்கினார் ஹோமாய். 1969 ஆம் ஆண்டு மானெக்ஷா காலமானார். அதற்குப் பின்னர் யாருக்கும் தெரியாமல் போனது அவருடைய வாழ்க்கை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி எழுதப் பட்ட நூல் ( Camera Chronicles of Homai Vyarawalla by Sabeena Gadihoke ) வெளியீட்டின்போதுதான் அவர் உயிரோடிருப்பதே தெரியவந்தது. அந்த நூலும் கூட அவரது இனமான பார்சி இனத்தவரின் முயற்சியால் வெளியானது.

இன்றைய தேதிக்கு ஹோமாய் வியராவாலாவுக்கு தொண்ணூற்றி ஐந்து வயது. இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும்.

ஹோமாய் புகைப்படப் பத்திரிகையாளர் வேலையை விட்டதற்கு சொல்லப்படும் காரணம் இது. ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவரும் அவர் காமிராவும் ஒதுக்கப்பட்டனர்.ஆமாம், பெண்பிள்ளை போட்டோ எடுத்துத்தான் செய்தி வெளியாக வேண்டுமா?' என்ற கேலிக்குரல் அவர் காதில் விழுந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து காமிராவைத்தூக்கிக்கொண்டு வெளிநடப்புச் செய்தார் ஹோமாய். அதற்குப் பின்பு காமிராவுக்குப் பின்னால் அவரை யாரும் பார்க்கவில்லை. காமிராவுக்கு முன்னாலும்.

பின் குறிப்பு:
ஹோமாய் 15 ஜனவரி 2012 அன்று 98 ஆவது வயதில் வதோதராவிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இந்தக் கட்டுரை உயிரோசை இணைய இதழில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
அண்மையில் வெளியாகியுள்ள ‘வாழிய நிலனே’ என்ற கட்டுரை நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

வெ ல் லி ங் ட ன்

$
0
0



மாட்சிமைபொருந்திய பிரித்தானிய மன்னரின் விசுவாச ஊழியனான தன்னுடைய வலதுகை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவிலிருந்துதான் மலைப்பிரதேசத்தின் சரித்திரம் தொடங்குகிறது என்பதை ஜான் சல்லிவன் கொஞ்சம் கர்வத்துடனும் அதைவிட அதிகமான அடக்கத்து டனும் நினைத்துப் பார்த்தார். மலையில் வீசும் காற்றின் ஈரத்தில் தன்னுடைய வியர்வைப் பிசுபிசுப்பும் நிரந்தரமாகக் கலந்திருக்கும். கிழக்கிந்தியக் கம்பெனியின் நூற்றுக்கணக்கான குமாஸ்தாக்களில் ஒருவனாக மதராஸ் பட்டணத்தில் சலிப்பான நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தபோதோ செங்கல்பட் கலெக்டராகக் கொளுத்தும் வெயிலில் அல்லாடிக்கொண்டிருந்த போதோ தனது வாழ்க்கை அந்த மலைகளில் காத்திருப்பதை சல்லிவன் அறிந்திருக்கவில்லை. எல்லாம் கர்த்தரின் கிருபை.

கிழக்கிந்தியக் கம்பெனியார் ஒப்பந்தம் போட்டு திப்பு சுல்தானிடமிருந்து மலைப்பிரதேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்டது அதிகாரச் செருக்கை ஸ்தாபித்துக் கொள்ளத்தானே தவிர வசிப்பதற்காக அல்லவென்று சல்லிவன் நினைத்தார். கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு அதுதான் உண்மை என்று நம்பவும் செய்தார். இல்லை யென்றால் கப்பலை விரட்டி கண்காணாத சீமைகளுக்குப் படையெடுத்து அங்கே யெல்லாம் கால்களை ஊன்றிய வெள்ளைக்காரர்கள் இந்த வனத்தின் கன்னி நிலங்களை விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்.அதுவும் இரண்டு நூற்றாண்டுக் காலம் யாரும் தீண்டிக் களங்கப் படாமல் கிடக்குமா இந்த மலைமடிப்புகள்? மலைப் பிரதேசத்தை வசப்படுத்தி யிருந்தும் ஆள்வதற்குக் கணிசமான ஜனத்திரள் இல்லை என்பது காரணமாக இருக்கலாம். மலைக்காட்டின் சந்ததிகளான பூர்வகுடிகளையும் அவர்களின் தெய்வங்களையும் பிரித்தானிய மாமன்னரின் பிரஜைகளாக நினைக்க விருப்பமில்லாம லிருக்கலாம்.

