மனிதப் புழக்கமற்ற இந்த இரவுக்குத்தான்
எத்தனை அமைதி
காற்றில் அசையும் தளிர்
மரத்தின்மீது சிறகுகுடையும் பறவை
நடைபழகும் பூனை
இருளை மெல்லும் சிள்வண்டு
எல்லாவற்றின்
ஓசையும் ஒலியும் அரவமும்
எத்தனை தெளிவு
என் உள் வெளி மூச்சுகளின் பேரோசைக்கு
எத்தனை துல்லியம்
தாங்க முடிவதில்லை
இந்த மௌனத்தின் அமைதியை
இதோ
இரவை நடுக்கிவரும் மரணத்தின்
ஓசையில்லாக் காலடிகளுக்கு
எத்தனை இடிகளின் முழக்கம்
எனக்காக பூமியே
ஒரே ஒரு நொடிமட்டும்
அதிர்
உடை
பிளர்
ஓலமிடு
வீறிட்டழும் மழலையின்
அழுகுரலேனும் கேட்க உதவு
இந்த அமைதியின் மௌனத்தைத்
தாங்க முடியவில்லை.
ஓவியம்: எட்வர்ட் மன்ச்