ஐ ம் ப து
என் இலக்கிய வாழ்க்கையின் ஐம்பதாவது ஆண்டு இது.
பதினாறு பதினேழாவது வயதில் எழுதிய கவிதைகளும் கதைகளும் கண்ணதாசன், தாமரை, தீபம் இதழ்களில் வெளிவந்தன. பள்ளி இறுதி வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தபோதே இலக்கியத்தின் மீதான மாளாத காதல் முளைவிட்டிருந்தது. அது துளிர்த்து வந்த பருவத்தில் கதையாகவும் கவிதையாகவும் எழுதிய பிள்ளைக்கிறுக்கல்களை ஆசிரியர்களும் சில நண்பர்களும் சில பெண்களும் பாராட்டிச் சொன்னார்கள். அவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளியாயின. கவிதைப் போட்டிகள் சிலவற்றிலும் பங்கேற்றேன். அப்படி வாசித்த ஓரிரு செய்யுள்கள் பள்ளி ஆண்டு மலரிலும் உள்ளூர் நாளிதழின் ‘கலைப் பூங்கா’விலும் வெளிவந்தன. அவை மகிழ்ச்சியளித்தாலும் அன்று மூர்க்கமாக ஈடுபட்டிருந்த வாசிப்பும் இலக்கியம் அறிந்தவர்களின் ஆலோசனைகளும் அந்தச் சொல்வித்தைகளின் ஆழமின்மையையும் கச்சாத்தனத்தையும் சுட்டிக் காட்டின. அவற்றைக் களைவதற்காக வாசிப்பில் மேலும் தீவிரமாக மூழ்கினேன். அதிலிருந்து பாடங்களைப் பயின்றேன். ‘உனக்கே உனக்காகச் சொல்ல எதுவும் இல்லையென்றால் எழுதாதே’ என்ற எச்சரிக்கையைக் கற்றுக் கொண்டேன். அதுவரை எழுதிய சரக்குகளைக் கைவிட்டேன். ‘சொல் எளிது, பொருள் வலிது , புலன் புதிது’ என்று எழுத்துக்கான வரையறையைத் தீர்மானித்துக் கொண்டேன். அதன் பின்னர் எழுதியவை இதழ்களில் வெளியாயின. பாராட்டையும் பெற்றன. அவையும் அத்தனை சிலாக்கியமானவையல்ல; எனினும் என்னுடைய விரலடையாளம் பதிந்தவை என்பது ஆறுதலாக அமைந்தது.
இன்று கவிதை
என்று நான் நம்பும் வடிவத்தில் எழுதிய கவிதைகளில் சில எழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகளில்
ஓர் இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்து கொண்டிருந்த கண்ணதாசன் இதழில் வெளியாயின. அது
1974 ஆம் ஆண்டு என்று மனதில் பதிந்து போயிருந்தது. அந்த மனப் பதிவின் அடிப்படையில்
‘சுகுமாரன் கவிதைகள்’ மொத்தத் தொகுப்பில் அவற்றைச் சேர்த்தேன். தொகுப்பின் தலைப்பில்
1974 – 2019 என்றும் குறிப்பிட்டிருந்தேன். நாகர்கோவில் சுந்தர ராமசாமி நூலகத்தில்
பார்க்கக் கிடைத்த கண்ணதாசன் இதழ்களிருந்து அந்த வருடத்தைக் கண்டுபிடித்திருந்தது நினைவிலிருந்தாலும்
அதைச் சரி பார்க்க விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக நான் பார்வையிட்ட அந்த இதழ்களைத்
திரும்பப் பார்க்க இயலவில்லை. நூலக வருகையாளர் எவரோ அவற்றைத் திரும்ப ஒப்படைக்க மறந்திருக்க
வேண்டும்.