ஏனெனில் அவர்கள் வென்று சொந்தமாக்கிய இடங்களெல்லாம் பெரும்பாலும் சமவெளிகள். அங்கிருந்தவர்களில் சாதாரண ஜனங்கள் அப்பாவிகளாகவும் அவர்களை ஆட்சி செய்தவர்கள் சுயநலமிகளாகவும் இருந்தனர். சுயநலம் முற்றி அடுத்தவனின் ராஜாங்கத்திலும் சம்பத்திலும் ஸ்திரீகள் மேலும் மோகங்கொண்டு ஓயாமல் சண்டை போடுபவர்களாக இருந்தனர்.என்றோ கலைந்துபோன பிரதாபங்களைப் பேசிக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை மயக்குவது கம்பெனியாருக்கு சிரமமான செயலாக இருக்க வில்லை. கையை ஓங்கி உரக்கக் கத்தினால் காலடியில் விழுபவர்களாக இருந்தவர்களை மிரட்டினார்கள்.சபல சித்தர்களாக இருந்தவர்களை ஆசை காட்டி அடிமைகளாக்கினார்கள். அடிமைகள் தங்களுக்குரிய பூமியையும் காற்றையும் தாவரங்களையும் கம்பெனியாரின் காலடியில் சமர்ப்பித்து கைகட்டி வாய்பொத்தி நடந்தார்கள்.

மாநிறமுள்ள குட்டையான ஜனங்களின் கூட்டம் தலைகுனிந்து நிற்கும் சித்திரம் மனதுக்குள் வரும்போதெல்லாம் சல்லிவன் கேட்டுக்கொள்வார் - ''என்ன மாதிரியான ஜனங்கள் இவர்கள்? முட்டாள்களா? வெகுளிகளா?'' இரண்டுமாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கம்பெனியாரின் உடைமைகளை மாட்சிமை தங்கிய மன்னரின் சாம்ராஜ்ஜியம் எடுத்துக் கொண்டபோது எங்களை எப்படி பண்டமாற்றுச் செய்யப் போயிற்று என்று முனகக்கூடத் தெரியவில்லையே இந்தக் கூட்டத்துக்கு.

இவ்வளவு யோசிக்கிற நானே கேட்டதில்லையே. கம்பெனிக் குமாஸ்தாவான என்னை ஏன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அங்கத்தினன் ஆக்கினீர்கள்? மதராஸ் பட்டணத்திலிருந்த என்னை எதற்காக கோயம்புத்தூர் ஜில்லாவுக்கு வீசி யெறிந்தீர்கள்? எந்த எதிர்ப்பும் காட்டாமல்தானே நானும் இசைந்திருக்கிறேன். நானும் அடிமைதான். ஜான் சல்லிவன் எம்.சி.எஸ். ஜான் சல்லிவன் மதராஸ் சிவில் சர்வீஸ். ஜில்லா கலெக்டர் என்ற அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட அடிமை. அதனால்தானே இப்படி வசதியாக உட்கார்ந்து யோசிக்க முடிகிறது. இந்த யோசனைகளே கூட அடிமைத்தனம் தருகிற சௌகரியம். உண்மையில் இப்படி யோசிப்பது ராஜத் துரோகம். உதடுகள் இந்த வாசகத்தை உருவாக்கும் போது சல்லிவனின் வெளிர்சிவப்பு முகத்துக்குள் சிரிப்பின் அலை புரண்டது. 'பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் நீடூ வாழ்க. மாட்சிமை தங்கிய மன்னரைக் கர்த்தர் காப்பாற்றுவாராக' என்று உச்சரித்தார்.உச்சரிப்பில் கேலி தொனிக்கிறதா என்றும் சந்தேகப்பட்டார்.

ஜனங்களை அடக்கிய பிறகும் ஆட்சியை ஸ்தாபித்த பிறகும் இந்த மலைப் பிரதேசத்தில் வெள்ளைக்காரர்கள் கால்வைக்காதது ஏனென்பது சல்லிவனுக்குப் பிடிபடாமலேயே இருந்தது. மனிதர்களை ஜெயிப்பதுபோல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக் கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தி யாகிறதா? இந்த மலையும் வனங்களும் அப்படியான மர்மங்களை ஒளித்து வைத்திருக் கின்றனவா? அந்த அகங்காரம்தான் மலைமடிப்புகளுக்குள் நுழைந்து பார்க்க முடியாமல் பயமுறுத்துகிறதா? இயற்கை அச்சமூட்டக் கூடியதுதானா? கருணையின் சொரூபமில்லையா? ஒருவேளை கருணையே அச்சமூட்டக் கூடியதுதானோ ,கடவுளைபோல. ஆனாலும் கடவுளை நெருங்கத்தானே விரும்புகிறோம். அப்படிக் கூட யாரும் இந்த மலைகளிலும் வனாந்தரங்க ளிலும் பிரவேசிக்கவில்லையா? அங்கே வேறு என்ன இருக்கும்? மனிதர்கள் இருப்பார்களா? ஜீவராசிகள் இருக்குமா?

இருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் அதைத் தன்னுடைய சாம்ராஜ்ஜியக் கனவின் பாகமாகத் திப்பு நினைத்திருப்பானா? அந்த மலைகளைப் பற்றித் தெரிய வந்திருக்குமா? மனிதர்களைத் தவிர யாருக்கு விவரங்கள் தேவைப்படுகின்றன?

சல்லிவனின் மனதுக்குள் கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாகப் புரண்டு கொண்டேயிருந்தன.

