கதவுகள் இல்லாத நீர்
பி. ராமன்
தமிழில்: நிர்மால்யா
பேரறிஞராகவும் திகழ்ந்தகவிஞர் உள்ளூர் எஸ்.பரமேஸ்வர அய்யர் தாம் எழுதிய இலக்கிய வரலாற்று நூலுக்குக் கேரள சாஹித்ய சரித்திரம்என்றேபெயரிட்டார். மலையாள இலக்கியத்திற்கு மட்டுமல்ல; தமிழ், சமஸ்கிருத மொழி இலக்கியங்களுக்கும் கேரளத்தவர்கள்கொடைவழங்கியுள்ளனர் என்றஅடிப்படைப் பார்வையைக் கொண்டிருந்தமையாலேயே தமது நூலுக்குக்கு கேரள இலக்கிய வரலாறு என்று பெயர் சூட்டியிருந்தார். மலையாள என்னும் மொழி மட்டுமல்லகேரளம் என்றஅறிவார்ந்த பார்வையின் அடையாளம் அத் தலைப்பில் இருந்தது. தமிழ் சமஸ்கிருதம்,துளு,ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் முதுவான், இருளர், மாவிலான், ரவுலா, முதுவர், பணியர், மலைவேடர், முள்ளுக்குறும்பர், பெட்டகுறும்பர், காடர் முதலிய பழங்குடி கோத்திர மொழிகளிலும்இன்று கேரள எழுத்தாளர்கள் இலக்கிய ஆக்கங்களைப் படைக்கிறார்கள். அவற்றையும் உட்படுத்தாமல் நமது இலக்கியப் பரப்பின் எல்லைமுழுமை பெறாது.
ஆனால், கேரளத்தில் வாழ்ந்துகொண்டே பிற மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை கேரள பொதுச் சமூகம் தக்கவண்ணம் இனம் காண்பதோஏற்றுக்கொள்வதோ இல்லைஎன்பதே உண்மை. அண்மையில்மறைந்த தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் திருவனந்தபுரத்தின் சாலைக் கம்போளத்தைப் பின்புலமாக்கி தனது கதையுலகைக் கட்டியெழுப்பினார். இத்தனை நீண்ட காலம் இந்த ஒற்றைத் தெருவின் வாழ்வனுபவங்களை முன்வைத்து எழுதப்பட்ட அவரது படைப்பு உலகைத் தமிழ் வாசகர்கள் மரியாதையுடன் காண்கிறார்கள். ஆனால், அந்தத் திருவனந்தபுரக் கதைகள் கேரளத்தில் விவாதிக்கப்படுவதில்லை.
சமகால தமிழ்க் கவிதையுலகின் மூத்த எழுத்தாளர் சுகுமாரன். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.அவரது குடும்ப வேர்கள் ஷொர்ணூரின் அருகில். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகவே தமிழில் எழுதத் தொடங்கினார். 1974 முதல் எழுதி வருகிறார். எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த இளமையின் ஆவேசம் பூண்ட மலையாளக் கவிதைகளின் உணர்வுநிலையுடன் பலவிதத்தில் இயைந்து நிற்பவை சுகுமாரனின் தொடக்கக் காலக்கவிதைகள். அழுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சித் தீநாளங்களின் வெம்மையும்,நிறமும்,கருமையும் பாரித்தவைதாம் கோடைகாலக் குறிப்புகள்என்னும்முதல் தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும்.அவரது பிற்கால கவிதைகளில் பலவித மாற்றங்களும், பரவல்களும் உருவாயின.கோடைகாலக்குறிப்புகள் (1985), பயணியின் சங்கீதம் (1991), சிலைகளின் காலம் (2000), வாழ்நிலம் (2002), பூமியை வாசிக்கும் சிறுமி(2007), நீருக்கு கதவுகள் இல்லை (2011),செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல (2019), சுகுமாரன் கவிதைகள் (2020)என்பவை அவரது கவிதைத் தொகுப்புகள். சுகுமாரனின் கவிதையுலகின் அனைத்துச் சிறப்பு அம்சங்களையும் எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக மலையாளியாக, தற்போது கேரளத்தில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ்க்கவிஞனின் கவிதையுலகம் மலையாள கவிதை உணர்வுநிலையுடனும் கருத்துச்சூழலுடனும் எப்படி ஒட்டி நிற்கிறது; விலகிச் செல்கிறது என்பதை வியப்புடன் காண்பதுதான்.
