2017சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகவிருக்கும் - வெளியாகி இருக்கும் - மூன்று புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. மூன்று நூல்களும் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு மிக நெருக்கமானவை. மூன்றும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை.
கமலா ராமசாமியின் 'நான் தைலாம்பாள்'. சுந்தர ராமசாமியின் மனைவி கமலா - எனக்குக் கமலாம்மா - தன்னுடைய அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கும் நூல் . அம்மாவின் வாழ்க்கை அனுபவங்களை மகள் கமலா அம்மாவின் குரலிலேயே பதிவு செய்திருக்கிறார்.
எம்.யுவனின் 'தீராப் பகல்'முழுக் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை இரண்டாவது. யுவன் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். யுவன் சந்திரசேகரின் புனைவெழுத்துக்கள் பேசப்பட்ட அளவுக்கு யுவனின் கவிதைகள் பேசப்படவில்லை. சக கவிஞனாக என் ஆதங்கம் இது. இந்த முன்னுரையில் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ளப் பார்த்திருக்கிறேன். எனினும் யுவன் கவிதைகள் பற்றிய முழுமையான பார்வை அல்ல இந்த முன்னுரை. அதற்கான முன்னெடுப்பு.
காலச்சுவடு பதிப்பகம்
மிகவும் பரவசத்துடனும் வாசிப்பின் கிறக்கத்துடனும் எழுதியது விபூதி பூஷண் பந்தோபாத்யாயாவின் 'பதேர் பாஞ்சாலி'முன்னுரை. நாவலின் வரிகளும் திரைப்படத்தின் பிம்பங்களும் மாறி மாறிப் படர்ந்த உணர்வைக் கொண்ட மனநிலையில் எழுதியது. மறைமுகமாக விபூதிபூஷணுக்கும் மொழிபெயர்ப்பாளர் ஆர். ஷண்முகசுந்தரத்துக்கும்'பதேர் பாஞ்சாலி'யை அந்தரங்கக் கனவாக மாற்றிய சத்யஜித் ராய்க்கும் செலுத்திய மானசீக அஞ்சலி.
மாற்று வெளியீடு.