திப்பு சுல்தானிடமிருந்து பிரதேசத்தின் ஆட்சியதிகாரத்தை கம்பெனியார் கைச்சாத்துப்போட்டு வாங்கியது சும்மாவா? ஆட்சியோ அதிகாரமோ செய்ய வேண்டாம். ஒரு மர்மத்தைத் தெரிந்து கொள்ளும் ஆசை கூடவா இல்லாமற் போகும். அங்கே ஜன சஞ்சாரமிருக்கிறது என்பது நிச்சயம். அவர்களுக்கு இயற்கை கனிவு காட்டுகிறது என்பது நிச்சயம். அதை எப்படித் தெரிந்து கொள்வது? யாராவது போய்ப் பார்க்காமல் தெரியுமா? யார் போகக்கூடும்?யாரை அனுப்ப முடியும்?
@
சல்லிவன்இப்படி யோசித்துக்கொண்டிருந்த நாட்களிலும் மலைப் பிராந்தியத்தில் ஆள் போக்குவரத்து நடந்து கொண்டுதான் இருந்தது. ஜில்லா ரெவினியூ ரிக்கார்டுகளில் அதற்கு ஆதாரமிருந்தது. ஜில்லாவில் விளைகிற புகையிலையைக் கள்ளத்தனமாகச் சிலர் மலைகளுக்குள் கொண்டு போகிறார்கள் என்று பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பது கலெக்டரின் ஞாபகத்துக்கு வந்தது. புகையிலை அரசாங்கத்தின் குத்தகைப் பண்டம். அதை மலபார் ஜில்லாவுக்குக் கடத்துகிற கூட்டத்தைப் பற்றி ரிக்கார்டுகளில் எழுதி யிருந்தது.சல்லிவனின் ஜில்லாவில் புகையிலை சாகுபடி நடக்கும் வளமான ஊர்கள் இரண்டோ மூன்றோ இருந்தன. எல்லாம் வாயில் நுழையாத பெயர்கள். தாராபுரம், ஒட்டன்சத்திரம். பல்லடம். சோறு தின்னுகிற நாக்கு களுக்குத்தான் இந்தப் பெயர்களை தப்பில்லாமல் உச்சரிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஒருமுறை சொல்லிப் பார்த்தார் . பார்லியை விழுங்குகிற நாக்கில் ஒட்டாமல் விழுந்து சிதறின அந்த ஊர்கள்.

ஜில்லா மேப்பில் குறித்திருக்கும் அந்த ஊர்களின் இடத்தை கவனத்துக்குக் கொண்டுவந்தார் கலெக்டர். மேஜைமேல் நனைந்த கடற்பஞ்சு வைத்திருந்த கண்ணாடிக் கிண்ணத்தில் காப்பியிங் பென்சிலின் முனையைச் செருகி ஈரப்படுத்திக்கொண்டார். ராஜமகுடம் அச்சிட்டிருந்த பழுப்புக் காகிதத்தை எடுத்துப் பென்சிலால் மானசீகமாகப் புள்ளிவைத்து அந்த ஊர்களைக் குறித்தார். டாராபுர்ம், வொட்டான்சட்ரம், பல்லாடம். மூன்று ஊர்களின் பெயர்களும் ஊதா நிறத்தில் எழுந்தன. பென்சிலால் மூன்று ஊர்களையும் இணைத்துக் கோடுபோட்டார். கிட்டத்தட்ட முக்கோணம். 'மை லார்ட்' என்ற ஆச்சரியப் பெருமூச்சு அவரிடமிருந்து வந்தது. 'டுபாக்கோ டைரயாங்கிள்'.

'இந்த முக்கோணத்திலிருந்துதான் புகையிலைச் சிப்பங்கள் ஜில்லாவுக்கு வருகின்றன. இங்கிருந்து மதராசுக்கு. அங்கேயிருந்து இங்கிலாந்துக்கு. சாம்ராஜ்ஜியம் கிழித்திருக்கும் கோட்டை யாரோ குறுக்கே வெட்டுகிறார்கள். வரிகொடாமல் புகையிலையை உள்ளுக் குள்ளேயே விநியோகம் செய்கிறார்கள். நமக்கு இது சட்ட விரோதம். ஆனால் அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பாக இருக்கும். ஒருவேளை அரசாங்கத்தை எதிர்க்கிற வழியாக இருக்கும். புகையிலைக் கடத்தலைப் பற்றி கவர்னருக்கு தெரிவிப்பது கலெக்டரின் கடமை. அதைச் செய்வேன். பிரிட்டிஷ் போலீஸ்காரர்களும் ரெவின்யூ அதிகாரிகளும் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய அக்கறையெல்லாம் கடத்தல்காரர்கள் எப்படி மலையேறுகிறார்கள்? பாதையே இல்லாத சரிவுகளிலும் செங்குத்தான பாறைகளிலும் அடர்ந்த கானகத்திலும் எப்படி ஊடுருவிப் போகிறார்கள்? மலைப்பாறைகளில் வசிக்கும் எலிகளைப் போல அவர்களுக்கும் மலைக்காட்டின் பூகோளப் படம் ஜென்ம சித்தியாக இருக்குமோ? இல்லை, இயற்கையே கனிந்து அவர்களுக்கு வழிகொடுப்பதாக இருக்குமா? ஆதி படுகர்களுக்கு வழிகொடுக்க நதி இளகியதுபோல மலைகளும் வனங்களும் கடத்தல்காரர்களுக்கு விலகிக் கொடுக்கிறதா?'