தனிமனித, சமூகம் சார்ந்த அனுபவங்களின் நெருப்பையும் தகிப்பையும் வலுவுடன் உணர்த்தும் கோடைக்கால குறிப்புகள் அதே காலகட்டத்தில் சச்சிதானந்தன், கே.ஜி.சங்கரப் பிள்ளை, பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்ற மலையாளக் கவிஞர்கள் பங்கிட்ட சமூக, அரசியல் எதிர் பார்ப்புகளுடனும் உணர்ச்சிகரமான ஆற்றாமைகளுடனும் இணங்கிச் செல்கிறது.குடும்பத்தையும் சமூகத்தையும் அரசியலையும் தரிசாக்கிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இளைஞர்களுக்கே உரிய மூர்க்கத்துடன் எதிர்வினையாற்றும் போதும் கூட மிகைஉணர்ச்சியோ மிகுந்த அறிவுஜீவித்தனமோ உரத்த குரலோ தீண்டாமல் படிம மொழியை இக் கவிஞர் பயன்படுத்துகிறார். வீட்டோடு கலகம் செய்து வெளியில் அலையும் இளமையை பாலசந்திரன் சுள்ளிக்காடின் தொடக்கக்கால கவிதைகளில் காண்பதைப்போலவே சுகுமாரனின் அக்காலக் கவிதைகளிலும் காண முடியும். ‘அப்பாவா கொலையாளியா?’என்ற கேள்வியைப் பாலசந்திரன் எழுப்பினா ரென்றால் ‘என் சிறகுகளை வெட்ட வாளேந்தியவன் நீ‘ என்றும் ‘என் சங்கீதத்தின் ஊற்றை அடைத்தவன் நீ‘ என்றும் சுகுமாரன் அப்பாவைப் பற்றி உறுதியாகச் சொல்கிறார்.
குடும்ப அதிகாரத்திற்கெதிராக இளமையின்எதிர்ப்பு தமிழ்,மலையாள பேதமின்றி அந்தத் தலைமுறையின் பொது மனநிலையின் அங்கமாக இருப்பதைக் காண்கிறோம். ‘நாம் வாழும் காலம் சிதிலங்களின் மைதானம்’என்றும்,எல்லா வழிகளிலும் குரோத முனைகளைக் கொண்ட கற்கள் பரப்பப்பட்டிருப்பதாகவும், சென்று சேரும் கிராமத்தின் நதி வறண்டு போய்விட்டதாகவும் சுகுமாரன் எழுதும்போது எழுபதுகளின் இறுதியில் மலையாளத்தின் இளம் கவிதையில் கேட்ட சீற்றமும் ஏமாற்றமும் பதற்றமும்கலந்த குரல்களை நாம் இணையாக நினைவுகூர்வது இயல்புதான். தனிமனித மனதின்ஊடாக அந்தக் கற்பனைகள் ஒளிர்ந்த போதிலும் இந்திய இளைஞர்களின் அரசியல் பதற்றங்களே அக் கவிதைகளின் ஆழத்தில் கனலாக ஜொலிக்கின்றன என்பது விளங்கும். கோடைக்காலக் குறிப்புகளின் கடைசி பத்தியில் தற்கொலை செய்து கொண்ட மலையாளக் கவிஞர் சனல்தாஸை பற்றிய நேரடி குறிப்பைக் காணலாம். ‘மரணத்தின் பீடபூமியை நோக்கிப் போவதற்காக அம்மாவிடமும் சிநேகிதியிடமும் விடைபெற்றவனின் கவிதை‘ என்கிற வரியின் அடிக் குறிப்பில் சனல்தாஸின் பெயரை எடுத்துரைக்கிறார்.
தோழமையென்றும் அன்பென்றும் அழைக்கக் கூடியவையும், பெயரிட்டு அழைக்க இயலாதவையுமான உறவுகளின் தொடர் ஓட்டத்தைசுகுமாரனின் முதல் கவிதைத்தொகுப்பிலிருந்தேகாணலாம். ‘உதகமண்டலம்‘ என்கிற கவிதையில் ஊட்டி சுற்றுலா பயணிகளின் சொர்க்க நகரமல்ல. மலையாளிகளிடம் அறிமுகமாகியிருக்கும் ஊட்டி அல்ல இது. கவிஞரின் பால்ய, இளமைப் பருவங்கள் நடந்து தேய்ந்த வழிகளின் நகரம்.
