Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all articles
Browse latest Browse all 182

ரவி வியாஸ்

$
0
0








நினைவூட்டலையே இலக்கியப் பணியாக மேற்கொண்டிருந்தவர் எழுத்தாளர், பத்தியாளர் ரவி வியாஸ். ஆனால் அவர் யாராலும் நினைக்கப்படாமல் மறைந்தார்.  அவரது மரணம் அவர் புழங்கிய கருத்துப்புலத்தில் கூட அறியப்படாமல் போனது. எழுபதுகளின் இறுதி முதல் இரண்டாயிரத்தின் முதல் பதிற்றாண்டு வரைஇரண்டு ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து பத்திகள் எழுதி வந்தார். தி ஹிந்து நாளிதழின் இலக்கிய சஞ்சிகையிலும்  டெலிகிராப் இதழின் ஞாயிற்றுக் கிழமைப்  பதிப்பிலும் அவர் எழுதி வந்த பத்திகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்புப் பெற்றவை. ஓரளவுக்குப் பரவலான வாசக அறிமுகம் இருந்து அவரது மறைவுஅதற்குரிய கவனத்துடன் அறியப்படவில்லை. அவர் பங்களித்த இதழ்களிலேயே கூட சிறு செய்தியாகத்தான் வெளியிடப் பட்டிருந்திருக்கிறது. அவுட் லுக்வார இதழில்  ( 9மார்ச் 2015 ) வெளியான குறிப்பிலிருந்துதான் அவரது மறைவு பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. தகவல் தொடர்பு யுகத்தின் அட்சய பாத்திரமான இணையத் தளத்திலும் ரவி வியாஸைப் பற்றிய தகவல்கள் குறைவு. டெலிகிராப் நாளிதழில் மட்டுமே விரிவான அஞ்சலிக் குறிப்பு வெளிவந்திருக்கிறது.  அதுவே கூட ரவி வியாஸின் நண்பரான ருத்ராங்க்ஷு முகர்ஜி எழுதியது. பல பதிற்றாண்டுக் காலம் ஊடகங்களில் செயல்பட்டவரும் அந்தச் செயல்பாடுகளுக்காக வாசக கவனம் பெற்றவருமான  ரவி வியாஸ் விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி நின்றது வியப்பளிக்கிறது.

ரவி வியாஸ் பதிப்பாளரும் பத்தியாளருமான கதை சுவாரசியமானது. தில்லியில் உயர் கல்வி முடித்து விட்டுக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வேலை எதுவும்  இல்லாமலிருந்த ரவி வியாஸ் வாசிப்பதையே முழு நேர வேலையாக வைத்துக் கொண்டார். தில்லி லோடி கார்டனில் மரத்தடியில் அமர்ந்து புத்தகங்களை வாசித்துத் தீர்ப்பதையே  அன்றாட நியமமாக்கியிருந்தார். இளைஞன் ஒருவன் மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக அந்த வழியில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த எழுத்தாளரும் அன்று ஓரியண்ட் லாங்மன் பதிப்பகத்தின் இயக்குநருமாக இருந்த பிரபல எழுத்தாளர் கவனித்தார். எப்போதும்  இங்கே உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருப்பது ஏன்? என்ற கேள்விக்கு ரவி வியாஸ் சொன்ன பதில் அவருக்கு ஆச்சரியமளித்தது. வேறு வேலை எதுவும் இல்லைஎன்பதனால் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற பதிலை எழுத்தாளர் ரசித்தார். வாசிப்பையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கும் ரவி வியாஸுக்குத் தனதுநிறுவனத்தில் வேலை கொடுப்பதாகச் சொன்னார்.மறுநாள் ரவி வியாஸ் ஓரியண்ட் லாங்மெனில் வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனம் அவரை லண்டனிலுள்ள தலைமை யகத்துக்குப் பயிற்சிக்காக அனுப்பியது. பயிற்சி முடித்துத் திரும்பிய ரவி வியாஸ் ஓரியண்ட் லாங்மன் பதிப்பகத்தின் எடிட்டராகவும் பதிப்பாளரா கவும்செய்த பணிகள் இந்தியப் பதிப்புத் துறை வரலாற்றில் திருப்பு முனைகளாக அமைந்தன. நீண்ட காலம் ஓரியண்ட் லாங்மனில் பணியாற்றிய ரவி வியாஸ்பின்னர் மாக்மில்லன் நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுபேற்றார். இந்த இரு பதிப்பகப் பணிக்காலத்தில் அவர் அறிமுகப் படுத்திய மாற்றங்கள், முன் வைத்த  மதிப்பீடுகள் முக்கிய மானவை. கல்விப்புலம் சார்ந்து அவர் பதிப்பித்த புத்தகங்கள் புதுமை யையும் சமகாலத் தேவையையும் கணக்கில் கொண்டு உருவானவை.பிற துறை நூல்களில் புத்தகத்துக்கும் வாசகனுக்கும் நடுவே, அந்த இரண்டு முனைகளையும் இணைப்பவர் எடிட்டர் என்ற கண்ணுக்குத் தென்படாத ஆனால் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதை நிறுவினார்.