சம சீதோஷ்ணமான கோயம்புத்தூர் காற்றில் தாவரக் குளுமை அதிகமாக இருப்பதுபோலக் கலெக்டருக்குத் தோன்றியது. இந்தச் சீண்டல்தான் என்னை அமைதியில்லாதவனாக்குகிறது. கலெக்டர் ஜான் சல்லிவனைவிட தோட்டக் காரன் ஜான் சல்லிவன் தொந்தரவுக் குள்ளாகிறான். கலெக்டருக்கு இது ரெவின்யூ பூமிப் பிரச்சனை. நீதி நியாயப் பிரச்சனை. இயற்கைவாதியான சல்லிவனுக்கு இது ரத்தத்துக்குள்ளே துடிக்கும் வேட்கை.ஓயாமல் என்னைச் சீண்டித் தவிக்கவைக்கும் அந்தப் போக்கிரி மலைத்தொடர்களை அடையும் பாதைகள் எங்கிருக்கின்றன? எங்கேயிருந்து தொடங்குகின்றன?

கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம்வரை கப்பிபோட்ட மண்சாலைகள் இருக்கின்றன. கலெக்டர் ஜான் சல்லிவன் உத்தியோக நிமித்தம் பலமுறை அந்தச் சாலைகளில் யாத்திரை செய்துமிருக்கிறார். அடிவாரத்திலிருந்து பார்த்தால் பூமியின் விளிம்புபோல நிற்கும் மலைத் தொடர்கள். பகல் பொழுதுகளில் வெயிலின் காங்கையால் நீல நிறமாகத் தெரியும். இரவில் காட்டுத் தீயின் வெளிச்சத்தில் நடமாட்டங்கள் தெரியும். மேட்டுப்பாளையத் திலிருந்து மலையேறுவதற்கான பாதைகள் இல்லை என்று ரெவின்யூ ரிக்கார்டுகள் குறிப்பிடுகின்றன. கொஞ்சம் தொலைவிலிருக்கும் சிறுமுகையி லிருந்துசோலைகளுக்குள்ளாக எங்கோ ஒரு வழி மலையேறுகிறது. அதுதான் கடத்தல்காரர்களை இட்டுச் செல்லும் பாதையாக இருக்க வேண்டும். அது எங்கே முடிகிறது என்பது ரிக்கார்டுகளிலும் இல்லை. எங்காவது முடியும்.முடிகிற இடத்தில் ஜன சஞ்சாரம் இருக்கும். அந்த வழியில் புகையிலைக் கடத்தல்காரர்களைத் தவிர யாராவது பயணம் செய்திருக் கிறார்களா?

ஜில்லா கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து தன்னை உலுக்கும் இந்தக் கேள்விகள் இன்று ஏன் இவ்வளவு தீவிரமாகத் துளைக்கின்றன? சல்லிவன் யோசித்தார் . எல்லாம் விசேஷ தூதன் மூலம் கவர்னர் அனுப்பிய கடிதத்தின் விளைவு.ஜில்லா அபிவிருத்திக்காக என்னென்ன புதிய திட்டங்களை வகுக்க போகிறாய் என்று கேட்கும் கவர்னரின் கடிதத்திலிருந்து தொடங்கிய உளைச்சல்.

பாளையக்காரர்களும் குட்டி ஜமீன்தார்களும் செலுத்துகிற வரிப்பணம் ஜில்லாவை நிர்வாகம் பண்ணக் காணாது.' உபரி வருவாய்க்கு என்ன செய்யப்போகிறாய்?'என்று கவர்னர் கேட்டிருக்கிறார். விவசாயத்தையும் நெசவையும் கைத்தொழிலையும் செய்து நிம்மதியாகப் பிழைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஜனங்கள் மீது இனியும் வரி சுமத்த முடியாது. அவர்கள் முதுகு ஒடிந்து போகும். வேண்டுமென்றால் நெல்லையும் கரும்பையும் இதர தானியங் களையும் பயிர் செய்பவர்களை வேறு நாணயப் பயிர்களை சாகுபடி செய்ய நிர்ப்பந்திக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? தவிர முட்டைக்கோஸும் டர்னிப்பும் உருளைக் கிழங்கும் காரட்டும் முள்ளங்கியும் பீட் ரூட்டும் இந்த மண்ணில் முளைக்குமா? வெயிலில் காய்ந்தாலும் ஈரப்பசை விடாத மண்வாகு ஜில்லாவிலேயே கிடையாது. இங்கிருக்கும் பூமியெல்லாம் ஆற்றின் ஓட்டத்தில் உயிர் பெறுபவை. ஆறு இல்லாத இடங்களில் கிணறுகள். அந்த ஜீவரகசியம் இந்தக் கறுப்பு மனிதர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய ஜீவனம் மண்ணிலிருக்கிறது. அதை மாற்றமுடியாது.