சரணாலயத்திற்கு வரும் பறவைபோல
இந்த மலைநகரத்திற்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்
பரு வெடித்த மனித முகமாய்
மாறியிருக்கிறது இந்த நகரம்
எனினும்
தைல வாசனையுள்ள காற்றுகளில்
கலந்திருக்கிறது என் இளமை நினைவுகள்
வலுவற்றது
ஆயிரம் வருடக்களிம்பேறிய என் கைமொழி
உன் பிரியத்தைச் சொல்ல
ஊதாநிற மேமலர்கள் சிதறிய வழிகளில்
கதைகள் சொல்லி நடந்த நீ
நீர் கசியும் பாறைகளின் இடையே நீளும்
இருப்புப்பாதைகளில் மனிதர்களைச் சொன்ன நீ
இங்கே இல்லை
பறக்கும் கழுகின் கால்களில் சிக்கிய
துடிக்கும் இதயம் நான்
முலைகள் தொய்ந்த நீ-
புழுக்களின் எச்சம் மட்கிய அரசாங்கக் காகிதங்கள்
விளிம்புகள் ஒடுங்கிய கரிப்பாத்திரங்கள் அல்லது
உன் குழந்தையின் மூத்திரத்துணிகளுடன்
எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல
தன் மனதுக்கு நெருக்கமான மலைநகரம் பின்பு எப்படி மாறியது என்கிற பழைய நினைவுகளில் அமிழ்ந்து வெளிப்படுத்துகிறார் இக் கவிதையில். தனது பால்ய நாட்களையும் இளமைக் காலத்தையும் கழித்த ஊட்டி நகரத்துடனான முரண் உறவை இக் கவிதையில் மிகையின்றி வெளிப்படுத்துகிறார். பிரச்சாரமின்மை, உரத்துச் சொல்லாமல் இருத்தல், சிக்கலான உணர்வுகளைப் படிமங்களின் ஊடாகத்தொனிக்க செய்தல் என்பவை சுகுமாரனின் கவிதையாக்கத்தின்சில சிறப்பு கூறுகள். இந்த வெளிப்பாட்டு அம்சத்தின் சிறப்புகள் அனைத்தும் தெளிவாகத் தெரியும் தொடக்கக் காலக்கவிதை ‘பின்மனம்‘
சில சமயம்
பெருங்காற்றுக்கும் பயப்படாமல் ஒரு இலையுதிர்கால மரம் போல
(கிளைகளில் சொற்களாய்த் தளிர்த்து மிரள்வேன் பின்பு)
சிலசமயம்
வரும் போகும் கால்களில் மிதிபட
டீக்கடைக்காரன் உலரப் போட்ட ஈரச்சாக்கு போல
(பரிவற்று வறண்டும் போவேன் பின்பு)
சிலசமயம்
பிரயாணநோக்கங்கள் துறந்த இலவஞ் சிறகுபோல
(மூலைச் சிலந்திவலையின் தனிமையில் தவிப்பேன் பின்பு)
சிலசமயம்
சகல துக்கங்களையும் இறைக்கும் சங்கீதம் போல
(தற்கொலையில் தோற்றவனின் மெளனமாவேன் பின்பு)
சிலசமயம்
கண்ணாடியில் காத்திருக்கும் என் புன்னகை
(கால்கள் விழுங்கிய விலங்கின் வாயிலிருந்து
கையுதறி அலறும் குழந்தைமுகம் பின்பு எனக்கு )