என்னுடைய இலக்கியப் பிறப்பு ஆண்டு தொடர்பான சந்தேகத்தை
நண்பர் பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷிடம் பகிர்ந்து கொண்டேன். ‘கவலையை விடுங்க, கண்டுபிடித்து
விடலாம்’ என்றார். தளரா முயற்சியுடன் வெவ்வேறு நூலகங்களை அணுகியும் அவரால் கண்டுபிடிக்க
முடியவில்லை. கண்ணதாசன் இதழில் வெளிவந்தவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த ஆக்கங்களை ஒரு தொகுப்பாகக் கண்ணதாசன்
பதிப்பகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்தத் திரட்டில் என் கவிதையோ
கதையோ இல்லை. பதிப்பகத்தாரின் சேகரத்திலுள்ள இதழ்களைப் பார்வையிட அனுமதி கோரியும் பலனளிக்கவில்லை.
ஆண்டு 74 ஆக
இருந்தால் என்ன 75 ஆக இருந்தால் என்ன? எழுத வந்த ஐம்பது வருடங்கள் ஆயிற்று என்றிருந்தால்
போதாதா? துல்லியமாக நிரூபிக்கவும் என்று யாராவது கட்டாயப்படுத்தினார்களா? இது என்ன சரித்திர ஆவணமா? இல்லை , இலக்கியச் சேவைக்கு ஓய்வூதியம் கொடுக்கப் போகிறார்களா? என்ற கேள்விகள்
உள்ளுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. கடைசியில் வரலாறே பிழைகளின் தொகுப்புத்தானே,
அதில் 74லோ 75 எதுவானால் என்ன? அதுவும் உபரிப் பிழையாக இருக்கட்டும் என்று அமைதியானேன்.
விவகாரத்தை மறந்தும் போனேன்.
பணி நிமித்தம்
நாகர்கோவிலுக்குப் போன மாதம் சென்றிருந்தபோது நண்பர் சீனிவாச கோபாலனைச் ( அழிசி பதிப்பகம்
) சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க.நா.சுப்ரமண்யத்தின் காணக் கிடைக்காத எழுத்துக்களைத்
தேடி சுந்தர ராமசாமி நூலகத்துக்கு வந்திருந்தார். அவருடைய தேடலுக்கு இடையே என்னுடைய
ஆரம்பக் காலக் கவிதை ஒன்றையும் கண்டுபிடித்துத் தந்தார். தீபம் 1975 ஜனவரி இதழில் கவிதை
வெளிவந்திருந்தது. அவர் அதைக் காண்பித்தபோது
பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு அந்தக்
கவிதையின் தோற்றுவாய், வெளியீடு பற்றிய நினைவுகள் மேலெழுந்தன. அந்த உந்துதலில் நண்பரைத்
தொடர்பு கொண்டு அவர் கண்டுபிடித்துப் படமாகப் பதிவு செய்திருந்த அந்தக் கவிதையை அனுப்பித்
தரும்படிக் கேட்டுக் கொண்டேன். வாட்ஸ் அப் வழியாக அனுப்பித் தந்தார்.
தீபம்ஜனவரி 1975
நீண்ட கவிதையொன்றின் நான்கு வரிகள் தீபம் இதழில் வெளிவந்திருந்தன. அதுவும் பெட்டித் துணுக்காக இடம் பெற்றிருந்தது. ( ( நா.பார்த்தசாரதி நல்ல எடிட்டர்தான் ) . உண்மையில் அது கவிதைக்குரிய எந்தக் குணத்தையும் கொண்டிருக்கவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது கலந்து கொண்ட கவிதைப் போட்டி ஒன்றில் வாசிப்பதற்காக தயார் செய்த சரக்கு. போட்டியில் இரண்டாம் பரிசாக அறிவிக்கப்பட்ட 75 ரூபாய் பரிசையும் பெற்றது. அந்தக் கவிதையை எழுதிய மிகக் குறுகிய காலத்திலேயே நான் என்னுடைய கவிதையாக்க முறையைக் கண்டறிந்திருந்தேன். அந்த முறையில் எழுதிய கவிதைகள் தாம் கண்ணதாசன் இதழில் வெளிவந்தவை. கவியரங்கக் கவிதையை அனுப்பினேன் என்று நினைவிருந்ததே தவிர எந்த இதழுக்கு என்பது பதியவில்லை. அதுதான் தீபம் இதழில் வெளியாகியிருந்தது. அதே கவிதையின் இன்னொரு துண்டு மற்றொரு இதழில் வெளிவந்ததும் ஞாபகத்திலிருக்கிறது.