மாற்ற முடியாதா அல்லது எனக்கு மாற்ற விருப்பமில்லையா? பிரிட்டிஷ் கலெக்டர் சல்லிவனுக்கு விருப்பமிருந்தாலும் இயற்கையின் ஆராதகனான சல்லிவனுக்கு விருப்ப மில்லைதான். 'நான் யாருக்கு ஊழியன்? பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னருக்கா?பரமண்டலத்திலிருக்கிற பிதாவுக்கா? 'குழப்பமாக இருந்தது சல்லிவனுக்கு.

புதிய தொழில்களைத் தொடங்கினால் தைரியமாகப் புதிய வரிகளைப் போடலாம். ஜில்லா முழுக்க அதிகமான பருத்தி சாகுபடிக்கான திட்டங்களை ரேகைப்படுத்தி காகிதங்களை கவர்னர் அவர்களின் சமூகத்துக்குச் சமர்ப் பித்திருக்கிறார். சாத்தியமானால் ஜின்னிங் மில்களும் ஸ்பின்னிங் மில்களும் கட்டலாம். மான்செஸ்டரின் சீதோஷ்ணமிருக்கிற பூமி. அந்தச் சீதோஷ்ணத்துக்குக் காரணமும் மலைத்தொடர்கள். முடியுமானால் மலைகளிலிருந்து துள்ளி இறங்கியோடும் நதிகளை அணைபோட்டுத் தடுக்கலாம். பாசனமும் நடக்கும். மன்னர்மனது வைத்தால் மின்சார உற்பத்தியும் நடக்கும். கவர்னர் வேண்டியபடி உபரி வருவாயைக் காட்டலாம். காகிதங்கள் இங்கிலாந்துக்குப் போய் பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டு காரியமாகத் தொடங்க எவ்வளவு அவகாசம் தேவைப்படுமோ? உடனடியாக வருவாயைப் பெருக்க ஒரு யோசனை யிருக்கிறது. அதை அரசாங்கம் அமல்படுத்துமா என்பது சந்தேகம். மாமன்னரின் சிரசு பதித்த பவுண்டு நாணயத்தாள்களை இரட்டிப்பாக அச்சடிக்கலாம்.

@

இரவு முழுவதும் சல்லிவன் தஸ்தாவேஜுகளைப் புரட்டிக்கொண்டிருந்தார். இலக்கங்களும் எழுத்துக்களும் விவரணக் குறிப்புகளும் அலுப்பூட்டின. சர்வே நம்பர்கள், ரெவின்யூ வசூல் கணக்குகள், நிலுவையிலிருக்கும் பாக்கிகள், ஜில்லாவுக்கு வந்துபோன ராஜாங்கப் பிரதிநிதிகள் பற்றிய விவரங்கள், அவர்களுக்காக ஜில்லா நிர்வாகம் செய்த செலவினங்கள் எல்லாம் எண்களாகவும் தகவல்களாகவும் காகிதங்களில் இறைந்து கிடந்தன. கண்கள் அயரவிருந்த நொடியில் பார்வையில் பதிந்த தகவல் சல்லிவனை வியப்புக்குள்ளாக்கியது.

ஆறு வருடங்களுக்கு முன்னால் இரண்டுபேர் சல்லிவனின் கற்பனையில் இருக்கும் பாதை வழியாக மலையேறிருக்கிறார்கள். இதே ஜில்லாவின் பழைய கலெக்டர் காரோ மதராசி லிருக்கும் ரெவின்யூ போர்டுக்குச் சிபாரிசு செய்து சர்வேயர் கேய்ஸையும் அப்ரண்டிஸ் மக்மஹோனையும் அனுப்பிவைத்திருக்கிறார்.

'இத்தனை நாட்கள் இதே தஸ்தாவேஜுகளைப் எத்தனைமுறை புரட்டி யிருப்போம். இந்தத் தகவல் ஏன் கண்ணில் படவில்லை. இன்று மட்டும் எதற்காகப் பார்வையில் படவேண்டும்? என் பிரபுவே, உமக்குத் தோத்திரம். இந்த மலைப்பிராந்தியத்தின் சரித்திரத்தை சிருஷ்டிக்க என்னை நியமித் திருக்கிறீரே அந்தக் கருணைக்காக. மாட்சிமை தங்கிய மன்னரே ,தங்களுக்கு என் வந்தனம். என்னுடைய ஜீவிதத்தின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பத்தை தங்களுடைய செங்கோல் கொடுத்திருக்கிறது. கர்த்தருடைய நாணயத்தையும் சீசருடைய நாணயத்தையும் ஒன்றாகச் செலவுசெய்யும் பாக்கியம் என்னையல்லாமல் யாருக்கு வாய்த்தி ருக்கிறது? '.