ரவி வியாஸை புத்தகப்பதிப்புத் துறையில் வேலைக்குச் சேர்த்து விட்ட குஷ்வந்த சிங் தனது பத்தியொன்றில் ரவி வியாஸை தான் கொஞ்சம் பொறாமையுடன் பார்க்கும் எடிட்டர் என்று செல்லப் பெருமிதத்துடன் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

எனது ஆங்கில வாசிப்பின் முறையியலுக்குக் கடன்பட்டிருப்பவர்களில் ரவி வியாஸும் ஒருவர் என்பதே இந்தக் குறிப்பை எழுதக் காரணம். பள்ளி இறுதி  வகுப்புகளிலும் கல்லூரிக் காலங்களிலும் ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுத்திச் சொன்ன செயல்,'உன்னுடைய ஆங்கிலம் செம்மையடைய வேண்டுமானால் நாள் தவறாமல் ஹிந்து பத்திரிகையைப் படி'என்பது. அந்த வலியுறுத்தலில் தொடர்ந்த பழக்கம் சலிப்பூட்டத் தொடங்கிய நாட்களில் அந்த இதழில் எழுதி வந்த பத்தியாளர்கள் இருவர் மனதுக்கு இதமளிப்பவர்களானார்கள்.சிந்தனையைப் பாதிப்பவர்களானார்கள்.ஒருவர் ஓவியம் நுண் கலைகள் பற்றி எழுதிய அஞ்சலி சர்க்கார். இரண்டாமவர் - ரவி வியாஸ்.

ரவி வியாஸின் 'கிளாசிக்ஸ் ரீவிசிட்டட்'என்ற பத்தி வாசகனாக எனக்கு அளித்த இலக்கிய அறிவும் படைப்பு அனுபவமும் ஆழமானவை.ஆங்கிலத்திலுள்ள  செவ்வியல் நூல்களையும்  ஆங்கிலம் வழியாக வந்த  பிற மொழி செவ்வியல் படைப்புகளையும் பற்றி அவர் எழுதிய அந்தப் பத்தி மறு வாசிப்பு என்ற வகையை  சேர்ந்தது. ஆனால் அது மறு அறிமுகம் என்பதைத் தாண்டிக் கறாரான பார்வையைக் கொண்டிருந்தது. உண்மையில் ரவி வியாஸ் மறு வாசிப்புக்காக எடுத்துக்  கொண்ட பல படைப்புகளை அந்தப் பத்தி வாசிப்பின் விளைவாகவே முதன்முறையாக வாசித்திருக்கிறேன். பதிப்பக எடிட்டராகப் பணியாற்றிய ரவி வியாஸின்நோக்கம் பத்தி எழுத்திலும் பிரதிபலித்தது என்று இப்போது தோன்றுகிறது. வாசகன் எதை வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தீர்மானி ப்பதில் ஒரு எடிட்டருக்கு முக்கியமான பங்கு இருப்பதாகக் கருதியிருந்தவர் அவர். அந்த அடிப்படைப் பார்வையை கிளாசிக் படைப்புகளின் வாசிப்பிலும்முன்னிருத்தினார். 'பைபிள் மறு வாசிப்புப் பற்றிய  பத்தியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பைபிளை ஒரு மத நூலாகவோ அல்லது வெறும் கிளாசிக்காக வோ அவர் மறு வாசிப்புச் செய்யவில்லை. ஒரு புதிய படைப்பாகவும் புதிய அணுகுமுறையுடனுமே பார்க்கிறார். பைபிளின் மொத்தத்தையும் பத்து மையக் கருக் களாகப் பார்க்க்கிறார். முக்கியமான பத்து தீம்களின் தொகுப்பாகவே பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் வகுக்கிறார். இந்தப் பார்வை பைபிளை  வெறும் இறை நூல் என்பதிலிருந்து விடுவித்து அதை மேற்கத்திய பண்பாடு, உணர்வுகளின் வரலாறு, நீதி, மொழி, இலக்கியம் ஆகியவற்றை நிர்மாணம் செய்தபடைப்பாக நிறுகிறது. ஒரு சிந்தனைப் பருவத்தின் தொகுப்பாக ( Climate of thought ) அதை முன் வைக்கிறது. இந்த நோக்கில் மறு வாசிப்பு என்பது ஒரு படைப் பை நவீனப் படுத்துதல் என்று மாற்றியவர் ரவி வியாஸ். இந்தச் செயல் இன்னொரு இலக்கிய மதிப்பீட்டையும் எடுத்துக் காட்டுகிறது. எந்தப் படைப்பும் அதன்  காலத்தை யும் இடத்தையும் கடந்தது என்ற மதிப்பீட்டை.