1974இல் அல்லது
75 இல் இலக்கியவாதியாகப் பிறப்பெடுத்தேன் என்று நானாகக் கணித்துக் கொண்ட ஜாதகத்தின்படி
என் இலக்கிய வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் அதிகமாக
எழுதிக் குவித்து விடவில்லையென்றாலும் தொடர்ச்சியாக இயங்கியிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.
கலையின் பாதையிலான பயணம் இறுதி நிறுத்தம் இல்லாதது என்ற பிரக்ஞை தொடக்கத்திலேயே உறுதியாகியிருந்தது.
என் எழுத்து எனக்குக் கழிவிரக்கம் ஏற்படுத்தி விடக் கூடாத ஒன்றாக இருக்க வேண்டும்,
என்னை வெட்கித் தலைகுனியச் செய்யாததாக இருக்கவேண்டும், தளுக்கானதாகவோ பொய்யானதாகவோ
இருக்கக் கூடாது என்ற வீம்புகளை இன்று வரை
கடைப்பிடிக்க முடிந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சியின் இன்னொரு பக்கம்.
எழுத வந்து
ஐம்பது ஆண்டுகளாகி விட்டன என்று தற்செயலாக நண்பர் ஒருவரிடம் சொன்னேன். பதிலுக்குக்
கேள்விகளை எய்ய ஆரம்பித்தார். ‘திரும்பிப் பார்த்தால் என்ன தொன்றுகிறது? இத்தனை கால
எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?’
நண்பரின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் உடனடியான பதில் இருக்கவில்லை. பின்பு யோசித்தபோது
இப்படிச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.
சூசன்
சாண்டாக்கின் புகழ் பெற்ற வாசகம் ஒன்று உண்டு.
‘நான் எழுத்தாளர் ஆகவேண்டும் என்று எழுத வரவில்லை. இலக்கியம் என்று ஒன்று இருப்பதனால்தான்
எழுத்தாளர் ஆனேன்’. என்பதுதான் எப்போதும் என்னுள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த
வாசகம். தவிர, ஓர் எழுத்தாளனின் எழுத்துக்களை
மதிப்பிட வேண்டியது அவற்றை வாசித்தவர்களும் காலமும்தான். ஏதோ ஒன்றைத் தமது இருப்பின்
அடையாளமாக விட்டுச் செல்ல எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள். நான் இங்கே இருந்தேன்
என்பதற்கும் என்னவாக இருந்தேன் என்பதற்குமான தடயம் என் எழுத்து. இருப்பின் பொருள் அங்கீகாரமோ
புகழோ அல்ல. இருப்பதுதான்.
இந்த பதிலைச்
சொன்னது நண்பரிடமல்ல, என்னிடமே. எனினும் ஐம்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் உழன்று கொண்டிருப்பதற்கான
இருப்பு நியாயம் இங்கே இருக்கிற வளமான இலக்கியம். முப்பத்து ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து
பதினேழு ஆண்டுகள் மட்டுமே இலக்கியப் பணியில் ஈடுபட்ட பெருங்கவிஞனும் நாற்பத்திரண்டு
வயதுவரையே ஜீவித்து, பதினைந்து ஆண்டுகள் மட்டுமே
எழுத்தில் செயல்பட்ட பெருங்கலைஞனும் உயிர் கொடுத்த மொழிக்குள் நாமும் இருக்கிறோம் என்ற பெருமிதமே அந்த
இருப்பு நியாயத்தின் உட்கிடக்கை. இதைப் புரிந்து கொள்ளத்தான் ஐம்பது ஆண்டுகள் தேவைப்
பட்டிருக்கின்றன.
@
நன்றி: சீனிவாச கோபாலன் ( அழிசி ), சுப்பிரமணி இரமேஷ்