கருத்து நிலையிலும் உணர்வு நிலையிலும் மலையாள கவிதையுடன் இணங்கி நின்ற போதிலும் வெளிப்பாட்டு முறையில் தமிழ்க்கவிதை மரபுடன் மிகுந்த நெருக்கத்தைப் பேணுவதை இக் கவிதை காட்டுகிறது. உரத்த குரலில் தொண்டைகிழிய பாடும் மலையாளத் தன்மை இங்கு இல்லை. இருப்பினும் அமைதியின்மையின் உச்ச ஸ்தாயி மூலம் வாசகனை எட்டுகிறது. வாசகர்களிடம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்ற கவிதை இது. முழுவதுமாகத் தன்னை வெளிப்படுத்தல் என்பது,பொதுவாக மலையாள மனப்பாங்கின் வெளிப்பாட்டு உத்தி. தன்னுடைய முழுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளைக் காட்டிலும் இரண்டரை மடங்குக் கவிதைகளை எழுதியிருப்பதாகச் சொல்லுகிறார். அவை போராட்ட ஊர்வலங்களில் முழங்கின. சில சுவரொட்டிகளில் அறைகூவல் விடுத்தன. சில பாடப்பட்டன. அவையெல்லாம் கவிதைகள் அல்ல; செய்யுள்கள் மட்டுமே என்கிறார் சுகுமாரன். மரபு ரீதியிலான கவிதைக் கோட்பாடுகளைப் பின்பற்றி எழுதப்படும் கவிதைகள்,எந்த அளவுக்கு ஜனரஞ்சகத்தை எட்டினாலும் அவற்றை கவிதை என்று அழைக்க முடியாது என்பதுதான் அவரது நிலைப்பாடு. கவிதையை மலினப் பண்டமாகக் கருத இயலாது என்பதிலும்,அனுபவத்தை தைத்துச் சேர்க்காமல் ஒரு வரியைக் கூட எழுதஇயலாது என்பதிலும்,உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறக் கூடாது என்பதிலும் கவிஞர் உறுதியாக இருக்கிறார். ( தன்மொழி - சுகுமாரன் கவிதைகள் )இந்த கூடாதுகளின் ஊடாக வடிகட்டப்பட்டு எஞ்சியவைதான் சுகுமாரனின் கவிதைகள். இவ்வாறு எழுபதுகளின் அரசியல் கலாச்சார நிலைமைகளைப் பகிரும்போதும் வெளிப்பாட்டு உத்தியில் மலையாளத்தின் பொதுத்தன்மைகளுடன் முரண்படுகிறது சுகுமாரனின் கவிதை.
தானொரு மலையாளியா தமிழனா என்கிற சிக்கல் அவரை அலைக் கழிக்கிறது. சொந்த ஊர் எது என்கிற நிச்சயமற்றவனின்மோதலை‘ஊர் துறத்தல்’ என்ற கவிதையில் காணலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்றெழுதிய சங்ககால கவிஞன் கணியன் பூங்குன்றனாரை நினைவு படுத்தி அக்கவிதை நிறைவடைகிறது. சுகுமாரனின் பல கவிதைகள் பெருகி வரும் அரசியல் பார்வையின் பிற்கால அனுபவங்களை நுட்பமாகமுன்கூட்டி உரைக்கின்றன. என் நாடு என்று எதை அழைக்கலாம் என்கிற கேள்வி அரசியல் விருப்பங்களுடனும் அபிப்பிராயங்களுடனும் இன்றைய வாசிப்பில் ஒலிக்கிறது. உள்ளங்காலில் எந்த மண் ஒட்டுகிறதோ அந்த மண்ணை என் ஊர் என்றழைக்கலாம்.அப்படியானால்,நாடோடியின் உள்ளங்காலில் எந்த மண் படிகிறது என்கிற மறு கேள்வி எழுகிறது. குடியுரிமைப் பிரச்சினை களின் சமகாலச் சூழலில் மீண்டும் வாசிக்க வேண்டிய கவிதை ஊர் துறத்தல். 2007-இல் பதிப்பிக்கப்பட்ட பூமியை வாசிக்கும் சிறுமிதொகுப்பிலுள்ள கவிதை'மிச்சம்‘.