ரஷ்ய இலக்கியங்களில் எனக்கு விருப்பமானவர்கள் டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, ஆன் டன் செக்காவ், இவான் துர்கனீவ் ஆகியவர்களே. இவர்களுடன் ஒப்பிடும்  போது மக்சீம் கார்க்கி கொஞ்சம் கனம் குறைந்தவராகவே எனக்குத் தோன்றியிருந்திருக்கிறார். அவரது மாபெரும் படைப்பாகச் சொல்லப்படும் 'தாய்'நாவலில்   கலையின் வெகுளித்தன்மையை விட பரப்புரையின் செயற்கைத்தன்மை அதிகம் என்று தோன்றியிருந்தது. ரவி வியாஸின் மறு வாசிப்புப் பத்திக் கட்டுரை அதை  மாற்றியது. குறிப்பாக கார்க்கியின் தன் வரலாற்று நூல்களான, எனது குழந்தைப் பருவம், எனது பயிற்சிக் காலம், எனது பல்கலைக் கழகங்கள் ஆகிய மூன்ரைப்  பற்றியும் எழுதப்பட்ட கட்டுரை கார்க்கியைப் புதிய வெளிச்சத்தில் காட்டியது.

புத்தகங்கள்புத்தகப் பதிப்புத்துறை பற்றித் தொடர்ந்து எழுதி வந்தவர் ரவி வியாஸ். தி ஹிந்து வில் 'கிளாசிக்ஸ் ரீவிசிட்டட்', டெலிகிராப் பில் 'புக் வைஸ்'ஆகிய பத்திகளைப் பல ஆண்டுகளாகத் தொடந்து எழுதினார். இரண்டும் வாசிப்பின் நேற்றையும் இன்றையும் மையமாகக் கொண்டவை. இந்தியப் பதிப்புத் துறையில் தான் விரும்பிய மாற்றங்களுடன் தான் நிராகரித்த சந்தர்ப்பவாதப் போக்குகளும் அரங்கேறியபோது ரவி வியாஸ் விலகிக் கொண்டார் என்று கூறப் படுகிறது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது பத்தி எழுத்து இந்த இதழ்களில் இடம் பெறவில்லை. பத்தியாளரும் மறதியின் இருளுக்குள் முக விவரமற்று மறைந்து போனார். மீண்டும் அவர் அரைகுறையாக நினைக்கப்பட்டது மரணத்தை ஒட்டித்தான். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் வேறு என்ன செய்திருப்பார் என்று  தெரியவில்லை. ஆனால் அதை ஊகிப்பதும் சிரமமல்ல. ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்திருப்பார்.
@

நன்றி: காலச்சுவடு இதழ் 184 - ஏப்ரல் 2015










Viewing all articles
Browse latest Browse all 182

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>