பரவசத்தில் ஜான் சல்லிவனின் சருமத்துக்குள்ளே ரத்தம் கொப்பளித்துப் பரவியது. அரைத்தூக்கத்தில் பங்கா இழுத்துக்கொண்டிருந்த சிப்பாய் கலெக்டர் துரை கூப்பிடுவதைக் கேட்டு மலங்க விழித்தான். அவனுடைய கோலத்தைப் பார்த்துக் கலெக்டருக்குச் சிரிப்பு வந்தது.பாவம், ஓய்ந்து விட்டான். சைகை காட்டி அவனைப் போகச் சொன்னார். நடந்து போகும்போது அவனுடைய நிழல் வழக்கத்தை விட நீண்டு அலைவதைக் கவனித்தார். கூரையிலிருந்து தொங்கி எரியும் கண்ணாடி விளக்கின் சுடர் அணையப்போவதுபோல குதித்துக் கொண்டிருந்தது. ஆசனத்திலிருந்து எழுந்து அறைக்குள்ளேயே நடந்தார். மரப்பலகைகள் பாவிய தரையில் அவருடைய காலடிகள் தாளமெழுப்பின. நடந்து வாசல் கதவு வரை போனார். வெளியே உட்கார்ந்திருந்த பாராக்காரன் பதறி எழுந்து நின்றான். அவனிடம் விளக்குக்கு எண்ணெய் எடுத்துவரும்படி பணித்தார். நகரத் தொடங்கிய அவனை நிறுத்தி குசினியில் ஆளிருந்தால் ஒரு கோப்பைத் தேநீரும் தயாரித்து வாங்கிவரச் சொன்னார். இரண்டையும் ஒரே இடத்திருந்து கொண்டு வரலாம். பாராக்காரன் அகன்றதும் மறுபடியும் அறைக்குள் நடந்து ஆசனத்தில் உட்கார்ந்தார். கூரைவிளக்கு மினுக்கிமினுக்கி பிரகாசிப்பதைச் சட்டை செய்யாமல் தஸ்தாவேஜில் கடைசியாகப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தில் பார்வையைப் படர விட்டார்.

மலைப்பிரயாணத்துக்கு முந்தின நாட்கள் வரைக்கும் கேய்ஸும் மக்மஹோனும் சர்வே நடத்துவதற்காக மதுரா ஜில்லாவில் இருந்திருக் கிறார்கள்.அதற்கு முன்பு இருவரும் கோயம்புத்தூர் ஜில்லாவில்தான் உத்தியோகம் பார்த்திருக்கிறார்கள். சாமர்த்தியசாலிகள். காரியத்தை பிசகில்லாமல் செய்து முடிப்பதில் வல்லவர்கள். அதனால் இரண்டு ஊழியர்களின் சேவையை மலைபிரதேச சர்வேக்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கலெக்டர் காரோ குறிப்பெழுதியிருக்கிறார். இரண்டு ஊழியர்களும் மறுபடியும் கோயம்புத் தூருக்கு வரவழைக்கப் பட்டார்கள். பிரயாணம் என்றைக்குத் தொடங்கியதென்று பதியப்ப டவில்லை. தேவநாய்க்கன் கோட்டையிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சிறுமுகை வழியாகத்தான் புறப்பட்டிருப்பார்கள். யூகித்தார் சல்லிவன். திப்புவின் மேல்கோட்டைப் படை அந்தப் பாதையைத்தான் போக்குவரத்துக்கு உபயோகித்திருந்தது என்பதும் மனதில் ஓடியது.

கலெக்டருக்கு முகமன் செய்து கேய்ஸ் ஜில்லா நிர்வாகத்துக்கு எழுதிய முதல் கடிதம் டேநாட்டிலிருந்து எழுதப்பட்டிருந்தது. கோத்தகிரிக்குக் கிழக்கே டேநாடு. அடுத்த கடிதம் மேல்கோட்டையிலிருந்து. கல்லட்டிக்கு அப்பால் சீகுர் மலைப்பாதையின் தொடக்கம். சல்லிவனின் தேகத்தில் பரபரப்பு ஏறியது. இன்னும் நாலே முக்கால் மைல் ஏறினால் வோட்டகமண்ட். சபாஷ், பரவாயில்லையே பையன்கள். சாதித்து விட்டார்களே.

ஆனால் அடுத்துப் பதிந்திருந்த குறிப்புகளில் கேய்ஸும் சகாவும் வழிமாறிப் போயிருந்தார்கள். கல்லட்டியிலிருந்து கிளைபிரியும் பாதைகளில் பெரியதை விட்டுவிட்டு குறுக்குப் பாதையில் முன்னேறியிருக்கிறார்கள். 'முட்டாள்களே, பெரிய பாதையை விட்டு அதில் ஏன் போனீர்கள்? அது தண்டாநாட்டுக்குப் போகிற பாதையாயிற்றே? அங்கிருந்து வோட்டகமண்டுக்குப் போவது முடியாதே'.