எப்போது கடல்
அபகரித்துச் சென்றதோ தெரியவில்லை
கொண்டு வந்து கரை சேர்த்த
பிஞ்சுச் சடலத்தின் கைகள்
மூடியிருந்தன
பலவந்தமாய்ப் பிரித்துப் பார்த்தபோது
கண்டேன்
கொஞ்சம் மண்ணையும்
அதில் துளிர்விட்டிருந்த
ஏதோ சிறுசெடியையும்
2007 க்கு முன்பு எழுதப்பட்ட இக்கவிதையை இன்று வாசிக்கும்போது 2015 செப்டம்பர் 2 மத்திய தரைக் கடலில் மூழ்கி இறந்து கரையொதுங்கிய அலன் குர்தி என்ற அகதிச்சிறுவனின் சித்திரம் மனதில் எழாமல் இல்லை. கடல்கடந்து ஐரோப்பாவுக்குத் தப்புவதற்காகப் போர்மூண்ட சிரியாவிலிருந்து ஓடிய குடும்பத்தின் மூன்றரை வயது குழந்தை,குர்த் இனத்தைச் சேர்ந்த அலன் குர்தி. குடியேறிய நாட்டின் சிறிது மண்ணில் படர முயற்சிக்கும் அகதி சமூகத்தின் முதலும் கடைசியுமான அவலத்தைத் தீர்க்கமாக ஒலிக்க வைக்கும் கவிதையே ‘மிச்சம்‘. ஒரு ஜனத்திரள் அனுபவித்த சகிப்புத் தன்மைகளையும் வழங்கிய பலிகளையும் தப்பிப்பிழைத்ததற்கான சிறிதளவு பசுமையையும் உணர்த்துகிறது இக் கவிதை. 'ஊர் துறத்தல்' ,' மிச்சம்'போன்ற கவிதைகளின் தீர்க்கதரிசனம் தமிழையும் மலையாளத்தையும் கடந்து உலகளாவிய கண்ணோட்டத்தைப் பெறுகிறது. மனிதஅவலங்களைச் சொல்லக் கூடிய உலகின் எந்த மூலையில் நிகழும் அவலங்களுடனும் சுகுமாரனின் கவிதை உறவாடுகிறது. மலையாளக் கவிதைகளைப்போல ஓங்கிய குரலில் தொண்டை கிழியக் கத்துவதோ, மிகையுணர்வோ புத்தி சாதுரியமோ அதீதக் கற்பனையோபுனைவோ இன்றி அறம்சார்ந்த எச்சரிக்கையுடன் உலகைக் காண இக்கவிதையால் முடிகிறது.
கோவிட் 19 ஐ முன்னிட்டு நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அவ் வேளையில் தில்லியிலிருந்தும்,நாட்டின் பிற நகரங்களிலிருந்தும் சொந்த ஊர்களை நோக்கி நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் கால்நடையாகப் பயணித்த பல்லாயிர மனிதர்களின் சகிப்புத் தன்மையே ‘தில்லி-அஜ்மீர்: 390 கி.மீ.‘ என்கிற கவிதை. அத்துடன் குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுடன் தொடர்புடைய எதிர்பார்ப்புகள்,இந்திய முஸ்லீம் சமுதாயம் எதிர்கொள்கிற பாதுகாப்பின்மை,பீதி என்பனவற்றின் புரிதலின்றி இக் கவிதையை வாசிப்பது சிரமம். இப்புரிதல் மலையாளக் கவிதையையும் சுகுமாரன் கவிதையையும் ஒருசேரப் பங்கிடுகிறது. ஆனால் வெறும் அறிக்கை களாகவோ பதிவுகளாகவோ பிரசங்கமாகவோ இல்லாமல் தனி மனித நிஜத்தின் வேதனையூட்டும் குரலாக சுகுமாரனின் கவிதை ஒலிக்கிறது. ‘அநீதியை எங்கு காணநேர்ந்தாலும் கண்டனம் தெரிவித்தே தீருவேன் என்று பிடிவாதம் பண்ணும் என்னை நீங்கள் காணவில்லையா?‘ என்று மார்தட்டி நிற்கவில்லை இக் கவிதை. கவிஞன் எல்லாத் தகுதிகளையும் பெற்றவன் என்கிற பிம்பத்தை உருவாக்குவதல்ல கவிதையின் குறிக்கோள்.
கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்ற காரணத்தால் இங்குள்ள இடங்கள், மனிதர்கள், வரலாறு, பண்பாடு, தொன்மங்கள் போன்றவை சுகுமாரனின் கவிதைகளில் இயல்பாகவே தென்படுகின்றன. ‘தேவி மகாத்மியம்‘ கவிதை செங்ஙன்னூர் பகவதியுடன் தொடர்புடைய தொன்மத்தின் வெளிப்பாடு.
தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்.
என்று தொடங்கும் கவிதை, வட்டாரத் தொடர்புடைய தொன்மத்தைச் சார்ந்து பூமியைப் பாதுகாத்து வரும் பெண்மையின் வலிமையை நோக்கிப் படர்கிறது.
கண்ணூர் பைய்யாம்பலம் கடற்கரையின் பின்னணியில் எழுதப்பட்ட கவிதை ‘பய்யாம்பலம்‘. பய்யாம்பலத்தின் கடலும் அந்தக் கடல்வந்தணையும் கரைக்கும் நடுவில் எழும் ‘நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்‘ என்கிற கேள்வியின் தொடக்கமும் முடிவுமான முழக்கம்,காற்று,வெயில்,இருள் இவற்றையும் உணர வைக்கிறது பைய்யாம்பலம் என்னும் கவிதை.
மலையாளக் கவிஞர்களான சங்ஙம்புழ, இடப்பள்ளி ஆகியோர்மட்டுமல்ல, நவீன தமிழ்க் கவிஞர் சுந்தரராமசாமியின் நினைவுகளும் நிறைந்த கவிதை தான்‘தனுவச்சபுரம் - இரண்டாவது (திருத்திய) பதிப்பு‘. கேரள தமிழகஎல்லை யிலுள்ள ரயில் நிலையம் தனுவச்சபுரம். தமிழ் மலையாள எல்லையில் ரயில் வண்டியின் எதிரில் பாய்ந்து இறந்துபோன சந்திரிகாவைப் பற்றி கேள்விப் பட்டதும் சட்டென்று சங்ஙம்புழயின் ரமணனும் சந்திரிகாவும் மலையாளியான தமிழ்க் கவிஞனின் மனதில் இடம் பெறுகிறார்கள். ‘ சந்திரிகாவைக் கொலைக்குக் கொடுத்தவன் ரமணனா?‘ என்கிற எதிர்க்கேள்வி அப்போது அங்கு ஒலிக்கிறது. மலையாளத்தின் கற்பனாவாத மனப்போக்கிலும், தமிழின் கற்பனா வாதத்திற்கு எதிரான மனப்போக்கிலும் நின்றிருந்த போதிலும் மனதறிந்து எட்டிப் பார்க்கும் கவிதையாக கூட இதை வாசிக்கலாம். தமிழின் கற்பனாவாதத்திற்கு எதிரான மனப்போக்கின் அடையாளமாக பசுவய்யாவின் ‘தனுவச்சபுரம்‘ கவிதையின் குறிப்பு இங்கு வருகிறது.
பாரதப்புழைக் கரையிலுள்ள சொர்ணூருக்கு அருகிலுள்ள கிராமத்திலிருந்து கோயம்புத்தூருக்குக் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர் சுகுமாரன். பாரதப்பழையைப் பற்றிய எந்த நேரடி கவிதையையும் அவர் எழுதியதில்லை. இருப்பினும் அவரது கவிதைகளில் எப்போதும் நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மலையாளக் கவிஞர்களுக்கு நதிகளுடனான பிரியத்தை நினைவூட்டுபவை சுகுமாரனின் கவிதைகளில் நதிகளின் சாந்நித்தியம்.
அவள் வீடு திரும்பியபோது
ஓடாமலிருந்தது ஆறு ஓடிக் கொண்டிருக்கிறாள் அவள் மட்டும்
ஆற்றுடன் பேசிக்கொண்டே.
இவ்வாறாக நதியுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்களும் கரையுடன் சேர்த்துக் கட்டப்பட்டு அசையும் படகுகளுக்குள் எஞ்சிய மழைநீரில், பூமிக்கு வெளிச்சம் தந்த கருணையில் ஒளிரும் நிலவும்,எல்லாம் சேர்ந்த நதியோட்டங்கள் மலையாளிக்குப் பிடித்தமானவை. வானவெளியில் பறக்கும் பறவைகள்தான் தமிழ்க் கவிதையில் பொதுவாக மீண்டும் மீண்டும் வரும் முக்கியப் படிமமாக இருந்தபோதிலும், சுகுமாரனின் கவிதையில் நதியும் நீரும் முக்கியத்துவம் பெறுவது தற்செயல் அல்ல. சுகுமாரனின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பே ‘நீருக்குக் கதவுகள் இல்லை‘ என்பதாகும். மீனுக்கும் நீர்வாழ்உயிர்களுக்கும் தன்னிச்சையாக வந்துபோக சுதந்திரம் அளிக்கும் நீரை பெண்மையுடன் சேர்த்தெழுதிய ‘நீராலானது‘ என்ற கவிதையின் கடைசி வரியே இந்தக் கட்டுரையின் தலைப்பு. மொழியுடன் அடங்கிய தடைகளற்ற பரஸ்பரத்தைப் பற்றிய உணர்வு இந்தக் கவிதையில் அடியோட்டமாக உள்ளது.