முடியவில்லை தான். கேய்ஸின் பிரயாண அறிக்கைக் குறிப்புகள் அத்தோடு முடிந்திருந்தன. அவர்கள் ஜில்லா தலைநகரத்துக்குத் திரும்பிய தினத்தைக் குறித்து அதன் அருகில் கையொப்ப மிட்டு தஸ்தாவேஜை மூடியிருந்தார் காரோ.

ஜான் சல்லிவனுக்கு வியர்த்தது. ஏமாற்றம் முகத்தில் அறைந்தது. மனது கோபத்திலும் பச்சாத்தாபத்திலும் பொங்கியது. எத்தனை பொன்னான சந்தர்ப்பம். கன்னிப் பெண்ணின் சரீரத்தில் ஒற்றை விரலால் அழுத்தமாக வருடிய அடையாளம் மறைவதற்குள் பார்த்துவிடத் துடிக்கும் பரவச விநாடிகளையல்லவா பாழாக்கி இருக்கிறார்கள். முட்டாள்கள்.

காகிதத்தில் மிஞ்சியிருந்த குறிப்புகள் மங்குவதுபோலத் தோன்றியது. கண்களைக் கசக்கிப் பார்த்தார். ஒரு வரி மட்டும் தெளிவாகப்பட்டது. ''இந்த மலைக் காடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் இராக் காலங்களில் கண்ணாடிப் பாளமாகிறது. அவ்வளவு குளிர்.ஆனாலும் ஜனங்கள் வாசம் செய்கிறார்கள்''

பாராக்காரன் வாசலில் வந்து நின்றான். சல்லிவன் நிமிர்ந்து பார்த்துத் தலையசைப்பில் உள்ளே வரச்சொன்னார். அவனுடைய வலதுகையில் சீனப் பீங்கான் கோப்பை இருந்தது. கோப்பையின் விளிம்பிலிருந்து தேநீரின் ஆவி நெளிந்து உயருவது விநோதமாக இருந்தது. எண்ணெய்ப் பாத்திரத்தையும் எண்ணெயை முகந்து ஊற்றும் துரட்டிக் கிண்ணத்தையும் இடது கையில் ஒன்றுசேர்த்துப் பிடித்திருந்தான். தேநீர்க் கோப்பையை மேஜைமேல் வைத்து விட்டு விளக்குக்கு எண்ணெய்விட நகர்ந்தான். எண்ணெய் ஊற்றியதும் சுடர் பிரகாசித்து வெளிச்சம் விரிந்தது. பாராக்காரன் அவரை நோக்கித் தலை தாழ்த்தினான். தேநீர்க் கோப்பையை வாயருகே கொண்டு போவதற்கிடையில் தலையசைத்து சமிக்ஞை செய்தார் சல்லிவன். கதவைத் தாண்டிப் போகிறவனை பின்தொடர்ந்தது அவர் பார்வை. பாராக்காரன் மறைந்ததும் அவரது பார்வை கோப்பைக்குள் குவிந்தது.பொன்பழுப்பு நிறத்திரவத்திலிருந்து மெல்லிய ஆவி யெழுவதை ரசித்துக் கொண்டே முதல் மிடற்றுத் தேநீரை உறிஞ்சினார். புத்துணர்வு நாவில் ஊறி தேகத்தில் பரவியது.

''தேயிலைச் சாற்றில் உற்சாக ரசத்தை இயற்கை ஒளித்து வைத்திருக்கிறது, ஜான்'' என்று பிரெஞ்சுக்கார சிநேகிதர் லூயி சொல்லுவது சல்லிவனுக்கு நினைவு வந்தது. உண்மைதான். இந்த கசப்புச் சாற்றில் மனதை இளக்குகிற ஏதோ ஒன்று இருக்கிறது. பழகியவனை அடிமைப் படுத்தும் வசிய ரசாயனம். மாத ஆரம்பத்தில் கலெக்டர் பங்களாவின் குசினிக்கு எந்தெந்தச் சரக்கு வந்திருக்கிறது என்று அக்கறைகாட்டாத அவர் அசாமிலிருந்தும் டார்ஜீலிங் கிலிருந்தும் தருவிக்கப்படும் தேயிலை வந்திருக்கிறதா என்பதை மட்டும் தவறாமல் பரிசோதிப்பார். எல்லாம் இந்தச் சிறு போதைக்காக. எல்லாம் ஜீன் பாப்டிஸ்ட் லூயி அறிமுகப்படுத்திய ருசி.

சல்லிவனின் மண்டைக்குள் சட்டென்று மின்னல் ஓடியது. தேநீர்க் கோப்பையை மேஜைமேல் வைத்தார். எழுதுபலகையில் காகிதங்களை ஒழுங்குபடுத்தினார். சொருகு பேனாவை எடுத்து மைக்கூட்டில் முக்கினார். எழுத ஆரம்பித்தார்.

இரண்டு கடிதங்கள். முதல் கடிதம் மதராஸ் கவர்னர் சர். தாமஸ் மன்றோவுக்கு.

'இந்த மலைப்பகுதியைப் பணம் விளையும் பிரதேசமாக மாறச் செய்யும் திட்டத்தை மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் ஜான் சல்லிவன் எம்.சி.எஸ். சமர்ப்பிக்கிறார்.

மலைச்சரிவுகளில் ஜீவிதம் நடத்தும் படகர்களும் தோடர்களும் மலபாரிலி ருந்து வந்து குடியேறியிருக்கும் மலையாளத்தார்களும் மைசூரிலிருந்து வந்த கன்னடிகர்களும் சமவெளி யிலிருந்து புகையிலை கடத்தல் நிமித்தம் மலையேறி ஸ்திர ஜீவிதமாக்கியிருக்கும் கவுண்டர்களும் பறையர்களும் செய்யும் பாரம்பரிய விவசாயத்தை ஐரோப்பிய முறைக்கு மாற்றலாம். ஐரோப்பிய பூகண்டத்தில் பயிராகும் தாவரங்கள் சகலமும் இந்த மலைத்தொடரில் முளைக்கும்.

கவர்னர் அவர்களே, இங்குள்ள சீதோஷ்ணத்தை சுவிட்சர்லாந்து வெப்பமானியை வைத்து அளந்தால் இரண்டும் துல்லியமானதாக இருக்கக் காண்பீர்கள். இங்கிருக்கும் விவசாயிகள் ஏற்கனவே ஐரோப்பிய உணவுப் பயிர்களை சில இடங்களில் விளைவித்திருக்கிறார்கள். மலபாரிலிருந்து கள்ளிக்கோட்டை மார்க்கமாக வந்த சுவிசேஷகர்கள் மேற்படிப் பயிர்களை விளைவித்துப் பார்த்திருப்பதாக ரிக்கார்டுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பது கவர்னர் அவர்களுக்குத் தெரிந்த விஷயமே.

எல்லையற்று நீண்டிருக்கும் மலைத்தொடரின் விரிந்த மடிகள் இன்னும் கன்னி நிலங்களாவே காத்துக்கிடக்கின்றன. அவற்றில் நமது வித்துகள் செழித்து முளைவிடும். நமது மலர்கள் விரியும். மலையின் சரிவுகளில் தேயிலை வளர்வதற்கான சாத்தியங்களைக் காண்கிறேன். இவையெல்லாம் திட்டங்கள். ஆனால் எதிர்காலத்தின் வசமிருக்கின்றன. இன்றிருப்பவை கானகத்தின் மர்மம். அதை அறிய நாம் அந்த மர்மத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்து வேறு மார்க்கங்கள் இல்லை என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவது கடமையாகிறது. நமது அதிருஷ்டத்தை அடையும் வழிகளை உருவாக்குவதே இப்போது என் முன்னால் உள்ள பணி.

மலையில் பாதைகளை உண்டுபண்ணும் முஸ்தீபுக்காக ஜில்லா நிர்வாகத்தின் சேவையிலுள்ள இருவரை நியமிக்கிறேன். அசிஸ்டெண்ட் கலெக்டர்கள் மிஸ்டர். ஜே.சி.விஷ், மிஸ்டர். என்.டபிள்யூ. கிண்டர்ஸ்லே இருவரும் இந்தப் பணிநிமித்தம் மலைப்பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கவர்னர் அவர்களைக் கோருகிறேன். திட்டமிட்டபடி இவர்களின் சர்வே பூர்த்தியாகுமானால் நமது கஜானாவில் அதிருஷ்ட தேவதை வாசம் செய்யத் தயங்கமாட்டாள்.

மேற்படித் திட்டத்துக்கு கவர்னர் அவர்களின் அனுமதியையும் பொருளாதார சகாயத்தையும் கோருகிறேன். கர்த்தர் மாட்சிமை தங்கிய மன்னரையும் வந்தனத்துக்குரிய தங்களையும் ஆசீர்வதிப்பாராக.

தங்கள் விசுவாசமுள்ள
ஜான் சல்லிவன் எம்.சி.எஸ்.'

எழுதிய கடிதத்தை ஒருமுறை வாசித்துப் பார்த்தார் சல்லிவன். எல்லாம் கச்சிதம். வேகமாக எழுதியதில் கலங்கிப் போயிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளில் எழுத்தைச் சரிசெய்தார்.மறுபடியும் வாசித்தார். எழுதிய காகிதத்தைத் தனியாக எடுத்தார். கையொப்பத்துக்குக் கீழே உத்தியோக முத்திரை பதித்து அதன் மேல் ஊதினார். நாசூக்காக மடித்தார். பழுப்பு நிற உறையொன்றை எடுத்துக் கடிதத்தை அதற்குள் வைத்தார்.'காலையில் அனுப்பச் செய்யவேண்டும்' என்று சொல்லிக்கொண்டே உறையை ஒதுக்கி வைத்தார். இன்னொரு காகிதத்தை எழுதுபலகையில் ஒழுங்காகப் பொருத்தினார்.
' மெசியே. ஜீன் பாப்டிஸ்ட் லூயி....'

இரண்டாவது கடிதத்தை எழுதத் தொடங்கினார் சல்லிவன்.


@

நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் முதல் அத்தியாயம்
Viewing all 182 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>